நிறமற்ற என்
சொற்களின்
மீது உனக்கு
பிடித்த
வண்ணத்தை
பூசி விடு..

கூடவே
அப்போதைய
உன் மனநிலைக்கு
தகுந்தாற் போல்…
ஒரு அந்தியையோ..
ஒரு மழையையோ..
கூதிர் காலமொன்றையோ..
வெண்பனிச் சாரலையோ..
கொடும் பாலையையோ. .
அவசியம் இணை.

சொற்களை கரைத்து
விழுங்கும்
பின்னணி இசை
இசைக்கப்படின்
இன்னும் பிரமாதம்.

முடிவில் ஒரு
மலை முகட்டின்
மேலமர்ந்து
தனிமைப்
பொழுதொன்றை
நீயே தேர்ந்தெடு.

என் சொற்களை
உடை அவிழ்ப்பது
போல..
தனித்தனியே கழற்று..
கலைத்துப் போடு.
நிறைவேறாத படைப்பின்
நிராசை ஓவியனாய்
வெற்று பார்வை
ஒன்றைப் பார் .

எழுத்துகளாய் எஞ்சி
இருப்பவற்றை..
உனக்கு பிடித்தமாய்
கோர்த்துப் படி..

நான் தெரியலாம்.
சில நேரங்களில்
நீயும்.

மணி செந்தில்.