சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் கதறுவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. சிறிய சிறிய நோய்களுக்குக் கூட ஆயிரக் கணக்கில் செலவு செய்தே தீர வேண்டும் என்கிற ஆங்கில மருத்துவம் தன் முறையைத் தவிர இதர மருத்துவ முறைகளை கடுமையாக நிராகரிப்பதன் நோக்கம், அதன் வணிகமயமும், லாப நோக்கமும் தானே தவிர வேறில்லை.

மனித உடல் குறித்தும், மருத்துவம் குறித்தும் சங்க காலம் தொட்டே தீவிர விழிப்புணர்வில் தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் பரவலாக காணக்கிடைக்கின்றன.

அற்றால் அளவறிந் துண்அ அகுதுடம்பூ

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

என்கிறது மருந்து என தனி அதிகாரம் கண்ட தமிழர் மறையான திருக்குறள். அளவறிந்து உண்பது குறித்து அன்றே சிந்தித்திருக்கிற தமிழர் மரபு முழுக்க முழுக்க அறிவியல் தன்மைகளை தனது பண்பாட்டு விழுமியங்கள் மூலம் கண்டடைந்து சிறந்திருக்கிறது.

மேலும்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து

என்கிறது குறள். அதாவது நோயுற்றவன், அந்த நோயை தன் ஆலோசனை மூலம் தீர்க்கும் மருத்துவர், மருந்து, அருகிலிருப்பவரின் அன்பும், பராமரிப்பும் இந்த நான்கும் ஒரு நோய்க்கு மருந்து என சொல்கிறது குறள். இதில் கவனமாக பார்க்க வேண்டியது நோயுற்றவனே மருந்துகளில் ஒரு வகை. என்கிறது திருக்குறள். ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாக இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு உணர்வு, மருந்துகளை மிகச்சரியாக காலம் தவறாமல் எடுக்கக்க்கூடிய ஒழுங்கு என நோயுற்றவன் கூட மருந்தாக விளங்குகிறான் என்கிறது தமிழர் மறை.

இவ்வளவு நுட்பமாக மனித உடலை, நோயை, நோய் எதிர்ப்பு உணர்ச்சியை ஆராய்ந்திருக்கிற தமிழரின் மருத்துவ மரபை ஒரே அளவு கோலில் வைத்து பிற்போக்குத்தனமானது என பொங்கும் உளறல்களை எதிர்த்து நாம் தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு நோயாளியை கையாளுவதில் மருத்துவரின் கடமை என்ன என்பதை எளிமையாக இரண்டே வரிகளில் விளக்குகிறது தமிழர் மரபு.

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச்செயல்

நோயை இன்னதென்று ஆராய்ந்தறிந்து, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து , அந்த நோயை தணிக்கின்ற வழியையும் கண்டறிந்து, அதை உடலுக்கு பொருந்தும் படியாக மருத்துவர் மருத்துவம் அளிக்க வேண்டும் என்கிறது குறள்/

மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

      புண்தேர் விளக்கின் தோன்றும்” (அகநானூறு-111)

என்ற சங்கப்பாடல் போர்களத்தில் காயம் பட்ட வீரனின் காயத்தின் அளவறிந்து மருத்துவம் பார்க்கிற மருத்துவ காட்சியினை விளக்குகிறது.

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்

      உள்நீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்

      தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றாள்

(கலித் தொகை)

போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உதிரப்போக்கு அதிகம் நிகழும் போது நா வறட்சி ஏற்படும் என்றும் நீர் தாகத்தால் தடுமாற்றம் ஏற்பட்டு துயரம் நேரிடும் என்றும் இக் கலித்தொகைப் பாடலில் மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றன.

சித்தர் மரபு வழித் தொடங்கி, இயற்கை மருத்துவ செறிவுடன் இணைந்து தமிழர் மருத்துவம் பல சிறப்புகளைக் கொண்டது.

ஆனால் காலப் போக்கில் காணக்கிடைக்காத  அறிவுச்சுவடிகளை எல்லாம் யாகத்தில் போட வேண்டும் என ஆரியச் சதிக்கு ஆட்பட்டு தீக்கு தின்ன கொடுத்ததும் தமிழர்களே..

