பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: மே 2020 Page 1 of 2

மல்லிகை நகரத்துப் பொழுதுகள்..

♥️

அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த‌‌ அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த நகரம்
இரவில் மட்டும் நாணமும், மென்மையும் உடைய ஒரு பெண்ணாகி விடுகிற மாயத்தினை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

“என்னடா பண்ற” என்ற அவளது குரலில் திரும்பிப் பார்த்த நான் என்னை நோக்கி நீண்ட இரண்டு வெற்றுக்கரங்களை கண்டேன். அந்த அழைப்பினை என்னால் எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. அந்தக் கரங்களுக்குள் நான் நுழைந்தபோது மழை நிரப்பிய குளம் ஒன்றில் கால் நனைத்தது போல எப்போதும் அடைகிற ஒரு சிலிர்ப்பினை அடைந்தேன்.

“இந்த ஊர் ஒரு பெண்” என்றேன்.
“வர வர தென்படும் எல்லாவற்றிலும் பெண்ணை உணர்பவனாக.., தேடி அலைபவனாக நீ மாறிக்கொண்டே போகிறாய்..” என்றாள் அவள்.

இது போன்ற தருணங்களில் திக்கு தெரியாத, ஒரு திசையற்ற வெளியாய் அவளது உடல் மாறிப் போவதை நான் உணர்ந்து இருக்கிறேன். திசைகள் தெரியாமல் நான் கலைந்து, அலைவதைதான் பெரும்பாலும் என் கவிதைகளில் அவள் கண்டதாக சொன்னது ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“எங்கேயாவது வெளியே போவோமா..?” என்று கேட்டாள்.

“இந்த நள்ளிரவிலா..” என சிறகடிப்பின் விரிதலில் ஒரு வானத்தையே அளந்து பார்த்த ஒரு சிறு பறவை போல மாறி இருந்த நான் மென்மையாக கேட்டேன்.

“இது உறங்கா நகரம்.
ஏனெனில்..இந்த நகரத்தின் விழிகளுக்கு இமைகள் கிடையாது.” என்று அவள் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.

அப்படியே எழுந்து, கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு.. நாங்கள் காரில் பயணிக்கத் தொடங்கியபோது.. வளைவும், நெளிவும் உடைய அந்த பாதைகள் பெண்ணாக அந்த நகரத்தை நான் உணர்ந்த என் கணிப்பினை உறுதி செய்தன.

நாங்கள் சென்ற பாதையில் எதிர்ப்பட்ட ஒரு பெரிய கோபுரத்தின் வாசலுக்கு முன்னால் என்னை நிறுத்த சொல்லி.. விட்டு காரைவிட்டு இறங்கி,
அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ சிரித்து இவள் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இந்த பின்னிரவு நேரத்திலும் குளித்து, மஞ்சள் பூசி, நெற்றி நிறைத்து பொட்டிட்டு, பூ விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் புன்னகையை மட்டும் வாங்கிக்கொண்டு பூ வாங்காமல் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மீண்டும் காரில் ஏறிக்கொண்ட அவளிடம் “என்ன அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாய்..?” எனக்கேட்டேன். “அந்த அம்மா பெயர் மீனாட்சி. நேற்று கோவிலில் பார்த்தேன்..” என்றாள் அவள்.
ஏன்.. அந்த அம்மா தோளில் பச்சைக்கிளி ஒன்றைக் காணவில்லை என எனக்குள் கேள்வி எழும்பியதை அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

திடீரென ஏதோ நினைத்தது போல என் தோளில் சாய்ந்து என் இடது கரத்தினை இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு பெரிய தெப்பக் குளத்திற்கு முன்னால்.. நாங்கள் சென்று சேர்ந்தபோது.. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லை. “மீன்கள் இல்லாத குளம்..” என்றேன் நான். எனது பின்னந்தலையை உன்னிப்பாக கோதியவாறே.. “அந்தக் குளத்தை பார்க்கின்ற எல்லோரது விழி பார்வைகளும் மீன்களாக மாறி உலவிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது..” என்றாள் அவள்.
“ஆனால் இது தண்ணீர் இல்லாத குளம்” என்றேன். “ஒருவகையில் ஆடை இல்லாத பெண்..” என்றாள் அவள்.

“எப்போதும் எதிலும் முழு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள மனித மனம் ஏனோ விரும்புவதில்லை‌” என்று சொன்ன என்னை பார்த்து அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

“உன் வெட்கம் எப்போதுமே ஒரு அல்லி மலரை தான் நினைவு படுத்துகிறது..” என்றேன். அவள் சற்று கடுமையாக
“ஆனால் இது மல்லிகையின் ஊர்.” என்றாள்.. ” ஓ அதனால்தான்
நீ அடிக்கடி பெருமூச்சு விடுகிறாயோ..?” என்று கேட்ட என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள்.

“சரி வா.. போவோம்” என்றவாறே அவள் திரும்பியபோது அவளது பின்னப்படாத கேசத்தில் சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

மீண்டும் அறைக்கு நாங்கள் திரும்பியபோது அறையின் சுவர்களில் பாசியேறி, பசுமை நிறைந்த கொடிகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, படர்ந்திருந்தன. அறைக்குள் ஒரு கடல் உருவாகியிருந்ததையும், அதில் சில தங்க மீன்கள் உலவிக்கொண்டு இருந்ததையும் நாங்கள் கவனித்தோம்.
எங்கள் கட்டிலின் தலைமாட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தழைத்து வளர்ந்து, கிளைகள் செழித்து, விழுதுகளோடு பூரித்து நின்றதை நாங்கள் கண்டோம்.

இதுவெல்லாம் எப்படி என்று நாங்கள் இருவருமே யோசிக்கவில்லை. அந்தக் மாய கணத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்த பெருமரத்தில் மடியில் தலை சாய்ந்தோம். எங்களை சுற்றி அடர்வனம் ஒன்றின் சூரிய ஒளி படாத
தரையின் குளிர்ச்சி பரவத்தொடங்கியது.

“நழுவிக் கொண்டே போகும் உன் விரல்களின் நுனியில் மயிற்பீலி முளைத்திருக்கிறது” என்றாள் அவள். அப்போதுதான் சற்றே மூடியிருக்கும் அவளது விழிகளில் இருந்து சிறு பறவை ஒன்றின் இறகு ஒன்று பிரிந்து அந்தர வெளியில் மிதக்கத் தொடங்கியது.

எங்கிருந்தோ வந்த நிலவு எங்களது இருவர் கண்களிலும் நுழைந்ததை நாங்கள் உணர்ந்தோம். எப்போதும் அவள் அருகில் இருக்கும்போது மென்மையாக உணரும் தாழம்பூவின் வாசனை அன்று மட்டும் மல்லிகை பூ மணமாக நான் உணர்ந்தது குறித்து எனக்கு அப்போது எந்த வியப்பும் இல்லை.

…..

எப்போதோ வாழ்வின் எதிர்பாராத தருணங்களில், அவளை நான் நழுவ விட்ட பிரிதான, வெகு காலத்திற்குப் பிறகு..

தனித்து நான் அந்த முது நகரத்திற்கு சென்றபோது ஒரு நள்ளிரவில் பூ விற்ற அந்த அம்மாவைத் தேடி அலைந்தேன்.

எதிர்பார்த்தது போல அதே கோபுரம். அதே வாசல்.

அங்கே யாரோ ஒரு பெண் மூப்பேறாமல் இருந்த அதே அம்மாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

அருகே யாரோ ஒரு இளைஞன் இதையெல்லாம் புன்னகையோடு கவனித்துக்கொண்டே நிற்கிறான்.

எனக்கு எதுவும் தோன்றாமல் நான் அறைக்குத் திரும்பியபோது.. நான் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒரு வனமாக மாறிவிடவில்லை என்பதுதான் அக்கணநேரத்து ஆறுதலாக எனக்கு அமைந்தது.

 

(நன்றி முத்தங்கள்.
இசைக்கு: இசைஞானி, காணொளி வடிவமைப்பிற்கு: கிருஷ் நடேஷ்)

அந்தியொன்றின் நீலநிறப்பூ.

 

[youtube]https://www.youtube.com/watch?v=pQj12Y7XPno[/youtube]

நிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான்
வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. 
அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் பூவை எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‌ அருகே இருந்த கண்ணாடி குவளையில் நான் குடித்து மீதம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மென்மையாக பருகினாள். நேரடியாக என் கண்களை பார்த்து இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன் ஏன கேட்க மாட்டாயா.. என்பதுபோல அவளது விழிகள் கேட்பதாக எனக்குத் தெரிந்தது. அந்த விழிகளில் விழுந்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாழ்வதென்பது இனி என்னால் முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்தாலும் முடிவிலியான அந்த பகடை ஆட்டத்தில் எப்படியேனும் நான் ஈடுபட்டு விடுவேன் என அவளுக்கும் தெரிந்தது. ஆனாலும் நான் கவனமாக இருப்பதாக அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக..

“காலம் நிறைய மாறிவிட்டது” என்றேன்.

“ஆனால் நீ மாறவில்லை” என்றாள்.

இனி ஆயுதங்களை பயன்படுத்தி விட வேண்டியதுதான் என்பதற்காக அவள் ஆன்மாவிற்கு என நான் தனித்தே தயாரித்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி பதிலை அவளிடம் இவ்வாறாக சொன்னேன். “இப்போது இன்னொருவள் என் அகம் புறம் என அனைத்தையும் நிரப்பி இருக்கிறாள்” என்றேன். அவள் சற்றே அலட்சிய சிரிப்போடு.. “ஆனால் நீ என்னவோ தளும்பிக்கொண்டு தான் இருக்கிறாய்” என்றாள்.

“உனக்கும் வயதாகி விட்டது போல” என்று சொல்லிப் பார்த்தேன்.

“இன்னும் நமக்குள் ஜோடிப் பொருத்தம் தான்” என சொல்லி விட்டு சிரித்துக்கொண்டாள்.
“எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று நேரடியாக அவள் மார்பில் என் கத்தியை சொருகினேன். அதை துளி கூட பொருட்படுத்தாமல் “அவர்களிடமும் நீ என் சாயலை தான் தேடிக் கொண்டிருப்பாய்” என எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.

“ஆனால் நீ பார்த்தவன் எப்போதோ இறந்து விட்டான்” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னேன். அவளோ என் மீது பார்வையை விலக்காமல்.. “அவனை என்னைத் தவிர யாராலும் கொல்ல முடியாது..” என்று விசித்திரமாக பதிலளித்தாள். நான் என் தலையைத் தாழ்த்தியவாறே.. “இப்போது நான் முழுவதுமாக வேறு மனிதன்” என்று உறுதியான குரலில் அவளுக்கு சொல்வது போல எனக்கும் சொன்னேன்.

” என்னை முதலில் நேருக்கு நேராக பார். மிக எளிதாக நான் அவனை அடைந்து விடுவேன்” என்று அவள் சொன்னாள் .

“இதுவெல்லாம் கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டும்தான் சாத்தியம்” என்றேன். “அவரவர் கதைகளைத்தான் பல காட்சிகளாக படம் பிடித்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள்” என்றாள்.

“இறுதியாக என்னதான் வேண்டும்..?” என்கிற மன்றாடலில் என் கைகள் நடுங்கியவாறே தழுதழுத்த குரலில் அவளிடம் கேட்டேன்.

எனக்கு வேண்டியது ஒரு உண்மையின் மலர் என்றாள்.

“நான் இல்லாத இக் காலங்களில் எப்போதாவது என்னை மறந்த நேரம் என்ற ஒன்று உண்டா..” என தலை கவிழ்ந்த என் முகம் பார்த்து தலைச்சாய்த்தவாறே கேட்டாள்.

கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு..”உண்மையை சொன்னால் நீ எழுந்து போக மாட்டாய் என நான் அஞ்சுகிறேன்”.. என்றேன்.

“இது போதும்”. என்றாள் சிரித்துக்கொண்டே.

நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு நீல நிறப் பூவைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

பிரிவின் மழை..

 

[youtube]https://www.youtube.com/watch?v=3nisKz887rU[/youtube]

இரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.

அலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.

அக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ உள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.

அந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.

காதலின் விடியல்.

 

[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]

 

❤️

கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன்.‌ ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.

❤️

பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..

விடியத் தொடங்கியிருந்தது.

 

நினைவில் காடுள்ள மனிதர்கள்..

