பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: உலக புரட்சியாளர்கள்… Page 1 of 2

ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்

“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன்

யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவோ;

தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே.

– திணை: வாகை துறை: ஏறான் முல்லை.

பொருள்: “ சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிய வண்ணம் ‘உன் மகன் எங்கு உள்ளானோ?’ என வினவுகிறாய்.என் மகன் எங்கிருப்பான் என நானறியேன்; புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனை பெற்ற வயிறு இதுவேயாகும் . அவன் போர் நிகழும் களத்தில் தோன்றுமியல்புடையவன் ( அவனை காண்பதற்கு அங்குச் செல் ) – புற நானூறு –நியூ செஞ்சுரி வெளியீடு .

.

ஒரு காட்சி.

வல்லாதிக்க கழுகுகள் ஒரு சேர ஒன்று சேர்ந்து கொத்தி குதறிப் போட்ட தாய் நிலத்தில் இருந்து மிஞ்சியது,தங்கியதை அள்ளிக் கொண்டு நடந்து முடிந்த பேரவலத்தின் துயர் சாட்சிகளாய் எதிர்காலம் என்னும் அடர் இருட்டின் மீது கவிழ்ந்துள்ள பேரச்சத்தினை சுமந்த வண்ணம் தயங்கி..தயங்கிப் படியே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளிவந்த மக்கள் திரளிலிருந்த அந்த வயதான முதியவரும், அவர் தள்ளிக் கொண்டு வந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நோயுற்ற அந்த பெண்மணியும்.. ஊரெல்லாம் ஆயுத பிச்சை எடுத்து, உலக சதிகள் பல செய்து பெற்ற வெற்றி தந்த கர்வமும், கண்டிப்பும் நிறைந்த அந்த காவலாளியிடம் சலனமற்ற முகத்தோடு அஞ்சாமல், மறைக்காமல் சொன்னார்கள்..”நாங்கள் தான் வேலுப்பிள்ளை,பார்வதி அம்மாள் – பிரபாகரனின் தாய் தந்தையர்.” ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

ஒரு மகத்தான விடுதலைப் போர் ஒரு சேர சேர்ந்த வல்லாதிக்க பலத்தால் முறியடிக்கப்பட்ட துயரைத் தவிர அவர்களுக்கு எவ்விதமான அச்சமும், தயக்கமும் இல்லை. கடுமையான இரத்த அழுத்தம், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்ற தொகுப்பு நோய்களால் அவதிப்பட்டு வந்த அய்யா வேலுப்பிள்ளையை தூக்கிச் செல்ல முயன்ற சகத் தமிழனின் உதவியை மறுத்து அவராகவே நடந்து சென்றார். பல முறை தடுக்கி கீழே விழுந்தும், மீண்டும் தானாகவே எழுந்து நடந்தார். ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்

.