இன்றைய ஆங்கில மருத்துவமுறை உலக மயமாக்கலின், வணிகமயமாக்கலின் ஒரு அங்கமாக மாறிப் போய்விட்டது . இந்தியாவில் செயல்படுகிற மருத்துவர்களில் 50 % தகுதியற்ற, அடிப்படை தகுதியற்ற ,பயிற்சியற்ற மருத்துவர்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒரு எம்.பி.பி.எஸ் படிப்பு என்பது மருத்துவத்திற்கான பட்டமே ஒழிய அதுவே மருத்துவரின் தகுதியல்ல.ஒரு மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகள் கோடிக்கணக்கில் வாங்கி பொருளீட்டும் இந்த வணிகச் சூழலில் தரமான மருத்துவர்கள் எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இந்திய பெருநாட்டில் இன்றைய மாபெரும் வணிகமே மருத்துவம் தான் என்பதும், நாட்டின் மக்களை பெருங்கடனுக்கு ஆழ்த்துவதில் மருத்துவச் செலவுகளே முதலிடம் பிடிக்கின்றன என்பதும் புள்ளி விபரங்கள் காட்டுகிற அபாய சமிக்கைகள்.

குறிப்பாக உலக மயமாக்குதல் என்கிற பேராபத்து 1990-ல் தான் வேகமெடுக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா போன்ற பன்னாட்டு வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு எளிய மக்களின் உயிரில் விளையாடத் தொடங்கினார்கள்.ஊருக்கு ஊர் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் தோன்றத் தொடங்கின. அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது கேவலம் என்றும், மீறி எடுத்தால் நோய் முற்றி இறந்து விடுவோம் என்பதுமான உளவியல் பரப்புரைகள் வலிந்து பரப்பப்பட்டன. அரசியல்வாதிகள் கூட உடல் நலம் சரியில்லை என்றால் மிகப்பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் எடுத்துக் கொள்ளும் செய்திகள் திட்டமிட்டு பெரிதாக்கப்பட்டன.  மருத்துவ நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விற்க பல்வேறு சலுகைகளை, உல்லாச சுற்றுலாக்களை, பரிசுப்பொருட்களை மருத்துவர்களுக்கு வாரி இறைக்கின்றன. பெரும்பாலான மருத்துவர்களும் இவற்றை எல்லாம் துய்ப்பதற்கு இல்லாத நோய்களுக்கு இரண்டு பக்கம் சீட்டெழுதி எதற்கெடுத்தாலும் ஸ்கேன் என்றும் பரிசோதனை என்றும் நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக கருதத்தொடங்கி விட்டார்கள்.  கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு பண இலக்கு வைத்து ,மீட்டிங் வைத்து கேள்வி கேட்கிற நிகழ்வுகளும் இயல்புகளாகி விட்டன. சந்தைப் பொருளாதாரத்தில் மனித உயிரும், அது குறித்தான அச்சமும் தான் தற்காலத்தில் நடைபெறும் வணிகத்திற்கு கச்சாப் பொருட்களாக விளங்குகின்றன.

இந்த ஆங்கில மருத்துவ கொள்ளைகளுக்கு மாற்றாக பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் , ஆங்கில மருத்துவத்தின் பரப்பும், விளம்பரமும் ,பகட்டும் மற்ற மருத்துவ முறைகளை நாடாமல் மக்களை கண்கள் கட்டிய குதிரையாய் ஓட வைத்திருக்கின்றன.

