மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அண்ணனின் அன்பு.

ஆசிரியர் என்கிற தோணி.

ஆசிரியர் என்றால் என்ன என்கிற எளிய கேள்விக்கு, “கற்பித்தல் என்ற முறையில் மாணவர்களுக்கு அறிவு திறன் மற்றும் நல் ஒழுக்கத்தை பெற உதவுபவர்..” என விக்கிப்பீடியா கூறுகிறது. இதில் அறிவு, திறன் போன்றவை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுபவை என்றாலும், நல் ஒழுக்கம் என்பது வகுப்பறையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒரு சிறந்த ஆசிரியரை மாணவன் தன் வாழ்நாளில் மறப்பதில்லை.

ஒரு கல்லூரி பேராசிரியரின் மகன் என்கின்ற முறையில் என் தந்தையை சந்திக்க வருகிற எத்தனையோ மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை கண் பார்வை தெரியாத மாணவர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கை வைப்பதற்காக தன் ஆசிரியரான என் அப்பாவை தேடிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார்.

அவர் கல்லூரி படிப்பு முடித்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. என் அப்பா ஏதோ வேலை நிமித்தம் வெளியே போயிருந்த நேரம் அது. அவர் என் அலுவலகத்தில் என் தந்தைக்காக காத்திருந்தார். மெதுவாக பேச்சு கொடுத்து பார்த்தேன். தன்னைப் பார்வையற்றவர் என எல்லோரும் பரிதாபமாக பார்த்த போது அவரது ஆசிரியரான என் தந்தை தான் அவருக்கு நம்பிக்கை கொடுத்ததாக சொன்னார்.

இந்த வாழ்வில் நாம் கைவிடப்படுகின்ற தருணங்களில் எல்லாம் நாம் தேடி அலைவது நம்பிக்கை மிகுந்த சொற்கள் தானே. நம் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபரின் ஆன்மாவிலிருந்து வருகின்ற சொற்கள் தரும் நம்பிக்கைதான் நட்டாற்றில் கைவிடப்பட்ட நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறது.தன் ஆசிரியரை அந்தப் பார்வையற்றவர் நினைவு கூறும் போதெல்லாம் சற்றே உணர்ச்சிவசப்பட்டார் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

இன்னும் ஆழமாக அவர் மனதில் என் தந்தையின் உருவம் எப்படி இருக்கும் என நினைத்து வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு அடுத்ததாக அவர் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

“பார்வைத்திறன் உள்ள உங்கள் விழிகளை காட்டிலும் இன்னும் அதி துல்லியமாக என் ஆசிரியரின் உருவம் என் ஆழ் மனதில் வரையப்பட்டிருக்கிறது..” என்றார் அவர்.

எதையும் வெறும் விழிகளால் பார்ப்பதை விட மனதால் பார்ப்பது வலிமையானது தானே..

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே என் தந்தையார் வந்து விட்டார். என் தந்தை காலடி சத்தம் கேட்டவுடன், அதுவரை தன்னைக் கடந்த எந்த காலடி சத்தத்திற்கும் எழுந்து நிற்காத அந்தப் பார்வையற்ற மாணவர் எழுந்து நின்றார். தன் ஆசிரியரின் காலடி ஒலி அவருக்கு அவ்வளவு பரிச்சயமாக இருந்தது.

என் தந்தை வந்தவுடன் தன் மாணவனின் கரத்தை இறுக பற்றிக் கொண்டார். சில நொடிகள் அந்த இடம் அமைதியாக இருந்தது. என் தந்தைக்கு அது ஒரு உணர்வுபூர்வமான தருணம். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியில் இருந்தமைக்கான உச்சகட்ட அங்கீகாரத்தில் அவர் மிதந்து கொண்டு இருந்தார் என்பதை நெகிழ்ந்து கலங்கிய அவரது கண்கள் மூலம் நான் கண்டு கொண்டேன்.

…..

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் எனது இயற்பியல் ஆசிரியர் ஜெகதீசன். வழக்கமான பாட கற்பித்தல் முறையை தூக்கி எறிந்து விட்டு உரையாடல்கள் மூலமாக மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான கல்வி அமைய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” என்கிற குறளை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவனுக்காக தலைமை ஆசிரியரிடம் சென்று சண்டை போட்டுவிட்டு அவரது மேசையில் தன் மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு வந்து விட்டார்.அந்த மாணவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தலைமை ஆசிரியர் பொறுமை காக்க, மறுநாள் அந்த மாணவன் எங்கேயோ பணம் ஏற்பாடு செய்து கட்டணத்தை செலுத்தி விட்டான்.

நன்றி சொல்வதற்காக ஜெகதீசன் சாரை சந்திக்க வந்த அந்த மாணவன் கலங்கிக் கொண்டே .‌”எனக்காக மோதிரத்தை கொடுத்து விட்டீர்களே சார்..” என சொல்ல, “அந்த மோதிரம் தங்கம் என்ற உலோகத்தால் ஆனது. உனது படிப்பு அந்த உலோகத்தை விட மதிப்பு மிகுந்தது..”. எனக் கூறிய அவரது சொற்கள் இன்னும் எனக்கு நினைவில் நிற்கின்றன.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் எனது தமிழாசிரியர் விஜயராகவன். மாணவர்களை தனியார் நிறுவனங்கள் வெளியிடும் நோட்ஸ் வாங்குங்கள் என சொல்லும் ஆசிரியர்களுக்கு மத்தியில் தான் நடத்தும் பாடங்களிலிருந்து மாணவர்களுக்கான நோட்ஸ் எனப்படும் பாடப் குறிப்புகளை தயாரித்து எழுத வைப்பார். மிக சுவாரசியமாக வகுப்புகளை வகுப்பறையில் அரசியல் பேசுவார். தேர்தல் முறை மூலம் வகுப்பு தலைவனை தேர்ந்தெடுப்பார்.