தங்கள் மகனுக்கும் அதைத்தான் அவர்கள் போதித்தார்கள். மரணம் கண்ணுக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருந்த போதும் அவர்கள் சலனமில்லாமல் தான் இருந்தார்கள். ஒரு நாட்டை ஆண்ட தலைவனின் பெற்றோர் என்ற முறைமையில் அவர்கள் எவ்வித சலுகையையும், அனுதாபத்தினையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள். அனைத்தையும் இழந்த அவர்களுக்கு வரலாற்றின் பாதையில் கடுமையாக பழி வாங்கப்பட்ட ஒரு இனத்தின் மக்களுக்காக தங்கள் மகன் நடத்திய அறவொழுக்குடன் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் தந்த பெருமிதம் அவர்களுக்கு இருந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முதல்வர் வீட்டு மூன்றாம் தலைமுறைப் பேரன் கூட அதிகார போதை தரும் திமிறினால் எளிய காவலாளியைத் துப்பாக்கியை காட்டி மிரட்டும் ஆணவத்தினை அவர்கள் அறிந்திருக்க வில்லை. எளிய வாழ்வினைத் தான் அவர்கள் வாழ்ந்தார்கள். மக்களோடு, மக்களாக வாழ்ந்தார்கள். ஏதேச்சதிகாரத்தோடு நாட்டை ஆர்பாட்டங்களாய் ஆண்ட அதிபர்கள் எல்லாம் எதிர்ப்பு பெருகினால் குடும்பத்தோடு விமானம் ஏறி பயந்து ஓடும் உலகத்தில்…முப்படை வைத்து உலகம் வியக்க வாழ்ந்த ஒரு தலைவனின் குடும்பம் இப்படித்தான் வாழ்ந்தது. இந்த பரந்துப்பட்ட உலகின் முன் எவ்விதமான வேண்டுகோளையும் அவர்கள் வைக்க வில்லை. கடைசிக்காலத்தில் மருத்துவ உதவி கேட்டு அம்மாவின் கைரேகை (?) பதித்து தமிழக முதல்வருக்கு வந்ததாக காட்டப்பட்ட கடிதம் கூட அம்மாவின் நினைவு தப்பிய பொழுதுகளில் தான் வந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் செட்டிக்குளம் முகாமில் கைது செய்யப்பட்ட அய்யா வேலுப்பிள்ளையும், அம்மா பார்வதியும் பலத்த பாதுகாப்பிற்கிடையே இராணுவப் புலனாய்வுத் துறையினரின் நேரடி கண்காணிப்பிற்கு உட்பட்ட சித்ரவதைகளுக்குப் பெயர் பெற்ற கொழும்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்றளவும் வெளியிடப்படாத அந்த கடுங்கொடுமைகளுக்கு உள்ளான அய்யா வேலுப்பிள்ளை கடந்த 2010 ஜனவரி மாதம் காலமானார். அவரது மறைவின் போதே அம்மாவிற்கு நினைவாற்றல் மிக குறைவாகவும், தன்னிலை வருவதும் போவதுமாக இருந்தது. மிகுந்த உடல் நலிவுற்ற அவரைச் சிங்கள பேரினவாத அரசு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தது. அங்கு அக்கா வினோதினி அம்மாவினைக் கவனித்துக்கொண்டார்கள். மேற் சிகிச்சைக்காக இந்திய அரசின் உரிய விசா பெற்று சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்த போது விமானத்தில் இருந்து இறங்காமலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேட்டதற்கு ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதிலை அளித்தார்.மீண்டும் பல வித அலைகழிப்பிற்குப் பிறகு மீண்டும் இலங்கை சென்ற அவர் இறுதி வரை அங்கேயே இருந்து காலமானார்.இதன் நடுவே அம்மா பார்வதி கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்று எழுதியதாகவும், அதை நன்கு பரிசீலித்த கருணாநிதி மத்தியில் ஆண்ட சோனியா அரசிடம் அனுமதிப் பெற்று,ஆதரவு பெற்று ‘யாரும் வந்து பார்க்க கூடாது, பேசக் கூடாது , அசையக் கூடாது, மூச்சு மட்டும் விடலாம்’ போன்ற பத்துக்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளோடு சென்னை வர அனுமதி அளித்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இங்கிருந்து போன மதியாதார் அழைப்பினை அம்மா பார்வதி அவர்கள் ஏற்கவே இல்லை. சிங்கள பேரினவாதத்தினை விட கேடு கெட்ட தாயக தமிழகத்தின் இழிவான நிலையை கண்ட அம்மா இந்த மண்ணில் கால் வைக்காமல் போய் விட்டார். ஏனெனில்.. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் தேசியத்தலைவர் பிரபாகரனை ஒரு தலைவராக, சமரசம் அடையா சமரனாக உருவாக்கியத்தில் அவரது தாய் பார்வதி அம்மாளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. வல்வெட்டி துறையில் வாழ்ந்த திருமேனியார் குடும்பத்து திருவிளக்காக பார்வதி அம்மாள் திகழ்ந்தார். இயல்பான ஒரு தாய்க்குள்ள அனைத்து விதமான சுயநலப்பற்றுகளும் அவருக்கும் உண்டு. தாமதமாக வந்தாலே தவித்துப் போகும் தாய்மை அவருக்குள்ளும் இருந்தது. வீட்டிற்குள் மாட்டப்பட்டிருந்த தன் மகன் இருந்த புகைப்படங்களைத் தன் மகனே எடுத்துச் சென்று பதுக்கிய போது அச்சப்பட்டார். போராட்ட வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் ஒரு சேர சந்தித்த அந்த தாய் கடுமையான அனுபவங்களின் வாயிலாய் சிரமப்பட்டார். ஆனால் தாய்நிலத்தின் மீதான அளவற்ற பற்று, சுதந்திர வாழ்வின் மீதான வேட்கை அனைத்தும் முழுமையாக உள்வாங்கிய ஒரு அதிமனிதனின் தாய் தன்னுடைய உணர்வுகளை ,தன்னுடைய பற்றுக்களை சுருக்கி , வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டிய பெரு வாழ்வு வாழ்வதற்காக மகனை அனுப்பி வைத்தார் .அதைத்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது. ஏனெனில் .. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் அம்மா பார்வதி அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக கூட இங்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் உலகத்தின் மிக இழிவான மக்களாய் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான சாட்சியாக விளங்குகிறது. அதையும் தாண்டி செய்த தவறுகளை மறைக்க கருணாநிதி அடித்த கடிதக் கூத்துக்கள் நம்மை இன்னமும் தலைக் குனிய வைக்கிறது . நம் இனத்திற்காக நாடு கட்டி போராடிய மகத்தான தலைவனின் தாயாருக்கு மருத்துவ உதவி கூட வழங்க மறுத்த கருணாநிதியின் துரோகமும், இது போன்ற காட்சிகளை வழக்கம் போல ‘நாளை மற்றொரு நாளே’ என்பது போல வேடிக்கைப்பார்த்த நமது கையாலாகாதத்தனமும் எதிர் வரும் தலைமுறைப்பிள்ளைகளால் எச்சிலால் உமிழப்படும். அம்மா இதையெல்லாம் புரிந்துக் கொண்டுதான் இறுதி காலத்தில் எங்கும் செல்லாமல் தன் சொந்த மண்ணில் எரிந்து தாய் நிலத்தின் உரமாக கலந்துப் போனார். அம்மாவினை எரித்த சிதையில் மறுநாள் நாய்களை வைத்தெரித்து உலகிற்கு மீண்டும் தன் மனநோயாளித்தனத்தினை அப்பட்டமாக வெளிகாட்டியிருக்கிறது சிங்கள பேரினவாதம் . ஈழ மக்களும், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளும் அசைவற்ற விழிகளுடன் உலகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். உலகமும் சிங்கள பேரினவாதத்தின் இது போன்ற இழிவான செயல்களை தான் வழக்கம் போல் காத்து வரும் மெளனத்தினால் அங்கீகரித்து இருக்கிறது. உலகத் தமிழர்கள் பெரும் துயரோடு அமைதி காக்கிறார்கள் . துயருடன் கலந்த அமைதி தான் புரட்சியின் கருவாக அமைகிறது என்பதை எகிப்து காட்டியிருக்கிறது . இழந்தவர்கள் பெறுவதற்கு சுதந்திரம் மட்டுமே இருக்கிறது. பெறுவார்கள். ஏனெனில்.. அது அவர்களின் மரபியல் குணம்.

.

துயர் கவிழ்ந்த பெரு நிலத்தினை , வெறித்துப் போன விழிகளை சுமக்கும் பசித்த வயிற்றினை, சொந்த ரத்த உறவின் நிர்வாணத்தினை, சொந்த தங்கையின் உடலின் மேல் வல்லுறவாய் நிகழும் பாலியல் தாக்குதலை , அவளின் ஈரக்குலையை அறுக்கும் போது எழும்பும் ஈனக்குரலை, எவ்வித சலனமுமில்லால் பார்த்து விட்டு, அடிப்படை குற்ற உணர்ச்சிக் கூட கொள்ளாமல் நம்மால் இந் நாட்களையும் கடக்க முடிகிறது. தேர்தல் குப்பைத் தொட்டிக்கு அருகே பதவி எச்சிலைக்காக சண்டையிட்டுக் கொள்ளும் தெரு நாய்களை நம்மால் எவ்வித சங்கடமும், அருவருப்பும் இல்லாமல் இயல்பாக பார்த்து விட முடிகிறது. இனத்தினை அழித்த ஓநாய் ஓட்டு பிச்சைக்காக வீட்டுக்கு வரும் போது அவன் விரல் நீட்டி தரும் காசை காற்சட்டைக்குள் போட்டுக் கொண்டு அவன் ஊற்றும் சாராயத்தினை சப்புக் கொட்டி குடிக்க முடிகிறது. இனத்தின் எதிரிகளை என்ன விலை கொடுத்தேனும் எப்படியாவது வீழ்த்த நினைக்க முயலாமல் அவமானத்தின் இழி பிறவிகளாய் தத்துவ குகைக்குள் இருட்டு சித்தாந்தம் பேசி, புள்ளி விபர புலம்பல்களோடு கொல்லைப் புறம் வழியாய் எதிரியின் எச்சிலைக்காக நியாயம் பேச முடிகிறது . இன்னமும் நம்பிக்கை இழக்காமல் எதிலும் முடங்கிப் போகாமல் தாங்க முடியாத துயரோடு, வீழ்ந்தவர்கள் சிந்திய உதிரத்தினை உடலிலே பூசிக் கொண்டு வன்மம் கொண்டு இனம் வெல்ல வீதியில் நிற்பவர்களை நயவஞ்சமாக புறம் பேசி சுகம் காண முடிகிறது.