நமது பாரம்பரிய மருந்துப் பொருளான மஞ்சளுக்கு கூட காப்புரிமை நம்மிடத்தில் கிடையாது. காலங்காலமாக நாம் பயன்படுத்திய நம் பூர்வீக மருத்துவ அறிவினை இன்று ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு பலிக் கொடுத்து விட்டு சிறிய தலைவலி என்றாலும் ஸ்கேன் இயந்திரத்தில் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கிறோம். காசில்லாதவர்கள் தாங்களே கல்லறையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என்கிற  நிலையை ஆங்கில மருத்துவமும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இன்று ஏற்படுத்தி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

மாற்று மருத்துவமுறைகளான ஹோமியோபதி, அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் போன்ற முறைகளில் பல நோய்கள் குணமாவதை பல மருத்துவர்கள் வெற்றிக்கரமாக நிருபித்து இருந்தாலும் அச்செய்திகள் வெளிவராமல் மிகக் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இச்சூழலில் மாற்று மருத்துவத்தை பயின்ற மருத்துவர்கள் கூட நோய்கள் உடனே குணமாக வேண்டும், நோயாளிகள் தங்களை விட்டு போய் விடக்கூடாது என்கிற இலாபநோக்கத்திற்கு பலியாகி ஆங்கில மருத்துவத்தை உபயோகிப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்துத்துவ மத நம்பிக்கையாளர்களும், அடிப்படைவாதிகளும் முன் வைக்கிற மூட நம்பிக்கை மருத்துவ முறைகளை போன்றதல்ல தமிழரின் மரபு மருத்துவம். காலங்காலமாய் தமிழர் தனது வாழ்வியலில் கடைப்பிடித்து அறிந்த அறிவின் செழுமை. வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள், சிசரியன் செய்தார்கள் என்றெல்லாம் கதை கட்டி இன்று பதஞ்சலி,ஹிமாலாயா போன்ற இந்துத்துவ வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப் போடும் இச்சூழலில் எப்போதும் இல்லாத நெருக்கடிகளை தமிழரின் மருத்துவ மரபு எதிர்க்கொண்டுள்ளது.

ஒரு தனிநபர் யூ டியூபில் பார்த்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் அதிக உதிரப் போக்கினால் அப்பெண் இறந்தார் என்கிற தனிநபர் முட்டாள் தனத்தைக் கொண்டே பாரம்பரிய மரபு மருத்துவமுறைகளை தடுக்க கோருவது மிகவும் கொடுமையானது. சுகப்பிரசவத்தைக் கூட சிசரியன் பிரவசங்களாக மாற்றி மனித உயிரை மூலதனமாகக் கொண்டு பணம் பறிக்கும் கொள்ளைக் கூடங்களாக தனியார் மருத்துவமனைகள் மாறி விட்ட பின்னர்… இக்கொள்ளைகளுக்கு எதிராக எந்த சிந்தனை முளைத்தாலும் கொள்ளைக்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்…?

எத்தனையோ தலைமுறைகளாக கிராம மருத்துவச்சிகளால் சுகப்பிரசவம் கண்ட நம் மரபு சார்ந்த பிரசவ முறைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தி, நவீன முறைகளுக்கேற்ப மரபு சார் மருத்துவகல்விமுறைகள் மாற்றப்பட்டு ஆங்கில அலோபதி மருத்துவ முறைகளுக்கு மாற்றாக நவீன தமிழர் மருத்துவம் எழ வேண்டும் என்பதுதான் இம்மண்ணைச்சேர்ந்த நமக்கான விருப்பாக இருக்கிறது.

ஒரு பெண் செத்து விட்டாள். இனி சுகப்பிரசவத்தையே நினைத்துப் பார்க்க கூடாது . தனியார் மருத்துவமனையில் சிசரியன் தான் செய்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிற இந்த முற்போக்கு வெங்காயங்களுக்கு தனியாருக்கு அள்ளிக் கொடுக்க கொள்ளையடித்த கோடிகள் இருக்கலாம். ஆனால் நமக்கு..?

ஆங்கில மருத்துவம் தான் அதி உன்னதமும் இல்லை. மற்ற மாற்று மருத்துவமுறைகளில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. உண்மையில் பல நோய்களுக்கு அலோபதியில் மருந்தே கிடையாது. அனைத்திற்கும் ஒரு வகையான ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிரி மருந்துகளை வைத்துக் கொண்டு எளிய மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஆங்கில மருத்துவ முறைகளுக்கு மாற்றாக மாற்று மருத்துவ முறைகளும் உருவாக வேண்டும்.

பேரா. அ.மார்க்ஸ் எழுதிய மருத்துவ நல சிந்தனைகள் என்ற ஒரு நூல் இருக்கிறது. ஆங்கில மருத்துவ நிறுவனங்களின் கொள்ளை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை ) எத்தகைய கொடும் விளைவுகளை ஏற்படுத்தும், இம் மருந்துகள் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பது குறித்து எழுதப்பட்ட விரிவான நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். அதே போல மருத்துவர் கு.சிவராமன் மற்றும் ம. செந்தமிழன் மரபு மருத்துவ சிந்தனைகள் குறித்த பல்வேறு முக்கியமான கட்டுரைகளை,நூல்களை எழுதி வருகிறார்கள். மருத்துவத்திற்கும், உணவிற்கும் உள்ள நெருங்குய தொடர்பை உணவு யுத்தம் என்கிற நூலில் விரிவாக எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

எந்த ஆங்கில மருத்துவ நிறுவனமாவது தன் மாத்திரை,மருந்துகள் தயாரிக்கிற உற்பத்தி விலையை வெளிப்படையாக அறிவிக்குமா என்கிற கேள்வியில் இருக்கிறது ஆங்கில மருத்துவமுறையின் வணிகக் கொடூரம்.

நவீன காலத்தில் மருத்துவ நல சிந்தனைகள் மேலோங்கி இருக்கின்றன.அலோபதி மருத்துவமுறையின் பணம் பிடுங்கும் கொள்ளை, அம்மருத்துவ முறையின் பின் விளைவுகள் ஆகியவற்றை கண்டு,அனுபவித்த மக்கள் பாரம்பர்ய,இயற்கை மருத்துவ முறைகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளார்கள். மீண்டும் தங்களை மரபு சார் வாழ்வியல் முறைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இவ்வித மாற்றங்களே ஆங்கில மருத்துவத்தை மூலதனமாகக் கொண்டு கொள்ளையடித்து வரும் கொள்ளைக் கூட்டத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆங்கில மருத்துவ முறை மேற்கொள்ளும் மருத்துவர்களிலும் நேர்மையான மருத்துவ சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சளி பிடிக்கிறது என்று போனால் வீட்டில் மிளகு ரசம் வைத்து குடி என சொல்லும் சில அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள். எனது குடும்ப மருத்துவர் ஆண்டிபயாடிக் மருந்துகளை எனக்கு எப்போதும் எழுதி தர மறுப்பார். காய்ச்சலா ..அது நான்கு நாளைக்கு இருக்கும். குணமாகி விடும், இது மாத்திரையா என கேட்பார். ஆனால் இப்படி உள்ளோர் மிகச்சிலர் தான் என்பதுதான் வேதனைக்கரமான உண்மை.

தற்காலத்தில் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, ஆயுர்வேதிக், உணவு முறைகள், உடற்பயிற்சி என பல்வேறு மருத்துவ முறைமைகள் இணைந்த கூட்டு மருத்துவ முறைகளே பயனளிக்கிறது என சமீபத்திய மருத்துவ நல சிந்தனைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

எனவே அலோபதி ஆங்கில மருத்துவம் தான் அனைத்திற்குமான தீர்வு என கதறும் முற்போக்கு அறிவுசீவிகளை இடது கையால் ஒதுக்கித்தள்ளி விட்டு, பல்வேறு மாற்று மருத்துவமுறைமைகளின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் பாரம்பரிய தமிழர் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் குறித்து ஆராய அரசே ஆய்வகங்களை உருவாக்கி, நம் மரபு சார்ந்த மருத்துவத்தை மீண்டும் செழுமைப்படுத்திட வேண்டும்.

ஆம் ..இதையெல்லாம் யார் செய்வது.. எது செய்யும்..

இம்மண்ணை, இம்மக்களை நேசிக்கக்கூடிய ஒரு மண்ணின் மகனிடத்து அதிகாரங்கள் ஒரு நாள் கிடைக்கும் பொழுது..மக்களின் துயர்களுக்கு மாபெரும் விடுதலைப் பொழுது துளிர்க்கும்.