 

[youtube]https://www.youtube.com/watch?v=CB-J_4k8QKQ[/youtube]

 

“எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட..
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்..
பரவுகிறது
மனதில் பிரகாசமாக..”
– கல்யாண்ஜி

80 கள்.. தமிழ் நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களில், இலக்கியத்தில், அரசியலில், திரைப்படங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம். இலக்கியத்தில் ‌ தீவிர இலக்கியம் என்கின்ற வகைமை தோன்றி முழுநேர எழுத்தாளர்கள் பலர் தோன்றிய காலக் கட்டம். அரசியலில் இடதுசாரித்தனம் கலந்த தமிழ் உணர்வு சார்ந்த அரசியலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. திரைப்படங்கள் ஏறக்குறைய அரங்கங்களை விட்டு வெளியே வந்து, நாடக தன்மையை ஏறக்குறைய சற்றே உதிர்த்து இயல்புணர்ச்சி ஊக்கமுடைய பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்றெல்லாம் அசலான கலைஞர்கள் தோன்றிய காலக் கட்டம். எல்லாவற்றையும் சேர்த்து சுருக்கமாக சொன்னால் இளையராஜா என்கின்ற அதிதீவிர கலைஞன் உணர்ச்சிகளின் அசைவோட்டத்தை மொழிபெயர்த்து தன் இசையால் காற்றை நிரப்பி தமிழர்களை சுவாசிக்க வைத்த காலம்.  தமிழ்த்திரைப்பட ரசனை என்றால் அப்போதெல்லாம் ரஜினி-கமல் விஜயகாந்த் சத்தியராஜ் மோகன் போன்றோர் முன்னணி கலைஞர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கே. பாக்யராஜ்,டி.ராஜேந்தர், மணிவண்ணன்,ராஜசேகர், ஆர் சுந்தர்ராஜன், பாரதி – வாசு (பன்னீர் புஷ்பங்கள் பிறகு இவர்கள் இருவரும் தனித்தனியே நிறைய திரைப்படங்களில்..) தேவராஜ் மோகன், துரை (பசி), ராபர்ட் ராஜசேகர் போன்ற நிறைய இளம் தலைமுறை இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை எடுத்துத் தள்ளினார்கள். வீட்டுக்கு வீடு டேப் ரிக்கார்டர்கள் (Tape recorder) முளைத்திருந்தன. சிறிய மரத்திலான ஒரு செல்ஃப் தயாரித்து அதில் ஆடியோ கேசட்டுகளை (Audio Cassette) வரிசையாக அடுக்கி வைத்திருப்பது வீட்டின் அந்தஸ்தை காட்டுகிற ஒரு தகுதியாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த ஆடியோ கேசட்டுகளில் பாடல்களை பதிவு செய்து கொடுப்பதற்காகவே வீதிக்கு வீதி பெரும்பாலும் பெயர் பலகைகளில் இளையராஜா படத்தோடு கேசட் பதிவு செய்யும் மையங்கள் ( Recording Center) முளைத்தன. அங்கே பெரும்பாலும் இளைஞர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ந்த இளைஞர்கள் எக்ஃகோ, லஹரி,ஏவிஎம்,ஏவிஎல் போன்ற பல்வேறு இசைக் கம்பெனிகள் வெளியிட்ட ஒரிஜினல் ஆடியோ கேசட்டுகளை வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டார்கள். மக்கள் ரேடியோ கேட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் ரேடியோவில் நாடகங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சி பெட்டியில் தூர்தர்ஷன் என்கின்ற ஒரே ஒரு சேனல் கொடைக்கானல் மலை உச்சியிலிருந்து ஒளிபரப்பப்பட , அதற்கு ஆண்டனா வைத்து பூஸ்டர் ஸ்டபிலைசர் என அனைத்தும் வைத்து புள்ளி புள்ளியாக திரைப்படங்கள், கிரிக்கெட் மேட்ச்கள் ஒளிபரப்பாகின. கிரிக்கெட்டில் அன்று பெரும் பேட்ஸ்மேனாக விளங்கிய கவாஸ்கர் ஏறக்குறைய இறுதி காலத்தில் இருந்தார். கபில்தேவ் ஒரு வெற்றிகரமான பவுலராக அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான மேட்சுகளில் இந்தியா தோற்று கொண்டிருந்தது. நானெல்லாம் தீவிரமான முகம்மது அசாருதீன் ரசிகன். கை மணிக்கட்டு களால் விளையாடுகிற அற்புதன். அவர் Square Cut Shot விளையாடும்போது அங்கே நின்று கொண்டிருக்கின்ற ஃபீல்டருக்கு பந்தைப் பிடிக்க தோணாமல் கைத் தட்டத்தான் தோன்றும் என்கிற அளவுக்கு நளினமாக விளையாடுகிற பெரும் கலைஞன். அற்புதமான fielder. எப்போதாவது Spin bowling ங்கும் செய்வார். நாங்கள் வாழ்ந்துவந்த மன்னார்குடி ஹவுசிங் யூனிட்டில் GCC என்கின்ற கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்தது. அதில் விளையாடிய ஸ்டீபன் அண்ணா தான் டீம் கேப்டன். காவுக்கனி , ராக்கெட் ராஜா என்கின்ற இருபெரும் வேகப்பந்து வீச்சாளர்கள். எதிரணியை மிரட்டி எடுத்துவிடுவார்கள்.குறிப்பாக ராக்கெட் ராஜா அண்ணன் பந்தினை யாராலும் தொடவே முடியாது.என் எதிர் ஃப்ளாட்டில் வாழ்ந்து வந்த ரவி அண்ணன் தான் அந்த டீமின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு அனைத்திலும் ஆதர்சம். அதிகமாக பேசமாட்டார். பிரமாதமாக கீப்பிங் செய்வார். அந்தக் காலகட்டத்தில் நான் நடப்பதற்காக Calipar போட்டிருந்தேன். ஆனாலும் ரவி அண்ணன் என்னையும் விளையாட வைப்பார். எல்லா விளையாட்டுக்களிலும் என்னை ஒதுக்கி வைக்காமல் சேர்த்துக் கொள்வார். என்னை நின்ற இடத்திலிருந்து பவுலிங் போட சொல்வார்.எங்கே சென்றாலும் நான்தான் அவருக்கு துணை. ஒரு நாள் மாலை ரவி அண்ணன் எங்கோ அவசரமாகக் கிளம்பி கொண்டிருக்க.. நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். வேறு வழி இல்லாமல்‌ வீட்டில் சொல்லிவிட்டு என்னையும் சைக்கிளில் அழைத்து கொண்டு அவர் சென்று நின்றது எங்கள் ஊரின் சாந்தி திரையரங்கத்தின் முன்னால். அந்தப்படத்தின் போஸ்டரை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. ஏதோ குடும்பப் படம் போல இருந்தது. ஆனால் ரவி அண்ணன் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அந்த 80 களின் காலத்தில் அதுபோன்ற திரைப்படத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு மெலோ டிராமா. அதுபோன்ற ஒரு திரைப்படத்தை மன்னார்குடி போன்ற ஒரு நடுத்தர நகரத்தில் பார்ப்பதற்கு ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. ரவி அண்ணன் ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால்.. மன்னார்குடி போன்ற ஒரு ஊரில் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு கூட்டமாக கல்லூரி மாணவிகள் வந்து இருந்தார்கள். அந்த மாணவிகளை சார்ந்து சில மாணவர்களும் வந்திருக்க.‌. தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டது. படம் தொடங்கியது. திரைப்படம் ஒரு பெண்ணைப் பற்றியது. அவளுடைய விருப்பத்தை மீறி அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவன் மென்மையான மனதை உடையவன். ஏன் தன்னை தனது மனைவி விரும்ப மறுக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இதுகுறித்து அவளிடம் அவன் ஆழமாக கேட்கின்ற ஒரு தருணத்தில்.. ஒரு வெள்ளை சுவற்றில் தலையைச் சாய்த்தவாறு அவள் அழுதுகொண்டே சரிய.. அவளது முற்காலம்(Flashback) காட்சிகளாக விரிகிறது. அதிரும் இசை துணுக்குகளுக்கு நடுவே சில இளைஞர்களோடு சட்டென ஒரு இளைஞன் வேகமாக நடந்து வருகிறான். திரையரங்கமே அதிர்கிறது.அக்காட்சியின் கேமிராவை கையாள்பவன் ஒரு கவிஞன் (P.C. ஸ்ரீராம்) என புரிகிறது. அந்தக் காட்சியில் அந்த கேமிரா தரையிலிருந்து நடந்துவரும் அந்த இளைஞனின் கோபம் மிக்க முகத்தை காட்டுகிறது. அதுபோன்ற ஒரு துள்ளல் மிகுந்த ஒரு ஆக்ரோஷமான வேக நடையை தமிழ்த் திரை அதுவரை பார்த்ததில்லை. வந்த வேகத்தில் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு அடி விழத் தொடங்குகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறபோது சரியாக சுவர் ஏறி குதித்து அந்த இளைஞன் தப்பித்துப் போய் விடுகிறான். அந்தக் காட்சியில் தன் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிடத் தொடங்கிய அந்த கல்லூரி மாணவிகள் அந்த இளைஞன் தோன்றும் போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அந்த இளைஞன் பைக்கில் சென்றான்/அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்கே சென்று ஸ்பீக்கரில் சத்தம் போட்டு காதலை சொன்னான்/பேருந்திற்கு முன்னால் தன் பைக்கை நிறுத்தி தன் காதலியோடு பேசிக் கொண்டிருந்தான்/தன் காதலியின் முகத்தை பார்த்தவாறே கையில் கடலையோடு பின்னால் நடந்து சென்றான்./ அந்தப் பெண்ணோடு ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு காபி சாப்பிடும் போது எதிர்பாராதவிதமாக வருகிற அந்தப் பெண்ணின் தந்தையை பேர்ச்சொல்லி அழைத்து அந்தப் பெண்ணின் முகத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறான்/ பிறகு அந்த அதிர்ச்சியையே ஒரு ரசனை மிக்க காதலாக மாற்றுகிறான்/ தன் காதலிக்காக தான் போக வேண்டியிருந்த ஒரு போராட்டத்திற்கு போகாமல் கொட்டும் மழையில் காதலியின் வீட்டின் ஜன்னலுக்கு முன்னால் காத்திருக்கிறான்/மறுநாளே திருமணம் செய்து கொள்ள கோருகிறான்/கடைசியில் அந்த இளைஞன் திருமணத்திற்காக காத்திருக்கும் காதலியின் கண் முன்னரே எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு ரசவாத வித்தை போல அந்த 15 நிமிடங்களும் கண் முன்னால் வித விதமான உணர்வலைகளோடு நிகழ்ந்து முடிந்து விடுகிறது. அந்தப் பதினைந்து நிமிட காட்சிகளுக்கு பின்னால் ஆரவாரம் செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி மாணவிகள் அமைதியாக எழுந்து திரையரங்கை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் அத்திரைப்படம் அத்தோடு முடிந்து விட்டது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் தியாகராஜ பாகவதர்/எம்ஜிஆர்/ கமல் என சிலவகை தனித்த நளினங்களோடு கூடிய ஆண்களை விரும்பியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள் போல தாங்கள் விரும்பும் நடிகனின் காட்சிகள் முடிந்த பிறகு திரையரங்கை விட்டு யாரும் வெளியே சென்றதில்லை.வெளியே விசாரித்தபோதுதான் சொன்னார்கள். மனோகர் என்கின்ற அந்த கதாபாத்திரம் சுடப்பட்டு இறந்து போன காட்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் பலர் எழுந்து சென்று விடுவதாக சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக எங்கள் மன்னார்குடிக்கு இது மிகப்பெரிய மாபெரும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய பரபரப்பு செய்தியாக மாறிப்போனது. அது அக்காலத்தில் திரைப்பட ரசனைகளின் ஊடாக ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி. மனோகர் ஆக நடித்த அந்த இளைஞனின் பெயர் கார்த்திக். படம் மவுனராகம். அப்போதுதான் தெரிந்தது ரவி அண்ணன் கார்த்திக்கின் ரசிகன் என.அண்ணனும் படம் பார்த்துக்கொண்டிருந்த என்னை பார்த்து போகலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அங்கே வந்திருந்த கல்லூரிப்பெண்களில் யாரோ ஒருவருக்காகவும், கார்த்திக்கிற்காகவும் தான் அண்ணனும் அத்திரைப்படத்திற்கு வந்திருந்தார். இரண்டுமே முடிந்து சென்று விட்டபடியால் அண்ணன் அழைக்க, நானும் எழுந்து வந்துவிட்டேன். இவ்வாறாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பலவற்றை அறிமுகம் செய்து வைத்த ரவி அண்ணன் தான் எனக்கு கார்த்திக்கையும் அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்னாலும் எனக்கு கார்த்திக்கை தெரியும். ஒரு வெகு சாதாரணமான சிறு நடிகன் போல துணை கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அக்காலத்தில் எனக்கு கமல் மட்டும் தான் பிடிக்கும்.அப்போது வித்தியாசமாக நடித்து கொண்டிருந்த சத்யராஜ் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனால் மவுனராகம் என்ற திரைப்படத்தினை என்னை அழைத்து சென்று காட்டியதன் மூலம் தன்னைப்போலவே ரவி அண்ணன் என்னையும் தீவிர கார்த்திக் ரசிகனாக மாற்றிவிட்டார். கார்த்திக்கை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் திரைப்படம் குறித்தான எனது ரசனைகள் மாறத் தொடங்கின. What is acting என்ற கேள்விக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறார் “living”.
நடிப்பு ஒரு நிகழ்கலை. புனைவு வெளிப்படுத்துகிற மிகை புள்ளிக்கும் , கலைஞனுக்கு இயல்பாக தோன்றுகிற கலையம்ச நேர்த்திக்கும் இடையே இருக்கின்ற நுட்ப இடைவெளியை உள் வாங்கி ஒரு கனவின் நகல் போல காட்சியளிக்கும் ஒரு மாய தோற்றத்தை உண்மையாக்குகிற வித்தை அது. அந்த மேஜிக் களியாட்டத்தில் ஒரு நுனி அளவு பிசகிவிட்டாலும் கலை தன் உயிரை இழந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாய விளையாட்டை தான் மிக இயல்பாக விளையாடுவதற்கான சாதுர்யத்தை கொண்ட மகத்தான கலைஞனாக கார்த்திக் திகழ்ந்தார்.

