எனவே
அது காதலில்லை
என்பதை அறிக..

வலி மிகுந்து
தோளில்
முகம் புதைத்து
விசும்பியதை.‌.

இறுக விரல் பிணைத்து
நெடுநீள பயணத்தில்
கதைகள் பேசியதை..

நள்ளிரவு உரையாடல்களில்
தென்படும் மெளனத்தை
நேசத்தின் மொழி கொண்டு
மொழிபெயர்த்ததை…

நடுநிசி கடலோர
காற்றில் அலைபேசி
இசையோடு கால்கள்
நனைத்து கிடந்ததை..

மொத்தமாக
சில நாட்கள் தொலைந்து
நம்மை நாமே
அறிந்துக் கொள்ள
முகவரியற்ற ஊரில்
அலைந்து திரிந்ததை…

குறுஞ்செய்திகளில்
இதயம் மிதக்க வைத்து
பிடித்த பாடலின்
இணைய முகவரியை
தேடி தேடி கண்டடைந்து
பரவசம் கொண்டு
பறந்து அலைந்ததை…

இறுதியாக சிக்கனமான
சொற்களால்..
வடிகட்டி சொன்னாய்..

இதையெல்லாம்
காதல்
என வரைந்து விடாதே..
என..

நானும் எனக்குள்ளே
மெலிதாய்
சொல்லிக்கொள்கிறேன்..

எனவே அது
காதலில்லை
என்பதை அறிக.

மணி செந்தில்.

(கவிஞர் Riska Mukthar எழுதிய கவிதையொன்றின் இன்னொரு வடிவம்.)