இராஜ விழிகள் கொண்ட பேரழகன்..
————————————————————–

முதன்முதலாக அந்தக் குரலை கேட்டப்போது நான் சற்றே ஆச்சரியம் அடைந்தேன்.அது ஒரு வகையான நெகிழ்வும்,குழைவும் கொண்ட குரல். அந்த இறுக்கமான பிம்பத்திற்கும் அந்த குரலுக்கும் சம்பந்தமில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அவரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.அவரை சந்தித்தவர்கள் அவரைப் பற்றி நினைவுகளால் அவரவர் பங்கிற்கு ஒவ்வொரு சித்திரத்தை வரைகிறார்கள்.

எதிரிகளுக்கு கூட அவரைப்பற்றி கால தேச அபிமானங்களை தாண்டி ஆச்சர்யங்கள் மிகுந்த வியப்பு இருக்கிறது.

அவர் இல்லை என்கிறார்கள் சிலர். அவர் இருக்கிறார் என்கின்றார்கள் சிலர். ஆனால் அவரோ இந்த மிகை/குறைகளை எல்லாம் கடந்த காலநதியின் முடிவற்ற பயணம் போன்ற ஒரு முடிவிலி.

ஒரு முறை தலைவரைப்பற்றி மறைந்த ஓவியர் வீர சந்தானம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில்.. இராஜ விழிகளோடு பிறந்த பேரழகன் டா அவர். அது அரச அம்சம். என்றார். எனக்கு மகிழ்வு கலந்த ஆச்சரியம்.புன்னகைத்துக் கொண்டேன்.

எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ஆச்சரியமான செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நமது நண்பர் ஒருபேருந்தில் பயணம் செய்து இருக்கிறார். அந்தப் பேருந்தில் ஒரு வயதான பாட்டியும் அவரது பேரனும் பயணம் செய்திருக்கிறார்கள். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. திடீரென அந்த பேருந்தில் பயணம் செய்வதற்காக சிங்கள ராணுவ வீரர்கள் சிலர் ஏறுகின்றனர். மற்ற பயணிகளை அவரவர் இருக்கைகளை விட்டு எழச் சொல்லி மிரட்டி கட்டாயப்படுத்தி அந்த இருக்கைகளில் அவர்கள் அமரத் தொடங்கினார்கள். ஆனால் பாட்டியால் மட்டும் எழ முடியவில்லை. தனக்கு மூட்டுவலி இருப்பதாகவும் தன்னால் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது எனவும் சிங்கள ராணுவ வீரரிடம் அந்த பாட்டி கெஞ்சவே அதைப்பார்த்து அந்த சிங்கள வீரன் அந்தப் பாட்டியை வலுக்கட்டாயமாக இருக்கையிலிருந்து பிடித்து கீழே தள்ளுகிறான். பாட்டி கீழே விழுந்தவுடன் அருகிலிருந்த மற்றொரு சிங்கள வீரன் அந்த பாட்டியை அடிக்க கையில் இருந்த லத்தியை ஓங்கியபோது அந்த லத்தியை தனது பிஞ்சு கைகளால் அவரோடு பயணித்து வந்த அந்த பேரன் தடுத்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனின் அச்சமற்ற விழிகளில் ஒரு வகை பிரபாகரனித்துவம் தென்பட்டதாக என் நண்பர் பிரமித்து கூறினார்.

அவரே மீண்டும் சொன்னார்.

அப்போதுதான் நானே நம்பத் தொடங்கினேன் .

தலைவர் உயிருடன் இருக்கிறார்.

அந்த பிஞ்சு விழிகளில் மட்டுமல்ல எங்கெங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் உயரும் கரங்களில் ..ஒலிக்கும் முழக்கங்களில்.. தலைவர் உயிருடன் தான் இருக்கிறார்.

களங்கமற்ற அந்த புன்னகை மூலமாகவே நான் இந்த உலகில் வாழ்வதற்கான அனைத்து துணிவினையும் அடைகிறேன்.

எனது மூத்த மகன் சிபிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதேனும் கெட்ட கனவு காணும் போதெல்லாம்.. எழுந்து அமர்ந்து பெரியப்பா என்று தலைவரை அழைப்பான். மீண்டும் அவனாகவே உறங்கிவிடுவான். இது அவனது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லை. தலைவரும் எப்போதும் இறந்ததில்லை.

என் அண்ணனுக்கும்..
என் மன்னனுக்கும்..

இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தலைவர் 64
நவ 26-2018