சகிக்க முடியாத துயரொன்று உண்டெனில் – இவற்றை சகித்துக் கொண்டு வாழ்வதுதான்.

பார்வதி அம்மாவின் இழப்பும் அவ்வாறே.

உரமாய் கலந்தவையும்.. மாவீரர்களின் மூச்சுக்காற்றாய் அலைபவையும் முடங்கிப் போகாது. அழுத விழியோரத்தில் நம்பிக்கை என்ற சிவப்பினை ‘பிரபாகரன்’ என்ற சொல் தேக்கும். நாளை அந்த மண் மீண்டும் பூக்கும். ஏனெனில் அது அவர்களது மரபியல் குணம்.

எம் தாய்க்கு வீரவணக்கம் .

எங்கள் இனத்திற்கு சீமானின் குரல் வேண்டும் – தீபச்செல்வன்


அன்பான சீமான் அண்ணன் மற்றும் பேரறிவாளன், முருகன் அண்ணன்களுக்கு.

போர் தின்ற பூமியில் இருந்து கொண்டு எனது நலத்தை எப்படிச் சொல்ல. அதிகாரங்கள் எழுச்சியின் குரல்களை தின்னும் பூமியில் உள்ள உங்கள் நலத்தை எப்படி விசாரிக்க.நாங்கள் எல்லோருமே கட்டுண்டு அகதிகளாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல கடந்த காலத்தில் எமதினம் அனுபவித்த துன்பத்தை எந்த இனமும் அனுபவிக்க மாட்டாது.

உங்களால் எங்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் இங்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணுபவை. அதற்கு இலங்கை அரசு பயம் கொள்ளுகின்றது. ஆனால் சீமான் அண்ணன் அவர்களே! இன்று ராஜபக்ஷ விரும்புவதை கருணாநிதி செய்து உங்களை சிறை வைத்திருக்கிறார். நீங்கள் விடுதலை பெற்று வரவேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். பொங்கிய தமிழகத்தையும் திரையுலகத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சி நடத்தும் கருணாநிதியும் , உலகத் தமிழர்களின் குரல்களை கண்டு அஞ்சாது யுத்தம் நடத்திய ராஜபக்ஷவும் ஒன்றுதான்.

நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தளவில் அதிகாரத்தால் எங்களை சிதைத்து வதைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. சிங்களக் குடியேற்றம், காணி நிலங்களை அபகரிப்பது, சிங்கள அரச கைக்கூலி அதிகாரிகை திணிப்பது, மீள்குடியேற்றத்தை பின்னடிப்பது என்று பல வகையில் மக்களுக்கு அவலத்தை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் எதைப் பற்றியும் பேச முடியாத சூழலை உருவாக்கி எங்கள் தாயகத்தை கனவை அழிக்கப் பார்க்கிறது.

நீங்கள் எப்பொழுது சிறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள் என்று அடிக்கடி நண்பர்களை விசாரிப்பதுண்டு. விடுதலையாக வேண்டும் என்று காத்திருக்கிற உணர்வுத் தமிழரர்களில் நானும் ஒருவன். திடமாக நம்புகிறேன் மீண்டும் அதிரும் உங்கள் குரல் எமக்காய் ஒலிக்குமென்று.

பேரறிவாளனது “தமிழ்முழக்கத்தில்“ வெளியான பதிவை படித்த பொழுது மிகவும் துக்கமாக இருந்தது. புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஈழப் போராளியின் முகம் என்று நினைத்தேன். அன்பான பேரறிவாளன் விடுதலை பெற்று வர தொரடர்ந்து போராடுங்கள். உங்கள் விடுதலைக்காக நாம் காத்திருக்கிறோம். “அணுகுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா, துவக்கு வைத்திருப்பவனை பயங்கரவாதி என்றான்” காசி ஆனந்தனின் வரிகள் சொல்லுவதைப் போல அதிகார விதியினால் உங்களை சிறை வைத்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் போராடுங்கள் பேரறிவாளன்.

முருகன் “குப்பி“ திரைப்படம் பார்த்த பொழுதுதான் எனக்கு அந்த நாட்கள் மேலும் மனதை நெருக்கின. அந்தப் படம் பிழைத்து வி்ட்டதாக சொன்னார்கள். சகோதரி நளினி அத்தோடு உங்கள் வாழ்க்கை இப்படி கழிந்து விட்டது. எங்களுக்காக எங்கள் விடிவிற்காக இப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. நீங்கள் சிறையிலிருந்து படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள், ஓவியம் வரைகிறீர்கள் என்றெல்லாம் எங்கள் தினசரிப் பத்திரிகைகளில் செய்திகள் வரும். உங்களுக்கு இந்தா விடுலை அந்தா விடுதலை என்றும் செய்திகளும் படங்களும் வரும்.

உங்கள் பிள்ளையின் ஓவியம் என்று நினைக்கிறன் எங்கள் தினசரிப் பத்திரிகை ஒன்றில் வந்திருந்தது. உங்களது விடுதலை சாத்தியமாக வேண்டும் என்று காத்திருக்கின்றோம். அமீர் சொல்லிய பேட்டியில் ‘நாங்கள் சிறையில் இருப்பதைப்போலவும் நீங்கள் வெளியில் இருப்பதைப்போலவும்’ உணருக்கிறன். நம்பிக்கையுடன் விடுதலைக்காக போராடுங்கள். அந்த நாள் தமிழர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்க மனம் ஏதோ செய்கிறது.

