piano

 
தகிப்பிலாடும்
என் உள்ளத்தை
பியனோ என்றேன்.

நீ சிரித்தாய்.

நான் சொல்லத்
தொடங்கினேன்.

தேர்ந்த விரல்களின்
சில தொடுகைகளுக்காக
காத்திருக்கின்றன..

அவைகள்..

உயிர் உருக்கும்
உன்னத இசையை
பிறப்பிக்க.

உருவான நொடி
முதல் உள்ளுக்குள்
உன்னதங்களை
சுமப்பதென்பது
எளிதான காரியமல்ல.

சில
காலநழுவல்களில்
நேராமல் போய்விடுகிற
நொடிகளில்..

தாங்கிக் கொள்ள
முடியாமல்
உதிரமும்,
எச்சிலும்
கலந்து துப்பி
விட தோன்றுகிறது..

இருந்தும்..

சில நொடி
தொடுதலில்
துளிர்க்கிற
முளைப்பிற்காக..

அந்த முளைப்பில்
உயிர் மலரும்
கணத்திற்காக..

அந்த பியனோ
கட்டைகள்
காத்திருக்கின்றன..

யாருமற்ற
இரவொன்றில்
வெறித்து
ஒளிரும்
வீதி விளக்கொன்றின்
தனிமை போல

எப்போதும் அவை
தனித்திருக்கின்றன…

ஏதோ …
ஒரு புள்ளியில்
ஏதோ ஒரு மெல்லிய
அழுத்தத்தில்
மலர இருக்கிற
அந்த உன்னதத்
துளிக்காக

அவை தனித்திருக்கின்றன..

ஒரு நிலா நாளில்..
வெள்ளையும்
கருப்பும் மேவி
இருக்கிற உடலில்
சுழன்று லாவகமாக
நடனமிட இருக்கிற
விரல்களுக்குதான்
தெரியும்..

விரல் நுனிகள்
இதுவரை
திறக்கப்படாத
முடிவிலி
பாதை ஒன்றின்
சாவி என..

……………………

பெருமூச்செறிதலோடு
இறுதியில் நீ
ஒத்துக்கொண்டாய்..

அங்கே
இலக்குகள் அற்ற
விரல் அலைவுகள்
செவ்வியல்
இசையாய்
நிகழத் தொடங்கி
இருந்தது.

-மணி செந்தில்