பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: நவம்பர் 2010

மொழி காக்க..நம் இனம் காக்க..நம் மண் காக்க..நம் மானம் காக்க.. தன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம் !!!


மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.

கோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான்.

.

எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தினை அளிப்பதாக இருந்திருக்கின்றன. வாசகன் மனநிலையை தக்க வைத்து நகர்த்திச் செல்லும் புதினப் படைப்பாளியின் உத்திகள் அப்படியே திரைக்கதை ஆசிரியருக்கும் பொருந்தவன அல்ல. புதினத்தினை திரைமொழியாக்கும் போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிக் கொள்வது என்பது சவாலான காரியம் . சவாலினை எதிர்க்கொண்டு துணிந்து களம் இறங்கியுள்ள வ.கெளதமனை நாம் மனதார பாராட்டலாம்.

.

தொன்ம கதையொன்றின் நம்பிக்கையிலிருந்து கதை புறப்படுகிறது . தொன்ம கதை விவரிப்பிற்கு பயன்படுத்தப் பட்ட ஒவியங்களின் நேர்த்தியில் இருந்தே படம் நம்மை ஆக்கிரமிக்க துவங்குகிறது. சகோதர –சகோதரி பாசத்தினை காலங்காலமாக நாம் திரைப்படங்களில் சந்தித்து வருகிறோம். எத்தனை முறை நம் முகத்தினை கண்ணாடியில் நாம் பார்த்தாலும் அலுக்காதததை போல…நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ..மீண்டும் பல்வேறு கோணங்களில் இருந்து தரிசிக்கும் போது ஆர்வமடைகிறோம். இன்றளவும் பாசமலர் நம்மை கண் கலங்கத்தான் வைக்கிறது. அதே போலத்தான் மகிழ்ச்சியும். கொண்டாடி வளர்த்த பெண் புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகி திண்டாடிப் போகையில் அவளது உயிருக்குயிரான சகோதரன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் திரைக்கதையின் ஒரு வரி .

.

விழிகளை குளிர வைக்கும் பசுமை நிறைந்த நாகர்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது திரையை அழகாக்குகிறது . பசுமையாய் விரிந்து கிடக்கும் இயற்கையை ஒளிப்பதிவாளர் அப்படியே அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் படிமமும் இயற்கையின் அழகோடு படமாக்கப் பட்டிருப்பது அழகு. சகோதரியின் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்கும் கதையின் நாயகனாக இயக்குனர் கெளதமன். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் போது ஏற்படும் படபடப்பு அதிசயமாக கெளதமனிடம் காணமுடியவில்லை. அதீதமாக உணரப்பட்டு விடக் கூடிய சோகக் காட்சிகளில் கூட அளவாகவே உணர வைத்திருக்கும் கெளதமனின் சாமர்த்தியம் நமக்குப் புரிகிறது. தன் உயரத்தினை புரிந்துக் கொண்டு நேர்த்தியாக கெளதமன் செயல்பட்டிருப்பது நம்மை கவருகிறது. சாதீய இறுக்கங்களினால் காயப்படுத்தப்படும் பாத்திரமாக செந்தமிழன் சீமான் வருகிறார். சீமானின் பெருங்கோபமும் ,பேரன்பும் வெளிபடும் வகையில் அவரது கதாபாத்திரம் மிளிர்கிறது . கோபம் மிகுந்த காட்சிகளில் சீமானின் ஆவேசம் அடங்க மறுக்காமல் பிறீடுவதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். சமூக இழிவுகளை துடைத்தெறிய துடிக்கும் சீமான் தன் நண்பனிடம் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய்..மிக தெளிவாய் துணிவுடன் ஒரு நொடியில் முன் வைக்கும் கோரிக்கை நம்மை கைத்தட்ட வைக்கிறது . மற்ற படங்களில் ஒப்பிடுகையில் அஞ்சலியின் கவர்ச்சி சற்றே அதிகம் என்றாலும் அவரின் விதவிதமான முக பாவனைகள் அழகு.

.

