மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கட்சி உறவுகளுக்கு..

கொஞ்சம் நீண்ட பதிவு தான். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் அவசியம் படியுங்கள். படித்துவிட்டு கருத்தினை தெரிவியுங்கள். சிறந்த கருத்துக்கள், எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் பகிருங்கள். இந்தப் பதிவை பல இடங்களில் பகிருங்கள். நன்றி .

############################################################

அன்பு உறவுகளுக்கு, வணக்கம்.

நம்மைச் சுற்றி சூழ்ந்து வரும் அரசியல் நிலைமைகள் குறித்து மிக கவனமாக உற்றுநோக்க வேண்டிய காலம் இது. திட்டமிட்டு திமுக பாஜகவை வளர்த்து வருகிற வேலைகளில் இறங்கி இருக்கிறது. ஊடக ஆதரவு தொடங்கி , போராட்டம் கூட்ட அனுமதிகள் மற்றும் பத்திரிக்கைகள் வரைக்குமான திமுகவின் பாஜக பாசம் கள்ள உறவாக நீண்டு வருவதை அரசியல் களத்தில் பணியாற்றுபவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

குறிப்பாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொண்டு வருகிற தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு திமுக அரசு எங்கேயுமே முட்டுக்கட்டை போடுவதில்லை என்பது கவனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சி கூட்டங்கள் நடத்தினால் தன் கட்சி ஆட்களை விட்டு மேடைகளில் பிரச்சனை செய்வது, பதாகைகளை கிழிப்பது போன்ற ரவுடி தனங்களில் ஆர்வம் காட்டும் “திராவிட மாடல்”(?) அரசு நடத்தும் திமுக தன் சித்தாந்த எதிரியாக வடிவமைக்கும் பாஜக மீது எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லாமல் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது என்பது மிக மிக திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

கடந்த தேர்தலில் திமுக அரசியல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வடிவமைக்க வந்தபோதே இதுபோன்ற அபாயங்களை பலர் சுட்டிக் காட்டியதை இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாஜக ஆளாத வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் கிடைப்பது போன்ற ஆளும் அரசின் அனுசரணை கிடைப்பதில்லை என்பது ஆழமான உண்மை.

திமுகவிற்கு மற்ற எல்லாவற்றையும் விட பாஜகவை எதிரியாக உருவாக்கி நிலை நிறுத்துவது வசதியானது மட்டுமல்ல எளிதானதும் கூட. பெரும்பாலான அரசியல் சிந்தனைப் போக்கில் திமுக ஏறக்குறைய மென்மையான இந்துத்துவ சார்பு நிலையை எடுத்துவிட்ட நிலையில், அதன் மற்றொரு நிலையாக உறுதியான இந்துத்துவ சக்தியான பாஜக இருப்பதுதான் அதற்கு வசதியானது. எனவேதான் கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக இன்று “வெல்கம் மோடி” பாடல் பாடுகிறது.

உண்மையில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு சொன்னதுபோல பாஜக திமுகவிற்கு ” இனிப்பான எதிரியாக” (Sweet Enimies) ஆக காட்சியளிக்கிறது. எனவேதான் நாம் தமிழர் போன்ற அமைப்புகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டால் காலம் தாழ்த்துவது, மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள “திராவிடமாடல் திமுக அரசு” பாஜக தமிழ்நாடு எங்கும் நடத்துகிற எல்லா நிகழ்வுகளுக்கும் உடனுக்குடன் அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இன்று செயல்படாத ஒரு நிலையில் இருப்பதால், அந்த அமைப்புகள் ஏற்படுத்தும் வெற்றிடத்தை திமுக உதவியோடு பாஜக நிரப்பத் துடிக்கிறது. இந்த நிலையில்தான் ஒரே நேரத்தில் திராவிடத்தையும், ஆரியத்தையும் சமமான எதிர் புள்ளிகளில் வைத்து இயங்க வேண்டிய தமிழ்த் தேசியர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக பணியாற்ற வேண்டிய கடமைக்கும், சுமைக்கும் உள்ளாகி இருக்கிறோம்.

அடுத்து வருகின்ற காலங்களில் குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தீவிர அரசியல் பணியாற்றுதலுக்கு நாம் உட்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். இன்று தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பாஜக நடத்தி வருகிற போராட்டங்கள் நிகழ்வுகளை உற்று நோக்கிப் பாருங்கள். மத்திய அரசு வங்கிகளில் கடன் வசதி, குற்ற பின்புலம் உள்ளவர்களுக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு, மிகப்பெரிய பொருளாதார ஆதரவு, சாதி சமய அமைப்புகளின் பின்புல வலிமை, போன்ற பல சலுகைகளை காட்டி ஆட்களை ஈர்க்கின்ற காட்சிகளை நம்மால் காண முடிகிறது. மாற்று சக்திகளாக திகழ வேண்டிய அதிமுக இடதுசாரிகள் போன்றவை ஏறக்குறைய செயலற்ற முடக்கத்தில் இருப்பதால் , தமிழ்த் தேசியர்கள் தான் மிகுந்த நம்பிக்கையோடு இந்த காலகட்டத்தை திறமையாக பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகளுக்கு ,

1. அந்தந்தப் பகுதி சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களை மாதத்திற்கு இரு முறையாவது நடத்துங்கள்.

2. கட்சி நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று சந்தித்துப் பேசுங்கள். கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் அண்ணன் சீமான் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அமைப்பில் இணைய தயாராக இருக்கிறார்கள். அவர்களை உறுப்பினர் ஆக்குங்கள்.

3. கட்சி உறுப்பினர்களுக்கு உடனடியாக கட்சி உறுப்பினர் அட்டை வழங்குங்கள். உறுப்பினர் அட்டை பெற்றவரின் வாக்கு ஒரு போதும் மாறாது. அண்ணன் சீமான் அவர்கள் பேசி வருகிற கருத்துக்களை காணொலிகளை சமூக வலைதளங்கள் மூலமாக இன்னும் அதிகமாக பரப்புங்கள். அண்ணன் தான் நமது பலம்.

4. ஒன்றிய நகர கட்டமைப்புகளை பலப்படுத்தி தலைமை மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு, வித்தியாசமான வடிவமைப்புகள் மூலம் சுவரொட்டிகள் தயாரித்து கட்சிக்கான விளம்பரங்களை செய்யுங்கள்.

5. தனிமனித முரண்களை தள்ளி வையுங்கள். இப்போது மிக மிக முக்கியம் அமைப்பின் வளர்ச்சி. நமது அமைப்பிற்காக அதன் வளர்ச்சிக்காக நாம் எதையும் விட்டுக்கொடுக்கலாம். எல்லோரிடமும் அமர்ந்து பேசுங்கள். மனம் விட்டு பேசினால் முரண் செத்துப்போகும்.

6. சுவரொட்டிகளும் கொடியேற்று நிகழ்ச்சிகளும் நிறைய நடத்துங்கள். கிராமப்பகுதிகளில் அதைத்தான் கட்சியின் வளர்ச்சி என மக்கள் கருதுகிறார்கள். வளர்ச்சி அடையும் ஒரு அமைப்பில் தாங்கள் இடம்பெற வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். எனவே கட்சி சார்ந்த விளம்பர நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். வடிவமைப்புகளில் வித்தியாசம் காட்டுங்கள். சுயப்புகைப்படங்களை பெரும்பாலும் தவிருங்கள். அண்ணன் சீமான் கருத்துக்களை, தலைவர் சிந்தனைகளை தெளிவாக வடிவமைத்து, தொடர்பு எண்களை குறிப்பிட்டு விளம்பரங்களை செய்யுங்கள். பிரதான சாலைகளில் சுவரெழுத்து விளம்பரங்கள் பலரையும் கவருகிறது. அதிலும் நம் கவனத்தை செலுத்த வேண்டும்.

6. அந்தந்த பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்குங்கள். இந்த வாரம் நாங்கள் கூட தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் “உறவுகளோடு ஒரு சந்திப்பு” என்ற நிகழ்ச்சி நடத்துகிறோம்.

7. கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்பாளர்களுக்கு கட்சி வகுப்புகளை நடத்துங்கள். மாபெரும் பேச்சாளர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் சிந்தனையாளர்கள் இடம்பெற்றுள்ள அமைப்பு நாம் தமிழர் கட்சி. எனவே விடுமுறை நாளில் ஒரு அரை நாள் நிகழ்ச்சியாக கட்சி வகுப்புகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது நடத்துங்கள். தத்துவ புரிதலும், நடைமுறை அரசியல் தெளிவும் பல உட்கட்சிப் பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை கொண்டவை.

8. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை மேலும் அதிகப்படுத்துங்கள். பொறுப்பாளர்கள் தங்களுக்குள்ளாக சிறந்த நண்பர்களாக இருந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட அன்பும், நட்பும் ஒரு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் வெளிப்படும்போது மாபெரும் வெற்றியை தரும்.