அந்தக் காலகட்டத்தில் போலியோ பாதிக்கப்பட்ட என் கால்களுக்கு உலோகத்தில் ஆன காலிபர் அணிந்திருப்பேன். என் உடல் சிரமத்தால் நான் வகுப்பு தலைவனாக மாற மறுத்தபோது, அந்த முறை என்னை வலுக்கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்து, வகுப்பு தலைவன் ஆக்கினார். இதற்கு எதிரே போட்டியிடும் மாணவனை அழைத்து சொல்லி இருந்தால் அவன் போட்டியிலிருந்து விலகி இருப்பான் தான். இது குறித்து கேட்ட போது, ” நீ போட்டி போட்டு வெல்வது தான் உனக்கான தகுதி. அது கருணையால் எப்போதும் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இரு.‌” என்று சொன்னார்.

பள்ளி முடிந்தவுடன் வகுப்பறையில் அந்த காலிப்பரை சரி செய்து கொண்டு நான் வெளியே நடந்து வரும் வரையில் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டு நடந்து வருவார். நான் எழுதும் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் அவரது பிச்சை என இந்த நொடியில் நினைத்து நெகிழ்கிறேன்.

அதேபோல் எனது மூத்த வழக்கறிஞர் பலராமன். எந்தத் தருணத்திலும் அவர் என்னை விட்டுக் கொடுத்தது இல்லை. வாழ்க்கையின் அனைத்து விதமான பிழைகளையும் செய்துவிட்டு ஒரு நாள் மாலையில் அவர் வீட்டுத் திண்ணையில் படுத்து இருந்த போது, என்னை உள்ளே அழைத்துச் சென்று அவர் படுக்கையில் படுக்க வைத்தார். “நல்லா தூங்குடா.. எல்லாம் சரியாயிடும்.” என சொல்லிவிட்டு போனபோது என் கண்கள் நிறைந்து இருந்தன. ஏதோ ஒரு தருணத்தில் தூங்கி எழுந்த போது நள்ளிரவாகி இருந்தது. நான் எழுந்த சத்தம் கேட்டு விழித்த அவர் தனது இளம் மனைவியை அழைத்து எனக்கு கோதுமை தோசை சுட்டுத்தர சொன்னார். அக்கால கட்டத்தில் எல்லாராலும் கைவிடப்பட்ட நான் அன்றைய இரவில் அந்த கோதுமை தோசையால் தான் உயிர்ப்பித்தேன்.

“எல்லாம் சரியாகிவிடும்..” என அவரது சொற்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

….

அண்ணன் சீமான். வெறும் சொற்களால், அழைத்தலால் மட்டும் அவர் அண்ணனாக இருந்து விடுவதில்லை என்பதுதான் அவரின் முக்கியத்துவம். கட்சியிலே இணைகின்ற ஒரு எளிய தம்பிக்கு அண்ணனாக மாறுகிற அந்த தருணம் உள்ளொளி நிறைந்த உணர்வுபூர்வமானது. தம்பிக்கு மட்டும் அண்ணன் அல்ல. அவனது பெற்றோர்களுக்கு அவர் தான் மூத்த மகன். அவனது உறவினர் அனைவருக்கும் அவரும் உறவினர். நெகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட சிக்கலான இந்த உணர்ச்சி முடிச்சினில் தான் நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

” நாளும் பல நற்செய்திகள் ” என்று அவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு நாளையும் புதிதாக்குபவை. எல்லோரையும் வாசிக்க சொல்லும் அவர் தன் மேடையை மாபெரும் வகுப்பறையாக மாற்றுகின்ற மாபெரும் ஆசிரியர். அந்த வகுப்பறையில் அவர் அரசியல் சூழலியல் பொருளியல் என தொடாத பாடங்களே இல்லை. தலைப்பை சார்ந்து பேசுகிற ஒரே ஒரு அரசியல் தலைவர் இன்று தமிழ்நாட்டில் அவர் மட்டும்தான்.

தனிப்பட்ட வாழ்வில் நிறைய துரோகங்கள் முதுகுக்கு பின்னால் நடந்து விட்டன என உணர்ந்த ஒரு இரவில் அண்ணன் சீமானுக்கு என் மனவலி தாங்காமல் அழைத்தேன்.

அவரிடம் எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே இருந்தேன்.

“என்ன ஆச்சுடா..” என்று கேட்டார் அண்ணன். “துரோகம்னே .. ” என்று கலங்கியவாறு சொன்ன போது அண்ணன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். “நம் தலைவர் என்றால் சுட்டு விட்டுப் போய் விடுவார். நம்மால் அப்படி செய்ய முடியாது. நாம் விட்டுவிட்டு போய்விடுவோம்..” என்று அவர் மிகுந்த பக்குவத்துடன் சொன்னதைத்தான் என் வாழ்நாள் பாடமாக கடைபிடித்து வருகிறேன்.

எல்லாவற்றையும் கடப்பது என்பது வாழ்வில் மிக மிக முக்கியமானது. அதனால்தான் வாழ்க்கையை பெரும் நதிக்கு ஒப்பிடுகிறார்கள். துயரங்களும் ,துன்பங்களும் வெள்ளப் பெருக்காக பெருக்கெடுத்து ஓடும் இந்த வாழ்வென்ற நதியை கடப்பதற்கு நமக்கு கிடைத்த தோணிகள் தான் நம் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் தான் நம்மை வழி நடத்துகிறார்கள். வழி தவறும் கணங்களில் அவர்களது சொற்கள் நமக்கு திசைகாட்டிகளாக மாறுகின்றன.

“அறிவு என்பது ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வது. ஞானம் என்பது ஏதோ ஒன்றை கைவிடுவது..” என்கிற ஜென் தத்துவம் ஒன்று உண்டு.

