தமிழினம் தனது தனி நலன்களுக்காக போராட புரட்சிப் பாதையில் படை எடுத்து விட்டது.அந்த படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது.
-ம. பொ. சி 1954 செப்டம்பர்.

ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளங்களில் முதன்மையாக கொண்டிருப்பது மொழி. மொழி என்ற முகமே ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் தோன்றியுள்ள எத்தனையோ நாடுகள் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களை சார்ந்தே நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுவான மக்கள் பொருளியல் வாழ்க்கை, பொது பண்பாடாக வெளிப்படும் நாம் ஓரினம் என்கின்ற உளவியல் பாங்கையும் தழுவி வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த ஒரு நிலையான சமூகம் என அறியப்படுகிறது.


சங்க காலம் தொட்டே தமிழ்மொழி பேசப்பட்டு வந்த தமிழக எல்லை என்பது வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்து வந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் ஆண்டாலும் வடவேங்கடம் தொடங்கி தென்குமரி வரையிலான பெரும் நிலப்பரப்பு தமிழகம் என அறியப்பட்டு வந்திருக்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து”என்கிறது தொல்காப்பியம்.
சேர சோழ பாண்டியர்களான தமிழ் மூவேந்தர்கள் 1300 வருடம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருந்து தமிழக நிலப்பரப்பினை காத்து வந்து இருக்கிறார்கள்.கி-மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்து மன்னன் காரவேலன் இந்தக் கூட்டணியை உடைத்து எறிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இடைக் காலத்திலும் மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் படையெடுத்து வெற்றி தோல்வி கண்டாலும், தமிழக நிலப்பரப்பு ஏறக்குறைய பிறமொழி இனத்தாரிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டே கிபி 12ஆம் நூற்றாண்டு வரை வந்தது. 

 
முகலாயர் படையெடுப்பின்போது கூட சில இன ஊடுருவல்கள் நடந்ததே ஒழிய தமிழக நிலப்பரப்பை பொருத்தவரையில் அது தமிழர்களின்  தாயகமாக தான் விளங்கியது.
வரலாற்றின் முதல் விடுதலைப் போர் என அறிவிக்கப்படுகிற 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே 1801 ஆண்டிலேயே ஆங்கிலேயருக்கு எதிராக தமிழக மண்  போர்க்கோலம் கண்டது. அதற்கும் முன்பாக மாவீரன் பூலித்தேவனும், மருதநாயகம் யூசப்பும் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழக மண்ணில் எழுச்சியோடு போராடினார்கள். 1801ஆம் ஆண்டு மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட காலகட்டத்தில் ஏறக்குறைய முந்தைய சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் ஆங்கிலேயர் ஊடுருவி ஆட்சி செய்ய தொடங்கி விட்டார்கள். திப்புசுல்தானின் வீழ்ச்சி தென்னகத்தில் ஆங்கிலேயர் கால் ஊன்றுவதற்கு நாற்றங்காலாய் அமைந்தது. 


1825 ஆம் ஆண்டு தெலுங்கு கன்னட மலையாள பகுதிகளை தமிழ் நாட்டோடு இணைத்து சென்னை மாகாணம் ( Madras presidency) கடலூரை தலைநகரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி பேரறிக்கைக்கு பிறகு ஆளுநர் நியமிக்கப்பட்ட சென்னை மாகாணம் தனித்த பெரும்பகுதியாக திகழ்ந்தது. சென்னை மாகாணத்தின் தலைநகராக, முக்கிய பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கூடிய சென்னை திகழ்ந்ததால் தென்னிந்தியா முழுக்க சென்னை அரசியல் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக விளங்கியது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தப் பெரும் நிலப்பரப்பு 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை ஒரே மாகாணமாக தான் இருந்தது.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முன்பாக இந்தியா என்கிற ஒரு நாடு இல்லை. இந்தப் பெரும் நிலப்பரப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால், சமஸ்தான ஜமீன்தார்களால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக கூட வரலாற்றில் எப்போதும் இன்று இந்தியா என வரையறுக்கப்படும் இந்தப் பெரும் நிலப்பரப்பு ஒருபோதும் ஒரே மன்னரால் ஆளப்பட்டது இல்லை. இந்த நிலப்பரப்பு முழுக்க வாழும் மக்கள் ஒரே மொழி பேசியதில்லை.மொழி, பண்பாடு, பருவநிலை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் முரண்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பை ஆங்கிலேயர் தனது துப்பாக்கி முனையின் மூலமாக இந்தியா என்ற ஒரு பெரும் நாடாக கட்டி எழுப்பினர்.


அதற்கு முன் இந்தப் பெரும் நிலப்பரப்பு வரலாற்றில் எப்போதும் இந்தியா என்று அழைக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயர் தனது அதிகார வசதிக்காக இந்தியா என்ற நாட்டை உருவாக்கி சென்னை, மும்பை, கல்கத்தா என அதிகார தலைநகரங்களை உருவாக்கினர்.
பலதரப்பட்ட மொழி பேசும் பண்பாடு பழக்கவழக்கங்கள் கொண்ட அப்போதே ஏறத்தாழ 20 கோடி மக்கள் தொகைக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தை கட்டி ஆள இந்தியா என்கின்ற ஓர்மை ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது. ஆனால் இந்தியா என்கின்ற நாடு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட போது நாமெல்லாம் இந்தியர் என்கின்ற உணர்வு அப்போது யாருக்கும் இல்லை என்பதுதான் மிக முக்கியமானது. ஆங்கிலேயர் எப்படி நிர்வாக வசதிக்காக இந்தியா என்கின்ற நாட்டை உருவாக்கினார்களோ, அதேபோல ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் ஆங்கிலேய எதிர்ப்பாளர்களுக்கு அன்று தேவைப்பட்டது.


1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரமான நாளுக்கு பிறகு, இந்தியாவை ஒரே நாடாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட கருதவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை ஒன்றியங்களின் நாடு என்றுதான் குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு விவாதங்களின் போது கூட மொழிவழி மாநிலங்கள் பிரிவது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திர இந்திய நாட்டில் முதன்மையான ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது ஒவ்வொரு பொதுத் தேர்தல் அறிக்கையிலும் மொழிவாரி மாகாணப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதியை அளித்தது.
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற ஒரு நாடாக அறிவிக்கப்பட்டாலும், மொழி உணர்வுகள், பல்வேறு பண்பாட்டு கலாச்சார விழுமியங்கள் இவற்றின் முரண்கள் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்கான மக்கள் உளவியல் தொடக்கத்திலிருந்தே இருந்தன. 1954 ல் தொடங்கப்பட்ட தெற்கெல்லை போராட்டம் என வரலாற்றில் அறிவிக்கப்பட்ட திருவிதாங்கூர் எல்லைப் போராட்டம் மொழி உணர்வுக்கு சரியான எடுத்துக்காட்டாகும். 1954 ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்களை தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு போராடிய திருவிதாங்கூர் தமிழர்கள் 10 பேர் மலையாள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.அதேபோல சித்தூர், திருத்தணி , கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.


ஆனாலும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாததோடு மட்டுமில்லாமல், தமிழர்களின் நலனுக்கு எதிராக நடந்து கொள்வதில் தீவிரமாக இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழுத்த தேசியவாதியான காமராஜர்  ஒட்டுமொத்த இந்தியாவின் தானே அனைத்து பகுதிகளும் இருக்கப் போகின்றன என்ற பரந்த எண்ணத்தில் மொழிவழி மாகாணப் பிரிவினையில் அக்கறை காட்டாமல் இருந்துவிட்டார். தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1957 ஆம் ஆண்டு படாசுக்கர் எல்லை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. பிரகாசம் தலைமையிலான ஆந்திரத் தலைவர்கள் ‘மதராஸ் மனதே’ என முழங்கி சென்னை ஆந்திராவோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராடினார்கள்.ஐக்கிய கேரளம் வேண்டும் என்று கேரள பொதுவுடமை கட்சியின் தலைவர் உயர்திரு ஏகே கோபாலன் தலைமையில் மலையாளிகள் போராடி வந்தனர். தமிழக பொதுவுடைமை கட்சியின் தலைவர் தோழர் ஜீவா தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டிற்கே சொந்தம் என அறிவிக்க , பொதுவுடமை கட்சியிலும் பிரிவினைகள் தோன்றின. திருவாங்கூர் கொச்சி போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை கேரளாவோடு  இணைப்பதற்கு திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்த ஈவேரா ஒப்புதல் அளிக்க , அதை தமிழ்த் தேசிய அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். 1960 ஆம் ஆண்டு தான் திருத்தணி தமிழ்நாட்டோடு தளபதி கே விநாயகம் தலைமையிலான போராட்டத்தால் இணைக்கப்பட்டது. மார்ஷல் நேசமணி, தளபதி கே விநாயகம், ம பொ சிவஞானம், உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் எல்லை மீட்புப் போரில் தமிழகத்தின் எல்லைக் காக்க போராடினர்.  

ஆனாலும் தமிழர்களின் பரந்துபட்ட மனப்பான்மையின் காரணமாக தமிழகம் தனது பூர்வீக நிலத்தில் பலவற்றை இழக்க நேரிட்டது. கர்நாடகாவிலும் கொள்ளேகால் வனப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளையும்,ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களையும், கேரளா விடம் தேவிகுளம் பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளையும் அன்றைய தமிழகத் தலைவர்களின் அலட்சியப் போக்கினாலும், திராவிட தேசிய அரசியல் கட்சிகளின் தமிழர் விரோத நிலைப்பாடுகளாலும் தமிழகம் இழந்தது.
திராவிட-தேசிய கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையால் தமிழக எல்லைப் போராட்டம் முழுவதுமாக வெற்றி அடைய முடியாமல் பகுதி வெற்றியோடு தமிழர்கள் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.


1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் அறிவிப்பு வெளியானது. தற்போதைய எல்லை படி சென்னை மாகாணம் என வழங்கப்பட்ட நிலப்பரப்பு தனித்த மாநிலமாகவே உருவானது. 


விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு என்ற கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைத் துறந்தார். 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு கொண்டுவரப்பட்ட மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திமொழி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசாங்கம் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.


முதன்முதலாக தமிழ்நாடு என்கிற மொழிவாரி மாநிலம் உருவான நாளான 1956 நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்து  2019 அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்றினை செய்தது. 
இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் தாயக நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்திய ஒன்றியத்தின் கீழ் தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளான 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு கொண்டது. 2009 ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு பிறகு தாயகத் தமிழகத்தில் பொங்கியெழுந்த தமிழ் தேசிய உணர்விற்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு நாள் அமைந்து உள்ளது.


கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலத்தவர்கள் தங்கள் மாநிலம் உருவான நாளை மிகப் பெரிய விழாவாக எடுத்து, தங்கள் மாநிலத்திற்கு என பொதுவாக இருக்கும் கொடியை அந்நாளில் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு உயர்வு நிலை தமிழகத்திற்கு ஏற்படாதா என எண்ணியிருந்த நிலைமையில், தமிழக அரசின் தமிழ்நாடு நாள் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஐயா சி பா ஆதித்தனார் வடிவமைப்பில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி சில மாற்றங்களோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்டு , இன்று பரந்துபட்ட தமிழர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே தமிழ்நாட்டு கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் ‘தமிழ்நாடு நாள்’ கட்சியின் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றப்பட வேண்டும் என்கிற அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சி என்கிற பெருமையை நாம் தமிழர் கட்சி பெறுகிறது. 


தமிழராய் பிறந்ததில் பெருமைகள் கொள்வோம்.நாம் தமிழராய் திகழ்வதில் பெருமிதம் கொள்வோம்