மவுனராகம் படத்தில் கார்த்திக்கு வருகின்ற காட்சிகள் 15 நிமிடங்களுக்கு மிகாதவை. ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்கள் தான் கார்த்திக் என்ற இளம் கதாநாயகனை தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு இருக்கையில் அமர வைத்தது. வழமையான காதல் காட்சிகளுக்கு இளமையான துள்ளல் வண்ணம் தீட்டிக் கொண்டே இருந்தார் கார்த்திக். நொடிக்கு நொடி மாறிவிடும் அமர்க்களப்படுத்தும் அவரது முகபாவங்கள் அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதது. அதன்பிறகு அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், இதயதாமரை, கோபுர வாசலிலே என அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கார்த்திக் நடித்து கலக்க அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பிரம்மாண்டமாக உண்டானது. அவருக்கென தனித்துவமான இசையை இளையராஜா உருவாக்க… அவரது கிராமத்து படங்களான கிழக்கு வாசல், பாண்டி நாட்டு தங்கம், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் , பெரிய வீட்டு பண்ணக்காரன், பூவரசன், பொன்னுமணி, போன்ற பல படங்கள் பாடல்களுக்காகவும்,கார்த்திக்கின் வசீகரத்திற்காகவும் ஓடின.தென்மாவட்டங்களில் கார்த்திக்கின் சாதியை வைத்து வீட்டுக்கு வீடு அவரது புகைப்படங்களை வைத்து ஒரு பெரிய கூட்டமே அவரது ரசிகர்களாக மாறி வழிபட்டதெல்லாம் பெருங்கதை. கார்த்திக் மிக நுட்பமான உணர்வுகளை மிக அழகியலாக வெளிப்படுத்துகிற தேர்ந்த கலைஞன்.குறிப்பாக அக்னி நட்சத்திரம். அந்தப் படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் மிகுந்த நேர்மறையான கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரி பாத்திரம். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரத்தை போகிற போக்கில் அனாசியமாக செய்து அசத்தி இருப்பார் கார்த்திக். பேருந்து நிறுத்தத்திலும், பேஸ்கட் பால் மைதானத்திலும், பெட்டிக் கடைகளிலும் மிக எளிதாக தென்படுகிற வேலையற்ற இளைஞனின் பாத்திரத்தை கார்த்திக் ரசிக்கத்தக்க வகையில் செய்து இணை நடிகரான பிரபுவை தாண்டிலும் ஸ்கோர் செய்திருப்பார். ஷேவ் செய்யப்படாத இளம் தாடி முகத்தில் ஜீன்ஸ் பேண்டோடு, உடல் முழுக்க வியர்வையோடு, சட்டை இல்லாமல் மைதானத்தில் பந்தை தலைக்கு வைத்து கார்த்திக் படுத்திருக்கிற அந்த லாவகம் இயக்குனர் மணிரத்னம் எதிர்பார்த்த அளவை விட காட்சி அழகின் உச்சம். கார்த்திக் போன்று முக அழகு கொண்ட தமிழ் நடிகர்கள் இதுவரை தோன்றியதில்லை. அது அப்பட்டமான ஒரு தமிழனின் முகம். ஊருக்குள் களையான முகம் என்பார்களே அந்த முகம் கார்த்திக்கின் முகம் தான். இதயத்தாமரை திரைப்படத்தில் ஒரு காதல் தேவதை … பாடலில் கார்த்திக்கும் ரேவதியும் ஒரு பாடல் முழுக்க ஒரு மிதிவண்டியில் வருகிற அந்த கவித்துவ காட்சி போல பொங்கி எழுகிற காதலின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிற காட்சி அழகியல் தமிழ் திரைப்படங்களில் மிகக் குறைவு..

[youtube]https://youtu.be/0ziNk53ikVI[/youtube]

மிகையற்ற நடிப்பு தான் கார்த்திக்கின் மூலதனம். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்ற மாபெரும் நடிகர்களிடம் காணப்படும்
உடல் மொழியில் ஆத்மார்த்த நெகிழ்வுத் தன்மை (flexibility) தமிழில் உடைய ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே. அதற்கு பல காட்சிகளை உதாரணம் சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் பாடல்

[youtube]https://youtu.be/8Hjf-UyTSKg[/youtube]

கார்த்திக்கின் முகபாவங்கள் தனித்துவமானவை. நடிகர் திலகம் சிவாஜி, கமல் போன்றோரிடம் இருக்கின்ற சற்றே Over tone கார்த்திக்கிடம் இருக்காது. தன் காதலிக்கு விடிந்தால் திருமணம். ஏற்கனவே காதலியை பெண் கேட்டு தன் தாய் வேறு அவமானப்பட்டு இறந்தும் போய்விட்டாள். திருமணத்தின் முதல் நாளன்று தான் விரும்பிய பெண்ணின் வீட்டின் முன்னால் கூத்துக் கட்ட வேண்டிய பிழைப்பு கொண்ட அந்த எளிய கலைஞனாக கார்த்திக் கண்ணீரோடு “பாடி பறந்த கிளி.. பாதை மறந்ததடி” என ததும்பும் விழிகளோடு பாடிய போது திரையரங்கமே சேர்ந்து அழுதது. அதுவரை அழுகை என்பது மிகை நடிப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்ததை கார்த்திக் தான் அதன் இறுக்கங்களை தகர்த்து இயல்பின் மொழிக்குள் கொண்டு வந்து அட்டகாசப்படுத்தினார் ‌. அதேபோல வருஷம் 16 திரைப்படத்தின் இறுதிக்காட்சி. எல்லாவற்றையும் இழந்து விட்டு தன் தாய்க்கு முன்பாக கையறு நிலையில் கதறித் தீர்க்கிற மனிதனாக கார்த்திக் பிரமாதப் படுத்திய போது அதை மிகை நடிப்பாக யாருமே உணரவில்லை என்பதுதான் கார்த்திக்கின் கலையழகு. கார்த்திக்கின் பிற்காலம் எல்லா நடிகர்களை போலவும் அமைந்தது என்றாலும்.. கோகுலத்தில் சீதை போன்ற சில அற்புதமான திரைப்படங்களிலும் தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டே இருந்தார். இதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தாலும்.. கார்த்திக் கோகுலத்தில் சீதையில் நடித்த விதம் உலகத் தரமானது. கார்த்திக் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தனது கலை வாழ்வின் இறுதிக்காலத்தில் உள்ளத்தை அள்ளித்தா போன்ற வணிக ரீதியிலான காமெடி படங்களில் நடிக்க வேண்டியிருந்தது வரலாற்றின் கோர விசித்திரம். இப்போதும் கார்த்திக் ராவணன்,அனேகன், சந்திரமௌலி போன்ற படங்களில் நடிப்பதை பார்க்க முடிகிறது. அது நான் பார்த்த கார்த்திக் அல்ல. இது வேறு நபர். மன்னனாக வாழ்ந்தவனை பிச்சைக்காரனாக மாற்றி வைத்து அழகு பார்ப்பது தான் காலம் என்ற கொடுங்கோலனின் தீராப் பகடையாட்டமாக இருக்கிறது.
..
ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் ஒரு உணவகத்தில் யாரோ பின்புறத்திலிருந்து என்னை கட்டிப்பிடிக்க.. சட்டெனத் திரும்பி பார்த்த நான் ஒரு நடுத்தர வயதுக்காரரை பார்த்து விட்டு இவர் யாராக இருக்கும் என யோசித்தேன். “அடையாளம் தெரியலையா” என கேட்டவாறே “நான்தாண்டா ரவி” என்று
அணைத்துக்கொண்ட ரவி அண்ணன் அவரது மனைவி, பிள்ளைகளை அறிமுகம் செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணனை பார்க்கிறேன். நாங்கள் மன்னார்குடியிலிருந்து குடிமாறி வந்துவிட்ட பிறகு அண்ணனைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. அண்ணனுக்கு வயதாகி இருந்தது. தலைமுடி நரைத்து விட்டது. பிள்ளைகள் பெரியவர்களாக நின்றார்கள். ஒரு காலத்தில் நாம் கதாநாயகர்களாக பார்த்த அண்ணன்கள் வயதாகி ஒரு சாதாரண மனிதனாக, ஒரு குடும்பஸ்த்தனாக, சகல பாடுகளும் நிரம்பிய எளிய மனிதராக நாம் பார்க்கும் பொழுது உண்மையாகவே வருத்தமாகி விடுகிறது. ரவி அண்ணன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். நிறைய விசாரித்தார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கேள்விப்பட்டு கண்கள் மின்ன சந்தோஷப்பட்டார். மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டார்.அலைபேசி எண்ணை மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விடைபெற்றுக் கொண்டோம்.
அப்போதுதான் அவரது அலைபேசி ஒலித்தது. அதே கார்த்திக்கின் மௌனராகம் பிஜிஎம். அண்ணன் என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தார். நான் அப்படியே அதே இடத்திலேயே உறைந்து அமர்ந்து இருந்தேன். என்னைப் பொருத்தவரையில் பெரும்பாலான மனிதர்கள் நினைவுகளிலும், கடந்த காலங்களிலும் தான் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு திரைப்படத்தில் நான் நான் கேட்ட வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “டேப் ரிகார்டரில் உள்ளது போல உண்மையான வாழ்க்கையிலும் ரிவைண்டர் என்கின்ற பொத்தான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” கவிஞர் விக்ரமாதித்தியனின் கூண்டுப் புலிகள் என்ற ஒரு கவிதையில்…

“கூண்டுப் புலிகள் நன்றாக பழகி விட்டன;
நாறக் கூண்டினை பற்றி எந்த புகாரும் இல்லை:
நேரத்திற்கு இரை..
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்கத் சுகத்திற்கு தடையில்லை

என வரிசையாகச் சொல்லி வரும் அவர்… இறுதியாக

“ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்.”

என அதிர்ந்து முடித்திருப்பார். மனித வாழ்க்கையும் அவ்வாறு தானே இருக்கிறது..

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் “நினைவில் காடுள்ள மிருகம்” என்கின்ற ஒரு புகழ்பெற்ற கவிதை உண்டு.

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.

அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன.
அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.

அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.

நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.”

அப்படித்தான் ரவி அண்ணன் போல மனிதர்களும். நினைவுகளில் கடந்த காலத்தையும், கூடவே கார்த்திக்கையும் சுமந்துக் கொண்டு அலைந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சீமான் என்ற தனி ஒருவன்.

