என்ற
வினாவின் ஓசை
நடுநிசியில்
மூடப்படாத
குடிநீர் பைப்பு
போல
சரித்திரத்தின்
வீதிகளிலே
சொட்டி கொண்டே
இருக்கிறது.
எது நியாயம்
என்பதற்கு
அவரவருக்கு
ஒரு தர்க்கம்.
ஆளாளுக்கு
ஒரு கதை.
வரையறையற்ற
சுதந்திரத்துடன்
அவரவர் விழிகளில்
படுகிற காட்சியாய்,
இலக்கற்ற ஓவியமாய்,
அலைந்துக் கொண்டே
இருக்கும் சீரற்ற
சிதறலாய் நியாயம்.
எந்த திசையில்
நியாயம் உறைகிறது
என்று எவருக்குமே
தெரியாது.
ஏனெனில்
நியாயம்
திசைகளை அழித்து
அவரவருக்கு
ஒரு திசையை
பிரசவிக்கிறது.
நியாயத்தை
பற்றி எழுதி எழுதி
எழுதுகோல்கள்
முனை உடைந்து
இருக்கின்றன.
அவரவருக்கான
நியாயத்தின்
பழுப்பேறிய
ஏடுகளின்
வாக்கியங்கள்
தங்களுக்கு தாங்களே
அவ்வப்போது
மாறிக் கொள்கின்றன.
அப்படி என்றால்
நியாயம் என்றால் என்ன
என்று புத்தனின் கடைசி
சீடன் சுமன் கேட்டான்.
தனக்குள் ஆழ்ந்திருந்த
புத்தன் தன் மௌனத்தை
கலைத்து சொன்னான்.
“அடுத்தவரின்
பார்வையை
உன் விழிகளில்
பார்த்தால்
அது தான் நியாயம்.”
காலம் ஒரு முறை
சிலிர்த்து அடங்கியது.
நிறைவேறி விட்ட உறவில்
தேன்மொழி
மரணம் அடைகிறாள்.
ஏக்கத்தில் தான்
தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
உண்மையில்
தேன்மொழியை தேடி
அலைபவர்கள்
காணும் போது
தொலைத்து விடுகிறார்கள்.
சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே
கண்டெடுக்கப்படுகிறவள் தான்
தேன்மொழி.
மீண்டும்
மீண்டும்
அலைகள்
கரைகளை நோக்கி
வந்து கொண்டு தான்
இருக்கின்றன.
ஆனால்
செந்நிற அந்தி
ஒன்றில்
கைநழுவிப்போன
அந்த ஒரு அலை
திரும்பி வருவதே இல்லை.
நினைவின்
உயிர் கால்
நனைத்து
ஒருபோதும்
திரும்பி
வராமல் போன
அந்த அலை தான்
தேன் மொழி.
அது ஒரு பல்கலைக்கழக வகுப்பு அல்ல. ஆனால் வகுப்பு எடுப்பவர் குறைந்தது 30க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். கனிம வள கொள்ளை நீர் மேலாண்மை, மத்திய மாநில உறவுகள், தமிழரின் தொன்மை, திருக்குறள், பாரதியார் கவிதை, பாரதிதாசன், ஜேசி குமரப்பா எழுதிய தாய்மை பொருளாதாரம் உள்ளிட்ட நூல்கள் என பலவற்றை எடுத்து உரிய இடத்தில் பொருத்தி ஒவ்வொரு நொடியும் தகவல்களை அள்ளித் தரும் இடமாக அந்த அரங்கை மாற்றுகிறார்.
சமகாலத்தில் இத்தனை நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதை தன் பேச்சுத் திறனால் மேம்படுத்தி எளிமைப்படுத்தி சொல்கிற திறன் கொண்ட ஒரே ஆளுமையாக அண்ணன் சீமான் தான் இருக்கிறார்.
அவரது பேச்சை பாராட்டுவதற்காக உரை முடிந்த பிறகு எடுத்துப் பேசினேன். இப்போது அந்தப் பேச்சின் தொடர்ச்சியை அதே உத்வேகத்தோடு என்னோடு அவர் விவாதிக்க தொடங்கினார்.
என்னோடு பேசும் போது சிறியதே அழகு என்ற நூல் தொடங்கி தி ஸ்பீச் ஆஃப் சரண்டர் என்கிற நூல் வரை பல விஷயங்களைப் பற்றி தெளிவாக உரையாடுகிறார். எங்கள் உரையாடலில் ஊடே என்னை அப்படியே தொடர்பில் காத்திருக்க சொல்லி அவரை சந்திக்க வருபவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் எந்த புள்ளியில் உரையாடல் நின்றதோ அதே புள்ளியில் அவர் தொடங்கி பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு அவைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை அவர் கடுமையாக திட்டமிடுகிறார்.
அவர் அடிக்கடி சொல்வது போல
“கடுமையான பயிற்சி, எளிதான வெற்றி.”
இன்னும் பல மணி நேரம் பேசுவதற்கான தகவல்களோடு அவர் தயாராகி வந்திருக்கிறார். கடும் வாசிப்பு மற்றும் உழைப்பின் வாயிலாக அடைந்த மேன்மை அது.
இரவு பகலாக குறிப்புகள் எடுத்து ஒவ்வொரு அரங்கிற்கும் அவர் தயாராகும் முறைமை போர்க்களத்திற்கு தயாராகும் திறன்பட்ட அரசனுக்குரியது.
அண்ணன் சீமானிடம் எனக்குக் கவர்ந்த பிடித்தமான விஷயம் எதுவெனில் அவருடைய கடும் வாசிப்பு. சில நேரங்களில் நான் மிரண்டு போயிருக்கிறேன். அரசியல் தொடங்கி சூழலியல், நவீன இலக்கியம், சங்க நூல்கள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள், வரலாற்று ஆய்வுகள், பாவாணர் ஆய்வுகள் என எல்லாவற்றையும் படிக்கிற திறன். படித்தவற்றை உரிய இடத்தில் பயன்படுத்துகிற பாங்கு. கடுமையான அந்த நினைவாற்றல். இதையெல்லாம் ஒன்று சேர்க்கும் அந்த யுக்தி. இவைகள் தான் மற்ற தலைவர்களை தாண்டி அண்ணன் சீமானை பலராலும் வியக்க வைக்கிறது. விரும்ப வைக்கிறது. பொறாமையினால் எதிரிகளை அதிகம் சம்பாதித்து தருகிறது.
முடிவாக எனக்கு ஒன்று தோன்றியது.
அண்ணன் சீமானை வெல்வதற்கு அவரைப் போலவே படிக்க, பேச, உழைக்க, பல்கலைக்கழக வகுப்பு போல புள்ளி விபரங்களோடு வகுப்பு எடுக்க, நெருப்பு தமிழில் உரையாற்ற,
இன்னொரு சீமான் தான் வேண்டும்.
கண்ணுக்கு எட்டிய தொலைவில் சமகாலத்தில் அப்படி யாரும் இல்லை என்பது தான் நமது பலம்.
அந்த பலத்தோடு நாம் எதிரியோடு மோதுவோம்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.-குறள்
அண்ணன் சீமான் என்னும் சொல்வல்லான்.
நெல்லையில் நடந்த தமிழக மக்கள் தன்னுரிமை மாநாட்டில் அண்ணன் சீமான் அவர்கள் நிகழ்த்திய இன்றைய மிக அற்புதமான பேச்சு இதோ..
உனக்கும்
எனக்கும் நடுவே
கைப்பிடி இல்லா
ஒரு கதவு.
அடிக்கடி
கதவு
பூட்டப்பட்டிருப்பதை
நாம் இருவருமே
உறுதி செய்து
கொள்கிறோம்.
இருபுறமும்
பூட்டப்பட்ட பூட்டுக்களின்
உறுதியை
அடிக்கடி
இழுத்துப்
பார்த்து
பரிசோதிக்கிறோம்.
என் சாவி உன்னிடமும்,
உன் சாவி என்னிடமும்,
இருப்பது
நன்றாக தெரிந்தும்
தொலையாத சாவியை
தொலைத்து விட்டதாக
தேடிக் கொண்டிருக்கிறோம்.
கதவு முழுக்க
துளை போட முயன்ற
தழும்புகள்.
குளிர்கால
பின்மாலையில்
கதவின் இடுக்கில் இருந்து
செந்நிற வெளிச்சம்
கசிவதை அச்சத்துடன்
பார்க்கிறேன்.
பாசிப்படர்ந்த
அந்தக் கதவின் மேல்
நீலக்கடல்
ஒன்றின் படம்
வரையப்பட்டு இருக்கிறது.
உடலில்
கருஞ்சிவப்புக்
கோடுகளோடு
ஒரு வெள்ளை மீன்
அதில் நீந்துவது போல
என்னை
பார்த்துக்
கொண்டிருக்கிறது.
அனேகமாக மறுபுறத்தில்
இதே போல
இன்னொரு மீனும்
உன்னையும்
பார்த்துக் கொண்டிருக்க கூடும்.
நள்ளிரவின் திடுக்கிடலில்
பின் கழுத்து வியர்க்க
நான் விழித்துப் பார்த்த போது
அந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது.
உனக்கும் அவ்வாறு தோன்றியிருக்கக்கூடும்.
சில நொடிகள் கழித்து
எனக்கு முன்னால்
தொங்கிக் கொண்டிருந்த
அந்தப் பூட்டை
உடைத்து விடலாமா
என்று எனக்குத் தோன்றியது.
அதே நொடியில்
அந்தப் பக்கம் பூட்டை
உடைக்கும்
சத்தம் எனக்கு கேட்டது.
நானறிந்தத
எதிரிக்கு
நானறிந்த
எதிரிக்கு
நாசூக்காக
சொல்வது
என்னவென்றால்..
நள்ளிரவு நடுக்கடலில்
மெல்ல அசைந்து
கொண்டிருக்கும்
தனிமை படகு நான்.
உன் புறக்கணிப்பின்
பாடல் என்னை
ஒன்றும் செய்யாது.
என் வானத்தில்
நீ அந்தி வரைய
முயற்சிக்காதே.
பல இரவுகளையும்
சில சூரிய சந்திரர்களையும்
ஒரு வேனிற் காலத்தையும்
குளிர் ஊதற் காற்றையும்
என் உள்ளங்கையில்
மறைத்து வைத்திருக்கிறேன்.
சட்டென அவைகளில்
ஏதேனும் ஒன்றை
அருகே இருக்கும் ஏரியில்
வீசி எனக்கான
பருவத்தை நானே
உருவாக்குவேன்.
கால தேச நழுவலின்
ஊடே எனக்கென்று
ஓர் உலகை
சமைக்க கற்றவன் நான்.
என்னை கைவிட்டதாக
கர்வம் அடையாதே.
நடுப்பகல் நேரத்து
பாலைவன ஓநாயின்
பசி கொண்ட
விழிகளை என்றாவது பார்த்திருக்கிறாயா …??
அதுதான் என் வாழ்க்கை.
நீ யோசிக்கவே முடியாத
அந்தர வெளியில்
சில கழுகுகளோடு
நான் பறந்து கொண்டு
இருக்கிறேன்.
நீரில் தென்படும் என்
சலனத்தை பார்த்து
உன் கத்தியை
குத்தாதே.
நீ என்னை
வெள்ளைத்தாள்
என நினைத்துக் கொண்டு
வரைந்த வரம்பற்ற
கோடுகளால்
பலனேதுமில்லை.
ஒரு யுகத்தின் பக்கத்தில்
தங்க எழுத்துகளாய்
நான் மின்னிக் கொண்டு
இருக்கிறேன்.
என் முன்னால்
பெருமூச்சு விட்டு
ஆற்றாமையோடு நிற்கும்
உனக்கு ஒரு வார்த்தை..
என்னை கொல்ல
நீ சிகண்டியாய்
அடுத்த பிறவியில்
பிறந்து வா.
அது வரை
மரணமில்லா
பீஷ்மராய்
நான் இந்த
பெருவாழ்வில்
திளைத்திருக்கிறேன்.
அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்…
“இதையாவது வணிகமாக மட்டும் செய். “
….
உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக நேசிக்கவும் தோன்றுகிறது.
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி முனைவர் செந்தில்நாதன் எனக்கு 2007 2008 காலங்களிலேயே பழக்கம். ஆர்குட் பக்கங்களில் அப்போது அவர் மதிமுக ஆதரவாளர். நானோ திமுகவின் போர்வாள். எனவே அப்போதே அவரது நண்பராக இருந்த சக்திவேல் மற்றும் செந்தில்நாதனோடு எனக்கு கடுமையான மோதல் (?) உண்டு.
அதன் பிறகு தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் வழக்கறிஞர் நல்லதுரை மூலமாக தம்பியாக செந்தில்நாதன் மாறுகிறான். எதை எடுத்தாலும் இப்போது கடை தொடங்கி இருக்கும் நிகழ்வு வரை ஆர்வத்தின் உச்சத்தோடு அணுகும் அவனது மனோபாவம் ஆச்சரியகரமானது. குறிப்பாக தமிழ்த் தேசிய தளத்தில் அவனது பங்களிப்பு மகத்தானது. தொடர்ச்சியான பண்பாட்டு மீட்சிப் போராட்டங்களில் உச்சங்களை தொட்டு வரும் வீரத்தமிழர் முன்னணி யின் ஒவ்வொரு அசைவிலும் அவனது உழைப்பின் உதிரம் நிறைந்திருக்கிறது.இன்று நாம் தமிழர் அடைந்திருக்கும் பல எல்லைகளை அன்றே தொட முயற்சித்து எங்கள் பலரின் எதிர்ப்பினை அவன் அடிக்கடி சம்பாதிப்பான். ஆனாலும் உற்சாகம் குறைந்ததில்லை.
பல இடங்களில் அவனோடு நான் முரண்பட்டு இருக்கிறேன். முடிந்த அளவு மோதி இருக்கிறேன். அடுத்த நொடியே சமாதானமாகி இன்னொரு வேலையில் இருவரும் இணைந்திருப்போம். முரண்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு கல்விப் புலத்தில் அவன் மேதமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். செங்கிப்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ஏழை குடும்பத்து இளைஞன் தன் மேதமையால் ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி நோபல் கமிட்டி என்றெல்லாம் உச்சத்தை தொட்டு விட்டு மீண்டும் செங்கிப்பட்டிக்கு திரும்பி வந்திருப்பது ஒரு திரைப்பட கதைக்கே உரிய சுவாரசியம் என்றாலும், அதற்குப் பின்னால் கொள்கை நேசிப்பு சார்ந்த, பிடித்த வேலையை செய்ய எண்ணி, பிடித்த பிடிவாதத்தால், ரத்தமாய் துயரம் கவிழ்ந்த ஒரு அசலான வாழ்க்கை இருக்கிறது.
ஆனாலும் அவன் ஜீவிதம் யார் முரண்பட்டாலும் அவனளவில் மிக நேர்மையானது. அவன் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய உன்னதமே அதுதான். அதற்காக அவன் இழந்ததெல்லாம் மிக மிக அதிகம் என்றாலும் அதை துளித் துளியாய் ரசித்து விரும்பி இழந்திருக்கிறான்.
எத்தனையோ முயற்சிகளை சலிப்பில்லாமல் சங்கடமில்லாமல் தொடர்ந்து செய்ய முடிகிற அவனது ஆன்ம பலம் , எப்போதும் எல்லாவற்றிலும் இருந்து விலகிக் கொள்ள இடம் தேடும் எனது உளவியலுக்கு நேர் எதிரானது என்றாலும், நான் கற்றுக்கொள்ள
விரும்புவது.
இப்போதும் “சேயோன்”என்ற முயற்சியோடு நம் முன்னால் தம்பி செந்தில்நாதன் நிற்கிறான். தவிர்க்கவே முடியாத நம்பிக்கை கண்களோடு அவனை இன்று கடைவாயிலில் பார்த்த போது வாழ்கின்ற போராட்டத்திற்கான ஆழமான வேட்கையை வரும் எல்லோருக்கும் வழங்குகிற கருவியாக அவன் மாறி இருந்தான்.
பல இடங்களில் கிடைக்காத நல்ல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறான். உடலுக்கும் மனதிற்கும் எப்போதும் கெடுதல் செய்யாத இயற்கை உணவு பொருட்களை எங்கெங்கோ அலைந்து திரிந்து வாங்கி வைத்திருக்கிறான். ஒவ்வொன்றிலும் சமூக நலம் சார்ந்து சிந்தித்து இருக்கும் அவனுக்காகத்தான் நான் இந்த பத்தியின் மூன்றாவது வரியில் சொன்ன அறிவுரை.
“இதையாவது வணிகமாக செய்..”
சமூக நலமும் வணிக வெற்றியும் முரண்பாட்டு புள்ளிகள் என்பதை அவனது வெற்றி தான் மாற்றி அமைக்க வேண்டும்.
…..
கடை திறப்பு விழாவிற்காக குழந்தைகளோடு குடும்பத்தோடு அவன் எங்கள் எல்லோரையும் வரவேற்று நின்று கொண்டிருந்த காட்சி நோபல் பரிசு கமிட்டியில் விவாதித்து உலகப் புகழ் அடைந்தவர்களோடு, ஒரே தகுதி இருக்கையில் அமர்ந்து உச்சம் தொட்டவனுக்கானது அல்ல என்றாலும், இந்த வாழ்வினை அசலாக வாழ விரும்பும் தமிழ்த்தேசியப் பற்றாளனுக்கானது என்ற வகையில் அவன் உறுதியாக வென்றாக வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன்.
ஏனெனில் அவனது வெற்றி என்பது இந்த களத்தில் நிற்கின்ற எண்ணற்ற இளைய புரட்சியாளர்களுக்கான வெற்றியாக கருதப்படும்.
வெளிச்சமாய் அவன் மாறட்டும்.
உள்ளம் நெகிழ அணைத்து வாழ்த்துகிறேன்.
அவசியம் அனைவரும் செல்லுங்கள்.
அவனை வாழ்த்துங்கள்.
சேயோன் வெல்வான்.
சேயோன் அங்காடி, கந்தர்வகோட்டை சாலை, செங்கிப்பட்டி.
தொடர்புக்கு..9442248351.
சமீபத்தில் அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking ) எழுதி அவரது மகள் லூசி தொகுத்த “ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்” (Brief answers to the Big questions )என்கின்ற புத்தகத்தை படிக்கும்போது கடவுள் இருக்கிறாரா என்ற சுவாரசியமான கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த நேர்மையான பதில் என்னை மிகவும் கவர்ந்தது.
கடவுள் பற்றிய அவரது கருத்திற்கு பலரும் கடவுள் மறுப்பு சார்ந்த நாத்திக வண்ணம் பூசுவதை அவர் மென்மையாக மறுக்கிறார். டைம் பத்திரிக்கையில் கடவுள் எதிர் ஸ்டீபன் ஹாக்கிங் என குறிப்பிட்டு கட்டுரை வெளியானதை பற்றி குறிப்பிட்டு அந்தப் படம் என்னவோ தன்னை சாத்தான் போல குறிப்பிடுகிறது என நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்.
அவரைப் பொறுத்தவரையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற கேள்விக்குள்ளேயே செல்லவில்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி ஆய்வு நடத்தும் அவர் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு கடவுள் தேவைப்படவில்லை என்கின்ற ஒரு கருத்துக்கு வருகிறார். இந்த நூற்றாண்டு முடிவதற்குள் இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்கின்ற அறிவியல் பூர்வமான தர்க்கத்திற்கு முடிவு கண்டுவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார்.
இதை பற்றி ஒரு கூட்டத்தில் பேராசிரியர் சுபவீ பேசும்போது இந்தக் கருத்தை அவருக்கே உரித்தான “திராவிட நாத்திகத் தன்மையோடு” விதந்தோதி , அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங்கை திராவிடர் கழகத்தின் உறுப்பினராக மாற்றிய துயரத்தை(?) காண நேர்ந்தது.
நம் மண்ணின் தொல் நிலத்து கடவுள் மறுப்பு சிந்தனைகளை குறித்து நிறைய புத்தகங்கள் வந்திருக்கின்றன. சங்ககால பாடல்கள் தொடங்கி திருக்குறள் பௌத்த சமண இலக்கியங்களில் கடவுள் மறுப்பு சம்பந்தமான குறிப்புகள் காணப்படுகின்றன.
சொல்லப்போனால் கடவுள் மறுப்பு கூட இங்கே தனித்த தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெளத்தத்தில் கடவுளுக்கு இடமில்லை. கடவுளை முன்வைத்து காலம் காலமாய் வகுக்கப்பட்ட விதி, பாவம், புண்ணியம், போன்ற பல சிந்தனை மரபுகள் பெளத்தத்தால் நிராகரிக்கப்பட்டு ‘ஆசையே அனைத்திற்கும் காரணம்’ என்கிற ஒற்றை புள்ளிக்குள் மனித வாழ்க்கை அடைக்கப்படுகிறது.
குறிப்பாக அண்ணல் அம்பேத்கரை ஆழ்ந்து கற்க விரும்புபவர்கள் அனைவரும் அம்பேத்கர் மீதான பௌத்தத்தின் தாக்கம் குறித்து கவனிக்காமல் கடந்து செல்ல முடியாது. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் எப்படி இந்த உலகத் தோற்றத்திற்கு கடவுள் தேவைப்படவில்லை என்பதை உணர்ந்தாரோ அதேபோல, பெளத்தமும் இந்த உலகத்திற்கு கடவுள் தேவையில்லை என்பதை அறிவிக்கிறது. அவரவர் செய்த கர்ம விதிகளின் அடிப்படையிலேயே அவரவர்களுக்கான உலகம் இயங்குகிறது என பௌத்தம் தீர்மானிக்கிறது.
கர்ம விதிகளுக்கு மேலான இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இயங்குவதை பௌத்தம் தீவிரமாக மறுக்கிறது. பௌத்தத்தை தோற்றுவித்த புத்தர் கூட பௌத்தத்தில் கடவுள் இல்லை. அவர் விடுதலை பெற்ற மனிதர் அவ்வளவுதான்.
புத்தரின் போதனைகள் பௌத்தத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. புத்தரின் போதனைகள் அல்லது அறவுரைகள் சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்கின்ற மூன்று வகையான திரிபீடகங்கள் ஆக தொகுக்கப்பட்டுள்ளன. இதில் சுத்த பிடகம் என்று அழைக்கப்படுவது ஒருவரின் உள்ளொளியை வெளிப்படுத்தி அவரை ஆத்ம விடுதலைக்கு தயார் செய்யும் நோக்கத்தை கொண்டது.
சுத்த பிடகம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தீக நிகாயம், மச்சிம்ம நிகாயம், சம்புட்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்கிற ஐந்தில் குட்டக நியாகத்தில் இரண்டாம் பகுதியாக தம்மபதம் அமைந்துள்ளது. மனித வாழ்வியலுக்கு அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தேவையான பதில்களை எளிமையான கவிமொழியில் அமைத்து பாலி மொழியில் 423 அறவுரைகளாக தொகுப்பட்ட தம்மபதம் உலகின் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். கே ஸ்ரீ தம்மானந்தா என்பவர் தொகுத்த தம்மபதம் தமிழில் யாழன் ஆதி மொழிபெயர்ப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
(எதிர் வெளியீடு, விலை 130/-)
மனம், உலகம், பிரியம், சினம், நீதி, வழி, தீமை, அழகு, விழிப்பு, தண்டித்தல், உலகம், புத்தர் உள்ளிட்ட இருபத்தியாறு தலைப்புகளில் தம்மபதம் 423 எளிமையான கவிதைகளில் விவரிக்கப்படுகிறது.
இணை என்ற தலைப்பில் ஆறாவது கவியாக
“அவர்களுக்குத் தெரியாது
விவாதித்துப் பகைக்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியும்
அமைதியாய் இருக்கிறார்கள்
எல்லோருக்கும் உண்டு
மரணம் என்பது”
எல்லோருக்கும் மரணம் உண்டு என்பதை தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தெரியாதவர்கள் தேவையில்லாமல் விவாதித்துக் கொண்டு பகைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எளிய மொழியில் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக தம்ம பதத்தில் ஆழமான கருத்துகளுக்கு எளிய உதாரணங்கள் பல இயல்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.
“ருசித்த உணவு
காமம் புசித்த உடல்
வேட்கையின் வெளி
இயக்கமற்ற சோம்பல்
இவை மிகுந்த வாழ்வு
பெரும் புயலில் விசிறி அடிக்கப்பட்ட
வேரற்ற மரம்”
என்ற அற உரையில் வாழ்வு என்பது எப்போது பெரும் புயலில் சிக்கி அழிந்த வேரற்ற மரம் ஆக மாறுகிறது
என்பதை காட்சியியல் பூர்வமாக தம்மபதம் ஆழமாக விவரிக்கிறது.
இதோ மனம் என்னும் தலைப்பில்
” நீரினின்று எடுத்து
நிலத்தில் விடுபட்ட மீன் துள்ளும்.
மனமும் துள்ளும்.
துள்ளுவதை அடக்குவதே நல்லது”
என அலைபாயும் மனதை நீரில் இருந்து பிரித்து நிலத்தில் விடப்பட்ட மீனாக உருவகப்படுத்துகிறது தம்மபதம்.
பௌத்த மரபில் பிக்கு என்பவர் யார் என்பதற்கு தம்மபதம் ஒரு விளக்கம் அளிக்கிறது.
“கைகளை கட்டுப்படுத்தி
கால்களை கட்டுப்படுத்தி
பேச்சை கட்டுப்படுத்தி
மனதை கட்டுப்படுத்தி
தியானத்தில் மகிழ்ந்து
தனிமையும் அமைதியும் சூழ இருப்பவர் பிக்கு என அழைப்பர்”
முதுமை என்ற தலைப்பில்
“கவனி
இந்த அழகிய உடல்
தீராத வலிகளின் குவியல்.
நோய்க்கூடு.
அதில் என்ன இருக்கிறது
எதுவும் தொலைந்து விட.”
என வாழ்வின் நிலையாமையை போகிற போக்கில் நம் மனதில் அலைந்து உண்மையை பகிர்கிறது இந்த அறவுரை.
“யாரிடமும் வேண்டாம்
கடின வார்த்தைகள்
அவை எதிர்க்கப்படும்
கெடு நோக்குடை பேச்சு.
துக்க மூலம்.
பழிவாங்கப்படுவர்”
என்கிற தம்மபதம் சொற்களால் உண்டாகும் கேடுகளைப் பற்றியும் தண்டனை பற்றியும் ‘தண்டித்தல்’ என்ற அத்தியாயத்தில் எச்சரிக்கிறது.
“குற்றத்தை சுட்டிக் காட்டும்
அறிவரை பின்பற்ற வேண்டும்.
புதையலை காட்டும் வழிகாட்டியைப்
பின்பற்றுவதை போல்”
என நமக்கு நன்மை தீமையை பகுத்து குற்றத்தை சுட்டிக் காட்டும் “அறிவர்” யாரென தம்மபதம் அடையாளம் காட்டுகிறது.
பௌத்த சிந்தனை மரபுகளை பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மறைந்த புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கி டூக் ( Kim Ki Duk) இயக்கத்தில் 2003ல் வெளியான “Spring, Summer, Fall, Winter… and Spring ” என்ற பால்ய வயதிலிருந்து பௌத்த துறவி ஆவதற்கான ஒருவனின் போராட்டத்தைப் பற்றி அதிக உரையாடல்கள் இன்றி காட்சி பூர்வமாக விளக்குகிறது. ஒரு புத்த துறவியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் தன் பால்யத்தில் சிறு சிறு உயிர்களை வதைக்க என்னும் உணர்விலிருந்து, வாலிபத்தில் அலைகழிக்கும் காமம் வரைக்குமான ,உணர்வு அலைகளில் சிக்கிக்கொண்டு தவித்து மடாலயத்தை விட்டு வெளியேறி உலக மாயைகளில் சிக்குண்டு மீண்டும் மடாலயத்தை தேடி வருகிற உணர்வுபூர்வமான கதை. இது பெரும் காட்சியியல் அனுபவம். வழக்கமான கிம் கி டூக்கின் படங்கள் போல் இல்லாது மெல்லிய நீரோட்டம் போல் இயற்கை சார்ந்த காட்சி அமைப்புகளுடன் ‘கர்மா’ என்று சொல்லக்கூடிய மனித வினைகள் பற்றிய பௌத்தத்தின் பார்வை தான் இப்படத்தின் திரைமொழி.
அதேபோல் 2001 இல் பான் நளின் (Pan Nalin) இயக்கத்தில் வெளிவந்த சம்சாரா ( Samsara) என்கிற திரைப்படமும் பௌத்த சிந்தனைகளை சார்ந்த மிக மிக முக்கியமான ஆக்கம்.
பனி படர்ந்து லடாக் பகுதியில் கடுமையான தியானத்தில் ஈடுபட்டு கென்போ என்ற உயர் நிர்வாண நிலையை அடைந்த தாஷி(Tashi) என்ற பௌத்த பிக்கின் வாழ்வியல் அனுபவங்கள் தான் இந்தப் படம்.
சாதாரண மனித வாழ்வின் இச்சைகளுக்கும் பௌத்த வாழ்வியலின் சவால்களுக்கும் இடையே அல்லாடிக் கொண்டு பௌத்த பிக்கு ஆக விரும்பும் ஒரு இளைஞனை அழைத்து இந்த உலக வாழ்க்கையை சகலவிதமான உணர்ச்சி கொந்தளிப்புகளோடு வாழ்ந்து விட்டு வா என அனுப்புகிற மூத்த துறவியின் அறிவுரைப்படி ஒரு கிராமத்தை நோக்கி கிளம்பும் இளைஞன் எப்படி மீண்டும் மாபெரும் பௌத்தத்திற்கு ஆக மாறி நிர்வாண நிலையை அடைகிறான் என்பதை மிக ஆழமாக விவாதிக்கின்ற திரைப்படம்தான் சம்சாரா.
இந்த மானுட வாழ்வு அவனுக்கு முன்னால் தத்துவார்த்தமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது.
அது என்னவெனில் “how can you stop a drop water from disappearing..?” ஒரு நீர்த்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்..?
அதற்கும் பதிலை காமமும் இச்சையும் ஆசையும் நிரம்பிய அவனது வாழ்வே அளிக்கிறது.
“அதை தூக்கி கடலில் வீசு.”
