***

எதையும் புரிந்து கொள்ளாமல் தாங்கள் சொன்னது மட்டுமே சரி என வாதாடுகிற சங்கிகள் மட்டுமல்ல இன்னும் சிலதுகள் இருக்கின்றன. தாய்மதம் மாற சொல்கிறார் சீமான் என இஸ்லாமிய கிருத்துவ மதங்களை தழுவிய தமிழர்களிடம் பதிவுகள் இட்டும் , காணொளிகள் போட்டும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன.

அண்ணன் சீமான் சொன்னது ஆதித் தமிழரின் நம்பிக்கையை, மெய்யியல் தத்துவங்களை கொள்ளையடித்து இந்துத்துவ மயமாக்கி கொண்ட வருணாசிரம கேடுகளில் இருந்து தமிழர்கள் விடுதலை அடைந்துகொள்ள மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற முழக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

அது தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை கொள்ளையடித்த இந்துத்துவ ஆரிய பிழைப்புவாத கொள்கைகளுக்கு எதிரானது.

இதில் எங்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கு மாறி இருக்கிற தமிழர்கள் உட்பட மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிறப்பால் தமிழர்கள். வேறு நாட்டிலிருந்து வந்திருக்கிற மத நம்பிக்கைகளில் ஆர்வம் கொண்டு அந்தந்தப் மதங்களை தழுவி இருக்கிறார்கள். அந்தந்த மதங்களுக்கு உரிய வழிபாட்டு வழிமுறைகளை ஒத்துக் கொண்டுதான் பயணிக்கிறார்கள்.
எனவே மற்ற தமிழர்களாகிய நாங்கள் அந்த நம்பிக்கைகளை மதிக்கிறோம். அவைகள் பிற மதங்கள் என்கின்ற சொல்லுக்கு உட்பட்டவை.

ஆனால் இந்துமதம் என்கின்ற அமைப்பு அவ்வாறல்ல.இந்து என்கிற சொல் ஆங்கிலேயன் உருவாக்கிக் கொடுத்தது. இன்னும் ஆழமாக சொன்னால் ஒரு மதம் அல்லது ஒரு வழிபாட்டுமுறை என்பதற்கான எந்த அடிப்படை தன்மைகளும் இவர்கள் காட்டும் இந்து மதம் என்பதற்கு கிடையாது. மற்ற மதங்கள் யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டு ஏறக்குறைய உலகம் முழுவதும் பொதுமையான வழிபாட்டு முறைமைகள் கொண்டவை. அந்தந்த மதத்திற்கான புனித நூல்கள் இருக்கின்றன.

ஆனால் இந்து என்று இவர்கள் சொல்கின்ற மதத்திற்கு அவ்வாறெல்லாம் எதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக தமிழகத்துக்கு உள்ளேயே பல்வேறு மெய்யியல் நம்பிக்கைகள் இருந்து இருக்கின்றன. இங்கே சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே பெரும்போரே நிகழ்ந்திருக்கிறது. வைணவ பெருமாள் சிலையை இழுத்து வந்து கடலிலே மூழ்கடித்த சைவ மன்னர்களை தமிழ் நிலத்தில் தமிழர் வரலாற்றில் பரவலாகப் பார்க்கலாம். இதைத்தான் கமலஹாசன் தசாவதாரம் திரைப்படத்தில் காட்சிமயப்படுத்தி இருப்பார். இந்த முரண், இந்த வேறுபாடு தமிழர் நிலத்தில் மிகமிக இயல்பானது. சைவம் வைணவம் மட்டுமல்ல.. ஆசிவகம் சக்தி வழிபாடு காளி வழிபாடு சமணம் பௌத்தம் நாத்திகம் என பல்வேறு நம்பிக்கைகளுக்கு தமிழ் மண்ணில் இடம் உண்டு.

இவைகளை ஒரே சட்டத்தின் மூலமாக ஒன்றாக அடக்கி ஆட்சி செய்ய ஆங்கில ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த ஒற்றைப் பெயர்தான் இந்து மதம். அது மதம் அல்ல ‌.இந்தியாவை ஒரே குடையின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கான ஏற்பாடு ‌.

இத்தனை ஆண்டுகாலம் இந்து என்று தமிழர்கள் அடிமைப்படுத்த பட்டதால் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி போனோம். எங்களது மொழி தீண்டத்தகாத மொழியாகி எங்களது கோவிலுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டது. எங்களுக்கு எங்களது கடவுளர்கள் இருக்கிற கருவறைக்கு செல்கிற உரிமை மறுக்கப்பட்டது. எங்களது பண்பாட்டு விழுமியங்களில் பல ஊடுருவல்கள் நிகழ்ந்து எங்களது வாழ்வியலே மாறிப்போனது. எனவேதான் நாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்க தொடங்கியிருக்கிறோம். நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி தனது முதல் தீர்மானமாக தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.

எனவேதான் தமிழர் என்கின்ற தேசிய நிலத்தின் தொன்மையான மெய்யியல் கோட்பாடுகளை மீட்பதற்காக அண்ணன் சீமான் எழுப்பும் அறைகூவலை இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது ‌.

எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பொதுவான ஒரு குணாதிசயம் இருக்கிறது. தேசிய இனம் மொழி போன்றவைகள் மீது பற்றுறுதி கொண்டு ஒரு இனம் மீள எழும்புவது மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்காது. தேசிய இனமாக திரள்வது மதம் மீதான பற்றுறுதியை சிதைத்துவிடும் என மத அடிப்படைவாதிகள் அஞ்சுவார்கள். எனவேதான் மத அடிப்படைவாதிகள் அண்ணன் சீமானின் இந்த முழக்கங்கள் குறித்து தேவையற்ற குழப்பங்களை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

அண்ணன் சீமான் மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற முழக்கம் தமிழர் தொன்மை மெய்யியல் கோட்பாடுகளை மீட்டெடுக்க நடத்தப்படுகின்ற புரட்சிகர நடவடிக்கை. இது தமிழர்களை வீழ்த்துகிற வருணாசிரம ஆரிய சாதிய நிலைகளுக்கு எதிரானது‌. தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்ற முழக்கத்தின் தொடர்ச்சிதான் மீண்டெழும் தமிழர் சமயங்கள் , தாய் மதம் திரும்புவோம் போன்ற அறைகூவல்கள். இந்து என்பது ஒரு மதம் என தமிழர்களாகிய நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் தனித்த மெய்யியல் நம்பிக்கைகளை உடைய தொன்மையான தேசிய இனம். சீக்கியர்கள் எப்படி தங்களை இந்துக்கள் என ஒத்துக் கொள்ள மறுக்கிறார்களோ,லிங்காயத்துகள் எப்படி தனி மதமாக தங்களை ஆக்கிக் கொண்டார்களோ அதேபோல நாங்களும் எங்கள் தாய்மதம் நோக்கி திரும்ப தொடங்கியிருக்கிறோம். அதுவும் காலப்போக்கில் நிகழ்கிற சமூக மாற்றத்தில் ஏற்படப் போகின்ற உளவியல் மாற்றம் மூலமாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் நிகழப்போகின்ற மாற்றங்கள் இவை. வற்புறுத்தலின் பேரிலோ அதிகாரத்தின் பெயரிலோ கட்டாயத்தின் பேரிலோ நிகழ்பவை அல்ல.

இந்த நடவடிக்கையில் ஏற்கனவே தமிழர் என்கின்ற தேசிய இனத்தில் பிறந்த தமிழர்களில் இஸ்லாம் கிருத்தவம் பௌத்த சமண இன்னும் பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மதங்களை தழுவியவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களது நம்பிக்கைகளை தமிழராகிய நாங்கள் போற்றி மதிக்கிறோம். அவரவர் அந்த நம்பிக்கைகளோடு அந்தந்த மதங்களை போற்றி வணங்கி அதிலேயே தொடரலாம். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
மீண்டும் அழுத்தமாக சொல்கிறோம். மற்ற மதங்களான கிறித்தவ இஸ்லாமிய பௌத்த இன்னும் பல்வேறு மதங்களை தழுவி இருக்கிற தமிழர்கள் கொண்டு இருக்கிற நம்பிக்கைகளுக்கு மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற எங்களது முழக்கம் எதிரானதல்ல. அது தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் தொன்ம மெய்யியல் நம்பிக்கைகளை மீட்டெடுத்து வரலாற்றின் பாதையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட இருக்கிற ஆயிரமாயிரம் அடிமைத் தளைகளை உடைத்தெறிய நடக்கிற புரட்சிகர நடவடிக்கை.