 

 

 

 

 

 

 

தலைமை என்பது பன்மைச் சொல் அல்ல. கூடி செயல் செய்யலாம். கூடி தலைமையேற்க முடியாது. தலைமையேற்க உறுதி வாய்ந்த தனி ஒருவனே தகுதி உடையவனாகிறான்.இந்த உலகத்தின் எல்லா புரட்சிகர மாறுதல்களும் தனி ஒரு மனிதனின் சிந்தனைத் துளியிலிருந்து தான் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லா தத்துவங்களும், எல்லா மதங்களும், எல்லாப் புரட்சிகளும், தனி ஒரு சில மனிதச் சிந்தனைகளின் விளைச்சல்தான். தன்னம்பிக்கை கொண்ட தனிமனிதர்கள் ஒரு சிலரின் வாழ்க்கை கதைகளே உலக வரலாறு என்கிறார் விவேகானந்தர். உலகின் இருள் நீங்க சிந்தித்த எடிசன் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் உலகத்தின் வெளிச்சமாக மாறிப் போகிறான். ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் காந்தி என்கின்ற ஒரு தனி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமதிப்பு தான்
1947 ஆகஸ்ட் 15 அன்று மூவர்ண கொடி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட ஒரு காரணமாக அமைந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திலிருந்து உதிர மண்ணை அள்ளிக் கொண்டு உருவேற்றிக் கொண்ட ஒரு தனிச் சிறுவன்தான் பகத்சிங் என்ற பெயரில் புரட்சிகர அரசியலின் அடையாளமாக மாறிப் போனான். பிரபாகரன் என்கின்ற ஒரு தனிமனிதனின் துருப்பிடித்த அந்த ஒற்றை துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ஒரு தோட்டா தான் அடுத்து வந்த 30 ஆண்டுகால போராட்டத்தின் திசையை தீர்மானித்தது. சேகுவேரா நல்ல தளபதிதான். ஆனால் அவருக்கும் கூட பிடல் காஸ்ட்ரோ என்கின்ற ஒரு தனிமனிதன் தலைவராக தேவைப்பட்டார். அலைபாயும் கடலுக்கு நடுவே திசையற்று நிற்கின்ற கப்பலுக்கும் கூட ஒரே ஒரு திசைமானி தேவைப்படுகிறது. கரை நெருங்குவதை கண்டுணர்ந்து நம்பிக்கை கொள்ள ஒரே ஒரு கலங்கரை விளக்கம் தேவைப்படுகிறது. ஏங்கல்சுகளால் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. அதற்கு ஒரு கார்ல் மார்க்ஸ் தான் சிந்திக்க வேண்டும்.

அவரை முதன்முதலாக நான் நேரில் கண்ட இடம் ஒரு சிறைச்சாலை. கடந்த 2008ம் ஆண்டு பாண்டிச்சேரி சிறையில் ஒரு தனி அறையில் தனிமையாக அவர் அமர்ந்திருந்த போதுதான் அவரை கண்டேன். இனம் அழிந்து கொண்டிருந்த காலம் அது. உறங்கா இரவுகள் தந்த விழி சிவப்பில் கலங்கிய கண்களோடு அவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தனி ஒருவன் தான். ஈழத்தில் அவர் உயிருக்கு உயிராக பழகியவர் தளபதிகள், பெரும் வீரர்கள் ஒவ்வொருவராக வீர மரணம் அடைகிற செய்திகளை ரணம் பட்ட இதயத்தோடு அவர் உள்வாங்கி உருக்குலைந்த நாட்களில் தனி ஒருவனாகத்தான் இருந்தார். எல்லாம் அழிந்து முடிந்த காலகட்டத்தில், இனி ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே என்ற பதைபதைப்பில், அடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் கைப்பிசைந்து நிற்கும்போது, சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் தனித்தக் குரலில் சொன்னான். முள்வேலி கம்பிகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க மதுரையில் கூடுவோம். “அறுத்தெறிவோம் வாரீர்.” 2011 – ஒரு நூற்றாண்டு கடந்த ஒரு பேரியக்கம். பலம்வாய்ந்த ஆளும் கட்சியோடு கூட்டணி சேர்ந்து நிற்கிறது. எம் இனத்தை துடிக்கத் துடிக்க அழித்த காங்கிரஸ் 63 இடங்களில் தமிழ்நிலத்தில் துணிச்சலாக போட்டியிடுகிறது. இப்போது இருக்கின்ற கூட்டம் போல கூட இல்லை நாங்கள். ஒருவித மனச்சோர்வு அந்த நேரத்தில் எங்களை சூழ்ந்திருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அனைத்து தரப்பிலும் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. காங்கிரஸின் உதிரம் படிந்த கை மீண்டும் தமிழ்நாட்டில் எழுந்தால்.. நாம் தமிழர் என நாங்கள் கூடி முழங்கி எழுந்ததற்கு பொருளில்லை என்கின்ற அச்சம் எங்களால் மனதில் குடிகொண்டிருந்தது. ஏனெனில் நாங்கள் அன்று ஒரு கட்சி அல்ல. ஊருக்கு ஊர் சிறு குழுக்களாக திரண்டு கொண்டிருந்தோம் அவ்வளவுதான். 63 இடங்கள். வலு வாய்ந்த திமுக காங்கிரஸ் கூட்டணி. எப்படி எதிர்ப்பது என எங்கள் யாரிடத்திலும் எந்த திட்டமும் இல்லை. முன்னணி நிர்வாகிகள் சிலர் சொன்னார்கள். தேர்தலில் போட்டியிடாத வைகோவிடம் சென்று அவரையும் அழைத்துக்கொள்வோம் என்றார்கள். இவர்கள் பேசியது அறிந்த வைகோ அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு படுத்து விட்டது வேறு கதை. எதுவும் எங்களுக்கு சாதகமாக இல்லாத சூழல் அன்று.எங்களுக்கு முன் அமர்ந்திருந்த சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் சொன்னான். “இது வெறும் தேர்தல் அல்ல. சோனியா காந்தி மகன் ராகுல் காந்திக்கும் பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் நடக்கின்ற யுத்தம்.” “தமிழினத்தின் உதிரம் படிந்து சிவந்து இருக்கிற காங்கிரசின் கையை வெட்டி வீழ்த்துவோம், காங்கிரஸைக் கருவறுப்போம்” என்று முதலாவதாக அந்தத் தனி ஒருவன் தான் எழுந்து நின்று சொன்னான். தலைவரை தத்துவமாகக் கொண்டு அவர் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். காங்கிரசை வீழ்த்த அன்று எடுத்த முடிவு சீமான் என்ற தனி ஒருவன் எடுத்த முடிவு. முடிவில் காங்கிரஸ் முடிந்தது.

புலிக்கொடி தமிழக மண்ணில் எழுந்து பறந்தது. 2016. பல கட்சிகளிடமிருந்து அழைப்பு. ஆனால் சீமான் என்ற தனி ஒருவன் எங்கள் யாரிடமும் கேட்கவில்லை. தனித்துப் போட்டி என தன்னம்பிக்கையோடு அறிவித்தான். அவன் கரம் பிடித்து நடக்கிற எங்களுக்கு கூட அந்த முடிவு ஒரு அதிர்ச்சி தான். சென்னையில் நடந்த பொதுக்குழுவில் அந்த முடிவை அறிவித்தபோது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதன்மையான எட்டு பேர்களில் நானும் ஒருவன். ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவு சரியா தவறா என்று எனக்கு தெரியாது. என் மனதிற்குள் கடுமையான போராட்டம். அந்த இரவில் அண்ணன் அலைபேசியில் வந்தான். “எதற்கும் கவலைப்படாதே. நான் இருக்கிறேன். என் தம்பி தங்கைகளுக்காக நான் ஓடுவேன். வாக்கு கேட்பேன்‌. துணிந்து நில்.” என்றான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். வேட்பாளர்களாக நின்ற நாங்கள் யாரும் அடையாளம் அற்றவர்கள். புதியவர்கள். எதுவுமில்லாத இளையவர்கள்.வரலாற்றின் வீதிகளில் முகமற்ற எங்களுக்கு சீமான் என்கின்ற தனி ஒருவன்தான் முகவரியாகிப் போனான். பொதுத் தொகுதிகளில் ஆதித் தமிழர்கள் நின்றார்கள். பெருமங்கை ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திருநங்கை சகோதரி களத்தில் நின்றார். வேட்பாளர்கள் யாருக்கும் அவரவர் சாதி பெரும்பான்மை இருக்கின்ற இடத்தில்
இடமில்லை. பொதுத் தொகுதியில் எப்படி ஆதித்தமிழரை நிறுத்தலாம் என்பதான கேள்விகள். அவன் சாதி பார்த்து நீ வாக்களிக்க யோசித்தால் என்றால்.. உன் ஓட்டு எனக்கு வேண்டாம். உன் ஓட்டு எனக்கு தீட்டு என கம்பீரமாக அந்த தனி ஒருவன் தான் அறிவித்தான். ‌ அந்த தனி ஒருவன் தான் வீதிக்கு வீதி ஓடினான். எதுவுமற்ற தம்பி தங்கைகளுக்கு எல்லாமாகவும் இருந்து வாக்குகள் சேகரித்தான். இப்படித்தான் 2016ல் படைத்தோம் புதிய அரசியல் வரலாறு.

2019 பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்ற தேர்தலை விட இன்னும் கடுமையான களம். கட்சியின் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.பலமான வேட்பாளர்களை நிறுத்துவோம் என அனைவரும் முடிவெடுக்கிறோம். அந்தத் தனியன் அப்போது அமைதியாக இருக்கிறான். நாங்கள் எல்லோரும் பேசி முடிக்கிறோம். இறுதியாக பேச எழுந்த அவன் மொத்தம் 40 இடங்களில் 20 இடம் ஆண்களுக்கு 20 இடம் பெண்களுக்கு. என அறிவிக்கிறான்.
வழக்கம் போல் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஆனாலும் அந்த சீமான் என்ற தனி ஒருவன் வற்றாத தன்னம்பிக்கையோடு 20 பெண்களையும் 20 ஆண்களையும் வேட்பாளராக நிறுத்துகிறான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். இப்படித்தான் 2016ல் பெற்ற நாலரை லட்சம் வாக்குகள் அடுத்த மூன்றே வருடங்களில் நான்கு மடங்காக உயர்ந்து 17 லட்சம் ஆனது. உண்மையின் கனல் வீசி தமிழின் அனல் பூசி முழங்கிய அந்த தனி ஒருவனது முழக்கங்களால் தான்
அடையாளமற்ற ஒரு இளைஞர் கூட்டம் அரசியல் அதிகாரம் நோக்கி அணியமாகி வருகிறது. எப்போதும் அவன் தனி ஒருவனாகத்தான் இருக்கிறான். அரசியலுக்காக கூட யாரிடமும் கூட்டு வைப்பதில்லை. அவன் அவனது அண்ணன் போலவே யாரிடமும் சேராமல் தனித்தே தனி ஒருவனாய் நிற்கிறான். இனம் காக்கின்ற இப்பணியை அவன் செய்யத் தொடங்கும்போது இன்று உடன் நிற்கின்ற நாங்கள் யாரும் அன்று அவனுடன் இல்லை. நாளையே நாங்களும் நகர்ந்தாலும் அவன் காலம் கையளித்த இப்பணியை கட்டாயம் செய்து பயணித்துக் கொண்டுதான் இருப்பான். எவரையும் நம்பி இல்லை அவன். ஆனால் அவனை நம்பி எண்ணற்ற இளம் புரட்சியாளர்கள் இலட்சியப் புன்னகையோடு அவன் பின்னால் நிற்கிறார்கள். கூடி நிற்கிறோம். ஆனால் முன்னால் அவன்தான் நிற்கிறான் கூடி வாழ்கிறோம். ஆனால் அவன்தான் தலைமையேற்கிறான். தீர்மானங்களையோ முடிவுகளையோ யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் தலைவனாக அவன் தான் வழி காட்டுகிறான். ஆளாளுக்கு முடிவெடுத்தால் போகிற பயணம் முடியாது. சரியான தனி‌ ஒருவன் தலைமை ஏற்க மறுத்தால்.. எந்த இனமும் விடியாது. கூடிப் பேசிக் கொண்டிருந்தால் விவாதம் மட்டுமே மிஞ்சும். கடமையாற்ற களம் செல்பவர்கள் மனதில் தலைவன் சொல் மட்டுமே எஞ்சும். கூட்டுத்தலைமைகளால் இனத்திற்கான விடுதலைக் கூடு கட்ட முடியாது. வானத்தின் எல்லையைத் தொட்டு பறக்கும் வல்லூறு ஒன்றின் வலிமை கொண்ட தனி ஒருவன்தான் இனத்திற்காக நாடு கட்ட தகுதியானவன். இது தனி மனித துதிபாடல் அல்ல. இலட்சிய உறுதியில் மாறாமல் நீண்டகாலம் பயணித்து எப்படியும் இனத்தின் விடுதலை இலக்கை வென்று முடிக்கின்ற , எப்போதாவது வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய இனத்தில் தோன்றுகிற தனி ஒருவன் பற்றிய தேடல்.அது குறித்த புரிதல். இதையெல்லாம் அறிந்து தான் இறுமாப்போடு சொல்கிறோம். சீமான் என்கின்ற ஒருவன் தான் எழுதப்பட இருக்கிற நாளைய நம் இனத்தின் வரலாறு.