உங்கள் அருகில் சீமான் இருக்கிறார். அவரை பத்திரமாக பாத்துக் கொள்ளுங்கள். எங்கள் இனத்திற்கு அவரது குரல் வேண்டும். நீங்கள் வேண்டும். உங்களை அவர் பார்த்துக் கொள்ளுவார்.ஏதோ ஒரு நம்பிக்கையில் இருக்கிறது எங்கள் நிலம். ஆபத்தும் அழிவும் அதை சூழ்கிறது. முடியுமானவரை நமது உரிமைக்காக வேலை செய்வோம். ஒரு காலத்தில் நாங்கள் சந்திப்போம் அண்ணன்களே.முடிக்க முடியாத துயருடன் என் கடிதத்தை முடித்துக் கொள்கிறன்.

மிக்க அன்போடு தம்பி தீபச்செல்வன்

மொழி காக்க..நம் இனம் காக்க..நம் மண் காக்க..நம் மானம் காக்க.. தன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம் !!!


நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.

தமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.

கால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.

அண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

நாம் தமிழர்.

நன்றி.
தங்கள்

மணி .செந்தில்

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….








மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;
(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)
பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்.
.
முத்துக்குமார் .
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல.
இது ஒரு போர் முழக்கம்.
ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின்
விழிப்பின் உச்சம்.
.
முத்துக்குமார்.
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல.
இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை கண்டு கதறி கூட அழ முடியாத அளவிற்கு நம்மை நகர்த்தி வைத்திருந்த இந்தியத்தின் உச்சாணிக் கொம்பிற்கு விடுக்கப்பட்ட சவால்.
நாங்கள் கண்ணீர் விட்டு கதறியும் கண்டு கொள்ளாத
உலகத்தின் செவிகளுக்கு அடித்துக் கூறிய
பறை முழக்கம்.
.
முத்துக்குமார் .
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல
இன்னும் தமிழன் இருக்கிறானடா இந்த நாட்டில்- என
இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களின்
செறுமாந்த இறுமாப்பினை தகர்த்த
இடி முழக்கம்.
தன்னை தானே திரியாக்கி
ஊருக்கே வெளிச்சமாய் போன
ஒற்றைச் சுடர்..
.

சென்ற வருடத்தில் ஜனவரி 29 ஆம் தேதி நடுப்பகல் 12 மணி அளவில்
அவசரமும், பதட்டமும் நிறைந்த ஒரு குரலின் மூலம் முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செய்தியை நான் அறிந்தேன். தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத ஒரு இளைஞன் தன்னையே எரித்துக் கொள்வதான மனநிலை என்னை முற்றிலும் சிதைத்துப் போட்டது. அன்றைய காலக் கட்டத்தில் நமது கையறு நிலையின் உச்சம் முத்துக்குமாரின் தியாகம்.அந்த சமயத்தில் மட்டுமல்ல..இப்போதும் கூட முத்துக்குமாரின் மரணம் எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக வலியினை கொடுக்கிறது. என் கண் முன்னால் நடந்த…நடக்கின்ற… வேதனைகளை..கொடுமைகளை சகிக்கும் என் மனநிலையின் மீது ஆறாத வெறுப்பாய் கவிழ்ந்திருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாட சுகங்கள் மீதான நுகர்வு கூட என்னை மிகுந்த பதற்றம் உடைய மனிதனாக..குற்ற உணர்வு கொள்பவனாக மாற்றி வைக்கிறது.
நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற தமிழின இளைஞர்கள் இவ்வாறு தான்
ஈழம் சிதைந்துப் போன வலியோடு..துயரோடு… வாழ்கிறார்கள்.

ஆனால் முத்துக்குமாருக்கு மட்டும் சுயநலத்தினை மீறிய இனநலன் சார்ந்த மனநிலை வாய்த்திருக்கிறது.
பாருங்கள்…உலகத்தீரே…
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஒரு தேசிய இனத்தின் வழி தோன்றியவன் …உலகத்திற்கு கலை, பண்பாடு, இலக்கியம், நாகரீகம், அரசு,வீரம் என அனைத்தையும் போதித்த இனத்தின் புதல்வன் … தன் சொந்த சகோதர, சகோதரிகள் தன் கண் முன்னால் அழிவதை கண்டு சகிக்க முடியாமல் தன்னை தானே எரித்து மரித்துப் போனான்.
உலகத்தின் மெளனம், இந்தியத்தின் வேடம், தமிழக அரசியல்வாதிகளின் துரோகம் ..இவைதான் எங்கள் ஈழத்தினையும் அழித்தன. எங்கள் முத்துக்குமாரையும் பறித்தன.
அறம் செய்ய விரும்பிய இனத்தின் பிள்ளையான முத்துக்குமார் தன் உளச் சான்றுக்கு நேர்மையாக இருந்து விட்டு போனார். …
ஒரு மரணத்திற்கு முன்னதான பொழுதுகளில் முத்துக்குமார் கடைப்பிடித்த நிதானம் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியது. ஒரு மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவல்ல என்பதனை முத்துக்குமார் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அந்த மனிதன் சமூகத்தின் மிகச் சாதாரணப் பகுதியில் இருந்து தான் என்ன செய்கிறோம் என்பதனை முழுக்க ஆராய்ந்து..இனிமேலும் பொறுப்பதற்கோ, இழப்பதற்கோ ஏதுமற்ற நிலையில் தன்னையே ஒரு தீபமாக்கி கொண்டு ஊருக்கு வெளிச்சமாகிப் போனார் முத்துக்குமார்.
ஈழ அழிவின் கடைசிக் காலங்களில் தன் சொந்த சகோதர சகோதரிகள் தங்கள் கண்ணெதிரே அழிவதை கண்ட தமிழ்ச் சமூகம் என்ன செய்வது எனப்புரியாமல் கண் கலங்க நின்றது. நாமெல்லாம் ஏதாவது அதிசயம் நடக்காதா… ஏதோ ஒரு அற்புத நொடியில் நம் ஈழம் அழிவிலிருந்து மீளாதா என்ற பரிதவிப்பில் நின்றுக் கொண்டிருந்தோம். மனித சங்கிலியாக கொட்டும் மழையில் நின்றுப் பார்த்தோம். சாலை மறியல், தொடர்வண்டி மறியல், போராட்டம், உண்ணாவிரதம் என அனைத்தும் செய்தோம். இன்று அப்பட்டமான போலிகளாக நம் முன்னால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னமும் வேஷமிட்டு திரியும் வேடதாரிகளை நம்பிக் கிடந்து நாசமாய் போனோம்.உணர்வு மிக்க இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடக்கும் போது கண்கலங்க கடந்துப் போனார்கள். சீமான் அண்ணன், கொளத்தூர் மணி அண்ணன்,அய்யா மணியரசன் போன்றோர் தேசியத்தினை(?) பாதுகாக்க கைது செய்யப்பட்டனர். இறுதியாக திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலை என்ற முடிவோடு அமர்ந்தார். நாம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். என்ன நடந்ததோ, ஏது விளைந்ததோ தெரியவில்லை. சில பேருந்துகள் எரிந்ததை தவிர எவ்வித பலனும் இல்லை. மீண்டும் கலங்கி நின்றோம் . என்ன செய்வது என்ற தயக்கத்தின் ஊடான தேக்கம் நம் தொப்புள் கொடி உறவுகளை காப்பற்ற கடைசி முயற்சிகளையும் தளர வைத்தது.
அந்த நேரத்தில் தான் தமிழின இளைஞர்களின் உணர்வின் வெளிப்பாடாக முத்துக்குமார் உயிராயுதம் எடுத்தார். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகங்கள் வெகு சாதாரணமானவைதான் என்றாலும் முத்துக்குமாரின் தியாகம் தனிவகையானது. நின்று.. நிதானித்து .. அறிவின் ஊற்றாய் நிலை நிறுத்தப்பட்டு வழங்கிய ஒரு அறிக்கையின் மூலம் முத்துக்குமாரின் தியாகம் ஆவணப்படுத்தப் பட்டு விட்டது.