அறிவையும் ஞானத்தையும் ஒரே நேரத்தில் அடைவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

அது நம் ஆசிரியரின் கண்கள். அதில் சரணடைந்தோர் யாரும் சங்கடப்படுவதில்லை.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

மச்சானின் பிறந்தநாள் 2023

ஆதி காலமொன்றில்

அதுவாகவே தழைத்திட்ட

பெரும் அடர்வனக் காட்டின்

பசுமையேறி இருள் வெளியில்

கிறங்கிப் பறக்கும்

ஒற்றை மின்மினி போல..

எல்லையற்ற நேசத்தின்

மது அருந்தி காலமெல்லாம்

உனதன்பின் மேகத்தில்

மிதந்து கொண்டிருக்கிறேன்.

உனக்குப் பிடித்ததெல்லாம்

எனக்கும் பிடிக்கும் என்பது போக

எனக்குப் பிடித்ததெல்லாம்

உனக்கும் பிடித்தது என்பதாகி

உனக்கும் எனக்கும் பிடித்தது யாதெனில் உனக்கு என்னையும். எனக்கு உன்னையும் தான்.

இதற்கு மேல் இந்த கவிதையை விவரித்து சொல்ல முயன்றால்

அலைவரிசை பிசகக் கூடும். ஏனெனில் சொற்களுக்கு அப்பால்

நாம் மட்டுமே உணர்ந்து கொள்கிற

இந்த வாழ்க்கை வார்த்தைகளை எல்லாம் தாண்டிய நம் பேரன்பின்

சாரல் நனைந்தது.

நனைந்துக் கொண்டே

இருப்போம்.

எதனாலும் விலகாத

தனித்து தெரியாத

ஒற்றை ஆறு

வரையும் நீர் ஒழுங்கின்

இரு துளிகள் நாம்.

அடுத்தடுத்து மீட்டப்பட்டாலும்

அலைவரிசை தப்பா

அதிரும் வீணையின்

பிரிக்க இயலா

உதிரும் இசை வரிசை நாம்.

….

திரியும் ஞாலமெல்லாம்

திசை சேர்ந்திருப்போம்.

வாழும் காலமெல்லாம்

கை கோர்த்திருப்போம்.

….

அன்பு முத்தங்கள் தல.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

புலியின் உறுமல்.

அங்கே..

மக்கள் கடலுக்கு

நடுவே புரட்சிப் பதாகை

படபடக்க கொள்கைப்

படகாய் அவன் மிதந்து

கொண்டிருக்கிறான்.

இங்கே..

இருட்டு கரையின்

ஓரத்தில் சில

இறுமல்கள்.

புலியின்

உறுமல்

வெடித்து முழங்கும்

ஒரு

கணத்தில்..

இறுமாப்பு

இறுமல்களும்,

முகவரியற்ற

செறுமல்களும்

இல்லாமல் போகும்

காலமும் அவர்தான்.. களமும் அவர்தான்.

நாம் தமிழர் கட்சி வரலாற்றில் திருப்பூருக்கு என்றுமே தனி இடம் தான். 13 வருடங்களுக்கு முன்பாக ஒரு மழை நாளில் திருப்பூரில் அண்ணன் சீமான் கொட்டும் கொட்டும் மழையில் உணர்வு தீ கொதிக்க அனல் தமிழில் முழங்கிய ஆவேச பேச்சு இன்றும் நம் நினைவலைகளை விட்டு நீங்க வில்லை.

இன்றும் மழையின் மிரட்டலோடு நடந்த இந்த கூட்டத்தில் அண்ணன் சீமானின் பேச்சு இதுவரை இல்லாத மகத்துவம் நிறைந்த தனித்துவம். கூடி நின்ற மக்கட் பெருங்கடல் திரண்டு இருந்த அந்த மாபெரும் இடம் அண்ணன் சீமானின் கம்பீர தமிழுக்கு முன்னால் ஒரு மாபெரும் வகுப்பறையாக மாறிப் போனது. ஒரு தேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் போல புள்ளிவிபரங்களோடு, அவ்வப்போது துள்ளி வருகின்ற நகைச்சுவை கிண்டல்களோடு அவர் நடத்திய சூழலியல் பொருளாதார வகுப்பு கடல் போல் திரண்டு இருந்த ஒரு வெகுஜன கூட்டத்திற்கு மிக மிகப் புதிது.

ஒரு தலைமைத்துவம் நிறைந்த மாபெரும் பேச்சாளர் ஒருவர் “தற்சார்பு பொருளாதாரம்” என்ற மிகக் கடுமையான தலைப்போடு ஒரு வெகுஜன கூட்டத்தை அணுகுவது என்பது மிக மிக ஆபத்தானது. எந்த நேரமும் பேச்சு தன் அலைவரிசையில் இருந்து மாறி, மக்களின் ஆர்வத்தை தூண்டாமல், திசை மாறுமானால் அந்தக் கூட்டம் அப்படியே கலைகின்ற சங்கடமும் நிகழ்ந்துவிடுகிற சூழல்.

ஆனால் நம் அண்ணன் சீமான் தான் “சொல்வல்லான்” ஆயிற்றே. கட்டமைக்கப்பட்ட தேர்ந்த சொற்கள் மூலம் ஆங்காங்கே இடையில் தூவப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் மூலம் அந்த மக்கட்பெரும் கடலை தனது தன்னிகரற்ற மொழியாற்றலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர்.

வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். தங்கள் துயர் துடைக்க இறுதியாக பிறந்த நம்பிக்கையோடு காலங்காலமாய் வீழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் கைகோர்க்க தயாராகி வந்து நின்றார்கள்.

கூட்டத்தில் உணர்வு அலைவரிசையை அண்ணன் சீமான் தான் தீர்மானித்தார்.அவர் சிரித்தால் கூடியிருந்த மக்கள் கூட்டமும் சிரித்தது. அவர் கம்பீரமாய் கை உயர்த்தினால் அங்கே கூடி இருந்த அவ்வளவு பேரும் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். அவர் புள்ளி விவரங்களை துல்லியமாக அடுக்கிக் கொண்டே விவரிக்கும் போது முன்வரிசை மாணவன் போல ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்தார்கள்.

