வாயற்ற சொற்கள்
———————————

இதோ இதுவும்
ஒரு உரையாடல் தான்.

வாயற்ற சொற்களோடு
காதுகளில் அல்லாமல்
உங்கள்
இதயத்தின் ஆழத்தில்
நுழைகிற உண்மையின்
ஏற்பாடு.
———————-

உருவமற்ற
அருவ
அவதூற்று
பொய்களால்
தகர்க்க முடிகிற
சொற்களின்
சேர்க்கை அல்ல
அவன்.

பித்தமேறிய
பிதற்றல்களால்
மன
நோயாளிகளின்
தூற்றல்களால்
தூர்ந்து போகிற
கோடைக்கால
கிணறு அல்ல
அவன்.

உன்மத்த
உரையாடல்களால்
உருக்குலைக்க
இயலுகிற
சத்தற்ற
தர்க்கத்தின்
சறுக்கி விழும்
தத்துவம் அல்ல
அவன்.

அவன் ஒரு காலம்.

பிணங்களுக்கு
நடுவே பிரசவித்து
ரணங்களை
வரங்களாக ஏற்று
இருட்
பாதையொன்றின்
மேல் முளைத்திட்ட
வெளிச்சக் கீற்றின்
பூபாளம்.

————————
அவர்கள்
பொய்மையின்
வில்லெடுத்து
அவதூற்றின்
நாணேற்றும் போது..

அவன்
நம்பிக்கைகளின்
நாற்றங்கால்களில்
எதிர்காலம்
ஒன்றிற்காக
விதைகள்
விதைத்துக்
கொண்டிருந்தான்..

அவர்கள்
கோடிகள் குறித்தான
கதைகளில் வாய்க்கு
வந்த வார்த்தைகளை
எச்சிலாய் காற்றில்
ஒழுக விட்டுக்
கொண்டிருக்கும் பொழுதில்

ஒரு வானவில்
தேசத்திற்கான
வண்ணக் கனவொன்றை
சுமந்து இரவுகளில்
வாசித்து விழித்திருந்தான்.

எதன் பொருட்டும்
களங்கமேற்ற முடியா
அவனது இலட்சியம்
அவரவர் தாயின்
கற்பினை ஒத்த
புனிதத்தின்
சாயலுடையது.

யாரும்
உருவாக்கவோ
உடனிருந்து
ஆட்டி வைக்கவோ
முடிகிற மூடர்களின்
கூடங்களில் இருந்து
வந்தவனல்ல அவன்.

வெம்மை
வனமொன்றில்
பெரும் பசியோடு
திரிகிற
தீ விழி புலியொன்றின்
தனித்தியக்கம் அவன்.

நான் அவனை
அறிந்த வரையில்
உயிரின் மீது
உறுதி இட்டு
சொல்கிறேன்..

சீமான்
என்பது வெறும்
பெயரல்ல..

இந்த இனம் வாழ
விதையாக விழுந்த
தணலாக எரிந்த
மாவீரர்களின்
நம்பிக்கை மிகுந்த
பெரும் விம்மலோடு
பிறந்த
இறுதி
மூச்சுக்காற்று.

அவர்கள்
இறுதியாய் சிந்திய
குருதியின் உறுதி.

மணி செந்தில்.