அது வெறும் அறிக்கையோ அல்லது மரண வாக்குமூலமோ அல்ல. தமிழனின் கடந்த ,நிகழ்கால வரலாற்றினை மீள் பார்வைக்கு உட்படுத்தும் நீதிமன்றக் கூண்டு. இவ்உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் உள் மன சான்றினை உலுக்கிய பேரிடியாக விளங்கிய அந்த அறிக்கை, பதவிக்காக எதையும் இழக்க துணியும் போலி அரசியல் ஒப்பனை முகங்களை கிழித்தெறிந்தது. அரசியல் வியாபாரம் செய்து ,தன்னை விற்று, தன் இனத்தினை விற்று..மிஞ்சி இருப்பதை விட்டு விட மனமில்லாமல் புறங்கையை நக்குபவர்களையும், ஓட்டு பிச்சைக்காக ராணுவம் அனுப்பி நாடு வாங்கித் தருவேன் என்று நாடகமாடிய நயவஞ்சக எதிரியையும், தமிழன்னையை மறந்து பதவிக்காக இத்தாலி அன்னையிடம் அனைத்தையும் இழந்த துரோகிகளையும் அந்த அறிக்கை மிகச் சரியாக அடையாளமிட்டுக் காட்டியது. இனி மக்களிடமிருந்து தமிழுணர்வு மிக்க தலைமை உருவாக வேண்டும் என புது திசை வழி காட்டியது.
இன உணர்வு மிக்க இளைஞர்களின் ஆழ் மன வெளிப்பாடாய் முத்துக்குமாரின் ஈகை விளங்கியது. தமிழினத்திற்காக தன்னையே அளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் நடக்கையில்…மனசாட்சியை , இன மாட்சியை தலைநகரில் அடகுவைத்து விட்டு ஈழ ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பிறந்தநாள் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் தலைவர்கள்.
சாப்பிட்டீர்களா தலைவர்களே… அதில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மாமிசமும் இருந்திருக்குமே… !
.
எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார் ?
ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும், 500 ரூபாய் நோட்டிற்கும் இனத்தினை அழித்தவர்களுக்கே மீண்டும் வாக்களித்து தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் இவர்களுக்காகவா..?
.
இனம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் .. மானடவும்,மயிலாடவும் கண்டு விட்டு.. தோற்பதன் துயரம் கூட உணராமல்.. சாதியால் பிளவுண்டு.. மதத்திற்கு முன்னால் மண்டியிட்டு
சாதாரண வாழ்க்கையில் சாக்கடையாய் போன இவர்களுக்காகவா..?
.
பின் யாருக்காக ..எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார்..?
.
லட்சியவாதிகளின் மரணம் ஒரு துவக்கமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தார் முத்துக்குமார். தன் இரத்த உறவுகளுக்காக உயிரையும் கொடுப்போம்- என கொடுத்து ஈழ மக்களின் கண்களில் துயரத்தின் ஊடான கண்ணீரில் நன்றியாய் கசிந்தவர் முத்துக்குமார்.
தன் உடலைக் கூட துருப்புச் சீட்டாய் பயன் படுத்த கோரிய முத்துக்குமார் – தாயக தமிழகத்தின் தலைச் சிறந்த கரும்புலியாக நம் நினைவில் வலம் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆயுதங்கள் பிணங்களை உருவாக்கின – ஈழத்தில்.
ஆனால் இங்கோ ஒரு பிணம் ஆயுதமாகிப் போனது.
முத்துக்குமார் சாதித்தார்.
முத்துக்குமார் முடிவல்ல. அது ஒரு தொடர்ச்சி.
எதுவுமே முடிந்து விடாது.முடிந்து விட்டது என நினைத்தப் போதுதான் முத்துக்குமார் என்ற துவக்கம் நிகழ்ந்தது.
முத்துக்குமார் – தான் வாழ்விற்கான முழுமையான பணியை தன் அறிக்கையின் வழியாக ஒவ்வொருவரின் ஆழ்மனதில் ஊடுருவி அறிவின் தெளிவாய்..இன மான உணர்வாய் வெளிப்பட்டு செய்து கொண்டே இருக்கிறார் . இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது முத்துக்குமாருக்கான உண்மையான அஞ்சலி.
.
ஆம்.
முத்துக்குமார்..என்பது
வெறும் பெயர்ச்சொல் அல்ல..
வினைச்சொல்.
……..
எம் அன்பார்ந்த ஈழ உறவுகளே…
முத்துக்குமார் பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறோம்.
உங்களின் வலியையும், உங்களின் இழப்பினையும் நாங்கள்
எங்கள் துயரமாக உணருகிறோம்.
எங்கள் மனதின் அடி ஆழத்திலும் தோல்வியின் வன்மமும், மீளுவதற்கான
கனவும் கசிந்துக் கொண்டுதான் இருக்கிறது.
நீங்களும் ,நாங்களும்..வேறல்ல..
ஒரு தியாகம் செறிந்த இனத்தின் மிச்சங்கள் நாம்.
நமக்கு பிறக்கும் பிள்ளைகளை முத்துக்குமாராக வளர்ப்போம்.
நாம் வாழ்ந்த கதையையும்…துரோகத்தின் ஊடாக வீழ்ந்த கதையையும்
சொல்லி வளர்ப்போம்.
உலகில் வாழும் ஒரு தொன்ம இனத்திற்கான நாடு
தமிழீழ நாடு.
ஒரு கனவினை 24 கோடி விழிகள் சுமக்கின்றன.
காத்திருப்போம்.
வலியோடு.வன்மத்தோடு.
.
இன்றல்ல..ஒரு நாள்..ஈழம் மலரும்..
அன்றுதான் நம் காலை புலரும்.
.
அது வரை இருண்டு கிடக்கும் நம் வாழ்வில்
முத்துக்குமார் என்ற ஆன்ம ஒளி பிரகாசித்துக்
கொண்டே இருக்கும்.
.
தேசியத் தலைவர் நீடுழி வாழ்க.
.