தொலைக்காட்சியில் இதை கவனித்துக் கொண்டிருந்த என் தந்தை மூத்த தமிழ் பேராசிரியர் முனைவர் ச.மணி மிகுந்த வியப்புக்கு உள்ளானார். அவர் சுமார் 45 வருடங்கள் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரு பேராசிரியருக்கு இருக்கும் பெரும் சவாலே வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களோடு ஒத்த அலைவரிசையில் தொடர்பாவதுதான். அந்த அலைவரிசை சிறிது பிசகினாலும் மாணவர்கள் வெறுக்கத்தக்க வகுப்பாக அந்த வகுப்பு மாறிவிடும் என்பது மட்டுமில்லாமல் அந்தப் பேராசிரியரும் தங்களுக்கான நம்பிக்கையை இழந்து விடுகின்ற துயரமும் நேர்வது உண்டு என அவர் சொன்னார்.

ஆனால் சீமானுக்கு அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு தனிப்பட்ட முறையில் ஒத்த உணர்வு அலைவரிசையில் எளிதாக தொடர்பானது ஒரு பேராசிரியர் என்கின்ற முறையில் அவருக்கு மிகுந்த வியப்பாக இருந்தது என்று சொன்னார். அது வெறும் கூட்டமல்ல. மாநாடு போல மக்கள் திரண்டு இருந்த அந்த இடம் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு வகுப்பறையாக நினைத்துக் கொண்டுதான் சீமான் அங்கே தற்சார்பு பொருளாதாரம் என்கின்ற தலைப்பில் பொருளாதார வகுப்பு எடுக்கிறார் என அவர் நுட்பமாக சொன்ன போது ஒரு அரசியல் மேடையை வகுப்பறையாக மாற்றிக் கொண்ட ஒரு நம்பிக்கை தலைவன் நம்மிடையே பிறந்து விட்டான் என்கின்ற பெரு மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

குறிப்பாக மறைந்த பொருளாதார மேதை ‘ஜே சி குமரப்பாவின் தாய்மை பசுமை பொருளாதார கொள்கையை’ மிக மிக நுட்பமாக அதே சமயத்தில் எளிமையாக விளக்கிய அவரது தமிழ்

மேதமை நிறைந்தது.

இத்தனைக்கும் அவரைச் சுற்றி ஆயிரத்தெட்டு விமர்சனங்கள், அவதூறுகள் என பொய்மையும், சூழ்ச்சியும் நிறைந்த ஏச்சுபேச்சுகள் படையெடுக்கின்ற காலம் இது. நம்பிக்கை கொண்ட அந்த மனிதனை இது போன்ற வெறும் விமர்சனங்களால் வீழ்த்தி விட முடியாது என ‘திராவிடத் திருவாளர்’ ஒருவரே கட்டுரை ஒன்றை எழுதியிருந்த காட்சியையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

அவரது கண்கள் முழுக்க அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான நம்பிக்கை மிகுந்த துடிப்பினை மட்டுமே காண முடிந்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நாட்கள் நானும் அவரோடு இருந்த அந்த நேரத்தில் கூட உணவு உண்ணும் பொழுதுகளில் கூட அரசியலை மட்டுமே பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேச்சில் அவர் சொல்வது போல அவரது எண்ணம் செயல் மூளை அனைத்திலும் இன நலன்/ இன மீட்சி போன்றவை நிறைந்து இருந்து அவரை உறங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் மேடையை வேறு திசைக்கு அண்ணன் சீமான் திருப்பி இருக்கிறார். கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று இனி உளற முடியாது. வெறும் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு “ஆக அந்த வகையிலே..” என பேசி வளர முடியாது.ஒவ்வொரு மேடையையும் அண்ணன் சீமான் போல வகுப்பறையாக மாற்றுகின்ற வல்லமை கொண்ட தலைவன் தான் இந்த மண்ணுக்கு தேவை. இதில் முக்கியமானது என்னவென்றால் சமகாலத்தில் அவர் மட்டும்தான் அவ்வாறு இருக்கின்றார். அவருக்கு போட்டியாக வாசிப்பறிவு கொண்டு மேடைகளை வகுப்பறைகளாக மாற்றி பேராசிரியராக முழங்க இங்கே யாருமே இல்லை.

இனி காலமும் அவர்தான். களமும் அவர்தான்.

இனி அவர் தீர்மானிக்கிற திசையில் தான் தமிழகத்து அரசியல் அமைய இருக்கிறது என்பதுதான் இன்றைய திருப்பூர் கூட்டம் மூலம் அண்ணன் சீமான் விடுத்திருக்கின்ற செய்தி.

சமூக வலைதளங்களில் சகல காலமும் வசிப்போருக்கு..

சமூக வலைதளங்களில் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் சில பலரது பதிவுகளை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் தங்கள் அலைபேசி திரைக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். யாராவது நினைவூட்டினால் மறுத்துவிடுவார்கள்.

இதில் தான் அவர்களுக்கு சகலமும். நகைச்சுவை கிண்டல் கேலி கோபம் காதல் காமம் நட்பு உறவு பாராட்டு விலகல் புலம்பல் என சர்வ உணர்ச்சிகளின் சதிராட்டத்தை அலைபேசி திரைகளுக்கு உள்ளாகவே அவர்கள் அடக்கி விடுவார்கள்.

