…ஆகப்பெரும்

கண்ணாடியாய்
கனவு பிம்பங்களை
மாறி மாறி
வரும் வாழ்வின்
உதய,
அஸ்தமனங்களுக்கு
ஏற்ப வாரி இறைத்துக்
கொண்டிருந்தோம்.

சரிவொன்றின்
சங்கடப்படுத்தும்
நிழலொன்றில் கூட
கலையாத பிம்பமாய்
நம் பற்றை
தகவமைப்பதில்
கவனம் கொண்டிருந்தோம்.

பிசிறில்லா இசையாய்
மாசற்ற கவிதையாய்
அருவமான அற்புதமாய்
அது நிகழ்ந்துக் கொண்டே
இருக்க வேண்டும் என
உறுதி கொண்டோம்..

தவறுகள் மீதும்
காரணங்கள் மீதும்
கட்டப்பட்ட கண்ணாடி
மாளிகையாய்
அது காட்டப்பட்டு
விடக் கூடாதென்றும்..

சின்ன விழி அசைவில்
கூட தெறிக்கும் உணர்வு
கல்லொன்றின் வீசலில்
அது விரிசலாகி விடக்
கூடாதென்றும்..

சில கணக்குகள்
சமைத்து
நமக்குள்ளாக
விடைகளையும்
நாம் சேகரித்து
வைத்திருந்தோம்..

பிரிவொன்றின்
பிரளயக்
காற்று கசியும்
அபாயமிருக்கிற
அனைத்து
பொந்துகளும்
அடைப்பட்டு
விட்டதென நாம்
அறிந்திருந்த
வேளையில் தான்..

வெண்ணிற இரவுகள்*
பக்கங்களில் இருந்து
இறங்கி வந்த
கனவுலகவாசி
சொன்னான்..

உங்களின்
நிலாக்காலம்
அந்த
கண்ணாடியில்
கரும் புகையாய்
படிந்திருக்கிறதென..

சட்டென
மீட்டப்பட்ட
வீணையின்
தந்தியாய்
அதிர்ந்தோம்.

கண்ணாடி
விரிசல் விட
தொடங்கிற்று.

– மணி செந்தில்

* வெண்ணிற இரவுகள்.
மாபெரும் எழுத்தாளர்
தாஸ்தாவெஸ்கி எழுதிய
சிறு புதினம்.