எம் தலைவர் பிரபாகரன் – அறம் வழி நின்ற சான்றோன்…

மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலை இய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல-
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் ..

– புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர்
தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குத் உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் திரண்டு போற்றி மகிழ்ந்தனர்.தாயக தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு பின்னர்.. எதிர்காலம் குறித்த மாறா நம்பிக்கையை உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழ் தேசிய இனத்தின் வழித் தோன்றல்கள் தங்களுக்குள் தாங்களே எழுப்பிக் கொண்டார்கள். நம் சம காலத்தில் தமிழருக்கே உரிய தொன்ம அறப் பலத்தோடு நம்மை எல்லாம் வழி நடத்தும் நம் தேசிய தலைவர் பிறந்த நாளை தங்கள் இனத்தின் மீட்சி நாளாக உலகத் தமிழர்கள் ஒற்றைக் குரலில் உலகுக்கு அறிவித்தனர். ஒரு பேரழிவிற்கு பின்னால்..சாம்பலாய் கருகிய ஒரு இனம்..சுதந்திர வேட்கையும் ,இன மான உணர்வும் கொண்டு தனக்குள்ளே உயிருட்டி..உருவாக்கிக் கொண்டு தங்களுக்கான சுதந்திரத்தினையும், தங்களுக்கான நாட்டினையும் அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்க துவங்கி உள்ளனர் என்பதற்கு அறிகுறிகளாக உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் அறிவிக்கின்றன. ஒரு தொன்ம அறம் வழி சார்ந்த ஒரு தேசிய இனத்தின் ஈடு இணையற்ற தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என்பதனை நம் எதிரிகளும், துரோகிகளும் புரிந்துக் கொண்டு முழி பிதுங்கி நிற்கின்ற நிலைமையை உலகத் தமிழர்கள் மாவீரர் தின நிகழ்வுகளால் இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.
தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் இது என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.
குறியீடுகளால் நிரப்பப் பட்டது தமிழரின் இலக்கியம். முல்லைக்கு தேர் அளித்த பாரி, மகனை தேர்க் காலில் இட்ட சோழன், தன் பச்சிளம் மகவினையும், போர்க் களத்திற்கு அனுப்பிய தாய்,காயம் பட்ட புறாவிற்காக தன் தொடையினை அறுத்த சிபி ,குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை அளித்த பேகன் என புனைவும் ,குறியீடுமாய் திகழும் நம் இலக்கியங்கள் காட்டும் குறியீடுகள் எவை என்று ஆராயும் போது வீரமும் , அறமும், இரக்கமும்,ஈகையும் நம் முன்னோர்களின் வாழ்வாக இருந்திருக்கின்றன.வரலாற்றில் ஒரு இனத்திற்கென இப்படிப் பட்ட அறவியல் கூறுகளை எங்கும் பார்க்க இயலாது. சங்க இலக்கியங்களில் ஒழுகும் அற உணர்வு தமிழரின் வாழ்வியலில் அறம் எத்தனை நூற்றாண்டு காலமாய் நீடீத்து வந்திருக்கிறது என்பதனை உணர்த்துகிறது. எதிரியிடம் கூட நாம் நாகரீகத்தினை, இரக்கத்தினை காட்டும் தன்மையை நம் தொன்ம இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன.
உலகில் தன் இனத்திற்காக,மொழிக்காக தன்னைத் தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும், வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே ஆன்ம பலம் அடைந்தார்கள். தன் இனத்திற்காகவும், மொழிக்காவும் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள முன்வருவதுதான் தியாகத்தின் உச்சம். அந்த தியாகத்தினை மிகவும் நேர்த்தி மிகுந்த துணிவான முறையில் தமிழ் இளைஞர்கள் மனம் உவந்து செய்தார்கள். இதே அற உணர்வினால் தான் தன் கைக்கு எட்டிய தொலைவில் தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட உயிர் ஈகைப் போராளிகள் தங்களைத் தாங்களே நெருப்புக்கு இரையாக்கி விதையாய் இந்த மண்ணில் வீழ்ந்ததும் நடந்தது.ஆணுக்கு சமம் பெண் என உலக நாகரீகங்களுக்கு கற்றுக் கொடுத்த நம் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியாய் நம் சகோதரிகள் பெண் புலிகளாய் களம் புகுந்ததும், தீரத்துடன் போரிட்டதும், நம் விழிகளை பெருமித கண்ணீரால் நிறைக்கும் உணர்வாகும். இதே அறம் தான் நம் வான்புலிகள் சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல் படை இலக்கினை மட்டுமே தாக்கி விட்டு பறந்த போதும் இருந்தது. இதே அறம் தான் நம் தேசிய தலைவர் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் இன்றளவும் ஒரு தவறான செய்தியை கூட சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு எதிரிகளை நிற்க வைத்திருக்கிறது.
வரலாற்றின் நெடிய பக்கங்களில் பார்க்கும் போது வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும்புலிகளாக, மொழிப் போராட்ட தீரர்களாக திகழ்ந்து தான் வீழ்ந்து இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஈகையும், வீரமும் உடைய நம் முன்னோர்களின் வழித் தோன்றலாய் தோன்றி, உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த தனி மனித ஆளுமையான நம் தேசிய தலைவர் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம். கொடும் துயர்களுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் பெருமை மிகு தலைமையும் அறம் இழக்கா உணர்வினை தக்க வைத்ததுதான் நான்காம் கட்ட ஈழப் போர் நமக்கு விட்டுச் சென்ற பாடம். இந்த பூமிப் பந்தெங்கும் வன்னி முகாம்களில், தமிழக வயல்களில், வளைகுடா நாடுகளின் சுடும் பாலையில், மலேயா காடுகளில், அமெரிக்க, கனடா நாடுகளில், கணினி திரைகளுக்கு முன்னால், என எங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக நம் தொன்ம அறத்தின் தொடர்ச்சியாய் தலைவரும், இயக்கமும் பாதுகாத்த இந்த அற உணர்வுதான் இருக்கிறது.
செஞ்சோலை குழந்தைகளை கூட குண்டு வீசி கொல்லும் கொடிய சிங்கள ராணுவத்திற்கு எதிராக அற உணர்வுடன் தலைவர் நடத்திய மரபு வழிப் போரும், பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மதிப்புடன் நடத்திய பண்பும் நம்மை மேன் மேலும் பெருமிதத்திற்கு உள்ளாக்குகிறது. தொடர்ச்சியான கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தன் மக்களை பாதுகாத்த உளப்பாட்டின் உறுதி நம் தேசிய தலைவரின் மதிப்பினை பன் மடங்கு உயர்த்துகின்றன.
ஒரு இனம் வீழ்வதும் ..பிறகு வீழ்ச்சியினை கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள் போராட்டங்கள் உலக நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் வேறு எந்த இனத்திற்கும் மேதகு.பிரபாகரன் போல அறம் வழி நின்ற தலைவர் கிட்ட வில்லை. தன் குடும்பத்திற்காக தன் இனத்தினை காட்டிக் கொடுத்த தலைவர்களை ஈழ விடுதலைப் போர் நமக்கு அடையாளம் காட்டியது. ஆனால் தன் இனத்திற்காக தன் குடும்பத்தினரையும் தலைவர் இழக்க சித்தமாக இருந்ததை நாம் அறிகிறோம்.அதற்கு உதாரணமாக இன்னும் சிங்கள ராணுவத்தின் கோரக் கரங்களின் ஊடாக தேசிய தலைவரின் பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள்.
தேசிய தலைவரை எந்த ஆன்ம சக்தி இப்படி நேர்மை வலிவோடு செயல்பட வைக்கிறது என்று நாம் சிந்திக்க துவங்கினால் நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்று விடுகிறோம். தமிழ் தொன்மத்தின் அறவுணர்ச்சி முழுவதையும் உள்வாங்கிய ஒரு மனிதராய் நம் தேசிய தலைவர் இருக்கிறார். தன் வாழ்வு முழுக்க மக்களுக்கான ஒன்று என்பதனை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். சாதாரண மனிதர்களுக்கு உண்டான பலவீனங்கள் எதனையும் அவரிடம் காண முடியாமல் போவதற்கு காரணமும் அதுதான். மேதகு.பிரபாகரனின் அறவுணர்ச்சிதான் கடும் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை காப்பாற்ற செஞ்சோலை சிறுவர் இல்லமாக உருவெடுத்தது. ஆண் குழந்தைகளுக்காக காந்தரூபன் அறிவுச் சோலையாக,போரினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீள் வாழ்விற்காக வெற்றிமனையாக, இன ஒடுக்கு முறை யுத்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட முதியவர்களை காக்க மூதாளர் பேணகமாக,போரினால் தொடர்ந்த வறுமையை அழிக்க தமிழர் புனர் வாழ்வு கழகமாக, மருத்துவ பணிகளுக்கு தியாகி திலீபன் மருத்துவ சேவை மையமாக என பரிமாணங்களில் தமிழ்த் தேசியத்தலைவரின் அறவுணர்ச்சி மிளிர்ந்தது.
எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்.இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியை தவிர வேறு ஆயுதங்கள் தேவை இல்லை
-1991 மாவீரர் தின உரையில்..