எங்கள் பகுதியில் அலைபேசியில் மட்டும் எங்கள் கட்சியில் இயங்கிய ஒருவர் இருந்தார். அவர் அலைபேசி வாயிலாகத் தான் கட்சியில் இணைந்தார். அலைபேசியில் தான் கருத்து சொல்வார். அந்த அலைபேசியிலேயே விமர்சனம் செய்வார். கட்சிக்காரர்கள் யாருக்காவது ஏதாவது குறை என்றால் இவர்தான் முதலில் சென்று அந்தக் குறை என்ன என கேட்டு தனக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவரை அந்தக் குறையில் சம்பந்தப்படுத்தி திட்டுவார். நேரில் கலந்தாய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைத்தால் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை அன்றைய தினம் தான் ஊரில் இல்லை என்பார். போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் அன்று அவரது அலைபேசி அமைதியாகிவிடும். நாங்களும் முடிவு செய்து எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் விமர்சன அலைகளுக்கு மட்டும் அவரிடத்தில் என்றும் குறை இருக்காது. ஒருமுறை அண்ணன் எங்கள் ஊருக்கு வந்தபோது இந்த முறையாவது அந்த “அலைபேசி நபரை” பார்த்து விடுவோம் என முயற்சித்து நேரில் வாருங்கள் அண்ணனை சந்திப்போம் என அழைத்தோம். ஆனால் தலைவர் ‘நைசாக’ எஸ்கேப் ஆகி வந்திருந்த ஒரு தம்பி அண்ணனோடு ஒரு புகைப்படம் எடுத்து பதிவு போட்டதில் சென்று “பலர் படம் எடுக்க முடியவில்லை” என இந்தப் பக்கமே வராத இவர்(!) குறை சொல்லி ‘இவர்கள் இப்படித்தான்’ என பொறுப்பாளர்களை திட்டி தன்னிச்சையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

பிறகு விசாரித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவருக்கு அலைச்சல் வெயில் மழை இரவு பயணம் போராட்டம் சிறை கட்சி என பலவற்றிலும் மிகுந்த அச்ச உணர்வு. அவர் எதற்கும் வர மாட்டார். வரவும் அவருக்கு அச்சம். ஆனாலும் கருத்து சொல்லியே ஆக வேண்டுமே.. அதற்குதான் அந்த அலைபேசி. இவர் போல எங்கள் அமைப்பில் மட்டுமல்ல. பல அமைப்புகளிலும் பல நபர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.

இப்படி அலைபேசி உரையாடல்களை உண்மை என நம்பி அதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிலரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக முகநூல் ஆதிக்கம் பெருகிய போது இதுபோன்ற நபர்களும் உருவானார்கள். முகநூலிலேயே அவர்களுக்கு சொந்த பந்தங்கள் ஏற்பட்டன. அதிலேயே அன்பு.அதிலேயே விரோதம். அதிலேயே பிரிவு. இப்படி உலகம் அவர்களுக்கு அந்த அலைபேசி திரைக்குள்ளாகதான்.

ஏன் நேரில் வரவில்லை என யாரும் அவர்களை கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் நேரில் வர மாட்டார்கள். ஒரு பொறுப்பு எடுத்து செய்யவும் அவர்களால் முடியாது. செய்பவர்களையும் அவர்களுக்கு பிடிக்காது. என்ன செய்வது.. தங்கள் கற்பனை படகில் ஏறி அலைபேசி முழுக்க புலம்பல்களை நிரப்பித் தள்ளுவார்கள்.

அமைப்புக்குள்ளாக இருக்கிற முரண்களை ஒரு அலைபேசி அழைப்பின் மூலமாக தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிவிட முடியும் தான். அப்படி பேசினால் அது இருவர் சம்பந்தப்பட்ட உரையாடல் மட்டுமே. அதற்கு வாய்ப்பு இருந்தும் பொதுவெளியில் பேசவும் எழுதவும் தான் அவர்களுக்கு விருப்பம்.

முகநூல் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நம்மை, நம் திறமைகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான அல்லது நமது செய்திகளை, வாழ்த்துக்கள் , ஆழ்ந்த இரங்கல் போன்ற உணர்வுகளை குறிப்பிட்ட நோக்கில் பரப்புவதற்கான ஊடகங்கள் மட்டுமே. இந்த மெய்நிகர் ஊடகங்கள் மூலமாக நமக்கான வாசகர்கள் நமக்கான பார்வையாளர்கள் போன்றவற்றை எளிதில் பெறுகிறோம். அந்த ஒரு வசதியை தவிர இதில் வேறு எந்த புண்ணாக்கும் இல்லை.

கட்சிக்கு உழைப்பவர்கள் எப்படி இருந்தாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டு போராடிக் கொண்டு எங்கேயோ கொடியேற்றிக்கொண்டு பலரை சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் நிறை குறைகள் நிரம்பிய மனிதர்கள் தான். குறைகள் ஏதேனும் இருப்பின் ஒரு அலைபேசி உரையாடல் மூலம் எளிதில் சொல்லி அதை களைந்து விடலாம் தான். ஆனால் பொதுவெளியில் எழுதி அவர்கள் குறைகளை மட்டுமே ஊதிப் பெருக்குவதன் அரசியல் வன்மம் தனிப்பட்ட கோபம் போன்ற மனித உணர்ச்சிகளை எல்லாம் தாண்டி அது ஒரு உளவியல் கோளாறு.

அலைபேசியை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள 1008 வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து விட்டு புறம் பேசுவதையும் குறை கூறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் அன்பர்களை காணும் போது உண்மையில் பாவமாக இருக்கிறது. இவர் அடுத்தவரைப் பற்றியே யோசிக்கிறாரே, தன்னிலை குறித்து என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பாரா என சிந்திக்கும் போது பரிதாபம் மிஞ்சுகிறது.