நம் வாழ்க்கையில் நாம் பெண்களுக்கென அளித்துள்ள இடத்தினை எதனாலும் அளவிட முடியாது. பெண்களை சார்ந்தே சமூகம் இயங்கிறது. ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்துள்ள சங்கிலி பிடியில் இருந்து பெண் விடுதலைப் பெற எத்தனை விதமான போராட்டங்களை …அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது..? .. கதாநாயகனின் சகோதரி மேல் அவரது கணவன் நிகழ்த்தும் மூர்க்கமான வன்முறையில் இருந்து விடுதலைப் பெற சாவினையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை முயற்சியினை காரணங்காட்டி நிரந்தரமாக அவளது பெற்றோர் வீட்டிற்கே துரத்தி விடுகின்றான் கணவன் . எதனால் தான் தண்டிக்கப்படுகிறோம் என தெரியாத நம் வீட்டின் பெண்கள் போலவே அவளும் இருக்கிறாள். தன் சகோதரிக்காக காதலையும் இழந்து நிற்கும் கதாநாயகனிடம் அவனது புரட்சிகரமான தீர்வினை அறியும் அவனது முன்னாள் காதலி தற்போது வேறு ஒருவரின் மனைவியாக வரும் அஞ்சலி “ எல்லாம் முன்னரே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் “ என வலியோடு சொல்லும் போது நம் சொந்த வாழ்க்கையை அப்படியே ஒரு நொடிக்குள் மீள் பார்வை பார்த்து விடுகிறோம்.குறிப்பாக கதாநாயகனின் தந்தை தன் மகளின் திருமணத்திற்காக விற்று விடப்போகும் நிலத்தில் ..காற்றிலாடும் பசும் நெற்கதிர்களை கட்டி அணைத்தவாறே கண்கலங்கும் காட்சி கவிதை . கண்கலங்கி விட்டேன்.

.

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி அண்ணன் எழுதிய ‘உச்சுக் கொட்ட’ என்ற பாடலும் வைரமுத்து எழுதிய ‘ ஊத்துத் தண்ணி ஆத்தோட ‘ என்ற பாடலும் சிறப்பாக இருக்கின்றன. படத்தொகுப்பும் , ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.

.

படத்தில் குறைகளே இல்லையா என்றால்…நுட்பமான குறைகள் இருக்கின்றன. பிரகாஷ்ராஜினை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகனின் தங்கை திருமணம் ஒரு போட்டோ மூலமாகவும், சட்டென வந்துப் போகும் ஒரு வசனம் மூலம் வந்துப் போவது சற்று குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. கால மாற்றங்களை காட்சிமயப்படுத்துதலில் சற்று குழப்பங்கள். விடுங்கள். இப் படத்தின் திரைமொழி முன் வைக்கும் அரசியல் இக் குறைகளை காணாமல் அடித்து விடுகிறது . இறுதி காட்சியில் சீமானின் மகனாக வரும் ‘ பிரபாகரன்’ இயக்குனரின் மாறா இனப் பற்றை காட்டுகிறது. சாதிக்காக துடிக்காமல் …சாதிக்க துடியுங்கள் என்றும்..ஓடாத மானும்..போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் மிதமான குரலில் அழுத்தமாக உரைத்து படத்தினை முடித்து வைக்கிறார் சீமான்.

.

வ.கெளதமன் என்ற இளம் படைப்பாளி ஒரு வாழ்க்கையை திரைப்படமாக நுட்பமான காட்சிகளால் உருவாக்கி நம் முன்னால் வைத்திருக்கிறார். சாதீயத்தினை உடைக்க துணியும் புரட்சிக்கரமான கதை இது. ஆடம்பரங்கள் இல்லாமல் ..ஒரு எளிய திரைமொழி மூலம் ஒரு வலிமையான கருத்தினை முன் வைக்கிறார் கெளதமன். நம் வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கேடு கெட்ட குப்பைகளை திரைப்படங்களாக்கி திரையரங்குகளை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தும் ‘தந்திரன்ங்களுக்கு’ மத்தியில் ‘மகிழ்ச்சி’ நம்மை ஆறுதல் படுத்துகிறது.

.

மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி பண்பாட்டு சிதைவிற்குள்ளாகி இருக்கும் நம் தமிழினம் மரபு சார்ந்த வாழ்க்கையை முன் வைக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலமாக தன்னைத் தானெ மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளை துவங்கும் என நம்பலாம். இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எண்ணற்ற குடும்பங்கள் சிதைவுறும் இக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சி திரைப்படம் நம் முன்னால் நிறுவ முயலும் பாசமும் … அது எழுப்பும் உணர்வும் மிக முக்கியமானவை.நெகிழச் செய்பவை.

தலைமுறைகளை தாண்டியும் பசுமையும் ,பாசமும் நிறைந்த வாழ்க்கை ஈரத்தோடு இன்னும் சாரம் குறையாமல் இருக்கின்றது என்பதை கணிணித் திரைகளில் உலகினை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வாழ்வியல் பாடமாக மகிழ்ச்சி திரைப்படம் இருக்கிறது. இனப்பற்று மிக்க படைப்பாளியான கெளதமனும்..படத்தினை தயாரித்த அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணனும் வரவேற்கப் பட வேண்டியவர்கள். வரவேற்கிறோம்.

.

மகிழ்ச்சி .வெல்லும்

வென்றாக வேண்டும்.

மகிழ்ச்சி.

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை


வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு’ எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். ‘வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது’ என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர்,இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

Powered by WordPress & Theme by Anders Norén