மேதகு. பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி போராடிய வெறும் கலகக் காரர் இல்லை . மாறாக ஆன்ம உறுதியோடு சுதந்திர வாழ்விற்காக போராடிய புரட்சியாளர் அவர். சங்க இலக்கியங்கள் ஊடாகவும், நெடிய தமிழ் பண்பாட்டு பாரம்பரிய விதைகள் மூலமாக இயல்பாகவே தமிழன் என்கிற முறைமையின் தலைவர் பெற்ற அறவுணர்ச்சிதான் போர் களத்தில் ஆயுதங்களை விட வலிமையான ஆன்ம உறுதியாக உருவெடுத்தது.
எங்கள் இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காக போராடி வருகிறோம்.எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கெளவரத்துடனும் வாழுகின்ற புனித உரிமையை பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம்.(1984-ல் அனிதா பிரதாப்பிற்கு அளித்த பேட்டியில் )

தேசிய தலைவர் தன் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். உலகம் முழுதும் வாழுகின்ற தமிழர்களின் கரங்களில் இன்று ஈழ விடுதலைப் போர் கையளிக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோலன் ஹிட்லரால் மாண்ட யூத இனம் எப்படி தங்களுக்கான ஒரு நாட்டினை சமைத்தார்களோ, அதே போல உலகத் தமிழர்கள் தங்களுக்கான ஈழ நாட்டினை என்ன விலை கொடுத்தேனும் அடைந்தே தீர வேண்டும். நாம் இந்த விடுதலைப்போரில் அளவிற்கு அதிகமாகவே விலை கொடுத்து விட்டோம். நாம் இழந்த உறவுகளின் நினைவு எப்போதும் நம் உள்ளத்தின் உச்சாணிக் கொம்பில் நிலை நிற்க வேண்டும். புதைக் குழிகளுக்குள் புதையுண்டு போன எண்ணற்ற தமிழர்களின் இறுதி மூச்சு இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது என்ற கவனப்பாடு நம் மனதில் என்றும் வேண்டும்.