மணிரத்தினம் இயக்கிய “குரு” திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தன்னை அதிகமாக விமர்சிக்கும் பத்திரிக்கைக்கு குருபாய் அதிகம் விளம்பரம் கொடுக்க சொல்வார். அது ஒரு வகையான எதிர்மறை செல்வாக்கு. (Negative publicity). மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணாதிசயம் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். பாராட்டோ விமர்சனமோ அது தன்னை சுற்றி தான் நடக்க வேண்டும் என திட்டமிட்டு சில வேலைகள் செய்வார் என்பார்கள். இது போன்ற மனிதர்கள் இணைய உலகிலும் உண்டு.இதில் ஒருவரை வெறுப்பேற்றுவதற்காக 24 மணி நேரமும் சிந்தித்து பக்கம் பக்கமாய் எழுதி விமர்சிப்பவர்களை பற்றி யோசித்துப் பாருங்கள். உண்மையில் விமர்சிக்கப்படுபவர் விமர்சிப்பவர்களை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார். மற்றொருவரோ பதிவு போட்டுக் கொண்டு தனக்குத்தானே மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.இதில் யார் புத்திசாலி ‌‌…??

ஒருவரை எதிர்ப்பதற்காக பக்கம் பக்கமாக பதிவு பதிவாக போட்டு தள்ளும் பலரும் தங்களை அறியாமல் தாங்களே பலியாகிக் கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள்.

உண்மையில் நமது உணர்ச்சிகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அலைபேசி ஊடாக அடுத்தவர் கையில் அதற்கான பொத்தானை கொடுத்துவிட்டு அடுத்த பதிவு என்ன வருகிறது என வேடிக்கை பார்ப்பது போல பைத்தியக்காரத்தனமானது எதுவும் இல்லை.

நமது உள்ளூர்களில் விளம்பர செய்தி தாள்கள் இலவசமாய் வரும் இல்லையா… இங்கே வீட்டுமனை கிடைக்கும் இங்கே இந்த பொருள் கிடைக்கும் என்றெல்லாம் விளம்பரங்கள் நிறைய காணப்படும் அந்த செய்தித்தாள்கள் போலத்தான் இந்த முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள்.

அளவற்று அதில் மூழ்கி போய் உணர்ச்சிகளை கொட்டிக் கொண்டே இருப்பது என்பது.. ஒரு காலத்தில் அதிகம் குடித்துவிட்டு உடல் நலனை கெடுத்துக் கொண்டவர் பின்னர் இறுதி காலத்தில் வருத்தப்படுவது போல ஆகிவிடும்.

நமக்கு முன்னால் அலைபேசி தாண்டிய காலத்தின் ஒரு பியானோ இருக்கிறது. அதை இசைக்க அலைபேசியை தவிர்த்த ஒரு உளவியல் தேவை.ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவித்து உறவுகளோடு கொண்டாடி, சமூக அரசியல் பணிகளுக்கு வீதியில் நின்று வியர்க்க வியர்க்க போராடி அதையும் ரசித்து செய்து அனுபவிக்க 1008 உணர்ச்சிகள் நமக்கு இருக்கின்றன.

சுய மேதமையை போதிக்கும் அலைபேசி திரை சத்தியமாக போலியானது என உணரும் ஒவ்வொருவரும் தாங்கள் இதுவரை இதற்காக செலவு செய்த நேரத்தை யோசிக்கும் போது கண்டிப்பாக வருத்தப்படுவார்.

எமை காத்த எம் மூத்தவர்..

இந்த நொடியில் நினைத்துப் பார்த்தால் அப்படி ஒரு காலம் இருந்தது என யாராலும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அப்போது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருந்தார். நாடெங்கிலும் பதற்றம். தமிழ் உணர்வு தடை செய்யப்பட்ட உணர்வாக மாறி அது தேசத் துரோகமாக கருதப்பட்ட காலம். தமிழர்கள் இந்திராவின் மகனை கொலை செய்து விட்டார்கள் என எல்லோரும் பழி சுமத்தி, ஒரு தேசிய இனத்தேயே தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கி தாழ்த்திய நேரம்.

அப்போதுதான் மதுரைக்குப் பக்கத்தில் திருபுவனம் வட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து சட்டம் பயின்று உயர்நீதிமன்றத்தை தனது தேர்ந்த ஆங்கிலப் புலமையினால் அதிர வைத்துக் கொண்டிருந்த ஒரு தமிழன் தலை நிமிர்ந்தான்.

உயரமான தோற்றம். தோற்றத்திற்கு ஏற்றாற் போல் இன உணர்வின் கொற்றம்.

சந்திரசேகர் என்கின்ற அவரது பெயருக்கு பின்னால் தடா சட்டத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றிய சட்ட மேதமை இணைந்ததால் அவர் தடா சந்திரசேகர் ஆனார். துணிச்சல் அவரது உடன் பிறந்த பெருங்குணம். இன உணர்வு அவரது உதிரத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்ற அருங்குணம். சீற்றமும் துணிச்சலும் சட்டப் புலமையும் நிறைந்த வாதங்களால் ராஜீவ் கொலை வழக்கில் சிக்குண்டு அன்று ஒட்டுமொத்த உலகமே கைவிட்டிருந்த தமிழர்களை காப்பாற்ற துணிந்தார்.

உலகமே கைவிட்டிருந்தபோது இருள் நிறைந்த குழிக்குள் விழுந்து கிடந்த 26 தமிழர்களுக்கு கிடைத்த ஒற்றை நம்பிக்கை அந்தப் பெருமனிதர் தடா சந்திரசேகர் தான். அக்காலங்களில் இயக்கப் பெயரை யாரும் பயன்படுத்த முடியாது. தலைவர் பெயரை யாரும் சொல்ல முடியாது ‌. காவல்துறை உளவுத்துறை மத்திய அரசு மாநில அரசு என எல்லா திசைகளிலும் நெருக்கடி. எதற்கும் அந்த மனிதர் அஞ்சியதில்லை. தடை செய்யப்பட்ட இயக்கம்.தடை செய்யப்பட்ட தலைவர். தடை செய்யப்பட்ட மனிதர்கள்.

