பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரை மொழி

கண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா.

                
 
 
அது ஒரு பாடல் காட்சி.  கதாநாயகனும்,கதாநாயகியும் ஊட்டியின் மெல்லிய குளிரை அனுபவித்தவாறே ஏரிக்கரையில் பேசிய படி நடந்து செல்வார்கள். பின்ணணியில் இளையராஜாவின் மெல்லிய செவ்வியல் இசை கசிந்துக் கொண்டிருக்கும். மலரே மலரே ..உல்லாசம் என தொடங்கும் அப்பாடல் (http://www.youtube.com/watch?v=BG8n2RRvDxU ) இடம் பெற்ற திரைப்படம் ரஜினிகாந்த்,மாதவி நடித்த மறைந்த மாமேதை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் .
 
          அவர் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள திரையிசைப்பாடல்கள் இளையராஜாவின் நுண்ணிய நெய்தலால் ஆழ்மனதிற்குள் பாயும் வல்லமை உடையவை. செவிகளால் கேட்கும் போதே பரவசத்தையும்,சோகத்தையும், காதலையும், கண்ணீரையும் தர வல்ல அப்பாடல்களை தனது ஒளித்தூரிகையினால் ஆகச்சிறந்த நிகழ் ஒவியங்களாக செதுக்குவதில் பாலுமகேந்திரா வல்லவர் .
 
பொதுவாக அவர் படங்களில் உரையாடல்கள் குறைவாக இருக்கும் . அவரின் திரைப்படப் பாடல் காட்சிகளிலோ கதாநாயகனும்,நாயகியும் உரையாடிக் கொண்டே இயற்கை சூழ் பகுதிகளில் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். டாடா சுமோக்களில் அடியாட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வீச்சரிவாக்களோடு நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என கத்திச்செல்லும் கதாநாயகர்களை அவர் பாடங்களில் நீங்கள் பார்க்க இயலாது.  அவரது பட கதாநாயகன்  சாதாரணன். சராசரி மனிதனுக்குள்ள அனைத்து பலவீனங்களும் அவனுக்கும் உண்டு. அவரது படத்தின் நாயகிகள் அன்றாடம் நாம் சாலையிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வீடுகளிலோ சந்திக்கும் பெண்கள். இப்படி தனது படத்திற்கான திரைமொழியை இயல்பு மீறாமல் பாதுகாத்து கொள்வதில் பாலுமகேந்திரா ஒரு மேதை.
 
அவரது ஒளி மொழி தனித்துவமானது.  இயற்கையாக நாம் எதிர்க்கொள்ளும் ஒளியின் அளவீடுகளை உணர்ந்து அதைத்தான் தன் திரைப்படங்களுக்கான ஒளி அளவாக அவர் பயன்படுத்தினார். அதனால் தான் அவர் திரைப்படங்களில்  பெய்யும் மழை , ஒளிரும் வெயில் ,அலை பாயும் கடல்,பசுமை வழியும் கானகம், பழங்காலத்து சிதிலமான கோவில், கருமை சுமக்கும் கற்சிற்பங்கள் , ஏகாந்த ஏரி என அனைத்தும் அவர் படங்களில் பேசின.
அவர் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன  ” நெல்லு” என்கிற மலையாளப்படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பாலுமகேந்திரா பெற்றார். அவர் தன்னை ஒளிப்பதிவாளராகத்தான் எப்போதுமே கருதிக்  கொண்டார். காட்சியமைப்பிலும், ஒளி அளவிலும் அவர் செலுத்திய கவனம் அலாதியானது. எடுத்துக்காட்டாக நீங்கள் கேட்டவை படத்தில் ”கனவு காணும் வாழ்க்கை யாவும் “                           ( http://www.youtube.com/watch?v=yEiF1a8b-Lo ) என்ற பாடலில்  வாழ்க்கை நிலையாமை குறித்த அடுக்கடுக்கான  உதிரிக் காட்சிகளை அவர் அடுக்கி இருக்கும் விதம் அப்பாடலை ஆகச்சிறந்த பாடலாக்கியது. தண்டவாளத்தில் காது வைத்து கேட்கும் கமலையும் , ஸ்ரீதேவியையும் ரயில் கடந்து சென்றதை நாம் கண்டோம். நம்மால் இது வரை கடக்க முடியாமல் நிற்கிறோம்.
 
ஒளிப்பதிவாளராக பல மலையாள படங்களில் தடம் பதித்த பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே உதிரிப்பூக்களில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருடன் கைக் கோர்த்த இருந்த  மகேந்திரன்  “முள்ளும் மலரும்” படத்தில் பாலு மகேந்திராவை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். அப்படத்தில் அடிப் பெண்ணே..பொன்னுஞ்சல் ஆடும் இளமை என்கிற பாட்டில் பாலுமகேந்திரா நிகழ்த்தி இருக்கும் வித்தை அதி உன்னதமானது. அப்படித்தான் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற புகழ்ப் பெற்ற பாட்டிலும் சிறு சிறு காட்சியையும் தனது திறமையால் பாலு செல்லூலாய்டு ஒவியமாக்கி இருப்பார். அதில் வரும் உச்சக் காட்சியில் தான் உயிருக்குயிராக நேசித்த தங்கை உட்பட அனைவரும் கடந்துப் போகையில் தன்னந்தனியனாய் நிற்கும்  காளி கதாபாத்திரத்தின் உணர்வினை மிகநுட்பமாக பாலுமகேந்திரா பதிவு செய்து அப்படத்தை மற்றொரு தளத்திற்கு கடத்தி சென்றிருப்பார்(http://www.youtube.com/watch?v=jU629VRND6c ) .  பதின்பருவத்து உணர்ச்சிகளை மையமாக வைத்து 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார் (http://www.youtube.com/watch?v=EXuqUC-soQs ). இப்படத்திற்கு சலீல் செளத்ரி இசையமைத்தார்.  இப்படத்தினை தவிர பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை . இளையராஜாவின் இசையமைத்த 50 ஆவது படம் என்ற பெயரோடு வெளிவந்த படம் பாலுமகேந்திராவின் மூடுபனி.  இளையராஜாவும் ,பாலுமகேந்திராவும் கூட்டணி சேர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்தனர். இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் அவரின் மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் போன்ற படங்களுக்கு உறுதியான இடமுண்டு . நகைச்சுவைப்படங்களாக  அவர் எடுத்த ரெட்டைவால்குருவி, சதி லீலாவதி,ராமன் அப்துல்லா போன்ற படங்களும்  திரில்லர்  வகைப்படங்களாக அவர் இயக்கிய மூடுபனி, ஜீலி கணபதி போன்ற படங்களும், தன்னையே அவர் விமர்சித்து ஏசிக் கொண்ட நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களும் அவர் வணிக ரீதியலான திரைப்படங்களையும்  அவர் எடுப்பதில் வல்லவர் என்கிற முயற்சிகளாக நாம் கருதலாம். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் கூட மனதில் எப்போது தேங்கி நிற்கும் கலை அம்சங்களுக்கு அவர் குறை வைப்பதில்லை. 
 
மூன்றாம் பிறை திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்று தந்தது. சத்மா என்கிற பெயரில் அப்படத்தினை அவர் இந்தியிலும் எடுத்தார்.  வண்ண வண்ண பூக்களில்  காடுகளுக்கு நடுவில் பயணம் செய்யும் ரசனை மிக்க  இளைஞனை அவரால் மிக எளிமையாக திரைமொழி சட்டகங்களுக்குள் அடக்கி விட முடிந்தது. அவரது நாயகிகள் கதாநாயகனின் சட்டையை மட்டும் அணிந்து நடந்தது எங்கும் ஆபாசமாக பார்க்கப்படவில்லை. காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை பாலுமகேந்திரா அலட்சியப் படுத்தினார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும், அந்த வீட்டு இளைஞனும் யாருமற்ற வீட்டில் தனியாக ..இரசனையாக வாழ்ந்ததையும் (அது ஒரு கனாக்காலம் ), காட்டிற்குள் தனித்து ஒரு இளம் பெண்ணுடன் அருவியில் குளித்து,கதைகள் பேசி ஒன்றாக தூங்கியதையும் அவர் எவ்வித அதிர்ச்சி மதிப்பீடுகளையும் வலிந்து கூட்டாமல் ,அலட்டாமல் அழகாக எடுத்தார். ஒரு சராசரி இளைஞனின் கனவில் ஒரு இளம் பெண் வருவதுதான் இயல்பானது. அதை தான் நான் காட்டுகிறேன். இளைஞனின் கனவில்  சாமியார் வந்து ஆன்மீக பாடம் புகட்டுவது மாதிரி  எடுத்தால் தான் அது திணிப்பு என்று துணிவாக ஒரு பேட்டியில் சொன்னார்.
 
நேசிக்கும் பெண்ணோடு தனித்திருக்கும் ஒரு இளைஞன் என்ன செய்வானோ அதைத்தான் பாலுமகேந்திராவின் நாயகர்கள் செய்தார்கள் . தனது வாழ்க்கையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்துக் கொள்வதை அவர் விரும்பி செய்தார். ரெட்டைவால் குருவி,மறுபடியும் போன்ற படங்களில் அவர் தன்னை உள்நோக்கி பார்த்துக் கொண்டார். ஒளங்கள்,ஊமக்குயில்,யாத்ரா போன்ற மலையாளப்படங்களையும் ,கன்னடத்தில் கோகிலா, தெலுங்கில் நிரிக்‌ஷினா போன்ற  படங்களையும் அவர் இயக்கி தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழரான அவர் தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
 
அவரின் அழகியல் சார்ந்த திரைமொழியை  தொடர இன்றைய தேதியில் யாரும் இயக்குனர்கள் இல்லை. ஆனால் அவரது மாணவர்களான பாலா, வெற்றிமாறன், சீனு இராமசாமி போன்றோர்கள் தங்களின் உயரிய படைப்புகளால் பாலுமகேந்திரா என்கிற மகத்தான கலைஞனை நினைவூட்டுவார்கள். அவரும் இறுதிக் காலங்களில் திரைப்பட வகுப்புகளை நடத்தி தனக்கு பிறகும் தன்னியக்கம் நடக்க உழைத்தார்.  அவரது நிகரற்ற படங்களான வீடு,சந்தியாராகம் போன்ற படங்களின் பிலிம் சுருள்கள் பாதுகாக்கப்படாமல் வீணாகிப் போனதில் மிகுந்த சங்கடம் கொண்டார். திரைப்பட ஆவண காப்பகம் ஒன்றை அமைக்க கோரினார் . ஆனால் கோரிக்கைகள் இன்றும் காற்றில் தான் இருக்கின்றன.
அவரே ஒரு பேட்டியில் சொன்னதுதான்..
 
நானோ,மகேந்திரனோ,இளையராஜாவோ ஒரு நாளும் மறைய மாட்டோம். எங்களது படைப்புகள் அசையும். பேசும்.பாடும்.உங்களை கண்கலங்க வைக்கும்.  அதுவரை நாங்களும் இருப்போம்.
 
அவரின் நீங்கள் கேட்டவை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ஓ..வசந்தராஜா.. தேன் சுமந்த ரோஜா.. என்ற பாடல் . அப்பாடலை எங்கள் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் எடுத்து இருப்பார் . அக்கோவில் அழகானது தான். ஆனால் இத்தனை அழகா..என வியக்க வைத்தவர் பாலுமகேந்திரா..
 
அவர் கண்களால் சுவாசித்தார். எழுதினார்.இயக்கினார்.
 
அவருக்கு பிறகும் அவரது படைப்புகளில் அவரது கண்களை நாம் காண்கிறோம்.
 
தமிழனாக பிறந்து …மாபெரும் மேதையாக வாழ்ந்து…என்றும் முடியாமல் வாழ்கிற பாலுமகேந்திராவிற்கு  அன்பு முத்தங்கள்….
-மணி செந்தில்

பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.


ஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான்

பச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் தன்னை உதாசீனப்படுத்தும் கதாநாயகியை காதலிக்கிறார்.

அரசியல்,ரவுடீசம், அன்பு,வம்பு என சகல விதமான சராசரிக்கும் அப்பாற்பட்ட குண நலன்களோடு திரியும் கதாநாயகனை ஏற்பதில் துளிர்க்கும் காதலையும் மீறி கதாநாயகிக்கு தயக்கம் இருக்கிறது. அதை மறுப்பாக கருதி முரட்டுத்தனமாக கதாநாயகன் கையாள ரத்தம் வழியும் கிளைமாக்ஸ்.

படம் கதையின் நாயகனின் மரணத்தில் இருந்து துவங்கிறது. கதாநாயகனுக்கு நெருக்கமான மூவர் மற்றும் கதாநாயகியின் தங்கை ஆகியோரின் எண்ண ஓட்டத்தில் கதை முளைத்து வளர்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை அனைவரின் பார்வையிலும் ஒரே மாதிரியாக அமையாது என்பதை நண்பர் கீரா தனது திரைமொழியில் விவரிக்கிறார் . வசனங்கள் சில இடங்களில் மனதை கவர்ந்தும், சில இடங்களில் மனதை நெருடியும் இருப்பது சரிதான். ஆனால் சென்சார் கத்திரிக்கு உள்ளானதில் பழுது பட்டதாக மாறி இருப்பது வசனங்களின் ஆழத்தினை குறைக்கிறது. இறுதி பாட்டில் வரும் புலி வேசம், இராசபக்சே தோற்றம் என இயக்குனர் கீராவின் உணர்வு புரிகிறது.

அழுத்தம் இருக்க வேண்டிய பல காட்சிகள் மனதை பாதிக்காமல் நகர்வது படத்திற்கு பலவீனமே.தனது நண்பர்கள் மற்றும் தங்கைக்கு மட்டும் நல்லவனாக இருக்கும் கதாநாயகனை ஒரு வில்லன் அளவிற்கு நமது விழிகள் பார்த்து பழகி விட்டதால் அவனது மரணம் நியாயமாக நமக்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டிய பாதிப்பினை ஏற்படுத்தாமல் போனது உண்மை.தேசிய விருது நடிகர் அப்புக்குட்டியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

மற்றபடி புதியவர்கள். பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திரைவடிவம். புதுமையாக படைப்பினை அணுக வேண்டும் என்ற எண்ணம். தோழர் கீராவின் அசாத்திய தன்னம்பிக்கை. எம் அன்பிற்கினிய தோழர்கள் பலர் உழைத்திருக்கிறார்கள்.

தோழர்கள் வெல்லட்டும் .வாழ்த்துக்கள்.

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.

கோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான்.

.

எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தினை அளிப்பதாக இருந்திருக்கின்றன. வாசகன் மனநிலையை தக்க வைத்து நகர்த்திச் செல்லும் புதினப் படைப்பாளியின் உத்திகள் அப்படியே திரைக்கதை ஆசிரியருக்கும் பொருந்தவன அல்ல. புதினத்தினை திரைமொழியாக்கும் போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிக் கொள்வது என்பது சவாலான காரியம் . சவாலினை எதிர்க்கொண்டு துணிந்து களம் இறங்கியுள்ள வ.கெளதமனை நாம் மனதார பாராட்டலாம்.

.

தொன்ம கதையொன்றின் நம்பிக்கையிலிருந்து கதை புறப்படுகிறது . தொன்ம கதை விவரிப்பிற்கு பயன்படுத்தப் பட்ட ஒவியங்களின் நேர்த்தியில் இருந்தே படம் நம்மை ஆக்கிரமிக்க துவங்குகிறது. சகோதர –சகோதரி பாசத்தினை காலங்காலமாக நாம் திரைப்படங்களில் சந்தித்து வருகிறோம். எத்தனை முறை நம் முகத்தினை கண்ணாடியில் நாம் பார்த்தாலும் அலுக்காதததை போல…நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ..மீண்டும் பல்வேறு கோணங்களில் இருந்து தரிசிக்கும் போது ஆர்வமடைகிறோம். இன்றளவும் பாசமலர் நம்மை கண் கலங்கத்தான் வைக்கிறது. அதே போலத்தான் மகிழ்ச்சியும். கொண்டாடி வளர்த்த பெண் புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகி திண்டாடிப் போகையில் அவளது உயிருக்குயிரான சகோதரன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் திரைக்கதையின் ஒரு வரி .

.

விழிகளை குளிர வைக்கும் பசுமை நிறைந்த நாகர்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது திரையை அழகாக்குகிறது . பசுமையாய் விரிந்து கிடக்கும் இயற்கையை ஒளிப்பதிவாளர் அப்படியே அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் படிமமும் இயற்கையின் அழகோடு படமாக்கப் பட்டிருப்பது அழகு. சகோதரியின் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்கும் கதையின் நாயகனாக இயக்குனர் கெளதமன். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் போது ஏற்படும் படபடப்பு அதிசயமாக கெளதமனிடம் காணமுடியவில்லை. அதீதமாக உணரப்பட்டு விடக் கூடிய சோகக் காட்சிகளில் கூட அளவாகவே உணர வைத்திருக்கும் கெளதமனின் சாமர்த்தியம் நமக்குப் புரிகிறது. தன் உயரத்தினை புரிந்துக் கொண்டு நேர்த்தியாக கெளதமன் செயல்பட்டிருப்பது நம்மை கவருகிறது. சாதீய இறுக்கங்களினால் காயப்படுத்தப்படும் பாத்திரமாக செந்தமிழன் சீமான் வருகிறார். சீமானின் பெருங்கோபமும் ,பேரன்பும் வெளிபடும் வகையில் அவரது கதாபாத்திரம் மிளிர்கிறது . கோபம் மிகுந்த காட்சிகளில் சீமானின் ஆவேசம் அடங்க மறுக்காமல் பிறீடுவதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். சமூக இழிவுகளை துடைத்தெறிய துடிக்கும் சீமான் தன் நண்பனிடம் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய்..மிக தெளிவாய் துணிவுடன் ஒரு நொடியில் முன் வைக்கும் கோரிக்கை நம்மை கைத்தட்ட வைக்கிறது . மற்ற படங்களில் ஒப்பிடுகையில் அஞ்சலியின் கவர்ச்சி சற்றே அதிகம் என்றாலும் அவரின் விதவிதமான முக பாவனைகள் அழகு.

.

நம் வாழ்க்கையில் நாம் பெண்களுக்கென அளித்துள்ள இடத்தினை எதனாலும் அளவிட முடியாது. பெண்களை சார்ந்தே சமூகம் இயங்கிறது. ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்துள்ள சங்கிலி பிடியில் இருந்து பெண் விடுதலைப் பெற எத்தனை விதமான போராட்டங்களை …அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது..? .. கதாநாயகனின் சகோதரி மேல் அவரது கணவன் நிகழ்த்தும் மூர்க்கமான வன்முறையில் இருந்து விடுதலைப் பெற சாவினையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை முயற்சியினை காரணங்காட்டி நிரந்தரமாக அவளது பெற்றோர் வீட்டிற்கே துரத்தி விடுகின்றான் கணவன் . எதனால் தான் தண்டிக்கப்படுகிறோம் என தெரியாத நம் வீட்டின் பெண்கள் போலவே அவளும் இருக்கிறாள். தன் சகோதரிக்காக காதலையும் இழந்து நிற்கும் கதாநாயகனிடம் அவனது புரட்சிகரமான தீர்வினை அறியும் அவனது முன்னாள் காதலி தற்போது வேறு ஒருவரின் மனைவியாக வரும் அஞ்சலி “ எல்லாம் முன்னரே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் “ என வலியோடு சொல்லும் போது நம் சொந்த வாழ்க்கையை அப்படியே ஒரு நொடிக்குள் மீள் பார்வை பார்த்து விடுகிறோம்.குறிப்பாக கதாநாயகனின் தந்தை தன் மகளின் திருமணத்திற்காக விற்று விடப்போகும் நிலத்தில் ..காற்றிலாடும் பசும் நெற்கதிர்களை கட்டி அணைத்தவாறே கண்கலங்கும் காட்சி கவிதை . கண்கலங்கி விட்டேன்.

.

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி அண்ணன் எழுதிய ‘உச்சுக் கொட்ட’ என்ற பாடலும் வைரமுத்து எழுதிய ‘ ஊத்துத் தண்ணி ஆத்தோட ‘ என்ற பாடலும் சிறப்பாக இருக்கின்றன. படத்தொகுப்பும் , ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.

.

படத்தில் குறைகளே இல்லையா என்றால்…நுட்பமான குறைகள் இருக்கின்றன. பிரகாஷ்ராஜினை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகனின் தங்கை திருமணம் ஒரு போட்டோ மூலமாகவும், சட்டென வந்துப் போகும் ஒரு வசனம் மூலம் வந்துப் போவது சற்று குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. கால மாற்றங்களை காட்சிமயப்படுத்துதலில் சற்று குழப்பங்கள். விடுங்கள். இப் படத்தின் திரைமொழி முன் வைக்கும் அரசியல் இக் குறைகளை காணாமல் அடித்து விடுகிறது . இறுதி காட்சியில் சீமானின் மகனாக வரும் ‘ பிரபாகரன்’ இயக்குனரின் மாறா இனப் பற்றை காட்டுகிறது. சாதிக்காக துடிக்காமல் …சாதிக்க துடியுங்கள் என்றும்..ஓடாத மானும்..போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் மிதமான குரலில் அழுத்தமாக உரைத்து படத்தினை முடித்து வைக்கிறார் சீமான்.

.

வ.கெளதமன் என்ற இளம் படைப்பாளி ஒரு வாழ்க்கையை திரைப்படமாக நுட்பமான காட்சிகளால் உருவாக்கி நம் முன்னால் வைத்திருக்கிறார். சாதீயத்தினை உடைக்க துணியும் புரட்சிக்கரமான கதை இது. ஆடம்பரங்கள் இல்லாமல் ..ஒரு எளிய திரைமொழி மூலம் ஒரு வலிமையான கருத்தினை முன் வைக்கிறார் கெளதமன். நம் வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கேடு கெட்ட குப்பைகளை திரைப்படங்களாக்கி திரையரங்குகளை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தும் ‘தந்திரன்ங்களுக்கு’ மத்தியில் ‘மகிழ்ச்சி’ நம்மை ஆறுதல் படுத்துகிறது.

.

மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி பண்பாட்டு சிதைவிற்குள்ளாகி இருக்கும் நம் தமிழினம் மரபு சார்ந்த வாழ்க்கையை முன் வைக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலமாக தன்னைத் தானெ மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளை துவங்கும் என நம்பலாம். இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எண்ணற்ற குடும்பங்கள் சிதைவுறும் இக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சி திரைப்படம் நம் முன்னால் நிறுவ முயலும் பாசமும் … அது எழுப்பும் உணர்வும் மிக முக்கியமானவை.நெகிழச் செய்பவை.

தலைமுறைகளை தாண்டியும் பசுமையும் ,பாசமும் நிறைந்த வாழ்க்கை ஈரத்தோடு இன்னும் சாரம் குறையாமல் இருக்கின்றது என்பதை கணிணித் திரைகளில் உலகினை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வாழ்வியல் பாடமாக மகிழ்ச்சி திரைப்படம் இருக்கிறது. இனப்பற்று மிக்க படைப்பாளியான கெளதமனும்..படத்தினை தயாரித்த அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணனும் வரவேற்கப் பட வேண்டியவர்கள். வரவேற்கிறோம்.

.

மகிழ்ச்சி .வெல்லும்

வென்றாக வேண்டும்.

மகிழ்ச்சி.

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.

தமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.

கால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.

அண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

நாம் தமிழர்.

நன்றி.
தங்கள்

மணி .செந்தில்

.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .

பழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. மற்றபடி மனோஜ், பத்மபிரியா, கனிகா ,சுமன் என விரிவான நட்சத்திர கூட்டம் மலையாள மண்ணிற்கே உரிய மிகை இல்லாத நடிப்பில் மிளிர்கிறார்கள். இசை நம் இளையராஜா. குன்றத்து எனத் தொடங்கும் அந்த பாடலின் இசை மெய்க்குள் புகுந்து மனதை மயக்கச் செய்கிறது.பின்னணி இசையிலும் இளையராஜா தான் மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மலையாள பண்பாட்டினை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி இருப்பது திரைமொழியின் இயல்பான நகர்விற்கு உதவுகிறது. எளிய ஆங்கில வசனங்கள் பல வருகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக அக்காட்சிகளில் மட்டும் தமிழில் உதவி தலைப்பு (sub-title) பதித்து இருக்கலாம்.

பழசிராஜா கதை மிக எளிமையான ,நமக்கு ஏற்கனவே பழக்கமான கட்டபொம்மன் கதைதான். வரி கொடுக்க மறுக்கும் கேரள வர்ம பழசிராஜாவினை தனது சர்வாதிகார பலத்தினால் அடக்க துடிக்கிறது ஆங்கில ஏகாதிபத்தியம். அதை எதிர்த்து பழசிராஜாவும், அவரது ஈடு இணையற்ற படையினரும் போராடி வீரமரணம் எய்கின்றனர். காட்டிக் கொடுக்க இன துரோகியாக சுமன் கதாபாத்திரம்.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். மக்களை நினைக்கும் தலைவன். அவரின் விசுவாசமான தளபதிகள். காட்டிக் கொடுக்க துரோகி. மண்டியிடாத வீரம் உடைய தலைவன் மக்களை தன்னை விட்டு போக சொல்லி வலியுறுத்தும் போதும் , அந்த அடர்ந்த காட்டின் நடுவே உணர்வின் ஊற்றாய் தலைவன் திகழ்வதை காணும் போதும் நமக்கு ஈழம் நினைவிற்கு வராமல் இருக்கமுடியாது.
உலகம் முழுக்க ஏதோ பகுதியில் சிந்தி சிதறிக் கிடக்கிற நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஈழம் என்ற வலியையும் , நம் தலைவர் பிரபாகரன் குறித்த பெருமிதத்தினையும் சுமந்தே வாழ்கிறோம். எதிரியாக வரும் ஆங்கில அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விருந்து உபசரித்து அனுப்பும் காட்சியில், பிடிபட்ட சிங்கள வீரர்களை கண்ணியமாக நடத்திய நம் தலைவரின் கண்ணியம் தெரிகிறது. இப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. எந்த விஷயமும் எனக்கு நம் தேசிய தலைவர் குறித்த பெருமிதத்துடன் தான் நகர்கிறது. அச்சமயங்களில் நான் கண் கலங்கி விடுகிறேன். பழசிராஜா திரைப்படத்தில் அழகியலுக்காகவும், கதாபாத்திர வலுவிற்காகவும் புனைவு இருக்கலாம். ஆனால் சமகாலத்தில் நம் தேசிய தலைவர் எவ்விதமான மிகைப் படுத்தலும் இல்லாமல் இயல்பாகவே அறம் காக்கும் சான்றோனாய் வாழ்வது உண்மையில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமைதான். பழசிராஜா திரைப்படத்தில் பெண்கள் போரிடுகிறார்கள். கடைசி நொடி வரை நம்பிக்கை இழக்காமல் தியாகம் செய்ய தயங்காமல் தளபதிகள் போர் புரிகின்றார்கள் .இவை அத்தனைக்கும் நம்மிடத்தில் மாவீரர்களாய், கரும்புலிகளாய், பெண் புலிகளாய் வாழ்ந்த நம் ரத்த உறவுகள் உதாரணமாக இருக்கிறார்கள். மலையாள மண்ணிற்காக இரண்டு நூற்றாண்டு முன்னால் இருந்த ஒரு வீர வரலாற்றை திரைப்படமாக எடுத்த்திருக்கிறார்கள். எங்களின் போராளிகளோ சம காலத்து சாட்சிகளாக ,எங்களின் பெருமைமிகு அடையாளங்களாக , எங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த வேட்கையாக உறைந்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கான தேசம் தமிழீழ தேசம். அதை நாங்கள் எந்த விலைக் கொடுத்தாவது , எங்கள் மாவீரர்களின் நினைவுகளோடு அடைந்தே தீருவோம்.
மற்ற படி பழசிராஜா – ஒரு தமிழனுக்கு ஈழம் குறித்த உணர்வினையும், வலியினையும், தலைவர் குறித்த பெருமிதத்தினையும் அளிக்கும் திரைப்பட அனுபவமாக கண் முன்னால் விரிகிறது.
கடைசியாக ஒன்று: முதல்வர் கருணாநிதி இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு மம்முட்டியை பாராட்டினாராம். இது தான் எனக்கு ஆச்சர்யம். குற்ற உணர்ச்சி அல்லவா வந்திருக்க வேண்டும்?

பேராண்மை -புனைவின் அரசியல்

சமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் கதாநாயகனின் கதாபாத்திரம் திரையில் ஏதாவது ஒரு காட்சியில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தனது குரலை பதிவு செய்யும் என ஆவலாய் நாம் அமர்ந்திருந்தால்…ஏமாற்றம் தான் .மேலும் இந்தியக் கொடிக்காவும், நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கவும், துப்பாக்கி தூக்கி தாக்கவும் அர்ஜீனும், விஜயகாந்தும் போதும். அதற்கு அரசு இயந்திரங்களால் சூறையாடப்படும் ஆதி சமூகத்தின் வன மனிதன் தேவை இல்லை. வகுப்பறையில் மார்க்சிய கூறுகளை எளிமையாக விளக்கும் கதாநாயகன் காட்டின் நடுவே அதிகார மையத்தின் சின்னமாக இருக்கும் இந்திய நாட்டிற்கு உயிரைக் கொடுப்பதாக சூளுரைப்பதும், சாதீய ஒடுக்குமுறையினை சகித்துக் கொண்டு மெளனித்திருப்பதும் முரண்களே.. தேசிய இனங்களின் விழிப்பு நிலை சமீப காலமாக உச்ச நிலைக்கு விரையும் இக்காலக் கட்டத்தில் பேராண்மை நிறுவ விரும்புவது எவற்றை..?
1.இந்திய ஏவுகணையை தகர்ப்பதற்காக காடு மலை ஏரி என கண்ணன் தேவன் டீக்காக அலையும் பி.டி.உஷாவினை போல அலையும் சர்வதேச கூலிப்படைக்கு எதிராக போராட விளிம்பு நிலை மனிதர்களும் தயாராக வேண்டும்- தங்களுக்கு எதிராக நாடும், அதன் ராணுவ,காவல் கட்டமைப்பு இயந்திரங்களும் நிகழ்த்தும் வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அவர்களும் நாட்டினை காக்க போராட வேண்டும் என்று ஜனநாதன் சொல்ல வருகிறாரா?
2. ஆதி வனத் தமிழின பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறையை விட இந்திய தேசியம் உயர்வானது என்று கதாநாயகன் மெளனமாக சகித்திருப்பதும், அதை காக்க போராடுவதும், இந்தியா எனும் பெருமிதத்திற்கு முன்னால் எளிய மக்களின் மீதான சாதீய, அரசு வன்முறை எதிர்வினை புரியத் தக்கதல்ல என்பதனை இறுதிக் காட்சி வரை உறுதி செய்வதன் மூலம் மக்களை விட அரசின் எல்லையற்ற அதிகாரம் ( THE KING CAN DO NO WRONG) என்பதை ஜனநாதன் நிறுவ முயல்கிறாரா.?

தெளிவில்லாத திரைமொழியும், அது நிறுவ முயலும் தத்துவமாக இருக்கும் இந்திய தேசிய உணர்வு காட்சிகளும் நம்மை மிகவும் சோர்விற்கு உள்ளாக்குகின்றன.. உன்னைப் போல் ஒருவன் ஒரு இந்திய பார்ப்பன இந்துத்வா குரலாய் ஒலித்தது..பேராண்மை இந்திய தேசிய மேலாதிக்கத்தினை எளிய மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறைகளை மெளனமாக கடப்பது போன்ற வழிமுறைகள் மூலம் நிறுவ முயல்கிறது. முன்னதை விட பின்னது மிகவும் அபாயகரமானதொன்றாக நான் உணர்கிறேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் ,ஆணிவேர்,கோவில் பட்டி வீரலட்சுமி ஆதிக்க எதிர்ப்புணர்வு போன்ற படங்களுக்கான இந்திய தேசியத்தின் உரத்த, சாசக மறுமொழியாக பேராண்மை இருக்கின்றது.

இயற்கை, ஈ போன்ற படங்களை வைத்து பேராண்மையை கடக்க முடியாது. தமிழ் மொழி கல்வி பயின்ற கதாநாயகிக்கு மட்டும் அந்த ஆதி இளைஞன் மீது காதல் வருவதாக சித்தரிப்பது போற்றத் தக்கது என்றால் அந்த கதாநாயகியும் மற்ற ஆங்கில கல்வி பயின்ற மேல்சாதி,மேல் வர்க்க தோழிகளுக்கு கட்டுப்பட்டவளாக காட்டப்படுவது சலிப்பை தருகிறது. தமிழ் மொழி பயின்றவள் என்றால் திரை மொழியில் பலவீனமான ஒரு கதாபாத்திரமாக சித்தரிப்பது பல படங்களில் தொடர்வது போல இதிலும் தொடர்கின்றது. மற்றப் படி என்.சி.சி மாணவிகளுக்கு ஏவுகணை தொழிற்நுட்பமும், அதி நவீன இயந்திர துப்பாக்கிகளும் கைவரக் கொடுக்கும் கல்வி நம் நாட்டில் எங்கே இருக்கிறது.., அதி பாதுகாப்பு உடைய ஒரு இடத்தின் அருகில் மிக எளிதாக மற்றொரு ஏவுகணையை நிறுவுவது ….போன்ற துளைகள் நிரம்பிய திரைமொழியில் பேராண்மை வடிவேல் கண்கலங்க பேசும் ஒரு வசனத்திலும், உடல் ஊனமுற்ற அந்த ஆதி மனிதன் தன் கைகளால் நடந்து தாக்க முயல்கிற மூர்க்கத்திலும் – நின்று விட போராடுகிறது.

பிழைகள் அற்ற திரைமொழி சாத்தியமில்லைதான்.. ஆனால் பேராண்மை சாத்தியப்படுத்த முயலும் எதிர்வினையற்ற சாதீய, அரசு இயந்திரங்களின் வன்முறை காட்சிகள் மறுக்கவே இயலா பிழைகள் தான்.

நன்றி: தோழர்.விஷ்ணுபுரம் சரவணன்

Page 3 of 3

Powered by WordPress & Theme by Anders Norén