27867625_396526987438842_5551065892319946309_n

https://youtu.be/rMAOPsp5EB0

நினைவுகள்
பாசியாய்
படர்ந்திருக்கிற
அந்த விழிகளில்தான்..

தவழும்
கனவலைகளில்
தவிப்போடு
நான் நீந்துகிறேன்..

காற்றின் சிறகுகளோடு
கணப்பொழுதுகளில்
கைக் கோர்த்து
நடம் புரிகிற
அந்த காரிருள்
கூந்தல் இழைகளில்தான்
நான் விழித்திருக்கிறேன்.

அசையா நொடிகளில்
கசிந்துருகி..
இமையோரம் ததும்பி
நதியென பின்
பெருக்கெடும்
கண்ணீர்த் துளிகள்
வழிகிற அந்த
செம்மை கன்னக்
கதுப்புகளில் தான்
நான் உயிர்த்தெழுகிறேன்..

மோகத்திரள்
மழை மேகமாய்
கருக்கிற முடிவிலி
இரவில் ..
நிகழாத
பெளர்ணமிக்காக
காத்திருக்கும்
அடிவானமாய்
சிவந்திருக்கும்
அந்த தேவதையின்
நிலா முகத்தில் தான்
நித்தமும் நான்
குளிர் காய்கிறேன்..

கால மலர்கள்
வாழ்வின் விருட்சத்தில்
இருந்து உதிர்ந்து
இதய வேரில் நிறைந்தாலும்
இன்னமும் வசந்தமாகவே
என் புன்னகையில்
நிறைந்திருக்கிற
அந்த கவிதை
கழுத்தோரம் தான்
நான் இளைப்பாறுகிறேன்..

நாம் வாழ்ந்தது
சம்பவங்களின் சங்கிலித்
தொடர் அதிரும்
வாழ்வின் ஓட்டமல்ல..
இன்னமும் நீளும்
மாபெரும் காப்பியத்தின்
பொன்னெழுத்து பக்கங்கள்
என மயக்க மொழியில்
வெளிவந்த அந்த
வார்த்தை
தடுமாற்றங்களில் தான்..
என் மிச்ச வாழ்விற்கான
உயிர் எச்சத்தை நான்
உருவாக்குகிறேன்..

இன்னுமொரு இரவு..
மற்றுமொரு மதியம்..
பிறிதொரு மாலை..
என அடுக்கடுக்காய்
நினைத்துப் பார்த்து
சிலிர்க்கும் அந்த
நிலாக்கால
நேசங்களில் தான்
நான் பூத்துக் கொண்டே
இருக்கிறேன்..

யாருமற்ற அந்தர வெளியில்
தனித்து பறக்கும்
பெருங் கழுகொன்றின்
தனிமை போல..

நானும்..
என் காதலும்
தனித்திருக்கிறோம்…

பின்னிரவு குளிரில்
உறைந்திருக்கும்
ஆழ் கடலின் சலனமற்ற
அமைதி போல..

காத்திருக்கும்
என் உணர்வுகளின்
ராகத்தை இளையராஜா
பாடலாய் வாசித்துக் காட்ட..

என் நரம்புகளால்
இறுக்கி கட்டப்பட்ட
ஒரு கிடார் இருக்கிறது..

வாசித்துக் கொண்டே
இரு..

உயிரோடு நானும்
இருக்கிறேன்..

……..

இவ்வாறாக நீளும்
இந்த கவிதை ஒரு போதும்
முடிவதில்லை தான்.

அது போலத்தான் எனதன்பும்..

……..

தினங்களில் குறுக்கிக்
கொள்ள..
என் காதல்
இன்பியல் நிகழ்வல்ல..

மாறாய் பிரிவின்
இரத்தம் கசியும்
இசைத்தட்டு..

வாழ்வின் நிகழ்தகவு
முள்ளாய் கீறினாலும்..

மகத்தான
வாழ்வொன்றின்
ஆன்ம ராகத்தை
பாடியே
தீரும்..

மீண்டும்..

கேட்கிறாயா சகி..?