[youtube]https://youtu.be/bns94zsAejg[/youtube]

 

 

முடிகிற முடியாதவைகள்..
_________________________

தடுக்கிடும்
நினைவுகளின்
கூர் நுனியினை
கவனத்தோடு
விலக்கி நடக்க
முடிகிறது.

தவறி எங்கோ
தட்டுப்படும்
உன் பெயரை
சின்ன மெளனம்
ஒன்றினால்
ஜீரணிக்க முடிகிறது.

என் நொடிப்
பார்வையில்
உதிரும் பூ
ஒன்றினால்..
உன் புன்னகையை
நினைவூட்டாமல்
உதிர முடிகிறது.

என் தலைமுடியை
சற்றே கலைத்து
விட்டு செல்லும்
காற்றின்
சிறகுகளால்
உன் விரல்கள்
பற்றிய
ஞாபகங்களை
வர வைக்க
முடியவில்லை.

எதிர்படும்
யாரோ ஒருவரின்
ஏதோ ஒரு சொல்
எப்போதோ
நீ உதிர்த்தது
என ஒப்பீடு செய்ய
தற்போது ஒப்பவில்லை.

பொருள் பொதிந்த
கவிதைகளை
நம் இரவுகளோடு
பொருத்தாமல்
என்னால் வாசித்து
கடக்க முடிகிறது.

சட்டென திரும்பி
பார்க்கையில்
தோள்களில் இல்லாத
உன் முகம் குறித்து
எனக்கு எவ்வித
வருத்தமும் இல்லை.

தனிமை கணங்களை
தடுமாறாமல்
கடக்கவும்..
மழைப் பொழுதுகளை
வெறும் வேடிக்கை
நிகழ்வாக நினைக்கவும்
என்னால் முடிகிறது.

அதிகாலை
விழிப்பொன்றில்
யாரும் அறியாமல்
இப்போதெல்லாம்
கலங்குவதில்லை.

சிரிக்க முடிகிறது.
சிக்கனமாக
சொன்னால்…

உயிர் வாழ
முடிகிறது.

எனினும்
எப்போதாவது
என்னையும்
மீறி கேட்டு
விடுகிற

இந்த
இளையராஜாவை
என்ன செய்வது..??