தமிழின இளைஞர்கள் மற்ற இன இளைஞர்களை காட்டிலும் உள்ளம் முழுக்க வீழ்ந்த வன்மத்துடன் செயல் புரிய வேண்டும். கல்வி,பொருளாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் இழப்புகளின் தீரா துயர் தந்த வன்மத்துடன் போராடி தமிழர்கள் முதலிடம் அடைய வேண்டும். சிறுக சிறுக பெருகி..ஆர்ப் பரிக்கும் மக்கட் வெள்ளமாய் தமிழர்களுக்கான தாயகத்தினை அடைய போராடுவதற்கான மன நிலையை தக்க வைப்பதுதான் நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க இயலும்.
கடும் துயர் சூழ்ந்த போதும் அறம் காத்த சான்றோனாய் தலைவர் பிரபாகரன் இருக்கிறார். அவர் குறித்த பெருமிதமும், தீவிர செயல்பாடுமே நம் எதிர் காலத்தினை தீர்மானிக்கும்

12 கோடி தமிழர்களின் ஒற்றைக் கனவு தமிழீழம். அதை நாம் எந்த விலை கொடுத்தேனும் அடைந்தே தீருவோம். தமிழர்கள் ஒருவருகொருவர் சந்திக்கும் போது அடுத்தாண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று சொல்லுவோம். அறம் வழி நின்று உலகத்திற்கு தமிழரின் துயர் சூழ்ந்த போதும் அகலா அறத்தினையும், மாறா மறத்தினையும் உணர்த்திய தேசிய தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என உரக்கச் சொல்லுவோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..


“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”

– டாக்டர் அம்பேத்கர்.

பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,

நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…

இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….

ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…

அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.

தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.

நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..

தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..

இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…

ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…

சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?

ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…

ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.

இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.

கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….

முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?

இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?

இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…

ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….

எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..

இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?

வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…

அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….

லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…

நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…

நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்

எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்

நன்றி …வணக்கம்……….

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..


“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”

– டாக்டர் அம்பேத்கர்.

பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,

நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…

இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….

ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…

அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.

தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.

நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..

தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..

இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…

ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…

சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?

ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…

ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.

இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.

கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….

முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?

இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?

இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…

ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….

எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..

இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?

வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…

அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….

லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…

நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…

நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்

எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்

நன்றி …வணக்கம்……….

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..
ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்…

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் அலைந்து, பொலிவியா புரட்சியில் பங்கேற்று ,கடைசியில் வீர மரணம் எய்திய சேகுவேரா உள்ளம் முழுக்க கவிழ்ந்து கிடந்தது உலகளாவிய புரட்சி என்னும் கனன்று கொண்டிருந்த நெருப்பு ……

கியூப புரட்சியில் வென்ற போது சே கதாநாயகனாக வர்ணிக்கப் பட்டார். பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து கியூபாவை செம்மை படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சே….அப்போது சே நினைத்திருந்தால் சுதந்திர கியூபாவில் சகல அதிகாரங்களோடு சுக போக வாழ்க்கை நடத்தி இருக்கலாம்.ஆனால் சேவின் புரட்சி மனம் சும்மா இருந்ததா…? இல்லை.

சர்வாதிகார அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் தோழர் சே…..மற்ற நாடுகளை சுரண்டி வாழும் சர்வாதிகார அமெரிக்க மனப் பான்மைக்கு கடும் நெருக்கடியை தந்தார் தோழர் சே…அமெரிக்கா இதுவரை தன்னியல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால் அமெரிக்காவின் இளைய சமுதாயத்தினர் சேகுவேரா படம் பொறித்த சட்டைகளை அணிந்த்து திரிகின்றனர்.எதிரிக்கும் கூட உதாரணமாகிப் போன உத்தமர் தோழர் சே…

பிள்ளை பருவத்தில் தோற்றிய கடுமையான ஆஸ்துமா அவரை வாழ் நாட்கள் முழுக்க துரத்தியது.கடுமையான சுவாச கோளாறுகளால் அவரது உடல் நலம் பல நேரங்களில் குன்றிப் போனது…மேலும் பனாமா சுருட்டு ஆஸ்துமாவை தணிக்கும் என நம்பினார் அவர்…அதனால்தான் அவர் பெரும்பாலான நேரங்களில் சுருட்டோடு காணப் பட்டார்.அதுவே அவரது கவர்ச்சி மிகுந்த அடையாளமாய் மாறிப் போனது தனிக் கதை…..

09-10-07 தோழர் சேகுவேராவின் நினைவு தினம்…

தோழர் சேகுவேராவை இந்த நாளில் மட்டுமல்ல….எல்லா நாட்களிலும் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்…..

செவ்வணக்கம்…

(தொடரும்)

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..
ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்…

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் அலைந்து, பொலிவியா புரட்சியில் பங்கேற்று ,கடைசியில் வீர மரணம் எய்திய சேகுவேரா உள்ளம் முழுக்க கவிழ்ந்து கிடந்தது உலகளாவிய புரட்சி என்னும் கனன்று கொண்டிருந்த நெருப்பு ……

கியூப புரட்சியில் வென்ற போது சே கதாநாயகனாக வர்ணிக்கப் பட்டார். பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து கியூபாவை செம்மை படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சே….அப்போது சே நினைத்திருந்தால் சுதந்திர கியூபாவில் சகல அதிகாரங்களோடு சுக போக வாழ்க்கை நடத்தி இருக்கலாம்.ஆனால் சேவின் புரட்சி மனம் சும்மா இருந்ததா…? இல்லை.

சர்வாதிகார அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் தோழர் சே…..மற்ற நாடுகளை சுரண்டி வாழும் சர்வாதிகார அமெரிக்க மனப் பான்மைக்கு கடும் நெருக்கடியை தந்தார் தோழர் சே…அமெரிக்கா இதுவரை தன்னியல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால் அமெரிக்காவின் இளைய சமுதாயத்தினர் சேகுவேரா படம் பொறித்த சட்டைகளை அணிந்த்து திரிகின்றனர்.எதிரிக்கும் கூட உதாரணமாகிப் போன உத்தமர் தோழர் சே…

பிள்ளை பருவத்தில் தோற்றிய கடுமையான ஆஸ்துமா அவரை வாழ் நாட்கள் முழுக்க துரத்தியது.கடுமையான சுவாச கோளாறுகளால் அவரது உடல் நலம் பல நேரங்களில் குன்றிப் போனது…மேலும் பனாமா சுருட்டு ஆஸ்துமாவை தணிக்கும் என நம்பினார் அவர்…அதனால்தான் அவர் பெரும்பாலான நேரங்களில் சுருட்டோடு காணப் பட்டார்.அதுவே அவரது கவர்ச்சி மிகுந்த அடையாளமாய் மாறிப் போனது தனிக் கதை…..

09-10-07 தோழர் சேகுவேராவின் நினைவு தினம்…

தோழர் சேகுவேராவை இந்த நாளில் மட்டுமல்ல….எல்லா நாட்களிலும் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்…..

செவ்வணக்கம்…

(தொடரும்)

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén