வாழ்வின் சூட்சமமப் புள்ளிகளைப் பற்றியும், மனித உளவியலைப் பற்றியும் பதிவொன்றை எழுதி இருந்தேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=528687884222751&id=100012446325967

அதற்கு …மிகச்சரியான தொடரியை இசைத்து காட்டியிருக்கிறான் என் தம்பி துருவன் செல்வமணி. நுட்பமான அலைவரிசைக் கோர்வையில் இணைந்து புதிய வெளி ஒன்றினை தன் எழுத்துக்களால் அவன் உருவாக்கி இருக்கிறான்.

https://m.facebook.com/story.php?story_fbid=2012571248805016&id=100001564824346

என்னுடைய பதிவிற்கு இதுதான் மிகச்சரியான அங்கீகாரம் என நான் கருதுகிறேன் ‌. நான் ஏதோ ஒரு புள்ளியில் எதையோ ஒன்றை தொடப் போக… அதை என் சீடன் வேறு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறான். பரஸ்பரம் இதுபோன்ற உரையாடல்கள் தொடர்ச்சியாக நீள நான் விரும்புகிறேன். என்னைப் பற்றி என் எழுத்தைப் பற்றி சில சமயங்களில் நான் கவலைப் பட்டது உண்டு. ஆனால் இத்தருணத்தில் உண்மையிலேயே நான் கர்வம் அடைகிறேன். ஒரு அசலான படைப்பாளி தனது எந்த வாக்கியமும் பொருத்தப்பட்ட ஒரு முற்றுப்புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு முடிந்துவிடக்கூடாது என்றுதான் நினைப்பான்.நானும் அவ்வாறாக தான் நினைக்கிறேன். எனது எழுத்துக்களின் தொடர்ச்சியாய்… எனது வாழ்வின் நிழலாய்.. எனது முடிவுறாத பத்தியின் இன்னொரு நீட்சியாய்‌.. துருவன் எழுதிக் கொண்டு இருக்கிறான்.

என்றாவது உன் வாழ்வில் நீ சாதித்தது என்ன என்ற கேள்வி என்னை நோக்கி எவராவது எழுப்பும் பட்சத்தில்..

நான் ஒரு மலை முகட்டின் மீது நின்று கொண்டு.. அமைதியாய் ஒரு தேநீர் அருந்தியவாறே‌ மென்மையாய் ஒரு பதில் கூறுவேன்..

நீ என் துருவனை படித்ததில்லையா என்று.

அவன் என்னை விட நன்கு எழுதுகிறான்/வாசிக்கிறான் /வாழ்வினை அணுகுகிறான் என்பதில் தான் எனது வெற்றி அடங்கியிருக்கிறது.

அவ்வகையில் நான் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறேன் ‌.

வேறென்ன சொல்ல..
நிறைய மகிழ்ச்சியும் ,பெருமிதமும் நிறைந்த பொழுது.

தொடர்ந்து நான் பெருமிதம் அடைய எழுது.

எனக்காக/ எங்களுக்காக மீண்டும் வா. பேசு/ எழுது.

உனது இடம் எந்த மாற்றியாலும் நிரப்ப முடியாத பெரும் வெற்றிடம்.

கொட்டும் இடியும் துடிக்கும் மின்னலும் கூடி ஒரு யுகாந்திரத்தை புரட்டிப் போடுகின்ற அந்த ஓங்காரப் புயல் வீசிய அந்த இடத்தை..அதை மரத்தின் இலைகளை அசைத்துப் பார்க்கிற வெறும் காற்றினால் நிரப்ப முடியாது.

வா. நீ இசைத்துப் பார்க்க ஓரு காலத்தின் பியானோ கட்டைகள் காத்துக்
கொண்டிருக்கின்றன.

வா.

=============================================================================

துருவன் எழுதிய பதிவு


திருவாளர் மணிசெந்தில் அவர்களின் எழுத்துக்களில் பொதுமையை தாண்டிய ப்ரத்யேகங்கள் நிறைய உண்டு. வாசித்தலின் சுவாரஸ்யங்களில்; தனிமையில் மதுக்குப்பி தீர்வது போல நிதானித்து கிறங்கடிக்கும் தொனி அவருடையது. சரியாக சொல்ல எண்ணினாள் அவை ஞானப் பிசாசின் போதைத்துளிகள்.

இன்று அவரின் மானுட வாழ்வு குறித்த ஓர் பதிவினை வாசித்தேன். Woody Allen இன் ” If u ask any question; sex is an answer ” எனும் கூற்றுதான் நினைவில் வந்துபோனது.

//வாழ்வின் அர்த்தம் புரியும் போது நாம் வாழ முடியாதவர்களாக இறக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமமே. இன்னமும் சஸ்பென்ஸ் நீங்காத ஒரு முடிவிலி திரைப்படக்கதை போல நாமும் நமக்கு புரிந்த வரையில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதுவும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.//

மலைப்பாம்பொன்று ஊர்வது போல இந்த வரிகள் என் இருட்டில் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு படைப்பாளன் எண்ணங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. அது அவனின் அறம் சார்ந்தது.. அல்லது அவன் விருப்பு வெறுப்புகளின் தொகுப்பாவது.

“உடம்பாவதேதடி உயிராவதேதடி” எனச் சித்தர்கள் தொடங்கி.. “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்” என ஜேகே தொட்டு..”மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேசம்”என நா.முத்துகுமார் கடந்து மணி செந்தில் வரை வாழ்விற்கென எத்தனையெத்தனையே வரையறைகள் காலம்தோறும் அடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இவையெல்லாமும் சரிதான் என்கின்ற விதத்தில் வாழ்க்கை ஒரு அளவில்லா பூதம் போல் எழுந்து நிற்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு ஓர் வரையறை தேவையென்பது மனிதர்களின் சுயநல எண்ணம்தானேயொழிய வேறெந்த சுவாரஸ்யங்களும் அதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

வாழ்க்கையென்பது எந்த காலத்திலும் எந்த மனிதராலும் இன்னதென்று தீர்க்கமாக சொல்லும்படியாக இருந்ததில்லை, எல்லாமும் அவரவர் அனுமானங்களே. தவிர வாழ்வை புரிந்து கொள்ளவேண்டும் என்கின்ற தேவையொன்று இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையென்பது வாழ்ந்து கழிப்பது அவ்வளவே.

ஜானி படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” பாடல் வரிகளை புரிந்து கொள்வது போலத்தான் வாழ்க்கையை புரிந்து கொள்வதும். நாம் எல்லோரும் என் வானிலே ஒரு அல்லது ஒரேயொரு வெண்ணிலா எனப்புரிந்து வைத்திருக்கும் அந்த பாடலின் வரிகள் உண்மையில் உணர்த்த நினைப்பது “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்பதைத்தான். இங்கே “ஒரே” என்பது “நிறைய” என்ற பொருளில் வரும். என் வானம் முழுக்க வெண்ணிலா என்பதுதான் அந்த “ஒரேரே” வெண்ணிலா.

பலர் பிறந்ததில் இருந்து கேட்டு வளர்ந்த அந்த பாடலை தவறாக புரிந்து கொண்டது போலத்தான் வாழ்க்கையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். வாழ்க்கை ஒருபோதும் புரிந்துகொள்ளும் பதத்தில் இருப்பதில்லை அல்லது வாழ்விற்கு புரிந்துகொள்ளுதல் எனும் அடைவு இல்லை என்பதே என் கருத்து.

தவிர நம்முடைய சரியான பதில்கள் வாழ்க்கைக்கு ஒருபோதும் பொருந்தாது. ஏனெனில் வாழ்க்கையென்பது ஒரு தவறான கேள்வி.

-துருவன் செல்வமணி சோமு.