கடலோடு கலந்த நீர்த்துளியும் கடலாகிறது. இனி அது ஒருபோதும் ஆவியாக போவது இல்லை.
“ஆசையை வெல்வது என்பது வேறு. ஆசையை பூர்த்தி செய்வது என்பது வேறு” என்கிற நுட்ப வேறுபாட்டினை
மிக அழகிய திரைமொழியில் சம்சாரா திரைப்படம் விளக்கிறது.
அதேபோல் பௌத்தம் சார்ந்த சில முக்கிய புத்தகங்களை பார்ப்போம்.
கௌதம புத்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஹெர்மன் ஹெஸ்ஸே 1922 ல் நாவலாக எழுதினார். அது தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.( வளரி வெளியிடு, விலை ரூ 130/-)
அதே போல மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய புத்தர் வரலாறு என்கின்ற நூலும் மிக மிக முக்கியமானது.
சமீபத்தில் விலாஸ் சராங் எழுதிய The dhamma man” என்ற நூலை எனது நண்பர் காளி பிரசாத் தமிழில் “தம்மம் தந்தவன்” என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.( நற்றிணை வெளியீடு விலை ரூ 260)
புத்தரின் வரலாற்றை நவீன இலக்கிய மொழியில் ஒரு புதினமாக இந்த நூல் கட்டமைக்கிறது. புத்தரைப் பற்றி ஒரு அறிமுகம் அடைந்துகொள்ள ‘தம்மம் தந்தவன்’ மிகப்பெரிய உதவி செய்கிறது.
“கடவுள் இல்லை என்று யார் சொன்னது..? இருந்திருந்தால் நன்றாக இருக்கும் .”என்கிற ஒரு புகழ்பெற்ற திரைப்பட வசனம் போல பாடுகள் நிறைந்த மனித வாழ்வு ஏதேனும் ஒன்றை செயற்கையாக உருவாக்கிக் கொண்டு அதையே பற்றிக்கொள்ள துடிக்கிறது. பௌத்தம் அதற்கு எதிராக சிந்தித்து மனித வாழ்வின் பாடுகளை களைய அதன் காரணங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
“உங்கள் காலணிகள் சரியாக இருக்கும்போது
அதை மறந்து விடுகிறீர்கள்..”
என்கிறது பெளத்த மரபை சார்ந்த ஒரு ஜென் கவிதை.
அப்படித்தான் வாழ்வின் பாடுகளை, துயரங்களை போக்கிக்கொள்ள நிழல் தருகிற மரமாக அறிவார்ந்த பௌத்த மரபு இருக்கிறது.
எத்தனை நிழல் கிடைத்தாலும் வேட்கையும் , ஆசையும் நிரம்பிய மனித வாழ்வு என்னவோ பாலைவனத்தில் பட்டாம்பூச்சி ஆகத்தான் அலைகழிந்து கொண்டு இருக்கிறது
கால அடுக்கு
நழுவிய அந்த
நொடியில் தான்
என் நினைவின்
விரல்கள் அந்த கதவின்
மீது பட்டன.
வெண்மையும்
வெம்மையும்
கசிந்துக்கொண்டிருந்த
அந்த கதவிடுக்கின்
வழியே கண்ட போது
நீல நிறத்தில் மலர்ந்த
செம்பருத்தி சாயலில்
அந்த பாடல் எனக்காக
காத்துக் கொண்டிருந்தது.
துளித்துளியாய்
திறந்த கதவிற்கு
பின்
பனித்துளி தூவிய
பசுங் கொடி மேவிய
அந்த வெள்ளைச்சுவர்
இருந்தது.
அங்கே இருந்த
அலங்கார பீடத்தில்
வைக்கப்பட்டிருந்த
சுழலும் இசைத்தட்டில்
இருந்து எழும்பிய
மெல்லிய புகைச்சுருளின்
ஊடே சுழன்றவாறே
அவள் மிதந்திருந்தாள்.
அப்போதுதான்
எனக்கே
எனக்காக
உருவாக்கப்பட்ட
அந்த பாடல்
அனிச்சையாக
ஒலிக்க தொடங்கியது.
கண்கள் கலங்க
மீண்டும்
அந்தப் பாடலை
கேட்க
தொடங்கியபோது
தான் உணர்ந்தேன்.
நான்
திறந்தது கதவும் அல்ல.
நான் கேட்பது வெறும்
பாடலும் அல்ல.
இந்த இரவும்
முடியப் போவதில்லை.
விடியப் போவதில்லை.