மொழிப்பெயர்க்கப்பட்ட நினைவின் சொற்கள்

குடந்தை என்கிற இந்த முது நகரம் தன் நினைவுச்சுழிகளில் தன்வரலாற்று பெருமிதங்களைச் சுமந்து ஏறக்குறைய இரவு நேரத்தில் உறக்கம் வராத ஒரு வயதான கிழட்டுயானை போல தலை அசைத்துக் கொண்டே இருக்கிறது.வெறும் கண்களால் பார்த்து புரிந்து கொள்ள முடிகிற நகரம் அல்ல இது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளி இன்னும் படாமல் இருள் படர்ந்து முதுமையின் பழுப்பேறிய வாசனையோடு முடங்கிக் கிடக்கும் இந்த நகரத்தின் மனித விழியறியா மூலைமுடுக்குகள் கடந்தகாலத்தை ஒரு திரவமாக மாற்றி இந்த நகரத்தில் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் முது மக்கள் மனதில் நிறைந்திருக்கும் நினைவுத்தாழியில் நிரப்பி, இவர்கள் புழங்கும் சொற்களோடு கலந்து விட்டிருக்கின்றன.இதன் ஒடுங்கிய தெருக்களில் முன்னோர் காலத்தில் எவர் எவரோ நடந்த காலடித் தடங்கள் பின்னிரவுகளில் ஆங்காங்கே ஒளிர்வதாக இரவுகளில் உலவுபவர்கள் சொல்கிறார்கள். காசியிலிருந்து புறப்பட்டு வந்த சாமியார்கள் புழுதியேறி சுருண்டு கிடக்கும் நீண்ட முடியோடு இந்த புராதன நகர வீதியில் சிவ பாணம் புகைத்து புகைச்சுருள் சூழ ஆங்காங்கே ஒடுங்கி படுத்திருக்கிறார்கள். மது அருந்தியும் உறக்கம் வராத அவர்களில் ஒருவன் கண் சிவந்து உன்மத்தம் ஏற‌ சொல்கிறான்.

இந்த நகரம் ஒரு கனவு என.ஆம். இந்த நகரம் ஒரு கனவுதான். கனவிற்கும் நினைவிற்கும் ஆன விசித்திர இடைவெளியை தன் புராதன அம்சங்களால்
இந்த நகரம் காலம்தோறும் அழித்துக் கொண்டே வந்திருக்கிறது. தெருக்கள் முழுக்க நிரம்பிக் கிடக்கும் கற்றுளி கோவில்களில் எப்போதோ கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கிற முது தமிழ் உலராமல் இன்னும் உயிரின் ஈரத்தோடு பார்ப்போர் விழிகளுக்கு அசைந்து வளைந்து திரியும் மழைக்கால மரவட்டைகள் போல அசைந்து கொண்டிருக்கின்றன.குடந்தை என்கிற ‌பழம்பெருமையை தன் மேனியெங்கும் எழிலாக பூசி இருக்கிற இந்த வயதான பெண்ணின் சாயல் இந்த நகரத்தின் வீதியில் நெற்றி நிறைய பொட்டோடு மங்கும் மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் அமர்ந்து பூ விற்பதற்காக பூக்கட்டி கொண்டிருக்கிற நிறைந்த மஞ்சள் பூசிய வயதின் சுருக்கமேறிய முகங்களில் ஒளிர்கிறது.எங்கெங்கோ தொலைவிலிருந்து வித்தைகள் காட்டுவதற்காக வந்து கூடியிருக்கிற கழைக்கூத்தாடிகள், குரங்காட்டிகள், ராமன் /சிவன் /அனுமார் என வெவ்வேறு வேடமணிந்து உரத்த குரலில் பாட்டுப் பாடி காசு கேட்கின்ற பகல்வேடதாரிகள், திருநங்கைகள், பலூன் விற்பவர்கள், ராட்டினம் சுற்றுபவர்கள், மிட்டாய் வியாபாரிகள் என திருவிழா காலங்களில் மட்டும் ஊர்களுக்குள் திரிபவர்கள் எப்போதும் இந்த ஊரில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும்‌. வருடம் முழுக்க இந்த பழம் நகரில் வரலாற்றின் சாட்சியமாக கற்களாக உறைந்திருக்கும் ஏதோ ஒரு கோவிலில் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.அருகில் எந்த மலையும் இல்லாத வண்டல் மண் நிறைந்த இந்த மருத நில மண்ணில்ஏது இவ்வளவு மாபெரும் கற்கள் என அலை அலையாய் எழுந்து வருகிற கேள்விகள் இந்த நகரத்தில் இரவுகளில் ஆழ்ந்து உறங்குகிற இளம் சிறார்களின் கனவுகளில் விழுந்து அவர்களது அர்த்தமற்ற உளறல்களாக வெளி வருகின்றன. குடந்தை என்கிற அந்த மதர்த்த பெண்ணின் மார்பகங்களை தாண்டி ஒதுங்கி கிடக்கும் ஒற்றை முந்தானைப் போல காவிரியாறு ஊரின் ஒரு ஓரத்தில் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே ஆற்றின் ஓரமாக இருக்கின்ற படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் குளித்துக்கொண்டும், யாரோ சிலர் வெற்றிலை மணம் ததும்புகிற இலக்கியம் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். மடத்துத் தெருவில் நடக்கின்ற போது எப்போதும் அருந்தியவுடன் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை பிடித்து இழுத்து உயிரை பிரகாசிக்க செய்கிற காபியின் வாசனை நடந்து போகும் அனைவரின் நாசித் துவாரங்களில்
படர்ந்து பரவுகிறது.

“ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி’ எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற் கொற்றச் சோழர்
குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள்,
அறன் இல் யாயே..”
(குடவாயிற் கீரத்தனார்-அகம் 60)

(பொருள்: தோழியின் கூற்று: காதலனின் ‘வேலையை’ கண்டால் குடந்தையில் கருவூலம் வைத்து நாட்டின் நிதியை மிகப் பாதுகாப்பாக பாதுகாக்கிற சோழனின் பாதுகாப்பை விட, மணல் கரைகளில் விளையாடிக் கொண்டிருக்கிற தன் மகளை பாதுகாக்க அவள் தாய் செய்யும் முயற்சிகள் இன்னும் அதிக மாகுமே..) வரலாற்றின் பக்கத்தில் சோழனின் கருவூலம் சுமந்த ஒரு பெரும் கருப்பையாக, ததும்பும் புராதன பெருமிதங்களால் கருவுற்று பொலிந்திருக்கிற பெண்ணாக
குடந்தை எப்போதும் மிளிர்ந்துக் கொண்டே இருக்கிறது.

*****

மறைந்த கலை விமர்சகர் தேனுகா குடந்தையின் காதலர். இந்தப் பழம் பெரும் நகரத்தின் வீதிகளில் முகத்தில் எப்போதும் சுமக்கிற புன்னகையோடு எங்கே சுவையான காப்பி கிடைக்கும், எங்கே நல்ல வெற்றிலை கிடைக்கும், இந்த ஊர் பக்கம் வாசித்த மாபெரும் தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் யார் யார்,கோவிலின் உறைந்து கிடக்கும் சிற்பங்களின் கலையம்சம் உணர்த்துகிற பொருள் யாது என்கிற பல அறியாத கேள்விகளின் பதில்களோடு அவர் சதா அலைந்து கொண்டே இருப்பார்.குறிப்பாக சிற்பங்கள் என்ன மொழியில் வடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த இறுகிய கற்களின் நுண்துளைகளில் புகுந்து வாசித்து உரைப்பதில் அவர் ஒரு மேதை.ஒருமுறை சாரங்கபாணி கோவிலில் தேர் வடிவான மூலவர் சன்னதியை அசையாமல் உறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான சந்தனப் பொட்டிட்டவரை நானும், அவரும் கண்டோம். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே அந்தக் கோயிலின் பிராகாரத்தில் சுவற்றில் பதிந்திருந்த ஆதித் தமிழ் மொழியின் மீது கை விரல் பதித்து வருடிக்கொண்டிருந்தார். அவருடைய செய்கையும், அவரின் தன்னை மறந்த நிலையும் எங்களை ஏதோ செய்ய.. அவரிடத்து நாங்கள் பேசத் தொடங்கினோம்.அவர் பெயர் மாதவன். மலையாளி.

ஒரு மலையாளிக்கு என்ன என் மொழி மீது ஆர்வம் என்கின்ற எனது கத்துக்குட்டி தனம் ஒரு கேள்வியாக தோன்றி அதை நான் தேனுகா விடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே மிக எளிமையாக சொன்னார்.இந்த கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்கள் மலையாளிகள்.. அவர்களுக்கும் தமிழ் தானே தாய்மொழி..??என்ற அவரது புன்னகைப் பதிலில் என் மனதிற்குள் ஏதோ ஒன்று நழுவியது போல நான் உணர்ந்தேன். அந்தப் பெரியவர் மாதவன் திருவனந்தபுரத்திலிருந்து வருகை தந்திருக்கிறார். தமிழகக் கோவில்களில் கல்வெட்டுகளில் உள்ள தமிழில் தென் படுகிற மலையாள எழுத்துருவின் ஒத்திசைவு புள்ளிகளை பற்றி ஆய்வு செய்வதற்காக அவர் வந்து இருக்கிறார். ஒவ்வொரு ஊராக சென்றவர் சாரங்கபாணி கோவிலுக்கும் வந்திருக்கிறார். அங்கே கண்ட கல்வெட்டுகளை பார்த்தவுடன் கண் கலங்கி நின்று கொண்டிருக்கிறார். கிமு ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் எழுத்துரு வடிவமாய் வடிக்கப்பட்ட தனது ஆதிமொழி மீது தீவிர காதல் கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கிறார். மலையாளிகள் எப்போதும் தங்கள் பண்பாட்டின் மீதும் அதன் விழுமியங்கள் மீதும் மாறாத பற்று உடையவர்கள். அவர்களது இலக்கியங்களில், திரைப்படங்களில் என எதிலும் அவர்களின் பண்பாட்டு பெருமிதப் புள்ளிகளை அடையாளப் படுத்தாமல் விடமாட்டார்கள். குறிப்பாக மலையாள இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டு விழுமியங்களில் பெரும்பாலானவை தமிழர் வாழ்வியலுக்கு நெருக்கமானவை. மலையாள இலக்கியங்களில் பிதாமகர்களாக திகழ்கிற தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முஹம்மது பஷீர், எம்டி வாசுதேவன் நாயர் என பலரும் தங்கள் கதைகளில் விவரிக்கும் பண்பாட்டுப் புள்ளிகள் வாசிக்கின்ற தமிழ் வாசகனது முகத்தில் ஒத்திசைவுப்பரவசத்தை ஏற்படுத்துபவை. 1887 இல் அப்பு நெடுங்காடி என்பவர் எழுதிய குந்தலதா என்கிற நாவலே மலையாளத்தின் முதல் நாவலாகும். 1889 இல் சந்துமேனன் எழுதிய இந்துலேகா (தமிழில் கிடைக்கிறது சாகித்திய அகாதமி வெளியீடு) மலையாள இலக்கிய உலகின் கலைப் பண்புகளுடன் அமைந்த மாபெரும் இலக்கியப் படைப்பு. அதேபோல் சிவி ராமன் பிள்ளை எழுதிய மார்த்தாண்டவர்மா (தமிழில் கிடைக்கிறது) வும் அக்காலத்திய முக்கிய இலக்கிய படைப்பு. பிற்காலத்தில் பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றே காட்டு பிசி குட்டி கிருஷ்ணன் என பலர் தீவிரமான இலக்கியச் செழுமை படைப்புகளை படைத்து மலையாள இலக்கிய உலகிற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பல மலையாள படைப்புகள் தமிழில் அண்மைக்காலமாக மொழிபெயர்க்கப்பட்டு வருவது தமிழிலக்கிய செழுமைக்கு மேலும் வளம் சேர்க்கிற பணிகளாகும். தமிழினை தனது ஆதி மொழியாகக் கொண்ட மலையாளம் சங்க இலக்கியங்களை தனது மொழியின் மூலமாக கருதிப் போற்றுவது என்பது மிக இயல்பானது. அந்த வகையில் சங்க இலக்கியங்களின் சாரத்தை வைத்து மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்கின்ற நாவல் தமிழில் கே வி ஜெயஸ்ரீ யால் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தின் சாகத்திய அகாடமி விருது இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சு. வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற நாவலான வேள்பாரி -க்கு மிக நெருக்கமான கதைக்களம் தான் இந்த நாவலுக்கும் என்பது மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியது. முன்னுரையில் ஜெயமோகன் சொன்னதுபோல அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ்நிலம் கேரளம் தான் என்பதை தனது சங்கப்பாடல்களின் ஊடான அறிவு மூலம் படைப்பாளர் மனோஜ் நிரூபித்திருக்கிறார்.

ஒட்டு மொத்த கதையும் கொலும்பன், இவரது மகளான சித்திரை, கொலும்பனின் மகனான மயிலன் ஆகியோரின் பார்வைகளில் முறையே முதல் எழுத்து இரண்டாம் எழுத்து, மூன்றாம் எழுத்து என மூன்று பார்வைகளில் கதை விரிகிறது. வறட்சி வறுமை தாங்க முடியாமல் ஆதி கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கிளம்பிய பாடல் பாடும் பாணரும், ஆடல் ஆடும் கூத்தரும் நிரம்பிய ஒரு சிறு ஆதி குடியின் கதைதான் நிலம் பூத்து மலர்ந்த நாள். சங்ககால மக்களின் வாழ்வியல் குறித்தான நுட்பமான விவரணைகளோடு பெருங்கதை என விரியும் இந்த நாவலில் கபிலர் பரணர் வேள் பாரி ஆகியோர் சிறுசிறு கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆதி வனத்தின் பசுமை போர்த்திய அழகியலை, அதன் அமைதியை, அதன் ஆபத்தினை, சங்ககால அரசியலின் காட்சிகளை மிக ஆழமான மொழியில் மனோஜ் விவரிக்க, அதை அப்படியே சிதைக்காமல் கே வி ஜெயஸ்ரீ மொழி பெயர்த்து இருப்பது ஆகச்சிறந்த வாசிப்பனுபவமாக இருக்கிறது. நாவலின் குறுக்கே நிறைய சங்கப்பாடல்கள் வருகின்றன. இடம்பெயர்தல், உடன்போக்கு, அருள்வாக்கு போன்ற பல ஆதித் தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை அப்படியே ஒரு திரைப்படம் போல நம் கண் முன்னால் நிறுத்தி விடுவதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் வெற்றி அடைந்து விடுகிறது. சங்கப்பாடல்கள் என்பதே ஆதி தமிழர்களின் நினைவுகளின் மொழிபெயர்க்கப்பட்ட சொற் கூட்டங்கள் தானே.இதை தமிழில் அருமையான சொற் வளத்தோடு மலையாள இலக்கிய செழுமையின் ஈரம் காயாமல் அப்படியே உயிர்ப்புடன் வழங்கிய கே.வி ஜெயஸ்ரீ அவர்களுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள். இடம்பெயர்தல் என்பது தமிழினத்திற்கு புதிதல்ல. காலம் காலமாய், தேசம் தேசமாய், இந்த இனம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தத் துயரம் மட்டுமே இந்த இனத்திற்கு என விதிக்கப்பட்ட சாபம் போல வரலாற்றின் வீதிகளில் துரத்திக் கொண்டே வருகிறது.

****
இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் என் மனதில் என்னவோ தேனுகாவும், கோவில் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து கலங்கி நின்ற மாதவனும் தான் என் மனதுக்குள் வந்தார்கள். மாதவன் அந்த ஆதி தமிழின் கல்வெட்டு வளைவுகளில் மனம் கரைந்து கண் கலங்கி நின்றதற்கான காரணத்தினை மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாளில் உணர்ந்துகொண்டேன். எங்கெங்கோ மண்ணுக்கடியில் முடிச்சுகளாய், ஊடுருவி சென்றிருக்கும் ஆழமான வேர் விழுதுகளாய் மறைந்து கிடக்கும் வரலாற்றின் பக்கங்களை சற்றே வேறுவகையில் அறிவின் வெளிச்சம் கூட்டி வாசிக்கும்போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து கிடக்கின்ற ஆதி மரபணுக்கள் உயிர்ப்பெற்று துடிக்கத்தான் செய்கின்றன. அப்படித் துடிக்க வைக்க தானே உண்மையான படைப்புகள் தன் ஆன்மாவிலிருந்து உதிரத்தைத் தொட்டு எழுதும் படைப்பாளர்களால் எழுதப்படுகின்றன..???

(நிலம் பூத்து மலர்ந்த நாள்-மலையாள மூலம்:மனோஜ் குரூர், தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி வெளியீடு)

சூரியனை தகித்தவன்-பிரமிள்

 

 

அழுது அழுது அவனது கண்கள் வீங்கி இருந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கு என்னவோ போலிருந்தது. குமாருக்கு இது புதிது இல்லை. நிறைய முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து விடுவான். அப்போது செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனம் தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தது.

குமார் எல்லாவற்றிலும் தீவிரமானவன்தான். எதையும் நிதானமாக அவன் செய்ததாக எனக்கு நினைவில்லை. அது டேப்ரிக்கார்டர்களின் காலம். பாட்டு கேசட்டுகள் சேகரித்து வைத்திருப்பது என்பது அந்தக்காலத்தின் இளைஞர்களின்
பழக்கங்களில் ஒன்று. குமார் அதிலும் தீவிரமானவன்தான். கேசட்டுகளாக வாங்கி தள்ளினான். பக்கத்து வீட்டுப் பெண்ணான சித்ராவை உயிருக்குயிராக விரும்பினான். அவளும் பாட்டு பைத்தியம். இவன் ஒரு பாட்டு போட,.. பதிலுக்கு அவள் ஒரு பாட்டு போட.. அந்தக் காலகட்டத்தில் எங்கள் தெருவே எப்போதும் பாட்டுக் கச்சேரி நடக்கின்ற திருவிழா கோலமாக தான் காட்சியளிக்கும். பாடல்கள்தான் அவனை அவளை காதலிக்க வைத்தது. “பிரியசகி வருவேன் வாசல் தேடி” என ஒரு பாடலை அவன் ஒலிக்க வைத்தால்.. பதிலுக்கு “ராசாவே உன்னை விடமாட்டேன்” என்கின்ற பாடலை அவள் ஒலிக்க வைப்பாள். அங்கே “ஓ.. உன்னாலே பெண்ணானேன்” என்ற பாடல் ஒலித்தால்.. இங்கே “ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது” என்ற பாடல் ஒலிக்கும். இப்படியான தீவிரமான அவர்களது காதல் ஒரு பேருந்து நிலையத்தில் முடிவுக்கு வந்தது. எட்டு வருட காதல். ஏதேதோ காரணங்கள் இருவரும் தயாரித்துக் கொண்டு பிரிவதற்கு தயாராகிவிட்டார்கள். கடைசியான சந்திப்பு பேருந்து நிலையத்தில். நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு பிரிந்தபோது இருவரும் அழவில்லை. கடைசியாக பேருந்து ஏறும் போது ஏனோ அவள் அழுதுகொண்டே ஏற, அதை அமைதியாக பார்த்துக்கொண்டு நின்ற இவன் பேருந்து சென்ற பிறகு, அங்கே இருந்த மர பெஞ்சில் அமர்ந்து அழத்தொடங்கினான். அது ஒரு உக்கிரமான அழுகை. நான் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். அவன் தேறவில்லை. அதன் பிறகு அவன் நிறைய குடிப்பதாகவும், பல ஊர் அலைவதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். பல நாட்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவனை நான் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் வேறு மாதிரி மாறி இருந்தான். ஒரு பழுப்பு நிற ஜிப்பா ஜீன்ஸ், கண்ணில் ஒரு கண்ணாடி, ஷேவ் செய்யாத முகம் என ஒரு இலக்கியவாதிக்கு என்னென்ன முக தகுதிகள் உண்டோ அனைத்தையும் அவன் ஏற்படுத்திக் கொண்டு தயாராக இருந்தான். என்னைப் பார்த்தவுடன் இறுக்கி என்னை அணைத்துக்கொண்டான்.

நிறைய ஊர்களுக்கு செல்வதாகவும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் இலக்கியம் தன்னை ஆற்றுப் படுத்துவதாகவும் கூறினான். நாளை மறுநாள் தான் கோவை செல்வதாகவும் பாமரனை பார்க்கப் போவதாகவும் நீ வருகிறாயா எனவும் கேட்டான். நீண்ட கால நண்பன்.நிறைய இழப்புகளுக்கு பிறகு சரியாகி வந்திருக்கிறான் என நினைத்து அவனது அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். ரயில் வண்டியில் ஏறிய உடனேயே குடிக்க தொடங்கி விட்டான். கையில் கோணங்கியின் அண்ணிமார் கதை சிறுகதை தொகுப்பு வைத்திருந்தான். சுந்தர ராமசாமியை திட்டினான். தி ஜானகிராமனின் மோகமுள் அவரது சொந்தக் கதை என்றான். சாருநிவேதிதாவின் சீரோ டிகிரி படித்து இருக்கிறாயா எனக்கேட்டான். கரிச்சான் குஞ்சு போல இனி யாராலும் எழுத முடியாதென்றான்.அப்போதெல்லாம் எனக்கு பெரிய இலக்கியப் பரிச்சயம் எல்லாம் எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன், வைரமுத்து, பாலகுமாரன் என எனக்கென ஒரு சிறிய வட்டத்தை நான் வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தேன்.

அப்போதுதான் அவன் சொன்ன பெயர் பிரமிள். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு தான் தானும் அவரைப்போல தீவிர மொழியில் எழுத தொடங்கி இருப்பதாகக் கூறினான்.அதற்கு முன்னால் எனக்கு பிரமிளைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்த வைரமுத்துவை பற்றி நான் பேசத் தொடங்க, என்னை அவன் மிகவும் அலட்சியமாக பார்த்துவிட்டு.. பிரமிள் ஒரு கடல்.. அதற்கு முன்னால் வைரமுத்து எல்லாம் ஒரு ஆளே அல்ல என்பதுபோல பேசத் தொடங்க, தீவிர வைரமுத்து பக்தனான எனக்கு கோபம் ஏற்பட்டு விட்டது.
இரவு நேரம். எங்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென குமார் உக்கிரமாகி தன் உரத்த குரலில்

“பார்த்த இடமெங்கும்
கண் குளிரும்
பொன்மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும் இடத்தில் மட்டும்
நிழல் தேடி என்னோடு
அலைந்து எரிகிறது
ஒரு பிடி நிலம்.”
என்ற பிரமிளின் கவிதையை அப்படியே ஒப்பித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஏதோ சண்டை என விழித்து பார்க்க… அவனோ அந்த கவிதையில் இருந்து வெளிவர முடியாமல் அந்தக் கவிதையை சொல்லிவிட்டு என்னை உற்று நோக்கிக் கொண்டே இருந்தான்.
சட்டெனக் கேட்டபோது எனக்கு அந்த கவிதை எதுவுமே புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அவன் கவிதைக்கு என்னிடம் பதில் இல்லை. அவனே என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு பிரமிள் படிடா.. பிறகு பேசுவோம் என்றவாறு அவன் அமைதியாகி தூங்கத் தொடங்கினான். எனக்கு தூக்கம் வரவில்லை. பிரமிள் என்ற பெயர் என்னை ஏதோ செய்தது. என் அறியாமை குறித்த வெட்கமும், பிரமிள் என்ற பெயரின் மீதான ஈர்ப்பும் என்னுள் அடர்த்தியாக உள்ளுக்குள் ஒரு திரவம் போல பரவத் தொடங்கியது.

கோவைக்கு சென்று பாமரனை பார்த்துவிட்டு நானும் அவனும் திரும்பும்போது விஜயா பதிப்பகத்தின் புத்தகக்கடையில் எனக்கு முதன் முதலாக பிரமிள் கவிதைகள் என்கின்ற ‌ புத்தகத்தினை வாங்கி குமார் எனக்கு பரிசளித்தான். திரும்பி ஊருக்கு வரும்போது பிரமிள் பற்றியே பேசிக்கொண்டு வந்தான். அவரது கோபம், ஆவேசம், சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள், சுந்தரராமசாமியின் உடனான அவரது சண்டை என நிறைய கதைகள் அவரைப் பற்றி என்னிடம் அவன் பேசிக்கொண்டே இருந்தான். நான் அவனிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது.

சித்ராவை எப்படி மறந்தாய் என நான் கேட்டேன்.
தலைகவிழ்ந்து கண்கலங்கிய அமைதியாக உட்கார்ந்திருந்தான். பிறகு மென்மையாக அவனே சொன்னான்..

“மறந்துதான் ஆகவேண்டும். அதற்கு ஒரே வழி. படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும். பிரமிள் போன்ற தீவிர 100 சதவீத உக்கிர எழுத்தாளரின் மொழியை படிக்க வேண்டும்”. இவ்வளவும் செய்தால் மறந்து விடலாமா …?என நான் கேட்டேன். அதற்கு அவன் அமைதியாக “மறக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் உயிர் வாழ்ந்து விடலாம்” என்றான். எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு புத்தகம் அல்லது சில வரிகள் உயிர் வாழ்வதற்கான காரணமாக இருக்கக் கூடுமா என்றெல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கியபோது பிரமிள் இன்னும் எனக்கு அருகில் வர தொடங்கியிருந்தார்.

அந்தப் பயணத்திற்கு பின்னால் குமார் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டதாக சொன்னார்கள்.

கும்பகோணத்தில் மறைந்த கலைவிமர்சகர் தேனுகா அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தபோது கேட்ட கேள்வி பிரமிளை உங்களுக்கு தெரியுமா..? என்பதுதான். அதற்கு அவர் என்னை மிகவும் விசித்திரமாக பார்த்தார். எங்களது ஆசான் பொதியவெற்பனிடமும் பிரமிள் கவிதைகளைப் பற்றி நான் ஒருமுறை கேட்க.. எனக்கு மிக நீண்ட வகுப்பெடுத்தார்.மதிப்பிற்குரிய எஸ் ராமகிருஷ்ணனின் நட்பு கிடைத்த பிறகு பிரமிள் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள முடிந்தது.பாரதிக்கு பிந்தைய காலகட்டத்தில் தமிழ் மொழியில் தோன்றிய மாபெரும் கவிஞர் பிரமிள். இயற்பெயர் தருமு சிவராம்.
ஈழத்தமிழர் . திருகோணமலையில் பிறந்தவர். 1960களில் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு கலை இலக்கிய உலகத்தின் தலைநகரமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர் தமிழகத்திலேயே வாழ்ந்து மறைந்தார். சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” என்கிற சிற்றிதழ் மூலமாக இலக்கிய உலகிற்கு அவர் அறிமுகமானார். நவீன ஓவியக்கலை, சிற்பக்கலை, சோதிடம் ஆகியவற்றில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது.வாழும் காலத்தில் பெரும் கலகக்காரராக, சமரசம் அற்றவராக பிரமிள் வாழ்ந்து இருக்கிறார். தனக்கும், பிரமிளுக்குமான
உறவையும் விரிசலையும் முரண்களையும் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை என்கின்ற நூலில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது.பிரமிள் வாழும் காலத்தில் எந்த மனிதரோடும் சுமுக உறவோடு இருந்ததில்லை. பெரும்பாலும் நேருக்கு நேராக மோதி விடுவதை தனது சுபாவமாக பிரமிள் கொண்டிருந்தார். கோபம் வன்மம் என்பதையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு வேறு வடிவத்தில் வெளிப்படுத்தத் தெரியாத உக்கிரமான மனநிலையில் தன் வாழ்நாள் முழுக்க பிரமிள் இருந்தார். தன் கோபத்தை எல்லாம் உடனே எழுத்தில் வடித்து எதிரியின் முகத்தில் அடித்து எறிகிற அச்சமூட்டும் நபராக அந்தக்கால இலக்கிய உலகில் பிரமிள் திகழ்ந்தார்.

“எல்லை” என்ற அவரது கவிதை அவரது மனநிலையை மிகச்சரியாக காட்டும் எடுத்துக்காட்டாக நான் கருதுகிறேன்.

“கருகித்தான் விறகு
நீராகும்.
அதிராத தந்தி
இசைக்குமா..?
ஆனாலும் அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.
கொசு
நெருப்பில் மொய்க்காது”.

அவரைப் பொறுத்தவரையில் அவர் தான் நெருப்பு. மற்றவர்கள் எல்லாம் வெறும் கொசுக்கள் தான்.
ஒளிக்கு நடுவிலே இருக்கக்கூடிய இருள் நான் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் தனித்துவமாக நிற்கவே வாழ்நாளெல்லாம் போராடிக் கொண்டிருந்தார்.

நவீன கவிதை உலகில் பிரமிளுக்கான இடம் ஒரு பேரரசனுக்கு உரியது. அவரது மொழி தமிழ்‌ அதுவரை அறியாதது.

“நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து
கவியானான்.”

என எழுதிய அவரது எழுத்து படைப்பாற்றல் உச்சங்களை தொட்ட வகைமையை கொண்டது.பிரமிள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு மற்றும் படைப்புகளின் தொகுப்பு ஆகியவற்றினை அவரது நெருங்கிய நண்பர் கால சுப்பிரமணியம் தொகுத்து அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கவிதைகள் விடுதலைப்புலிகளின் இதழ்களில் வெளிவந்து இருக்கிறது.பிரமிள் தேர்ந்தெடுத்த கவிதைகள் என்கின்ற அவரது முக்கிய கவிதைகளின் தொகுப்பினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலின் இறுதியில் “பிரமிள் ஒரு உரையாடல்” என்கின்ற தலைப்பில் படைப்பாளிகள் சுகுமாரனும், யுவனும் பிரமிள் கவிதைகள் படைப்புகளைப் பற்றி ஒரு முக்கியமான உரையாடலை நிகழ்த்தி பதிவு செய்திருக்கிறார்கள்.பிரமிள் உலக இலக்கிய படைப்புகளை மிக ஆர்வமாக வாசித்து வந்தவர். கலில் ஜிப்ரான், எஸ்ரா பவுண்ட், ஜோசப் ப்ராட்ஸ்கி, பாப்லோ நெருடா, என பல உலக கவிஞர்களின் கவிதைகளில் தனக்குப் பிடித்த கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதன் தொகுப்பு சூரியன் தகித்த நிறம் என்ற பெயரில் நற்றிணை வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவார்த்த தேடல்களின் மீது ஆர்வம் கொண்ட பிரமிள் அவர் எழுதிய பாதை என்கின்ற சிறு கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார்.

அவர் மொழி பெயர்த்த அனைத்துப் படைப்புகளும் அவரது தீவிர மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.
எஸ்ரா பவுண்ட் எழுதிய ஒரு கவிதையை
“அதிரடி” என்ற பெயரில் இவ்வாறாக பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார்.

“உன் மீது உள்ள தங்கள் வெறுப்பை
வெளியிட பயந்தவர்கள் பலர்.
என்னைப் பொறுத்தவரை
உனது வெறுப்புப் புழுக்கள்
பாதங்களை சுற்றிச்சுற்றி
கிச்சுக் கிச்சு மூட்டட்டும்.
எனது பூட்ஸின் ருசியாக வேண்டும்?
இதோ என் பூட்ஸின் ருசி!
தடவு,! நக்கு”

பிரமிளின் தமிழ் நெருப்பை உட்செரித்து சூரியனை பிரசவிக்கும் ஆற்றல் கொண்டதாக நவீன கவிதை உலகில் மதிக்கப்படுகிறது.

எழுத்து என்பது வெறுமனே எழுதுவது என்று நினைப்பவர்கள் முகத்தில் தனது படைப்புகள் மூலம் பிரமிள் காறி உமிழ்கிறார். தோன்றியதை எல்லாம் எழுத எழுத்து ஒன்றும் எடுக்கும் வாந்தி அல்ல என சாடுகிறார்.

எனக்கெல்லாம் எழுதும்போது என் முதுகுக்குப் பின்னால் கையில் ஒரு பிரம்பு வைத்துக்கொண்டு பிரமிள் நிற்பது போன்ற ஒரு தோற்றப் பிறழ்வு எப்போதும் நேர்வதுண்டு.எந்தப் பட்டங்களையும் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளாத பெரும் கவிஞர் பிரமிள் தமிழ் சமூகத்திற்கு உரிய பெரும் சாபக்கேடான படைப்பாளிகளை வாழும் காலத்தில் மதிக்காமல் கடந்து அவமதித்த குணத்தினால் தனிமையில் உழன்று 1997-ஆம் ஆண்டு உதரவிதான புற்றுநோயால் மரணமடைந்தார்.

மொழி எதையும் செரிக்கும் வல்லமை கொண்டது. என் கண் முன்னால் காதலின் பெருங்காயத்தால் உதிரம் வழிய வழிய அலைந்த என் நண்பன் குமார் தனது ஆற்றாமையை செரிக்க பிரமிளின் மொழியை உக்கிரமாக பருகி தனக்கான சிறகை தானே தயாரித்துக் கொண்டு எங்கோ பறந்து போனான். அவன் கொடுத்த பிரமிள் கவிதைகள் தொகுப்பினை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதிலிருந்து என்னை நோக்கி வீசுகிற வெவ்வேறு விதமான அர்த்த அலைகளில்
என்னை நானே முழ்கடித்துக்கொண்டு காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது தொலைப்பதை மீட்டெடுப்பது மட்டுமல்ல. தொலைந்து போவதும் தானே…

மனமென்னும் மாய விசித்திரம்

 

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து மனித மனங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஏனெனில் வாழ்வதற்கான வேட்கையை உற்பத்தி செய்கிற மாபெரும் மூலதனமாக மனிதனின் மனமே திகழ்கிறது.மனிதமனம் கொண்டிருக்கும் அன்பு, வெறுப்பு, புரிதல், காதல், காமம் என பல்வேறு வகை உணர்ச்சிகள்தான் உலக வரலாற்றை உருவாக்குகிற சக்திகளாக தேடுகின்றன. ஒருவர் கொண்டிருக்கிற உளவியல் அமைப்பே அவர் எவ்வாறு உலகத்தை அணுகுகிறார் என்பதற்கான வழியாகவும், அவருக்கான உலகத்தை அவர் எவ்வாறு உருவாக்குகிறார் என்பதற்கான காரணமாகவும் விளங்குகின்றன.சமூக வாழ்க்கைக்கு ஆட்பட்டு இருக்கிற மனிதனின் உளவியல் ஏதோ ஒரு காரணத்தினால் உந்தப்படும் போது அல்லது இடறப்படும் போது அந்த நொடியில் துளிர்க்கிற உணர்ச்சி குவியல் அவனது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. Powers of subconscious mind – ஆழ்மனதின் அற்புத சக்திகள் (தமிழில் நாகலட்சுமி சண்முகம் மஞ்சுள் வெளியீடு) என்கிற ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை நான் படித்திருக்கிறேன். ஏறக்குறைய பைரன் எழுதிய தி சீக்ரெட் என்கிற நூலுக்கு இணையான புகழ்பெற்ற நூல் தான் அது. அதில் சொல்லப்படுபவர்களை பார்த்தால் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். சிலவற்றை பரிசோதித்து கூட பார்த்திருக்கிறேன். மனம்போல வலிமை வாய்ந்தது எதுவுமில்லை என்பதையும் அதில் ஏற்படுகிற ஒவ்வொரு பாதிப்பும் தான் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கிற வழிகள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

உலகத்தையே வெல்லத்துடித்த அலெக்ஸாண்டரின் போர் வெறிக்கு என்ன காரணம் என அவரது ஆசிரியரும் அவரது தத்துவ ஆசிரியர் சாக்ரடீஸின் மாணவருமாகிய அரிஸ்டாட்டிலிடம் கேட்ட போது அவர் மிக எளிமையாக சொன்னார். சிறுவயதில் அவனது பெற்றோர்களிடமிருந்து அவனுக்கு கிடைத்த புறக்கணிப்பு. அதுவே அவனுக்கு ஆழமான காயமாக மாறிப்போய் இன்று உலகத்தை வெல்ல துடிக்கிற உந்துதலாக திகழ்கிறது என்றார் அவர்.எல்லா மனிதனுக்கும் ஆழமான காயங்கள் இருக்கிறது. சிலருக்கு வெளியே தெரிகிறது. பலருக்கு வெளியே தெரிவதில்லை. அவமானங்களும் புறக்கணிப்பும் இல்லாத மனித வாழ்க்கை ஏதுமில்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் துணையெழுத்தில் ஒரு வரியை நான் அடிக்கடி நினைவுகூர்ந்து கொள்வேன். நாம் ஒவ்வொரு முறை அவமானப்படும் போதும் நம் உடலில் ஏதேனும் ஒரு தழும்பு ஏற்படும் என்ன வைத்துக்கொண்டால்.. நம் உடல் முழுக்க அம்மைத் தழும்புகள் போல நிறைய காயங்கள் நிறைந்திருக்கும் தானே என்கின்ற அந்த வரி என்னுள் எப்போதும் ஒரு முள் போல உறுத்திக்கொண்டே இருக்கும். இந்திய பெருநிலத்தின் மிகப்பெரிய கதையாடல் களஞ்சியமான மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது. திரௌபதி சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிற துரியோதனன் அந்த மாளிகையின் எழிலை பார்த்து வியந்தவாறு சற்று தடுமாறி கீழே விழுந்து விடுகிறான். அதை மாளிகையின் உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திரௌபதி உன் தந்தையை போல உனக்கும் கண் தெரியவில்லையா என சொல்லி சிரித்து விடுகிறாள். அந்த சொல் அவனுக்குள் ஆறாக் காயமாக உறுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போதும் உறுத்துகிற அந்தக் காயத்திலிருந்து அவமானத்தின் குருதி வழிந்து கொண்டே இருக்கிறது. அதுதான் மகாபாரதம் என்கின்ற இதிகாசம் உருவாவதற்கான மூலப் புள்ளியாக திகழ்ந்தது.