மற்றபடி உறுதியாக உழையுங்கள்.

உழைப்பிற்கு நம் அண்ணன் சீமான் அவர்களே உதாரணம்.

அவர் பாதையில் தீவிரமாக உழைப்போம். தமிழ்த் தேசிய அரசியல் வெற்றியாக இந்த மண்ணில் உறுதியாக நாம் தழைப்போம்.

நன்றி.

நாம் தமிழர்.

காலப் பயணத்தின் ஊசலாட்டம்.

“சுழலும்

வாழ்வென்ற

இசைத்தட்டில்

அடுத்த வரி

தாண்ட

மறுக்கிறது

என் ஆன்ம முள்.

கீறல் விழுந்த

இசைத்தட்டை

கேட்க முடியாது

என்பதை யார்

அதற்குச் சொல்லுவது..?”

என்கிற எனது பழைய கவிதை ஒன்று

நினைவுக்கு வருகிறது. கடந்த காலம் என்கிற பொக்கிஷ மினுமினுப்பில் உறைந்து நிகழ்கால அந்திச் சிவப்பை தரிசிக்காமலேயே தவறவிடுகிறோம்.

எத்தனையோ உரையாடல்களில் பலரும் சொல்வது இறந்தகால பசுமை நினைவு ஒன்றைதான். எப்போது தவிப்பு ஏற்பட்டாலும் இறந்தகால கிடங்கிற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அதன் நினைவுச் சூட்டினில் கதகதப்பாய் கிறங்கிக் கிடக்கிறோம்.

பால்யமோ, பதின்வயதோ , கல்லூரியோ, முதல் வேலை பார்த்த இடமோ, நாம் நினைத்தால் ஓடி புகுந்து கொள்ளும் மாய கதவு ஒன்றினை நினைவுகளின் வாயிலாக நாம் பெற்றிருக்கிறோம். காதலோ காமமோ காயமோ எல்லா உணர்ச்சிகளுக்கும் நம்மிடத்தில் நினைவுகள் இருக்கின்றன.

அப்படி நினைவுகளுக்கும், நிகழ்காலத்திற்கும் நடக்கிற ஊசலாட்டத்தில் தன்னையே இழந்து தானே மீட்டு எடுத்துக் கொள்கிற ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளைஞனின் கதைதான்

My beautiful wringles.

சரிகா (Dilber) இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு மிக மிக எளிமையாக இருந்திருக்கும். போகிற போக்கில் அசாத்தியமாக உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இளைஞன் கதாபாத்திரத்தில் தனேஷ் ராஸ்வி (Kunal )என்ற நடிகர் நடித்திருக்கிறார்.

Wringles என்றால் வயதான காலத்தில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை சொல்கிறார்கள். அந்தந்தக் காலகட்டத்தை வாழாமல் தவற விடுவதும், வாழ முயற்சிக்கும் புள்ளிகளில் குற்ற உணர்வு கொள்வதும் , பிறகு நேர்மையாக அனைத்தையும் உணர்ந்து கொண்டு

கடப்பதும் பற்றிய மனித உணர்வுகள் பற்றிய கதை இது.

பல்வேறு வலிகளுக்கும் ,ஏக்கங்களுக்கும் பின்னால் ஒரு சிறு புன்னகை முடிவாக இருக்கிறது என்பதை மிகமிக கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள அதன் போக்கிலேயே கடந்து போவது மிக மிக முக்கிய குணாதிசயம். தேங்கி நிற்க நிற்க வலி மட்டுமே மிச்சம். இந்த படத்தில் காட்டப்படும் ஒரு பழைய கார் போல நம் அனைவருக்கும் நம் மனதில் ஒரு பழைய கார் ஒன்று இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் அதன் கதவைத் திறந்து அதன் இருக்கையில் அமர்ந்து நாம் கலங்கவோ, மகிழவோ தொடங்கி விடுகிறோம்.

நிகழ்காலத்தில் வாழ்வது குறித்து ஆன்மீகம் பேசுகிறது. அந்தந்த நொடிகளை ஆழமாக கவனித்து வாழ்வது என்பதுதான் வாழ்வியல் என்று வாழ்க்கை பாடங்கள் போதிக்கின்றன. ஆனாலும் நாம் யாருமே அவ்வாறு இருப்பதில்லை.

‘நினைவோ ஒரு பறவை..’ என்ற புகழ்பெற்ற பாடல் வரி இருக்கிறது. நினைவு பறவையின் சிறகடிப்பில் நிகழ்கால நீல வானத்தின் வசீகரத்தை நாம் இழந்து விடுகிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

பிரைம் வீடியோவில் Modern love தொகுப்பில் கிடைக்கிறது.

இல்லாத திராவிடமும், இருக்கும் எருமையும்..

யாரை எல்லாம் தமிழர்கள் என்று வரையறை செய்கிறீர்கள் என எப்போதுமே தமிழ் தேசியத்தை நோக்கி விமர்சனம் எழுப்பும் ‘திராவிடத் திருவாளர்கள்’ அண்ணன் சீமான் தயவால் வரிசையாக விழும் ‘தர்ம அடி’ காரணமாக திராவிடர் என்பவர்கள் யார் என்கிற கேள்விக்கு இதுவரையில் பதிலளிக்க முடியாமல் ஆளாளுக்கு புளுகிக் கொண்டிருக்கின்ற காட்சியை பார்க்க முடிகிறது.

ஆரிய எதிர்ப்பு தான் திராவிடம், திராவிடம் என்பது ஒரு வாழ்க்கை முறை, தமிழர்கள் தான் திராவிடர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள் தான் திராவிடர்கள்,தமிழ் தெலுங்கு மலையாளம் துளு பேசுகிற மக்கள் தான் திராவிடர்கள், என்றெல்லாம் ஆளாளுக்கு குழப்பி கருப்பாய் இருப்பவர் தான் திராவிடர் என்கிற வரை இந்த உளறல் நீண்டு வருகிறது.

இன வரையறை என்பது மிக மிக நேர்த்தியானது. ஒரே நேரத்தில் ஒருவர் இரு இனங்களை சேர்ந்தவராக காட்டிக் கொள்ள முடியாது. ஆனால் இங்கே பலர் முதலில் நான் இந்தியன் பிறகு திராவிடன் அதன் பிறகு தமிழன் என்றெல்லாம் போகிற போக்கில் குழப்புகின்ற காட்சியை நம்மால் காண முடிகிறது.நாம் பிறந்த தேசிய இனம் தமிழன் என்கிற இனம். நம் தாய்நிலம் 1947க்கு பிறகு இந்திய நாட்டோடு இணைக்கப்பட்டது.இந்தியா என்பது நாம் வாழும் நாடு (country). தமிழர் என்பது நம் தேசம்( Nation) அல்லது தேசிய இனம். இந்தியா என்பது தமிழர் போன்ற பல தேசிய இனங்கள் இணைந்த ஒரு ஒன்றியம்.

இதில் திராவிடம் என்பது எதுவுமே இல்லை. அது வாழ்க ஒழிக போன்ற வெற்று அரசியல் முழக்கம் மட்டுமே. அதை ஒரு இனமாக அடையாளப்படுத்துவது தமிழர் என்கின்ற இனத்தை மறைக்கும் செயலாகும்.ஒரு இனம் என்றால் மொழி/நிலம் /பண்பாடு /பொதுவான பொருளியல் வாழ்வியல்/ தொன்றுதொட்ட வரலாற்றில் உருவான ஓரினம் என்ற உளவியல் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். திராவிடத்திற்கென்று மொழி கிடையாது. திராவிடத்திற்கு என்று நிலம் கிடையாது. திராவிடத்திற்கு என்று பண்பாடோ பொதுவான பொருளியல் வாழ்வியலோ இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் திராவிடம், திராவிட மாடல் என்றெல்லாம் கட்டமைக்க முயற்சிக்கப்படுவது ஆரியத்திற்கு/ இந்துத்துவாவிற்கு எதிரான செயல்பாடுகள் அல்ல. தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து இல்லாமலாக்கும் நகர்வுகள்.

தமிழராய் பிறந்து தமிழராய் வாழ்ந்து ஆரியத்தை அடியோடு எதிர்த்த மரபு சித்தர் காலத்தில் இருந்து வள்ளலார், வைகுண்டர் வரை நமக்கு இருக்கிறது. இதில் திராவிட முகமூடி நமக்குத் தேவையில்லை.அதனால்தான் வரலாற்றில்‌ கி.ஆ.பெ அண்ணல்தங்கோ தொடங்கி ஐயா பெ மணியரசன், அண்ணன் சீமான் போன்றோர் தங்கள் அடையாளத்தைக் காக்க திராவிடத்தை எதிர்த்து நிற்கிறார்கள்.

குறிப்பாக அண்ணன் சீமான் எழுப்புகிற அதிரடி கேள்விகளால் குழம்பிக் திரிகிறது திராவிடம். மண்ணின் பூர்வகுடி மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஆரியத்தின் நோக்கங்களை நிறைவேற்ற ஆரியம் தயாரித்த ஆயுதம் தான் திராவிடம் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகிவிட்டது.பாஜக ஹெச் ராஜா நாங்கள்தான் திராவிடர்கள், சங்கராச்சாரியே திராவிட சிசு தான், நாங்கள் பஞ்ச திராவிடர்கள், மோடி கூட திராவிடர் தான் என பேசி அதிர வைத்திருக்கிறார். மறுபுறம் பாஜக தலைவர்அண்ணாமலை நான் கருப்பாக இருக்கிறேன் நானும் திராவிடன் என கச்சை கட்ட, எருமை கூட கருப்பாகத் தான் இருக்கிறது அது திராவிடரா என வினா எழுப்பி ஒரே நேரத்தில் ஆரிய/ திராவிட முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் அண்ணன் சீமான்.

ஒருபுறம் 60 ஆண்டு காலமாய் திராவிடம் குட்டையை போட்டு குழப்பியதில் யுவன் சங்கர் ராஜா தலை கிறுகிறுத்து கருப்பு திராவிடன் என கருவாட்டு சாம்பார் போன்ற ஒரு புதிய இனத்தை கண்டுபிடிக்க, மறுபுறம் அவர் தந்தை இளையராஜாவை வைத்து ஆரியம் அம்பேத்கரின் கனவுகளை மோடி நிறைவேற்றுவதாக கதை கட்டிக் கொண்டிருக்கிறது.இரண்டு புரட்டுகளும் ஒரே நேரத்தில் அம்பலமாகி உருட்டுகளாய் மாறிக் கொண்டிருக்கின்ற‌ வேளை இது.

வண்டி இழுக்கும் எருமை மாட்டை நாய் பார்த்து குரைக்கிறது என அபூர்வ தத்துவத்தை உதிர்த்திருக்கிறார் மிஸ் யூ மனுஷ்.60 ஆண்டுகளாக இவர்கள் இழுத்த இழுப்பில் வண்டி கவிழ்ந்தது தான் மிச்சம் ‌. இதில் என்ன ஆச்சரியம் என்றால் பாஜகஅண்ணாமலைக்கு எதிராக அண்ணன் சீமான் பதில் சொன்னால் திமுக மனுஷ்யபுத்திரனுக்கு மண்டை காய்கிறது. முதலில் பெரியார் கூட திராவிடத்தை இனமாக கட்டமைக்க வில்லை என்பதை வேண்டுமென்றே மறைத்து , வந்தவர் போனவர் எல்லாம் வாழ்வதற்கும், ஆள்வதற்குமான பொதுக்கழிப்பிடம் ஆக தமிழ்நாட்டை மாற்ற, மீண்டும் மீண்டும் திராவிடம் என்கிற பொய்க் கதையை இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாருக்கு மொழி/ இனம்/ தேசியத்தின் மீது எவ்விதமான நம்பிக்கையோ பற்றோ இருந்ததில்லை என்பதை அவரே தெளிவுபடுத்தி இருக்கிறார்.எதுவுமே இல்லாத திராவிடத்தை வெறும் பிழைப்புக்காக தமிழர்கள் மீது திணிப்பது என்பது ஒரு தேசிய இனத்திற்கு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிற அவமானம்.எச் ராஜாவே நானும் திராவிடன் தான் என சொன்ன பிறகு திராவிடம் என்பதே போலி என தெளிவாகிவிட்டது.

தமிழன் என்று சொன்னால் பார்ப்பனர் உள்ளே வந்துவிடுவார் என பயங்காட்டி பார்ப்பனர் ஒருவரையே திராவிட இயக்கத்தின் தலைவர் ஆக்கி சமூக நீதி காத்த வீராங்கனை என பெரியார் திடலே பட்டம் கொடுத்த படம் தான் இவர்களது வரலாறு.திராவிடம் என்கின்ற அடையாளத்தை பூர்வகுடி தமிழர்கள் மறுப்பதன் வாயிலாக அவர்களுக்கான தனித்துவ அரசியல் அதிகார கதவு திறக்கிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பிறகுதான் திராவிடத் தலைவர் பெரியாரை கூட இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் என இனமாற்றம் செய்யத் துடிக்கின்றன அறிவாலயத்து ஒட்டுத் திண்ணைகள்.

எப்படி ஆரியம் தமிழைத் தவிர்த்து இந்தியைத் திணிக்கிறதோ, அதேபோல தமிழர் அடையாளத்தை மறுத்து திராவிடம் திணிக்கப்படுகிறது. இரண்டையும் எதிர்த்து தமிழ்த் தேசியம் மேலெழும்பத் துடிக்கிறது.அண்ணன் சீமான் ஒரு புதிய கதவினை திறந்து இருக்கிறார். தன் எளிமையான கேள்விகளால் , வலிமையான திராவிடக் கோட்டையை மறுக்கவே முடியாத தர்க்க வெடிவைத்து தகர்த்து வருகிறார்.

இனி ஒரு சீமான் மட்டுமல்ல, வீதிக்கு வீதி சீமான்கள் முளைப்பார்கள். அவர்கள் ஒரே சமயத்தில் ஆரியத்தின் உச்சிக் குடுமியையும், திராவிடத்தின் ஆணி வேரையும் பிடித்து குலுக்குவார்கள்.நம்முடைய கேள்வி மிக மிக எளிமையானது.

எருமை கூட இருக்கிறது. நாம் கண்ணால் பார்த்து இருக்கிறோம். திராவிடம் எங்கே இருக்கிறது.??இனி வரலாற்றில் தமிழர் எதிர் ஆரிய/திராவிட யுத்தம் தான் இங்கே நடைபெற இருக்கிறது.

அந்த வரலாற்றில் கருப்பாய் பிறந்ததால் எருமையும் இடம் பெற இருக்கிறது என்பதுதான் கூடுதல் தகவல்..

மேதைமைகளின் பேதமைகள்.

????

ஒரு புத்தக முன்னுரையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை பிரதமர் மோடியுடன், ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா‌ முற்றிலும் தவறாக பொருத்தியது அவரது அரசியல் ரீதியான அறியாமையை காட்டுகிறது.பெரும் மேதைகளுக்கு அவரவர் சார்ந்த துறைகளில் ஒளிரும் மேதமையை தாண்டி மற்ற துறைகளில் பூஜ்ஜியமாகத்தான் இருப்பார்கள் என்பது வரலாறு நமக்கு காட்டும் பாடம். இசைஞானி இளையராஜாவும் அதில் விதிவிலக்கல்ல. சச்சின் டெண்டுல்கரிடம் போய் இசையமைக்க எப்படி சொல்லக்கூடாதோ அதேபோல இளையராஜாவிடம் அரசியல் பற்றிய தெளிவை எதிர்பார்க்க கூடாது என்பதுதான் எனது புரிதல்.

மேலும் இளையராஜா தன் இந்துத்துவ சிந்தனாபோக்கும் வாழ்வியல் முறையும் தான் தன் இசைத்திறன் ஆதாரமாக இருக்கிறது என நம்புகிறவர். ஆன்மீகம் / கடவுள் போன்றவைகளுக்கு பின்னாலுள்ள அரசியலை காண விரும்பாதவர். தனது மேதமை மொழி/சாதி/நிலம் என எல்லைகளை தாண்டி விரிந்தது என நினைப்பவர். எனவேதான் தமிழ் மொழியை விட இந்தி மொழி இசையமைக்க சிறந்தது எனவும், தன்னை ஒரு சாதி அடையாளத்துக்குள் பார்க்கக்கூடாது எனவும் தான் கூறியவர். அப்படிப்பட்ட பார்வைகளை எதிர்த்தவர்.அது தமிழ் மொழியின் மீதான ஒவ்வாமையோ, சாதி மீதான எதிர்ப்புணர்ச்சியோ அல்ல. எல்லைகளை கடந்த மேதமை நிலையாகவே புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறவர். ஒரு தீவிரமான அழுத்தப்பட்ட நிலையிலிருந்து பெரும் பாய்ச்சல் போல வெளிப்பட்ட அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை சனாதன கட்டுகளை அறுத்தெரிந்த ஒரு புரட்சியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என விரும்பாதவர். அதற்காகவே ஆன்மீகப் போர்வை ஒன்றை தன் மீது போர்த்திக் கொண்டவர்.

எப்போதுமே இளையராஜாவின் அரசியலற்ற அவரது சமூகப் பார்வை நமக்கு உவப்பானது அல்ல. அவரது வரலாற்றிவு இல்லாத சமூக அறியாமை என்பது உச்சத்தை தொட்ட அவரது இசை மேதமையால் அவர் இழந்திருக்கிற இழப்பு. கடந்த பல ஆண்டுகளாக தன் வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த அவர், இசையை தாண்டிய சமூக அறிவிலும் சரியாக இருப்பார் என எதிர்பார்ப்பது பிழையானது.ஆனால் அது அவரது கருத்து என்கிற முறையில் அதை வெளியிடும் உரிமை அவருக்கும் , அவரது இசையை தாண்டிய இந்தக் கருத்தினை விமர்சிக்கும் உரிமை நமக்கு உண்டு.

இதில் முக்கியமான பிரச்சினை என்னவெனில்..கல்யாண வீடாக இருந்தால் தாங்கள் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், சாவு வீடாக இருந்தால் தாங்கள் தான் பிணமாக இருக்கவேண்டும், புகழப்பட வேண்டுமானால் கருணாநிதி ஸ்டாலினை தான் புகழவேண்டும் என செஞ்சோற்று விசுவாசம் பாராட்டும் அறிவாலயத் திண்ணைகள், முற்போக்கு வெங்காயங்கள் இளையராஜாவை தனிப்பட்ட முறையில், விமர்சிக்க எந்த தகுதியுமற்றவர்கள்.இஸ்லாமிய மக்களை மிகவும் இழிவு படுத்துகிற ‘பீஸ்ட்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைப் பற்றி வாய் திறக்கக்கூட மறுக்கிற இவர்கள் இளையராஜாவின் “மோடி பற்று” பற்றி விவாதிக்க தகுதியற்றவர்கள்.

தங்கத் தலைவனுக்கு பாராட்டு விழா, காவியத் தலைவனுக்கு கவியரங்கம் என தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக் கொள்ளும் “திராவிடத் திருவாளர்கள்” கருணாநிதியை புகழாமல் இளையராஜா ஏன் மோடியை புகழ்கிறார் எனப் பொருமுவது புரிகிறது.இதே இளையராஜா ஸ்டாலின் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத நேர்ந்திருந்தால், இப்போது நிகழ்ந்திருக்கிற கொடும் விபத்தை விட இன்னும் கொடுமையாக நடந்திருக்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.ஒருவேளை நடந்திருந்தால் ஸ்டாலினும் அம்பேத்கருக்கு நிகரானவராக மாறி இருப்பார்.நல்லவேளை அது நடக்கவில்லை. இது நடந்துவிட்டது. நம்மைப் பொறுத்தவரை இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் தான்.

எப்போதும் திரைப்படக் கலைஞர்கள் அதிகாரத்திற்கு அச்சப்பட்டு கொண்டே தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் சிந்திப்பார்கள். அதிகாரத்தின் நெருக்கம் அவர்களுக்கு , அவர்களது தொழிலுக்கு , புகழ்/ விருது/ உயர்வுகளுக்கு அவசியமானது. எனவே யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை புத்தன் இயேசு காந்தி என புகழ்வது அவர்களது வாடிக்கை. கருணாநிதி ஆளும்போது பக்கத்து இருக்கையில் ரஜினிகாந்த் உட்கார்ந்திருப்பார். கமலஹாசன் அமர்ந்திருப்பார். ஜெயலலிதா ஆளும் போதும் அதே காட்சிதான். அவர்களைப் பொறுத்தவரையில் கருணாநிதி மேடையில் அவர் அரசியல் ஞானி. ஜெயலலிதா மேடையில் அவர் தைரியலெட்சுமி.

எனக்கு மிகவும் பரிச்சயமான புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஒருவர் இருக்கிறார். எல்லோருக்கும் நல்லவர் (?) அவர். ஈழத்தமிழர் போராட்டங்களிலும் அவர் இருப்பார். அறிவாலயக் கூட்டங்களிலும் அவர் இருப்பார்.ஜெயலலிதாவை புகழ்வார். கருணாநிதியை கொண்டாடுவார். அந்தப் பொழுதில் அவர் ஏறுகிற அந்த மேடைக்கு அவர் நேர்மை(?) செய்யாமல் அன்றையப் பொழுது அவரால் உறங்க முடியாது.அவர் சமீபத்தில் அறிவாலய கூட்டமொன்றில் பேசிய பேச்சைக் கேட்ட எனக்கு, ஈகி முத்துக்குமார் ஆவணப்படம் வெளியிட்டபோது அவர் பேசிய பேச்சு எனக்கு நினைவுக்கு வந்து தொலைந்தது. தன் வாழ்வில் ஒரே சமயத்தில் ஈகி முத்துக்குமாரோடும் , திமுக தலைவர் கருணாநிதியுடனும் இணைய முடிக்கிற ‘சர்க்கஸ் மனிதர்கள்’ அவர்கள்.

அதே போல் தான் தரமான திரைப்படங்களை இயக்கிய அறிவார்ந்த இரண்டு இயக்குனர்கள் சட்டென ஒரு மேடையில் நடிகர் ரஜினிகாந்தை “தமிழ்நாட்டை காப்பாற்ற” அரசியலுக்கு வாருங்கள் என அழைத்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இத்தனைக்கும் அதில் ஒருவர் சிறை எல்லாம் சென்று வந்தவர்.அதே வரிசையில் இன்னொருவர் சமீபத்தில் ஸ்டாலின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப் போகிறேன் என்று அதிரவைத்தார். அதில் திரைப்படத்திற்கான சுவாரசியம் இருக்கிறதாம். இதே மனிதர் எடப்பாடி ஆட்சி காலத்தில் என்ன சொல்லியிருப்பார் என யோசித்துப் பார்த்தபோது பெரும் அச்சமாக இருந்தது.

இப்படித்தான் இவர்கள் இருக்கிறார்கள். யார் ஆள்கிறார்களோ அவர்களின் அரசவையில் பொற்காசு பிச்சைக்கு வரிசைக் கட்டுகிறார்கள்.அவ்வளவுதான் அவர்களது அறிவு. அதுதான் அவர்களது பிழைப்பு.கலை என்ற அம்சத்தை நீக்கினால் அனைத்துமே பேதமைதான். இதில் நடிகவேள் எம் ஆர் ராதா போன்ற விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு.கலை அறிவைத் தாண்டி திரைப்படக் கலைஞர்களிடம் அனைத்தையும் எதிர்பார்ப்பது தான் காலம் காலமாக தமிழர்கள் செய்துவருகிற பிழை.

தங்கள் வாழ்விற்கான அனைத்து தீர்வுகளையும் திரைப்படக் கலைஞர்கள் வழங்கிவிட வேண்டும் என்பதில் தமிழர்கள் காட்டுகிற தீவிரம் தான் இன்று இளையராஜா மீது வெறுப்பாக மாறுகிறது.

அவர் கருத்து அனைத்தையும் நாம் ஏற்க வேண்டிய தேவை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இளையராஜா இசையை ரசிப்போம். என்றும் கொண்டாடுவோம்.

அதைத் தாண்டி அனைத்திலும் அவரை ஏற்க வேண்டிய தேவை நமக்கும் இல்லை. அவருக்கும் இல்லை.

கழுத்தில் சொருகப்பட்ட கத்தியின் கருணை.

????

…அடை மழை இரவில்

காற்றின் பேரோசைப்பொழுதில்

படபடவென அடித்துக்கொண்ட

ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு

திரும்பிப் பார்த்தபோது,

அந்த நீல விளக்கு ஒளிர்ந்த

மாடி அறையின் மையத்தில் நீ

நின்று கொண்டிருந்தாய்.

தலை குனிந்த வாறே

நீ நின்றிருந்த கோலம்

எனக்கு மிஷ்கின் படத்து நாயகனை

நினைவூட்டியது.

உறுதியான கால்களுடன்

அங்கிருந்து நகரப் போவதில்லை

என்ற தீர்மானத்துடன்

நீ நின்று இருப்பதாக

எனக்குத் தோன்றியது.

நான் பேச எதுவும் இல்லை.

ஆனால் என் நடு மார்பில்

பாய்ச்சுவதற்கான அம்புகளாய்

விஷம் தோய்ந்த சொற்களை

உன் நாவில் எடுத்து வந்திருக்கிறாய்

என நினைக்கிறேன்.

தீரா கொடும் வலியும்,மீளா நடு இருளும்,

வண்ணங்களாய் ஒளிரும்

உன் சொற்கள் செவிகளில் புகுந்து விட்ட

முள் பந்தாய் உருளக்கூடியவை.

அடிமேல் அடி வைத்து

கடந்த காலத்தை

நினைவூட்டும் டேப்ரிக்கார்டரின் ரிவைண்டர் போல

பின்னால் போய்க் கொண்டிருந்தேன்

நீ குளிர் காலத்து பழங்கால சிலையாய்

அப்படியே உறைந்திருந்தாய்‌.

துளியும் கருணையற்று நீ

அவ்வப்போது துப்பியதூளாக்கப்பட்ட

பிளேடு துண்டுகளின் சாயல் கொண்ட

உன் சொற்கள் என் ஆன்மா முழுதிலும்

அப்பிக் கிடக்கின்றன.

வெளிறிய விழிகளோடு பின்னால் நகர்ந்த

நான் சுவரின் விளிம்பில்

நின்று கொண்டிருக்கிறேன்.

கால விசை நழுவிய

ஒரு நொடியில் வேகமாய்

ஓடி வந்த நீ ஆழமாய்

என் கழுத்தில் உன் கத்தியை சொருகினாய்.

நல்ல வேளை..

நீ உன் சொற்களோடு வரவில்லை

என்கிற ஆசுவாசம் மட்டும்,

அந்த ஒரு நொடியில்‌‌..

உதிரமேறி கிறங்கும்

என் விழிகளில் நிம்மதியின் நிழலை பரப்பியது

கருப்பு- தமிழினத்தின் நிற அரசியல்

????

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வெறும் அரசியல் கட்சியாக மட்டும் இது பயணித்து விடக்கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகுந்த கவனமாக இருந்தார். ஒரு இனத்திற்கான விடுதலை என்பது மண் விடுதலை மட்டுமல்ல , சாதிமத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற மானுட விடுதலை, தாய்மொழி மீட்சி, இழந்த உரிமைகளை போராடிப் பெறுவது, பல்வேறு ஊடுருவல்களால் சிதைந்துபோன இனத்தின் பண்பாட்டு மீட்டெடுப்பு போன்ற பல தளங்களில் நமக்கு வேலை இருக்கிறது என்று தீவிரமாக எங்களுக்கு அறிவுறுத்திய அவர் சில முடிவுகளை நடைமுறைப்படுத்த தொடங்கினார்.நடுகல் மரபினரான நம் இனத்தில் மூத்தோர் வழிபாடு , முன்னோர் வழிபாடு குலதெய்வங்கள், சிறுதெய்வ வழிபாடு என தமிழ்த் தேசியத்தின் பண்பாட்டு வேர்களை பலப்படுத்துவதற்கான பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டார்.

கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வேல் தூக்கி விட்டார். இந்துத்துவா பக்கம் சென்று விட்டார் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார்கள். புத்தகம் போட்டார்கள். ஆனால் அண்ணன் சீமானோ இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பல பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அதில் மிக மிக முக்கியப் பணி நம் இனத்தின் தொன்ம தெய்வமான முருகனை ஆரிய வடிவத்திலிருந்து மீட்பது. இரவு பகலாக அதுகுறித்து அவர் சிந்தித்துக்கொண்டே இருந்தார். பல‌ வடிவமைப்புகளை பல எண்ணங்களை நாங்களெல்லாம் அவரோடு பகிர்ந்து கொண்டு இருந்தபோது அவர் வேறு மாதிரியாக சிந்தித்து கொண்டிருந்தார்.

சில நாட்கள் கழித்து எங்கள் அலைபேசியில் அவரிடத்தில் இருந்து ஒரு ‘முருகன்’ வந்திருந்தான்.அமுல் பேபி போல, செக்கச் செவேல் என்று கொழு கொழு என கடைந்தேடுத்த தயிர் பாலகன் போல ஓவியங்களில் காட்சியளித்த அக்ரகாரத்து முருகனை பார்த்துப் பழகிய எங்களது விழிகள் முதன்முறையாக பாட்டன் முருகனை கருமைநிற இளைஞனாக பார்த்தபோது மகிழ்ச்சியால் கலங்கின.ஆம் அசலான முருகன் அப்படித்தான் பிறந்தான். வலுவான உடற்கட்டு ,, கூரிய மீசை என அசலான தமிழ் முகத்தோடு வந்த முருகனை பார்த்துவிட்டு, ஏற்கனவே வீட்டுக்கு வீடு தொங்கிக் கொண்டு இருக்கிற அந்தக் கொழுகொழு முருகனை என்ன செய்வது அண்ணா என‌ சந்தேகத்துடன் அவரிடம் கேட்டேன்.அண்ணன் சிரித்துக்கொண்டே ..” தம்பி அவன் நம்ம ஆளு இல்லடா.. அவன் வடநாட்டு சுப்பிரமணி. நம்ம தாத்தன் செகப்பா இருப்பானா.. சதை மெழுகி குண்டா இருப்பானா.. காடு மலைகளில், வெயில் மழை என பாராது, வேட்டையாடி, அலைந்து திரிந்து இருக்கிறான்.

அப்படி என்றால் உடல் எவ்வளவு வலுவாக இருந்திருக்கும் . யோசித்துப் பார். அதுதான் 6 pack வைத்து கருப்பாக களையாக கம்பீரமாக நம் பாட்டன் உருவாகி இருக்கிறான். இனிமேல் இந்த கருப்பன் தான்டா நம்ம முருகன் .” என்றார் அவர்.அன்றுமுதல் நம் முருகன் அசலான நம் பாட்டனாக, நம் உள்ளம் கவர்ந்த கருப்பனாக, மாறி போனான். பல இடங்களில் நம் கருப்பு முருகன் இன்று ஊடுருவி விட்டான். தனியார் பேருந்துகளில் பிரம்மாண்டமான ஓவியமாக மிளிர்கிறான். பல பொதுவான சுவரொட்டிகளில் நம் கருப்பு முருகன் கையில் வேலோடு‌ ஒளிர்கிறான்.இப்படித்தான் சில வேலைகளை அதிரடியாக செய்ய வேண்டியிருக்கிறது. அதே போல் தான் நம் இனத்தின் பெருமைக்குரிய கலைஞன் இசைமேதை ஏ ஆர் ரகுமான் தன் தாய்மொழி உணர்ச்சியால் ஆஸ்கர் மேடையில் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் முழங்கியவர்.

வடநாட்டு கச்சேரிகளில் அலை பாய்ந்து வரும் எதிர்ப்புகளை புறக்கணித்துவிட்டு தமிழில் பாடல்களைப் பாடுபவர். தமிழ்நாட்டு மேடையில் ஆங்கிலம் ஒலிக்கும்போது தமிழில் பேசுங்கள் அப்போதுதான் மேடையில் இருப்பேன் என கம்பீரமாக சொல்பவர். ஆளப்போறான் தமிழன் என இசையமைக்கும் போது என் உள்ளுக்குள் ஏதோ ஒன்று என்னை ஆட்டி வைத்தது என பெருமிதப் படுபவர். கனடா நாட்டில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் “உன் தேசத்தின் குரல்‌ ” என கண் கலங்க பாடி நம்மை மெய்சிலிர்க்கவும் கலங்கவும் வைத்தவர்.சமீபத்தில் துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாட்டு பாடுவோமா எனக் கேட்டுவிட்டு அப்படியே உணர்ச்சியில் ஊறி தமிழ் தமிழ் தமிழ் என‌ முழங்கிக் கொண்டே நின்றவர். மூப்பில்லா மொழி எங்கள் மொழி என தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பவர். அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்கின்ற ஓவியத்தை வெளியிட்டதற்கு சங்கிக் கூட்டம் வழக்கம் போல் துள்ளிக்குதித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கூடுதலாக.. இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என அமித்ஷா சொன்னதற்கு, தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனச் சொல்லி ஏற்கனவே வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டிருக்கின்ற சங்கிகளின் தலையில் ரகுமான் நெருப்பு அள்ளி வைத்திருக்கிற பரவசக் காட்சியை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்று கொண்டிருக்கிறோம்.

நேற்று கூட தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய இசைமேதை ஏ ஆர் ரகுமான் நம் நிறம் நமக்கு. தென்னிந்தியாவில் கருப்பான நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என நம் இனத்தின் நிறத்திற்கு ஆதரவாக மீண்டும் துணிவுடன் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்த் தாயை கருப்பாக அசிங்கமாக வரைந்திருக்கிறார்கள், அதை இந்த ரகுமான் வெளியிடுகின்றார், என ஓநாய் கண்ணீர் வடிக்கிறது ஒரு கூட்டம். இவர்களைப் பொறுத்தவரையில் கருப்பு என்பது அழகின்மை.அருவெறுப்பு , அசிங்கம்.ஆனால்.. தமிழர்கள் நமக்கோ அதுதான் நிறம். அதுதான் அடையாளம்.நமது தாய் தமிழணங்கு. அவள் கருப்பாகதான் இருப்பாள்.‌ எங்கள் பாட்டன் முருகன். கருப்பாக தான் இருப்பான்.இதில் பத்ரி சேஷாத்ரி வகையறாக்கள், சங்கி மங்கி கூட்டங்கள் பதறுவதற்கு எதுவுமே இல்லை. எமது அழகை இவர்கள் வரையறை படுத்த எவ்வித உரிமையும் அற்றவர்கள். எம் இனத்தின் அடையாளம் கருப்பு. எங்கள் குலசாமி ஒன்றின் பெயர் கருப்பு.கருப்பு என்பது ஒருபோதும் எமக்குப் பெருமை குறைவல்ல. சொல்லப்போனால் அதுதான் எமது தகுதி. எமது பெருமை.கர்வமாக சொல்வோம்.இது கருப்பர் நாடு. காவியே ஓடு.இசைமேதை ஏ ஆர் ரகுமானுக்கு நெகிழ்ச்சியுடன் புரட்சி வணக்கம்.

❤️

மணி செந்தில்.

தொடர்புடைய சுட்டிகள்.

https://youtu.be/efmKKC8XD8ohttps://youtu.be/B5wZZ565iPY

அண்ணன் சீமானுக்கு..

என் அண்ணனுக்கு…எனக்கு அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நம் உயிர் தலைவர் அவர்களின் உடல் கிடைத்து விட்டதாக கூறி சிங்களன் செய்தி வெளியிட்டு மகிழ்ந்த நாள். அந்த செய்தி கிடைத்த போது நான் ஒரு முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். எந்த திசையும் தெரியாமல்.நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் திசையற்றுப்போனதருணம் அது. எல்லா ஊர்களிலும் ஈழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்கள் கண்கலங்கி , ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தப் போதும் கூட தலைகுனிந்து மௌனமாக கடந்த பொழுதுகள் அவை.

திசையழிந்தஇருள் வெளியில் நின்றுகொண்டிருந்த இனத்திற்கு பற்றிக்கொள்ள ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது. அவநம்பிக்கை மிகுந்த எங்களது விழிகளில் ஒளி மீண்டும் பிறக்க ஒரு பகலவன் தேவைப்பட்டான்.அப்போதுதான் நாங்கள் உங்களை தேடினோம். அப்போது நீங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை.இரண்டு மாதம் கழித்து நீங்கள் என்னை அழைத்தீர்கள் அண்ணா.நான் மறுக்கவே முடியாத ஒரு அழைப்பு அது. அந்த நொடியிலிருந்து அக்குரலின் எந்த ஒரு அழைப்பிலிருந்தும் எக்காலத்திலும் நான் விலகியதில்லை.அறுத்தெறிவோம் வாரீர் என நீங்கள் அழைத்த போதுதான் குனிந்த எங்களது தலைகள் நிமிர்ந்தன. நாங்கள் பற்றிக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒளி உமிழும் ஒரு பற்றுக்கோடு கிடைத்துவிட்டது.

ஆம். எம் இருட் வாழ்வின் பகலவன் நீங்கள்தான்.ஆம் அண்ணா. நீங்கள் மட்டும் தான் எனது ஒரே நம்பிக்கை. எனக்கு மட்டுமல்ல என்னை போல பல லட்சக்கணக்கில் இருக்கும் ஊருக்கு ஊர் நீங்கள் அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு வேர்வை சிந்தி உருவாக்கி இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் மட்டும்தான் ஒரே நம்பிக்கை.குறிப்பாக நான் நம்பிக்கை கொள்வது உங்களோடு மட்டும்தான்.இன்றளவும் நான் தட்டுத்தடுமாறி நடக்கும்போது கீழே விழுந்து விடுவேனோ என நினைக்கும் அந்த ஒரு நொடியில் உங்களது குரலோ அல்லது உங்களது முகமோ எனக்கு நினைவுக்கு வந்து நான் நிமிருவதற்கான‌ வலு எனக்கு பிறக்கிறது.

தனிப்பட்ட என் வாழ்விலும் , சமூக வாழ்விலும் எனக்கு எல்லாமே நீங்கள் தான். எனது ஆசிரியர், எனது அண்ணன், வழி தடுமாறும் நேரங்களில் வழியாகி கிடைக்கும் எனது விழி என எல்லாமுமே எனக்கு நீங்கள் தான். உங்களுக்கு எதுவும் ஆகாது அண்ணா. உங்களை மாவீரர் தெய்வங்கள் எப்போதும் பாதுகாப்பார்கள் என்பதை நான் அறிவேன். இந்த இனம் வாழ இந்த மொழி செழிக்க நீங்கள் காலத்தினால் உருவாக்கப்பட்ட மகத்தான கருவி அண்ணா.அந்தப் புனித மிக்க காலக் கருவியின் கடமை முடியாமல் எதுவும் உங்களுக்கு நடக்காது அண்ணா.

இன்று ஒரு நொடி நீங்கள் மயங்கிய அந்தத் தருணத்தில் என்னைப்போன்ற எத்தனையோ பேர் இறந்து பிறந்தோம் அண்ணா.உங்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை கலங்கிக்கொண்டே எங்கள் விழிகள் எங்களுக்கே இன்றைய நாளில் உணர்த்தின.வலிமிகுந்த இந்த நாளில் நாங்கள் வெற்றிகரமாக சோழ மண்டல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினோம் அண்ணா. வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் கூடியது. ஆனால் எல்லோரும் வலியால் அமைதியாக இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் நீங்கள் நலம் என்ற செய்தியை நம்பிக்கையோடு பகிர்ந்து கொண்டார்கள்.உங்களை உயிராக நேசிப்பவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி உங்களுக்குப் பிடித்தமான கட்சி வேலையை உச்சபட்ச கவனத்தோடு செய்து கொண்டிருந்தோம்.

அதுதான் உங்களுக்கு நாங்கள் செய்கிற நேர்மையான பேரன்பின் பரிசு என்பதை நான் அறிவேன்.

விரைவில் தேறி வாருங்கள் அண்ணா.

இந்த இனத்தை, இந்த நிலத்தை தேற்ற வாருங்கள்.

உங்கள் தம்பி.

மணி செந்தில்.

( ஏப் 2-2022 அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடல் நலிவுற்றப் பொழுதில்..)

என் அன்பு மகன் சிபிக்கு..

19.03.2022 இரவு 12.01.

எனது அன்பு மகன் சிபிக்கு..

துளித்துளியாய் நகரும் இந்த இரவில், கண்கள் முழுக்க நெகிழ்ச்சியோடு, உள்ளம் முழுக்க பேரன்போடு உனக்காக எழுதுகிறேன்.முதலில் உன்னை உச்சிமோர்ந்து கண் கலங்க முத்தமிடுகிறேன்.கலீல் ஜிப்ரான் சொல்வதுபோல நீ என்னில் இருந்து வந்தவன் தான். ஆனால் நீ நான் அல்ல. என் கனவுகளை உன் மீது சுமத்தி நான் வளர்க்கும் ஒட்டகமாய் உன்னை திரிய வைக்க நான் எப்போதும் விரும்பியதில்லை. உனது சுதந்திரத்தையும், உனது தேர்வுகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். அவற்றையும் எனக்கானதாய் கருதி நான் விரும்ப கற்றுக் கொள்கிறேன்.இவ்வளவும் நான் உன் மீது வைத்திருக்கிற பேரன்பினால் மட்டும் விளைந்தது அல்ல. மாறாக அப்பழுக்கற்ற நம்பிக்கையினால்.ஆம். நான் மட்டுமல்ல. இந்த கலையகத்தில் இருக்கும் ஒவ்வொரு துரும்பும் உன்னை நம்புகிறது. உனது புன்னகைக்காக ஏங்குகிறது.

18 வருடங்களுக்கு முந்தைய ஒரு மாலை நேரத்தில் அது வரை எதுவுமே அற்ற என் வாழ்க்கையில், ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டு நீ வந்தாய் ‌.அந்த நொடி இன்னும் என் விழிகளுக்குள்ளாக பசுமையாக இருக்கிறது. உனது பிஞ்சு கால்களின் மென்மையை இப்பொழுதும் எனது உள்ளங்கை உணருகிறது.எந்த நொடியிலும் நீ கலங்கி விடக்கூடாது என்பதை என் வாழ்க்கையின் நோக்கமாக அன்றைய நாளில் தான் நான் மாற்றிக் கொண்டேன்.நான் அடைந்த எந்த இருண்மையும் உன்னைத் தொட்டு விடக்கூடாது என்பதற்காக எப்பொழுதும் உனக்காக துடிக்கும் என் ஆன்மா உன் மீது அன்பின் நிழல் வேய்ந்திருக்கிறது.நீ நடக்கும் போதும், ஓடும் போதும், மண்ணிலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்து தாவும் போதும் நானே நடப்பதாக ஓடுவதாக பறப்பதாக உணர்ந்தேன். எனக்கு இந்த உலகம் எதை எதை மறுத்ததோ , அவை அனைத்தையும் உன் மூலம் நான் அடைந்து விட்டேன். அதில் நான் இந்த உலகையே வென்று விட்டேன்.

❤️

தாத்தா ஆத்தா அம்மா தம்பி என்று ஒரு பாதுகாப்பான வேலிக்குள் ஒரு தோட்டத்து மல்லிகைச் செடி போல இதுவரை நீ இருந்து விட்டாய்.அதைத் தாண்டிய ஒரு உலகம் உன்னை இந்த நொடியில் கையசைத்து அழைக்கிறது. நீ அங்கு போய் தான் ஆக வேண்டும். ஒவ்வொரு நொடியும்விரிவடைந்துகொண்டே போகின்ற அந்த உலகம் இதுவரை வாழ்ந்த உன் வீடு போல எளிமையும் பாதுகாப்பும், முறைமையும் கொண்டது அல்ல.எல்லா திசைகளிலும் திருப்பங்களை கொண்ட அந்த உலகில் அலைந்து திரிந்து உனக்கு நீயே ஆசிரியனாய் அனுபவங்கள் வாயிலாக கற்று கொள்ள இதோ ஒரு வாசல் கதவு திறக்கிறது.ஒரு சிட்டுக்குருவியை போல நீ பறந்துப் போக ஒரு பெரிய வானம் காத்திருக்கிறது.

ஒரு வெண்புறா போல அகத்தூய்மை கொண்ட நீ அப்படியே இருந்து விடாதே.கழுகைப் போல பார்வையும், வல்லூறைப் போல வலிமையும் உனக்குத் தேவை.இனி நிறைய பயணப்படு. தனியே ஊர் சுற்று. தினந்தோறும் உடற்பயிற்சி செய். மிக சாதாரண எளிய மக்களோடு மிக எளிய வாழ்க்கை ஒன்றை வாழ பழகிக் கொள். கிடைத்தவற்றை, கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு செரித்துக்கொள்ள உறுதியான வயிறு ஒன்றினை பயிற்சியின் மூலம் கண்டடை. உடலை,மனதை கெடுக்கும் எதனையும் தீண்டாதே.எல்லோருக்கும் உதவு. இரக்கப்படு. நீதிக்காக உரத்துக் குரல் கொடு. அநீதியை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதே.புத்தகங்களோடு வாழப் பழகிக் கொள்.மற்றபடி இந்த வாழ்க்கை உன்னுடையது. உறுதியோடு நம்பிக்கையோடு வசீகரமான பயணம் போல இந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவி.‌ கொண்டாட்டங்களின் ஊடாக சக மனிதர்களை நேசி.இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்பதற்கான சட்டக விதிகள் இவைகள் அல்ல. உனது பயணம் தங்கு தடையில்லாமல் வெற்றிகரமாக அமைய ஏற்கனவே பயணப்பட்ட ஒருவனின் அனுபவக் குறிப்புகள். முள் பட்ட கால்களின் முன் தீர்ப்புகள்.

உன்னை மகிழ்ச்சியோடு இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த தோழனாய் இந்த நொடியில் உன்னை நான் உணருகிறேன். நமது பல ரசனைகள் ஒன்றாகவே அமைந்திருப்பது கண்டு நான் ஒருபோதும் வியந்ததில்லை ‌. உனது நிழலாக நானிருக்கிறேன் என்பதும், எனது நகலாக நீ இருக்கிறாய் என்பதும் நாம் அறிந்தவை தானே.மற்றபடி 17 முடிந்து 18 யை தொட்டுவிட்டாய். இனி புதிய உலகம். புதிய வாழ்க்கை. புதிய அனுபவங்கள்.சென்றுவிட்டு, வென்று விட்டு, எப்பொழுது ஆனாலும் வீட்டுக்கு வந்துவிடு‌.பரவசமாய் உனது வெற்றிகளை கேட்க, பார்க்க நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.அதோ தூரத்தில் கைதட்டல் ஓசை கேட்கிறது.

சென்று வா.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிபி.

அல்லாஹு அக்பர்

நீ என்னை
ஆக்கிரமிப்பதற்காகவும்,
கட்டுப்படுத்துவதற்காகவும்
வீசும் ஆயுதங்களை
கம்பீரமான
எனது கலகக் குரல் மூலமாக
அடித்து நொறுக்குவேன்.

நான்
விடுதலையின் காற்று.
எதிர்ப்பின் ஏகாந்தம்.
உன் கட்டுபாட்டுக்
கம்பி வேலிக்குள்
அடங்கி விடமாட்டேன்.

ஓங்கி ஒலிக்கும்
எனது முழக்கம்
என்னைப்போலவே,
உன்னை எதிர்த்துப்
போராடி உன்னால்
உயிரோடு
கொளுத்தப்பட்ட
எனது முன்னோரின்
சாம்பலிலிருந்து
கிளர்ந்து எழுந்தது.

நான் யாராக இருக்க வேண்டும் என்பதை
நான் தீர்மானிப்பதை விட
நீ தீர்மானிக்கக் கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் யார் என்பதை
நீ தீர்மானித்து
வைத்திருக்கும்
எல்லா வரையறை
சட்டகங்களையும்
கிழித்து எறிவேன்.

எனது உடை
உன் அதிகார
பாசிச உச்சங்களின்
உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்
அதை நான் ரசித்து
அணிவேன்.

எனது பண்பாட்டின்,
எனது வழிபாட்டின்,
கற்றைப் புள்ளிகளை
உன்
கைப்பிடி அதிகாரத்தால்
ஒற்றைப் புள்ளியாக
வரைய துடிக்கும்
உனது வரலாற்று
வன்மத்தை
எகிறி மிதிப்பேன்.

என்னை அச்சுறுத்துவதாக
எண்ணி
கூட்டம் கூடி முழங்கித்
தீர்க்கும் உனது அச்சம்
கம்பீரமான எனது
ஒற்றை அதட்டலால்
அடங்கி ஒடுங்கும்.

நீ கடவுளைச் சொல்லி
என்னை கலங்கச்
செய்வாய் என்றால்,
நானும் கடவுளை முழங்கி
உன்னை நடுக்கமுறச்
செய்வேன்.

இன்னும் மீறி
அழுத்தினால்,
எல்லோரும்
ஓர் குரலில்,
ஓர் உடையில் ,
உரக்கச் சொல்வோம்.

“அல்லாஹு அக்பர்”.

“மண்டியிடுங்கள் தந்தையே..”- புனைவெழுத்தின் அதிசயம்.

வெக்கையும், வறட்சியும் நிலவும் நிலப்பகுதியில் அமர்ந்துக் கொண்டு, பனி பொழியும் ஊசியிலைக் காடுகளைப் பற்றியும், ஸ்டெபி புல்வெளி பற்றியும், பனி படர்ந்த ஜன்னல் கதவுகளைப் பற்றியும், குளிர் இரவின் ஊதற் காற்றினை பற்றியும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிவதற்கு டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், போன்ற கால தேச எல்லைகள் கடந்த தீவிர எழுத்தாளர்களின் உயிர்ப்பு மிகுந்த எழுத்துக்கள் காரணமாய் அமைந்து இருக்கின்றன.
குறிப்பாக ரஷ்ய இலக்கியங்கள் தமிழ் நிலத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மகத்தானவை. சோவியத் ரஷ்யா உயர்ந்து மிளிர்ந்து விளங்கிய காலகட்டங்களில், ஏராளமான ரஷிய செவ்விலக்கியங்கள் தமிழில் மொழிப்பெயர்ப்பாகி வெளிவந்தன. மாஸ்கோ பதிப்பகம், ராதுகா பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் உயர்ந்த தாளில், அழகிய ஓவியங்களில், தரமான மொழிபெயர்ப்பில், ரஷ்ய இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வாசகனுக்கு அளித்தன.
தமிழ் நிலப்பரப்பின் பருவநிலை, பண்பாட்டு கூறுகளுக்கு நேர் எதிரான பண்புகள் கொண்டது ரஷ்ய நிலப்பரப்பு. ஆனாலும் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” படித்துவிட்டு தமிழ் வாசகனால் காதல் மயக்கத்தோடு’கனவுலகவாசியாக’ எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் திரிய முடிந்தது. 
ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் எண்பதுகளின் தலைமுறையினர் பார்த்து வியந்தது அதன் தாள்களின் தரம், செய்நேர்த்தி கெட்டி அட்டை போன்றவை. குறிப்பாக சிறுவர் இலக்கியங்களில் ரஷ்ய கதைகள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறுவர் கதைகள் அப்போது வெளியானது. அதையெல்லாம் யாராவது சேகரித்து வைத்திருந்து இப்போது அதே தரத்தில் வெளியிட்டால் மிகுந்த வரவேற்ப்பை பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.
சில வருடங்களுக்கு முன்பாக உலக இலக்கியப் பேருரைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் “டால்ஸ்டாயின் அன்னாகரீனினா” நூலைப்பற்றி பேசிய பேச்சின் ஒலி வடிவத்தை ரஷ்ய இரவு போன்ற ஒரு குளிர் இரவில் கேட்டபோது, நான் ஒரு காலத்தில் படித்த டால்ஸ்டாயின் அன்னாகரீனினா வேறொரு பெண்ணோ என்கின்ற திகைப்பினை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. காரணம் எஸ்.ரா டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை சதையும் ரத்தமும் கொண்ட ஒரு அசல் பெண்ணாக தனது பேச்சின் மூலமாக‌ உருவாக்கியிருந்தார்.
ஏற்கனவே நான் படித்த அன்னா கரீனினா என்பவளை விட, எஸ்.ரா‌ நிறுவிய அன்னா கரீனா இன்னும் வலி மிகுந்தவளாக, நிராகரிப்பின் வேதனை சுமப்பவளாக மாறி நின்றாள். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் வாசகர்கள் தாங்கள் எந்த காலத்திலிலேயோ சந்தித்த தங்கள் மனம் கவர்ந்த அன்னாகரீனினாவை மீண்டும் நிகழ்காலத்தில் ரத்தமும் சதையுமாக சந்திக்க நேர்ந்தது போல ஒரு வாய்ப்பினை எஸ்.ரா தமிழ் வாசகர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
குறிப்பாக டால்ஸ்டாய் பற்றி எஸ் ராமகிருஷ்ணன் நிறைய எழுதியிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் தனி மனித வாழ்க்கைக்கும், அவனது புனைவு எழுத்துக்கும் உள்ள இடைவெளியை எஸ்.ரா டால்ஸ்டாய் மூலம் இந்த நூலில் ஆய்வு செய்கிறார்.
உலகின் மகத்தான எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் வாழ்வில் போகிற போக்கில், இரண்டே சொற்களில் அடங்கி விடுகிற அக்ஸின்யா, திமோ‌ஃபி என்கிற இருவரைப் பற்றி எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய பெருங்கதைதான் “மண்டியிடுங்கள் தந்தையே”

அவர் சொன்னது போல தமிழில் எழுதப்பட்ட முதல் ரஷ்ய நாவல் இது  என்பதாக உணர்வதற்கான அனைத்து வசீகரங்களையும், படைப்பாக்கத் திறன்களையும் உள்ளடக்கிய புனைவெழுத்து அதிசயமாக இந்த நூல் திகழ்கிறது.
நாவல் தொடங்கும் முதல் புள்ளியிலேயே நாம் ரஷ்யாவின் போல்யானா பண்ணைக்கும் , பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும் சென்று விடுகிறோம். கிறிஸ்மஸ் மாத பனி மாத இரவில் டால்ஸ்டாய் தனது அறையில், தனிமையில், மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருக்கின்ற காட்சி நம் கண்முன்னால் விரிகிறது.
முதல் சில பத்திகளிலேயே, டால்ஸ்டாய்க்கு மிக அருகில் தமிழ் வாசகன் ஒருவன் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு, அவரை உற்றுநோக்கி கவனிக்கிற அனுபவம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
எந்த பண்டிகை கொண்டாட்டங்களிலும் பெரிதாக ஆர்வம் இல்லாத டால்ஸ்டாய் எழுதுவது ஒன்றையே நிரந்தர கொண்டாட்டமாக, நிகரற்ற சந்தோஷமாக கருதுகிறார். பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரியும் தனது கதாபாத்திரங்களின் குண நலன்கள் குறித்த புதிரான எதிர்பாராமை தான் அவரது ஒரே சுவாரசியம்.
சூதாடி இழந்த பெரும் சொத்துக்களில் இருந்து மிஞ்சிய அவரது பண்ணையையும், அங்கே வேலை செய்கின்ற பண்ணை ஆட்களையும் நிர்வகிக்கின்ற அவரது மனைவியான சோபியாவிற்கு டால்ஸ்டாய் குறித்தான சந்தேகங்கள் எப்போதும் உண்டு.
குறிப்பாக டால்ஸ்டாயின் திருமணத்திற்கு முந்தைய தனது உறவுகள் குறித்தும் டால்ஸ்டாயே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தார். அந்த உறவுகளில் ஒன்றுதான் அக்ஸின்யா. அந்த உறவில் பிறந்தவன்தான் திமோஃபி. இந்த விபரங்கள் அனைத்தும் சோபியாவுக்கும் தெரியும்.
அக்ஸின்யாவின் மரணச் செய்தியோடு தொடங்கும் நாவல் முன்- பின் காலங்களில் பயணித்து, மனித உளவியல், ரஷ்ய நிலத்தின் பருவ நிலை சூழல்கள், அக்காலத்து அரசியல் போக்குகள், டால்ஸ்டாய் காலத்து சக எழுத்தாளர்கள், அவர்களது எழுத்து முறைமைகள் , என பல செய்திகளை உரையாடல்கள் மூலமாக வழங்கி அக்ஸின்யாவின் மரணத்தை எவ்வாறு டால்ஸ்டாய் எதிர்கொள்கிறார் என்பதோடு முடிவடைகிறது.
எந்த சூழ்நிலையிலும் பழுதடையாத இலக்கிய ஆன்மாவை கொண்ட மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் சொந்த வாழ்வில் எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தார், அவரது அகச் சிந்தனைகள் எவ்வாறு இருந்திருக்கும் , அக்காலத்து ரஷ்ய நாட்டின் பண்ணை முறைமைகள் எவ்வாறானது என்பது போன்ற நுட்ப செய்திகள் பல இதில் உண்டு.
இதையெல்லாம் தாண்டி கொடும்பாலையில் தாகத்தை சுமக்கின்ற ஒட்டகம் போல நிகழ்காலத்தில் தனது கடந்தகாலத்தை சுமக்கின்ற எளிய மனிதனாய் டால்ஸ்டாய் அடைகிற குற்ற உணர்வும், வாழ்வு பற்றிய போதாமையும் நம்மில் ஒருவராக அவரை பார்க்கச் செய்கிறது.
“காலம் தான் மனிதர்களின் பிரச்சனை. ஒருபோதும் நிகழ்காலத்தில் மனிதர்களால் வாழ முடியாது.” என ஒலிக்கும் எஸ்.ரா வின் எழுத்து வீச்சுகள் நாவல் முழுக்க சிதறிக் கிடக்கின்றன.
“ஒருவன் மற்றவர்களுக்கு இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மைகளைச் சொல்லி கொள்ளத்தானே வேண்டும்..” என இந்த படைப்பு முழுக்க நிரம்பி தளும்பும் இது போன்ற கேள்விகளால் மனம் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
“ரகசியங்கள் இல்லாத மனிதன் யார்.. மனிதர்களுக்கு புதைக்கப்படும் போது அவர்களது ரகசியங்களும் புதைக்கப்படுகின்றன” என்றெல்லாம் வரிகள் தென்படும்போது படிப்பவரின் உள்மனம் அதனதன் ரகசியங்களை எடை போட தொடங்கிவிடுகிறது.
உண்மையில் ஒரு படைப்பின் வேலைதான் என்ன என்ற கேள்விக்கு எஸ்.ரா  இந்த நாவலில் சொல்வது போல “ஒரு கலையின் வேலை‌, மனிதர்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்ல.., நெறிப்படுத்துவதும், வழிகாட்டுவதும், மேம்படுத்துவதும்,.தான்.”
“மண்டியிடுங்கள் தந்தையே”  என்கின்ற  இந்த உயரிய படைப்பு சாதித்திருப்பது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ரகசியங்களை புதைத்துக்கொண்டு, நிகழ்கால சமரசங்களோடு வாழக்கூடிய ஒரு டால்ஸ்டாய் இருக்கிறார் என்பதை உணரச் செய்வதுதான். 
இலக்கியம் என்கின்ற உயரிய கருவியால் மட்டுமே ரஷ்யாவில் என்றோ வாழ்ந்த டால்ஸ்டாய் என்ற இலக்கிய ஆளுமையோடு, நம்மை பொருத்திப் பார்க்க தூண்ட முடிகிறது. 
காயங்களும், ஏக்கங்களும், நிரம்பிய மனித வாழ்வில் குற்ற உணர்வும், வாதைகளும் நிரம்பி இருக்கின்றன என்பதை யோசிக்கும் அதே நேரத்தில் அவல காலதேச மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுமைவயப்பட்டவை என்பதோடு மட்டுமில்லாமல், அவைகள்தான் உலக இலக்கியத்தின் ஊற்றுக் கண்களாக திகழ்கின்றன என சிந்திக்க வைப்பதுதான் இந்த நாவலின் உச்சப்புள்ளியாக கருதுகிறேன்.Hell is empty.all devils are here.(நரகம் காலியாகி விட்டது. எல்லா சாத்தான்களும் இங்கேதான் இருக்கின்றன) என்பார் ஷேக்ஸ்பியர். ஆனால் இந்த நாவலில் வரும் டால்ஸ்டாய்  மனிதர்களின் மனம் சொர்க்கத்தில் நுழைவாயிலாக இருக்கிறது என்கிறார்.
மனிதர்களின் மனம் ஒரே சமயத்தில் சொர்க்கத்தின் நுழைவாயிலாகவும், நரகத்தின் இருப்பிடமாக திகழ்வதை தான் நாம் மானுட வாழ்வு என அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என நாம் நமக்கு நாமே உணரும் புள்ளியில்தான் கலையின் மேன்மை ஒளிர்கிறது.
(மண்டியிடுங்கள் தந்தையே- நாவல், எழுதியது:திரு எஸ் ராமகிருஷ்ணன். பக்கங்கள் 248, வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம், டி-1, கங்கை அப்பார்ட்மெண்ட், 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை 93044-23644947)

Page 7 of 53

Powered by WordPress & Theme by Anders Norén