உன் நினைவின் துளி என்னை தீண்டி விடக் கூடாது என்பதற்காக யாரும் அறியா இருட் மனக்குகையில் மௌனத்தின் விலங்கிட்டு என்னை நான் சிறை வைத்திருக்கிறேன்.
❤️
பின்னிரவு ஒன்றில் காயாத கனவுகளின் கயிற்றினை பிடித்துக் கொண்டு நான் அடைந்திருக்கும் ஆழ் குகைக்குள் இறங்கி என்னை நான் பார்க்கும் போது இமைகள் உதிர்த்த விழிகளைக் கொண்டவன் வெற்றுக் காகிதங்களை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்
❤️
எதற்காக அந்த வெற்றுக் காகிதங்கள் என நான் கேட்கலாம் என நினைத்தபோது இன்னும் எழுதப்படாத கவிதைகள் இந்தத் தாளில் தான் உள்ளது என பதில் வந்தது.
❤️
அனலேறிய அந்தக் கண்ணில் இருந்து சொட்டு விழி நீர் ததும்பி விழுந்த போது தாள் எங்கும் பசுமை ஏறி உன் நினைவின் சின்னஞ்சிறு அல்லி மலர்கள் பூக்கத் தொடங்கின.
❤️
மறக்க வேண்டியதை மறக்க… இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இல்லை இறக்க வேண்டும் என உணர்ந்த கணத்தில் இரண்டும் ஒன்றுதான் என்பது போல என் பின்னங்கழுத்தில் ஆழமாக சொருகப்பட்ட அரூவ மாயக்கத்தி ஒன்றோடு நான் அலைந்து கொண்டிருப்பதை தான் அவரவர் மொழியில் என் வாழ்க்கை என அறிந்து வைத்திருக்கிறார்கள்.
உன்னை கொல்ல நான் ஆதி கால ஆயுதம் ஒன்றை பரணில் தேடிக் கொண்டிருக்கும் போது தான், அந்த துருப்பிடித்த கத்தியை தேடி எடுத்தேன்.
அதன் முனை அவ்வளவு கூர்மையாக இல்லை. ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்ட குருதியின் கறை அந்தக் கத்தியை நான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது.
அதை உன் தோல்களை கவ்வி நிற்கும் விலா எலும்பில் குத்தலாமா, கதகதப்பான நடுநெஞ்சில் பாய்ச்சலாமா, தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது .. மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது.
அதன் மென்மை இந்தக் கத்திக்கு உகந்தது தான்.
ஆனால்.. எங்கே குத்தினாலும் சரி நான் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.
உன் குருதித் துளி என் மீது பட்டுவிடக் கூடாது.
உன்னை விட உன் குருதியை நான் அதிகம் வெறுக்கிறேன். அதோடு அந்த நொடியில் உறையும் உன் விழிகளையும்.
அந்த இரண்டும் வாந்தி எடுக்க முடியாத ஒரு குடிகாரனின் இரவு போன்றவை.
ரத்தம் கொப்பளிக்கும் உன் சாவை எப்போதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும் என் மனக்கடலில் ஒரு படகாக மாற்றி செலுத்தி விட வேண்டும் என எண்ணிய அந்த பொழுதில்.. ஏதோ திருப்தியற்றவனாய் சாவின் துருவேறிய அந்தப் பழங்கத்தியை என் ஜன்னல் வழியே தூக்கி எறிந்தேன்.
அந்த நொடியில் நிராயுதபாணியாக நின்று இருந்த என்னிடம் என்ன ஆயுதம் இருக்கிறது என யோசிக்கும் போது தான்…
அதுவரை கண்ணியம் காத்தோ.. பழகிய காலம் கருதியோ.. உள்ளுக்குள் எப்போதும் சுரக்கும் பேரன்பின் வாடை உறுத்தியோ… உன்னைப் பற்றி பேச கட்டாயப்படுத்தப்பட்ட எல்லா தருணங்களிலும் மௌனித்த நான்,
முதல்முறையாக உன்னை பற்றி பேசத் தொடங்கினேன்.
இனி இயல்பாகவே நடந்து விடும். எனக்கான ஒரு கொலையும், உனக்கான ஒரு சாவும்.
“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.
“வேண்டாம்.
புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.
நினைவின் சுழல் கொண்டவை.
கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.
மீளவே முடியாத
ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.
வேண்டாம்..”
என அச்சத்துடன் மறுத்தேன்.
“இல்லை இல்லை..
தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்
அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்
கனவின் கதவு
ஒன்று இருப்பது போல ..
ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.
அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்
காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.
எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
பார்க்கவே அச்சம் . மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.
நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..
….
விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..
நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு
அதுவாகத் திறந்து, என் முன்
என் வாழ்வில் இனி எப்போதும்
வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்
கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.