திரவுபதியின் சிரிப்பு துரியோதனனின் ஈகோவை தீண்டியதன் விளைவு ஒரு இதிகாசமே பிறந்தது. எனக்கு மிகவும் வேண்டிய நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது மனைவியை எப்போதும் அவர்கள் இவர்கள் என மிகுந்த மரியாதையோடு அழைப்பார். எனக்கு மிகுந்த ஆச்சரியம். மனைவியை வாடி போடி என்றும் வா போ என்றும் ஒருமையில் அழைப்பவர்களைதான் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இவர் இவ்வளவு மரியாதையாக அழைக்கிறாரே என்று வியந்தவாறே அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன்.அவர் மிகவும் தன்மையான ஒரு குரலில் ஒரு முறை எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டபோது என் மனைவி மரியாதை குறைவாக என்னை ஒருமையில் அழைத்து ஏச… அதற்கு எதிர்வினையாக அதன் பிறகு அவரை நான் மிகுந்த மரியாதையுடன் அழைக்க தொடங்கினேன் என்றார்.என்னை ஒருமையில் அழைக்கும் தகுதி வந்ததாக அவர் நினைத்து விட்டபிறகு நாம் அதை மதிக்க வேண்டியது தானே என்று கேட்ட அவரை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஒரு சிறிய அவமதிப்பு வாழ்க்கை முழுக்க தொடர்கிற ஒரு கரும் நிழலாக மாறிப்போனது உண்மையில் அபூர்வம் தான்.

பெரியாருக்கும் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும், என பல அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண் சம்பவங்கள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதி இருக்கின்றன என்பதை நாம் கண்டிருக்கிறோம்.வாழ்வில் ஏற்படும் ஒரு சிறு சம்பவம் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடுகிற தீவிரம் கொண்டதாக சிலநேரங்களில் அமைந்து விடுகிறது.
தென்னாபிரிக்காவில் காந்தி அந்த தொடர்வண்டிப் பயணத்தில் ஒருவேளை கௌரவமாக நடத்தப்பட்டு இருந்தால் அவர் இந்தியாவின் தேசப்பிதா வாக ஆகி இருப்பாரா என்பது கேள்விக்குறி.அதுபோன்ற ஒரு சிந்தனையை சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படமும் எனக்குள் ஏற்படுத்தியது.
எப்போதும் இயல்பான மனித வாழ்க்கையை மிக நெருக்கமான வடிவத்தில் எளிமையான மொழியில் வலிமையாக சொல்லிவிடுகிற ஒரு ஊடகமாக மலையாளிகள் திரைப்படங்களை கையாளுகிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஐயப்பனும் கோஷியும் என்கிற மலையாள திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து எனது மைத்துனர் பாக்கியராசன் அவர்கள் நீண்ட நேரம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

கொரனா கொடுத்த ஆகப்பெரும் தனிமை பொழுது ஒன்றில் அமேசான் மூலம் இத்திரைப்படத்தைப் பார்க்க தொடங்கினேன்.படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை நம்மை நகரவே செய்யக்கூடாது என்கிற திட்டமிட்ட திரைக்கதை வரைவு நம்மை மிரட்டி போடுகிறது. சச்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் பிஜீமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை மிக மிக எளிமையானது. ஒரு முன்னாள் ராணுவ வீரனின் பயணத்தில்
எதிர்பாராத விதமாக மோத வேண்டிய நிலைக்கு உள்ளாகுகிற உள்ளூர் Sub-inspector க்கும், அந்த மோதலை மாபெரும் அவமான குறைவாக எடுத்துக் கொண்டு மோதுகிற அந்த முன்னாள் ராணுவ வீரனுக்கும் இடையிலான மோதல்களே இத்திரைப்படம். ஒரு அடர்ந்த வனத்திற்குள் ஒரு மகிழுந்து நுழைகிற அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒரு நொடியும் கூட தவற விடக்கூடாத காட்சி அமைப்பு தான் இந்தத் திரைப்படத்தின் ஆகப் பெரும் பலம்.

குறிப்பாக அந்த ஓட்டுனர் கதாபாத்திரத்தில் வரும் அந்த பெரியவரும், காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் அந்த இளம் பெண்ணும், மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடர்புடையதாக பேசப்படும் பிஜுமேனன் மனைவியாக நடிக்கிற அந்த கதாபாத்திரமும் மறக்க முடியாதவை.
இடுப்பில் குழந்தையோடு அந்த பிஜுமேனன் மனைவியாக மாவோயிஸ்ட் தொடர்புடையதாக காட்டப்படும் அந்த ஆதிவாசி பெண்ணாக நடிக்கின்ற அந்த பெண் கைது செய்யப்படும்போது நடக்கின்ற அந்த கம்பீர நடை இந்த சமூகம் கட்டமைத்து இருக்கிற எல்லா வித அதிகார உச்சங்களுக்கும் சவால் விடக்கூடிய பேரழகு கொண்டது. அதிகாரம் என்பது எப்படி நுட்பமான வேர்களைக் கொண்டு எளிய மனிதர்களை வதைக்கிறது என்பதையும் , ஒரு எளிய மனிதனின் ஆவேசம் எப்பேர்பட்ட அதிகார உச்சத்தையும் அசைத்து போடுகிற வலிமை கொண்டது என்பதையும் ஒரே திரைப்படத்தில் கூர்மையான இரு முனைகளாக கொண்டு திரைமொழி பின்னப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மகத்தானதாக மாற்றுகிறது. பிரித்விராஜ் சுகுமாரன் மிகத் திறமையான ஒரு நடிகர். தமிழில் பல திரைப்படங்களில் அவரை மிகக்கேவலமாக பயன்படுத்தி இருப்பார்கள். தமிழில் மிக சுமாரான கதாபாத்திரங்களில் நடிக்க துணிந்தது அவர் வாழ்வில் அவருக்கு அவரே செய்துகொண்ட கேடு என்றே கருதுகிறேன். அவர் பார்வதியோடு நடித்த “எண்ணு நின்டே மொய்தீன்” எனக்கு மிகவும் பிடித்த ஒரு மாபெரும் காதல் காவியம். அதேபோல அவர் நடித்த”செல்லுலாய்டு” மிக முக்கியமான ஒரு திரைப்படம். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அவர் இயக்கிய “லூசிஃபர்’ படத்தை பார்த்தபோது கூட எனக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனால் “ஐயப்பனும் கோஷியும்” திரைப்படத்தில் ஹவில்தார் என்கின்ற ஒரு முன்னாள் ராணுவ வீரனாக , ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தின் வாரிசாக மிகச்சிறப்பான நடிப்பினை அவர் வழங்கியிருக்கிறார். பிரித்திவிராஜின் கண்கள் மிகுந்த ஆழம் கொண்டவை. ஒவ்வொரு முறையும் குளோசப் காட்சிகளில் அந்தக் கண்கள் காட்டும் வித்தைகள் நம்மை மிரட்டுகின்றன. அவருக்கு நேரெதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிஜு மேனனும் சளைத்தவரல்ல. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு மகத்தான திரை அனுபவத்தை நமக்கு வழங்குகிறார்கள். குறிப்பாக பிஜீ மேனனின் அந்த இறுகிய முகம் அவர் வைக்கிற கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

இதேபோல்தான் பிரித்திவிராஜ் கோபப்படும் இடங்களில் கோபப்பட்டு, அவமானப்படும் இடங்களில் அதை சகிக்க முடியாமல் குறுகி… வாழ்க்கையை நினைத்து வருந்தும் இடங்களில் வருந்தி, என நுட்பமான உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தி நம்மை அசத்திப் போடுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவும், இசையும் நமக்கு காட்சி அனுபவத்தை பரவசமாக்குகின்ற ஆகப் பெரும் துணைகளாக விளங்குகின்றனவிளங்குகின்றன. குறிப்பாக படத்தின் இடையிடையே வருகிற அந்த ஆதிவாசி பாடல் நம் உள் மனதை ஏதோ செய்கிறது.நல்ல திரைப்படத்தின் கதையை ஒரு விமர்சனத்தின் மூலமாக சொல்லிவிட்டுப் போவது அந்த படைப்பாளிகளுக்கு செய்கிற நேர்மை குறைவாக நான் கருதுகிறேன். தேடிப்பிடித்து பார்க்க வேண்டிய படங்கள் என்கிற பட்டியலில் “ஐயப்பனும் கோஷியும்” என்கிற இந்தப் படத்திற்கும் அவசியம் ஒரு இடம் உண்டு. தனிமைப்பட்டு கிடக்கிற இந்த காலகட்டத்தில் இதுபோன்ற அனுபவங்கள் தான் நம்மை உயிர்ப்பாக வைத்திருக்கின்றன.

அவசியம் பாருங்கள்.

இரவின் சிறகுகள்

நிரந்தர
பிரிவொன்றின்
அடையாளமாக
நாங்கள்
புனைவேறிய
திட்டமிட்ட
புன்னகையோடு
கைக்குலுக்கி
கொண்டோம்..

இருவருமே
இயல்பாக இருப்பதாக
அவரவருக்கு
உணர்த்திக் கொள்வதில்
பெரிதாக ஒன்றும் சிரமமில்லை.

எல்லா கணக்குகளும்
தீர்த்தாகிவிட்டது.
இறுதியாய் இருந்த
புன்சிரிப்பைக் கூட
உதிர்த்தாகிவிட்டது.

திரும்பி
பார்க்கவே இயலாத
ஒரு பாதையில்
திசைகள் அமைக்க
எங்கள் திசைக்காட்டிகளை
கூட திருப்பி வைத்தாகி
விட்டது.

அவள் வெகு தூரம்
போன பிறகு தான்
நான் மெதுவாக உணர்ந்தேன்.

ஒரு குழந்தையின் அழுகைப்
போல எங்களின் சில இரவுகள்
என் விரல் பிடித்து
தலைதூக்கிப் பார்த்தன.

அந்த இரவுகளை
அப்படியே
அதே இடத்தில்
அதே நொடியில்
கைவிட்டு விட்டு
திரும்பிப் போகத்தான்
எத்தனித்தேன்.

ஆனாலும் நிலா
சொட்டிய அந்த இரவுகள்
கால தேச வர்த்தமானங்களை
தாண்டிய ஒரு அழகிய
பாடலாய் காற்றில் தனித்து
அலைகிற அபாயம்
கருதி அதுவரை
நான் சந்தித்திராத
இனியும் சந்திக்க முடியாத
அந்த இரவுகளை எங்கோ
சென்று இருட்குகையின்
ஆழ்க்குழியில்
புதைப்பதென
நிலவோடு கனத்திருந்த
அந்த இரவுகளை
வாரி சுருட்டி எடுத்துக் கொண்டேன்.

அந்த இரவுகளை
புதைப்பதற்கு முன்
பெருமூச்செறிந்து
இறுதியாக
ஒருமுறை பார்த்தேன்.

செந்நிற வானத்தின்
அந்திக்கால
செம்மைப்போல
நீங்காத வசீகரத்தை
அந்த இரவுகள்
தன் உடலெங்கும்
பூசிக்கொண்டு
இருந்தன.

அந்த இரவுகளை
சமன் செய்ய
நான் ஒருபோதும்
முயன்றதில்லை.

ஆனாலும்
அந்த நட்சத்திர
இரவுகள்
சதா ஒவ்வொரு
கணத்திலும்
உணர்ச்சிகளின்
கற்கள் வீசப்படுகிற
நினைவுகளின்
குளத்தில்
அல்லிகளாகத்தான்
பூத்துக் கொண்டிருந்தன.

எப்போதும்
என்னை நோக்கி
வீசப்படுகிற
முடிச்சுகள்
நிரம்பிய
மாயக்கயிற்றொன்றின்
கரங்களாக அந்த
இரவுகள் இருந்தன.

யாரும் பார்த்தறியாத
நொடி ஒன்றில்
கால நதியின்
கரையோரத்தில்
தீர்ந்தோர் கடனென
அந்த இரவுகளை
அப்படியே அள்ளி
கரைத்து விட்டு
திரும்பி பார்க்காமல்
நடந்தேன்.

மறுநாள்
நான் எதிர்பார்க்காத
ஒரு நொடியில்
என் ஜன்னலுக்கு
வெளியே பூத்திருந்த
மல்லிகைச் செடியின்
மீது அந்த இரவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
பறந்து கொண்டிருந்தன.

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén