பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..



’ கயிற்றின் நிழலில்

சர்பத்தின் சாயல்..

உடல் தீண்டிய நிழலில்

பற்றி பரவுகிறது நீலம்’.

ஆகஸ்ட் 29/2011.

அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்தது. வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகம் எனக்கு மிகவும் பழக்கமானதுதான். ஆனால் இம்முறை நான் உள்ளே நுழைகையில் இருந்த பதட்டம் நான் அறியாதது . காவல் துறை அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது இயல்பான சூழ்நிலையை வெகுவாக மாற்றிருந்தது. ஒருவர் ஒருவராக அனுமதிக்கப்பட்ட அப்பொழுதில் எனக்கு முன்னதாக சென்று திரும்பிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சேனா.பிரபு மிகுந்த இறுகிய முகத்துடன் திரும்பி வந்தார். அவர் முகத்தினை பார்த்து ஏதேனும் அறிந்துக் கொள்ள இயலுமா என நான் முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் மனநிலையில் அவர் இல்லை. கடந்த பல மாதங்களாக அவர் ஒரு உன்னதப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அந்த முயற்சியில் ஒரு முக்கிய கட்டம் மறு நாள் வர இருந்த அச்சூழல் அவரை மிகவும் வருத்தி இருக்கவேண்டும். அவரைப் போன்ற உன்னதமான சில இளைஞர்கள் கையில்தான் வரலாறு மிக முக்கியமான பணியொன்றினை வழங்கி இருந்தது. அது இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு எந்த நேரமும் தூக்கில் தொங்க விடப்படும் ஆபத்தில் உள்ள பேரறிவாளன் ,முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை சட்டப் போராட்டங்கள் மூலமாக காப்பது.

.

இந்த சிறை வளாகம் எனக்கு புதிதல்ல. சென்ற திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த அண்ணன் சீமான் அவர்களை நான் அடிக்கடி பார்க்க சென்ற போது அந்த சிறை வளாகம் எனக்கு பழக்கப்பட்டு இருந்தது. சீமான் அண்ணனை பார்க்க போகும் போது ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு சிறைப்பட்டு கிடக்கின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய அண்ணன்மார்களை நான் சந்திக்க நேர்ந்தது. நான் மட்டுமல்ல , அண்ணன் சீமானை பார்க்க வரும் எண்ணற்ற நாம் தமிழர் தம்பிமார்களுக்கு இவ்வகையாக இனமான அண்ணன்மார்கள் அறுவர் கிடைத்தனர். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாம் நன்றி சொல்லலாம். அண்ணன் சீமானை அவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூரில் சிறைப்படுத்தாவிடில் எமக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. எனக்கு கடந்த காலங்கள் நினைவிற்கு வந்தன. அண்ணன் சீமான் இங்கே இருந்த போது கள்ளங்கபடமற்ற அந்த அன்புள்ளங்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்துக் கொண்டே இருக்கும். பார்க்க செல்லும் நாங்களும் அந்த மகிழ்வில் கலந்துக் கொள்ள , அந்த சிறை வளாகம் மகிழ்ச்சிக்கான கேளிக்கைக் கூடமாக மாறிப்போகும்.சிறைக் கொட்டடியில் அடைப்பட்டிருந்தாலும்..உதிரும் புன்னகையோடு..கை கோர்த்த உறவுகளாய் நம் அண்ணன்மார்கள் விளங்கிய காலக்கட்டம் அது. வெகு காலமாக வெளிச்சம் படாதிருந்த அவர்களின் அவல வாழ்வு அண்ணன் சீமானின் சிறை வாசத்தால் உலகிற்கு தெரிந்தது.

.

அடுத்து ..எனது முறை. கண்கள் கலங்கத்துவங்கி விட்டன. என்னை தயார் செய்து அனுப்பும் தஞ்சை வழக்கறிஞர் . அண்ணன் நல்லதுரை பலவாறு ஆறுதல் சொல்லி உள்ளே அனுப்பினார். கடுமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் நான் உயர் பாதுகாப்பு தொகுதி என்றழைக்கப்பட்ட அந்த வளாகத்திற்குள் நுழைந்தேன். பறவைகள் சரணாலயம் ஒன்றில் நுழைந்து விட்டது போன்ற உணர்வு..பறவைகள் கீச்சொலி. வெண் புறாக்கள் மேய்ந்துக் கொண்டிருந்தன. அந்த புறாக்களை இராபர்ட் பயஸ் அண்ணன் வளர்த்து வருகிறாராம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய அண்ணன்மார்களை தனித்து வைக்க, பயஸ் அண்ணன் அந்த வளாகத்தினில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இரை போட்டு வளர்த்த பயஸ் அண்ணனை தேடிக் கொண்டு அதே வளாகத்தில் திரிவதாக ஒரு காவலர் என்னிடம் கூறினார். கருணை நிராகரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று நினைத்துக் கொண்டேன். வரிசையாக இருட்டறைகள் . அண்ணன்மார்கள் மூவரும் தனித்தனியே அடைக்கப்பட்டிருந்தனர். என்னைப் பார்த்த்தும் அறிவு அண்ணன் மணி என்று உற்சாக குரல் எழுப்பினார். முருகன் அண்ணன் எட்டிப்பார்த்தார். சாந்தன் அண்ணன் அவசர அவசரமாக சட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.

.

எனக்கும், அவர்களுக்கும் இருந்த ஆதி உறவின் தொடர்ச்சியான மரபணு விழித்துக் கொண்டது. நான் பாய்ந்து அவர்களை இறுகத் தழுவிக் கொண்டேன். பாருங்கள் …விசித்திரத்தினை. மரணத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். ஒருவருக்கு கூட மரணத்தின் பயம் இல்லை. கண்களில் அளப்பரிய நம்பிக்கைகளை சேமித்துக் கொண்டு முகப்பொலிவோடு திகழ்ந்த அம்மூவரையும் சந்திக்கும் எவரும் நேசிக்காமல் இருக்க இயலாது. நாளையின் விடியலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்கள் அவர்கள். எனக்குத்தான் நம்பிக்கை இல்லை. ஏற்கனவே இந்திய நீதித்துறை அவர்களை சிதைத்து போட்டிருப்பதன் அவலத்தினை எனக்குள் எண்ணிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அறிவு அண்ணன் தான் தயாரித்து வைத்திருந்த வழக்கு சங்கதிகளை என்னுடன் பகிரத் துவங்கினார். தேர்ந்த வழக்கறிஞர்களுக்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் இருந்தது. அவர்களின் வழக்குரைஞராக உள்ளே போன நான் எதுவுமறியா எளிய கட்சிக்காரனைப் போல அவர்களின் அறிவொளிக்கு முன்னால் நின்றேன்.

.

அன்றைய காலையில் தான் தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தமிழக முதல்வர் அறிவித்திருந்த தருணம் அது. ஆனால் அந்த மூவரும் தமிழக முதல்வரை அந்த தருணத்திலும் நம்பி நின்றது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்த்து. தமிழக முதல்வருக்கு எதிராக எதுவும் செய்து விட வேண்டாம் என அவர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக என்னிடத்தில் சொன்னார்கள். தங்கை செங்கொடியின் அளப்பரிய தியாகம் தான் மூவரையும் கலங்க வைத்திருந்தது. எமது போராட்டத்தின் மூலம் உயிரை காப்பதுதான்.ஆனால் உயிரை காக்க உயிர் போவது சித்ரவதைக்குள்ளாக்கிறது என சாந்தன் அண்ணன் சொன்னார். எமக்காக போராடும் ஒவ்வொருவரையும் நாங்கள் இப்போராட்டத்தில் வெற்றிப் பெற்ற பிறகு நேரடியாக சந்திக்க விரும்புகிறோம். எனவே உயிர் தியாகங்கள் எம்மை கொல்கின்றன என சங்கடத்துடன் முருகன் அண்ணன் சொன்னது என்னை கண் கலங்க வைத்தது. அந்த தருணத்திலும் தமிழக முதல்வர் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அசலானது. முதல்வர் கையில்தான் தங்கள் தூக்கின் முடிச்சு இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். அனைத்து அதிகார மட்டங்களையும் சந்தித்து விட்ட காரணத்தினால் என்னவோ, இம்முறை தமிழக முதல்வர் அவர்களை காத்து விடுவார் என நம்பினர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் அவர்களை மேலும் உறுதி கொள்ள வைத்தது. இதே கருத்தினை அவர்கள் ஊடகங்களுக்கும் செய்தியாக சொல்லச் சொன்னார்கள். தமிழக முதல்வர் மீது அவர்கள் பாராட்டும் நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமளித்தது. ‘இன்று அவரை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை’ என்றார் சாந்தன் அண்ணா.உரையாடல்களில் சீமான் அண்ணனின் நடவடிக்கைகள் குறித்து பேச்சு வந்த போது ’அண்ணன் முதல்வருக்கு எதிராக செயல்படாமல் அரசோடு இணைந்து செயல்படுவதென்பது மிக முக்கிய அரசியல் நடவடிக்கை. அதிகார பலம் அற்ற தமிழினத்து உணர்வாளர்கள் மீது சிங்கள அரசின் மீது காட்டமான தீர்மானம் இயற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் இம்முறை ஆறுதல் அளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே சீமான் அண்ணனின் நிலைப்பாடு மிகச் சரி. அவரோடு தான் நாங்கள் நிற்கிறோம் ’என்றார் முருகன் அண்ணன்

.

அரித்திராவின் குரலை பிபிசி இணையத்தளத்தின் ஊடாக கேட்டேன் என்ற உடன் முருகன் அண்ணனின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. பாப்பா என்ன சொன்னாள்..? என ஆர்வத்துடன் விசாரித்த அந்த அன்பு மிக்க தந்தையின் கண்களில் தாய்மையின் சுடரைக் கண்டேன். நேரம் முடிந்தது.நீங்கள் கிளம்பலாம் என கறார் குரல் வந்தது. மீண்டும் ஒரு முறை அவர்கள் மூவரையும் ஆறத் தழுவினேன். கண்டிப்பாக இது கடைசி சந்திப்பாக இருக்கக் கூடாது. நான் கலங்கியதும் அறிவு அண்ணன் நாளை மாலை இதே நேரத்தில் நீ மகிழ்வாக இருப்பாய் என நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார். திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன். கம்பிகளின் ஊடே தமிழ்த் தேசிய இனத்தின் பெருமை மிக்க மூன்று அண்ணன்மார்கள் நின்று கொண்டிருந்தார்கள்

.

அந்த வளாகத்தினை விட்டு வெளியே வந்த உடன் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. உள்ளே அழுதால் அண்ணன்களின் உளவியலை பாதிக்கும் செயலாக அமையும் என்ற கவனம் வெளியே வந்த உடன் தகர்ந்தது. அழுதேன். கூட வந்த காவலர் என்னை பிடித்துக் கொண்டார். அது என் அழுகை அல்ல. என் மூதாதையான உலகின் ஆதி மனிதனின் மரபணுவில் இருந்து தொடர்ந்து வந்த அழுகை. 12 கோடி மக்கள் இருந்தும் மூன்று அண்ணன்மார்களை காப்பாற்ற வழி தெரியாது கையேந்தி நிற்கிற எளிய மனிதனின் கண்ணீர். ராசீவ் கொலையை காரணம் காட்டி ஈழப் பெருநிலத்தினை அழித்தார்கள். இந்த இனம் இனிமேல் அடைந்து விட முடியாத அதி உன்னத ஈழ நாட்டை அழித்தார்கள்.காட்டுக்குள் இருந்தாலும்..விமானம் கட்டி விண்ணில் பறந்த அறிவார்ந்த தலைமுறையை அழித்தார்கள். அழித்தும் தீராத வன்மத்தின் நாவுகள் இன்று மூன்று சகோதரர்களை மரணத்தின் கொட்டடியில் அடைத்து வைத்திருக்கின்றன. அழுதேன். எனக்காக காத்திருந்த அண்ணன் இராபர்ட் பயஸ் கண்ணீரோடு என்னை கட்டியணைத்தார்.

.

வெளியே வந்தேன். உள்ளே நடந்தவைகளையும், அண்ணன்கள் சொல்லி அனுப்பிய செய்திகளையும் நான் அண்ணன் சீமானிடம் அலைபேசியில் தெரிவித்தேன்.அவர் அமைதியாக் கேட்டுக் கொண்டு இருந்தார்.அண்ணன்கள் முருகனும், சாந்தனும் தூக்கிலிடப்பட்டால் தங்களின் உடலை சீமான் அண்ணனிடம்தான் தர வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் எழுதி அளித்திருந்த செய்தியும் அவரை வெகுவாக பாதித்திருந்த்து. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் .. அண்ணா என நான் சீமான் அண்ணனிடம் கேட்டேன். ”இது என் சொந்த துயர். என் குடும்பத்தில் மூவருக்கு எந்த நொடியிலும் மரணம் என்ற அவலம் என்னை அரசியலில் இருந்து தூர வீசி விட்டது. தூக்கு கயிற்றுக்கு முன் மூன்று தம்பிகளை நிற்க வைத்துக் கொண்டு என்னால் அரசியல் செய்ய இயலாது. கயிற்றினை அறுக்கும் அதிகாரம் உடையவர்களிடத்தில் கருணையை எதிர்பார்க்கிற எளிய அண்ணன் நான் . எனவே தான் அமைதியாக சட்டத்தின் மூலமாக என் தம்பிகளை விடுவிக்க அலைந்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மறுநாள் நம்பிக்கையோடு நின்ற அண்ணன்மார்களின் சொற்கள் பலித்தன. அவர்கள் நம்பிய தமிழக முதல்வர் அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். வழக்கிலும் அவர்களுக்கு இடைக்காலத் தடை கிடைத்தது. துயர் முகங்கள் நிரம்பி வழிந்த உயர்நீதிமன்றம் ஒரு நொடியில் கொண்டாடங்களின் குடியிருப்பாக மாறிப்போனது. என் அருகில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் சேனா.பிரபுவினை நான் இறுக தழுவினேன். இந்த வழக்கிற்காக வெகு நாட்களாக உழைத்து வரும் முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர். அண்ணன் தடா சந்திரசேகர் வந்து கொண்டிருந்தார் . வணங்கினேன். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களோடு இணைந்து பிரபு,பாரி,ராசீவ்காந்தி, பாலாஜி போன்ற பல இளம் வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் கடுமையாக உழைத்தார்கள். நீதிமன்ற தடையுத்தரவு கிடைத்த அவ்வேளையில், கொண்டாட்டங்கள் நடந்துக் கொண்டு இருந்தன. எவ்வித விளம்பரமும் தேடாமல் அளவற்ற உழைப்பினை வாரி வழங்கிய இந்த இளைஞர்கள் அமைதியாய் புன்முறுவலோடு நின்றுக் கொண்டிருந்தது அழகாக இருந்தது .

.

.

அபாயம் இன்னமும் முற்று முதலாக நீங்கி விட வில்லை. 2 மாத இடைக்கால தடை இறுதி வெற்றியல்ல. இறுதி வெற்றி சிறைப்பட்டு கிடக்கின்ற நம் அண்ணன்மார்களின் விடுதலையில் தான் அடங்கி இருக்கிறது. தமிழக முதல்வரின் கருணையும், மக்களின் தன்னெழுச்சி குரல்களும் அதை சாத்தியப்படுத்தும் என நாம் நம்புவோம். இந்த மாபெரும் முயற்சியில் எண்ணற்ற தோழர்கள் தங்களின் அளப்பரிய உழைப்பினை நல்கி இருக்கிறார்கள். குறிப்பாக தங்களையும் மரணத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள துணிந்த 3 பெண் வழக்கறிஞர்களின் தீரம் வியப்பிற்குரியது. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இனத்திற்காக, மனித உரிமைகளுக்காக, மரணத்தண்டனை ஒழிப்பிற்காக நின்ற தோழர்களின் கூட்டுழைப்பு எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

இந்நேரம் எம் தங்கை செங்கொடி சிதையில் தணலாய் இருந்து இந்த தாய்மண்ணின் மணலாய் மாறி இருப்பாள். தம் அண்ணன்மார்களுக்காக தன்னுயிர் தந்த தங்கையின் இறுதி மூச்சுக்காற்று இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது. ஓயாத அந்த சுழிக்காற்று சுழன்றடித்து இனமான நெருப்பினை பரப்பிக் கொண்டே இருக்கும். அது என் தாய் அற்புதம் அம்மா அவர்களின் விழி நீரையும் காய வைக்கும்.

முத்துக்குமாரும் முடிவல்ல..

முள்ளிவாய்க்காலும் முடிவல்ல..

செங்கொடி தொடர்கிறாள்..

அலை அலையாய் வருகிறார்கள்..

ஆதி இனத்தொன்றின் கோபத்தினை

சுமந்தவாறே..

அழிவிலிருந்துதான் துவங்குகிறது எம் உலகமும்.

Previous

நெஞ்சினை பதற வைக்கும் போர்க் குற்ற காட்சிகள் – சிங்கள ராணுவ வீரரின் நேரடி சாட்சியம் -மீண்டும் சேனல் 4 வெளியிட்டது

Next

இயக்குனர் மணிவண்ணன் : உணர்வும்- தெளிவும்.

1 Comment

  1. மனம் கனக்க வைத்த பதிவு.இந்த இழி நிலையை காண வைத்த காலத்தை நாம் என்ன சொல்வது?காலம் நிச்சயமாக பதில் கூறும் சகோ.

Powered by WordPress & Theme by Anders Norén