ஆனாலும் அவர்தான் இயக்கத்தின் வழக்கறிஞர். தலைவரே மதிக்கின்ற சட்டத்தரணி.

தலைவரின் பெற்றோர் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தேடி வந்துப் பார்த்த பெருந்தகை நமது மூத்தவர் தான். தலைவரின் குடும்பத்திற்கு அவ்வளவு நம்பிக்கை அவர் மேல். அதேபோல் அன்னை பார்வதி அம்மாள் இறந்த போது ஈழத்திற்கே சென்று இறுதிச்சடங்குகள் செய்ய உடன் இருந்தவர் நமது மூத்தவர் தடா சந்திரசேகர் அவர்கள்.

தமிழர்களின் ஆன்ம உணர்ச்சியான ஈழ விடுதலை உணர்வு என்பது என்றும் தமிழ்நாட்டில் மங்கி விடக் கூடாது அது சுடர் விட்டு பெரும் தீயாய் பரவ வேண்டும் என்ற நோக்கில் நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமான் அவர்கள் உருவாக்கிய போது அதன் முதுகெலும்பாய் மாறி கட்சியின் பொதுச்செயலாளராய் வழிநடத்தியவர் நம் மூத்தவர்.

கம்பீரமான மனிதர் அவர். எந்த விமர்சனத்தையும் முகத்திற்கு நேராக சொல்வதற்கு அவர் என்றுமே தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு கருத்துதான். அது தன் தம்பி சீமானின் நலம். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார். ராஜிவ் கொலை வழக்கில் சிக்குண்டு 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து தற்போது முகாமில் வதைப்பட்டு வருகிற அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்கள் பரோல் மூலம் வெளிவரும்போது ஈழ நாட்டவரான அவர் இங்கே தமிழ்நாட்டில் யார் வீட்டிற்கு செல்வது என சிந்தனை ஏற்பட்டபோது.. “உடன் பிறந்த அண்ணன் மூத்தவன் நான் இருக்கிறேன்.. வா தம்பி என் வீட்டிற்கு..” என அழைத்த எங்களது மூத்தவர் போல யார் உண்டு.. இனி எங்களுக்கு..

விடுதலைக்கு விலங்கு என்ற‌ அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கும் போது வழக்கு கோப்புகளை பெற அவரது அலுவலகத்திற்கு சென்ற போது முக்கியமான மனிதர்கள் அவருக்காக காத்திருந்தார்கள். சிறியவனான என்னை அழைத்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். “முக்கியமான நிறைய மனிதர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் மூத்தவரே..” என சொன்னபோது.. “அது பணத்திற்காக.. உன்னிடம் பேசுவது என் இனத்திற்காக . என் இனத்தை தாண்டி எனக்கு எதுவும் இல்லை..” என சொல்லிவிட்டு அவருக்கே உரிய கம்பீரமான சிரிப்பை சிரித்தார்.

வேலூர் சிறையில் அண்ணன் சீமான் அடைக்கப்பட்டு இருந்த காலத்தில் கட்சி தொடங்கி சில நாட்களே ஆகியிருந்தது. அண்ணன் இல்லாத சூழலில் இனி என்ன செய்வது என்கின்ற ஒரு கையறு நிலை. அந்த நேரத்தில் மூத்தவர் மீதுதான் அனைவரின் நம்பிக்கையும். அவரும் அண்ணனையும் மீட்டு கட்சியையும் காத்தார்.

அவர் அருகில் இருந்தாலே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி எங்களுக்கெல்லாம். அமைப்புத் தொடர்பாக மாநில பொறுப்பாளர்கள் யாரிடமாவது அண்ணன் சீமான் 10 சொற்கள் பேசினால் அதில் இரண்டு “மூத்தவரிடம் கேட்டு விடுங்கள்..” என்பது தான்.

அண்ணன் சீமானுக்கும் அவருக்குமான உறவை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. ‘மூத்தவர்’ என்று அண்ணன் சீமான் என்று அழைத்தாரோ தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் ‘மூத்தவராக’ மாறிப் போனார்.

கம்பீரமான மனிதர் அவர். தோற்றமும் குரலும் எதிரே நிற்பவரை சட்டென சிறியவராக்கி காட்டும் கம்பீரம் அது.

ஈரோட்டில் கிழக்கு இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் பிரச்சாரப் பணிக்கு வந்திருந்த போது நானும் தம்பி ஆனந்தும் மூத்தவரை அவர் தங்கும் இடத்திற்கு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற அந்த இரவில் “என் பசங்கடா நீங்க‌..” என்று சொன்ன அந்த சொற்கள் இன்னும் காற்றில் மிதந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு நள்ளிரவில் தமிழின உணர்வாளர்களுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரை அலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிளாசிக் ஆங்கிலத்தில் புரட்டி எடுத்து கேள்விகள் கேட்டு திகைக்க வைத்த அவர் ஆளுமை பார்த்து நான் எல்லாம் மிரண்டு போயிருந்தேன்.

யாரிடமும் ஒரு அலைபேசி அழைப்பு மூலம் அவரால் ஆணையிட முடிகிற அளவிற்கு ஆளுமை. ஆனால் அண்ணன் சீமானிடம் மட்டும் எதையும் எதிர்பார்க்காத அடி மன ஆழமான அன்பு.

தனது சட்ட ஆற்றல் மூலம் தடுப்பு முகாமில் இருந்து எத்தனையோ தமிழர்களை மீட்டு புலம் பெயர் தேசத்திற்கு அவர்தான் அனுப்பி வைத்தார். தமிழின உரிமை களங்களில் தமிழர் யார் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக வாதாட “தடா சந்திரசேகர்” என்கின்ற நம்பிக்கை எப்போதும் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தது. அதுதான் இன்று இந்த இனத்திற்கு இல்லாமல் போய்விட்டது.

இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் இப்படித்தான் நம்மை தவிக்க விட்டு சென்றார். பிறகு தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது. இப்போது மூத்தவர்.

எங்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்ட மூத்தவர் அவர் உடல் நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்து இருக்கலாம். என்ன செய்வது.. இரக்கமற்ற கொடியவனாக இந்தக் காலம் நம் கழுத்தில் ஏறி நிற்கிறது.

மூத்தவரே சென்று வாருங்கள். உங்கள் உயிர் தம்பியோடு உயிருள்ளவரை நாங்கள் நேர்மையாக உடன் இருப்போம்.அதுதான் உங்களுக்கு நாங்கள் காட்டும் மரியாதை என்பதை அறிவோம்.

எந்தக் கனவின் மூலமாக எங்களுக்கு நீங்கள் மூத்தவரானீர்களோ அந்த விடுதலை கனவிற்காக எம் உடல் மண்ணில் சாயும் வரை உங்களைப் போன்றே புலிக்கொடி ஏந்தி போராடுவோம்.

கண்ணீர் வணக்கம்.

கொன்றை மரத்து கொலை வழக்கு

.

தூரமாக நீ செல்வதற்கு

முன்பாக

இறுதியாக

நின்று கொண்டிருந்த

கொன்றை மரத்திற்கு கீழே

இன்று வெற்று நிழலை தவிர

வேறு எதுவும் இல்லை.

அதைக் கடந்து விட்டேன்

அல்லது

கடந்து கொண்டிருக்கிறேன்

என நானே

கற்பித்துக் கொள்கிறேன்.

என் கழுத்து

திரும்பிப் பார்க்கும்

திசையில் அது இல்லாமல்

தொலைவில் மறைந்து விட்டது என

உறுதியாய் நம்புகிறேன்.

நம் பிரிவுக்கு

நீயே கற்பித்துக் கொண்ட

காரணங்கள்

காற்றின் உளி பட்டு

உடைந்து போன

வண்ணத்துப்பூச்சிகளின்

சிறகுகளாக

மிதந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும்

அந்த இடத்தைக்

கடக்கும் போது

மதிய நேரத்து

கோவில் குளம் போல

சலனம் அற்று இருக்க

முயற்சித்துக்

கொண்டே இருக்கிறேன்.

யாரும் அறியாத

ஓர் அந்தியில்

முகம் இறுகாமல்

முனகல் இல்லாமல்

விழியோர துளி

விழாமல்

அந்த கொன்றை மரத்தை

கடந்து விடுகிறேன்.

ஒரு உதிராத புன்னகை

உள்ளுக்குள்.

மறுநாள் காலை

அந்த கொன்றை மரத்தின்

கீழே விழுந்து கிடந்த

அந்த ஒற்றைப் பூ

நிச்சயம் உன்னுடையது அல்ல.

உனக்காகவும் இருக்கலாம்

என ஏனோ

என்னால் நினைக்க முடியவில்லை.

ஆக இப்படித்தான்

உலகத்தில்

சில பல

தற்கொலைகளும்/கொலைகளும்

இயல்பாக நடந்து

கொண்டிருக்கிறது

உறவுகளே..

எதிர் கருத்துக்களை கையாளும் கலை.

————————————-

* நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும்..

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிக உச்சத்தில் இருக்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு காலத்தில் டீக்கடைகளிலும், தெருமுனைகளிலும், கடைத்தெருகளிலும், சலூன் கடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசப்பட்டு வந்த அரசியல் இன்று மெய்நிகர் தளங்களில் (Virtual Space) பேசப்பட்டு வருகிறது. முகநூல், ட்விட்டர் போன்ற மெய்நிகர் தளங்களில் வினை /எதிர்வினை ஆற்றுபவர்களை நேரடியாக நமக்கு தெரியாது. அவர்களின் பின்புலம், அவர்களது பலம் /பலவீனம் எதுவும் தெரியாது. அந்தந்த நேரத்து கருத்துச் சண்டை அவ்வளவே. எனவே கவனம் முக்கியம்.

சமூக வலைதளங்களில் வருகின்ற எதிர்மறை கருத்துக்களை கையாளுவது என்பது நம்மில் பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கிறது. பல நேரங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளை பரப்புகின்ற மிகப்பெரிய நபராக நாமே இருந்து விடுகிற ஆபத்தும் இந்த இணைய உலகில் இருக்கிறது. ஆர்குட் காலகட்டத்தில் இருந்து பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் என பல்வேறு சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படுகின்ற கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது என்பதற்கான உளவியல் புரிதல் நமக்குள்ளாக தேவையாக இருக்கிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் அண்ணன் சீமானை பற்றி எந்த ஒரு விமர்சனம் வந்தாலும், அதற்கான எதிர்வினையை செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பது என்பது அவர்களது இனப்பற்றினை காட்டுகிறது.அதே சமயத்தில், எதிர்வினை செய்கிறோம் என்ற பெயரில் நம் குறித்தான ஒரு எதிர்மறைக் கருத்தை நாமே விளம்பரம் செய்யக்கூடிய ஆபத்தும் இதில் இருக்கிறது. இந்த விளம்பரத்திற்கு ஆசைப்பட்டுதான், நம் குறித்தான எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் தொடர்ச்சியான ஆதாரம் அற்ற அவதூறுகளை, வசவுகளை, குற்றச்சாட்டுகளை நம் மீது ஏறி வருகிறார்கள். அண்ணன் சீமான் பெயர் இருந்தாலே நாம் விரைந்து சென்று அந்த காணொளியை பார்த்து விடுகிறோம்.அதற்கு பதில் சொல்லவும் தயாராகி விடுகிறோம். இதனால் நம் எதிரி இரண்டு லாபங்களை அடைகிறான். ஒன்று காணொளியை பார்க்க வைத்து நம் மூலமாக அவனுக்கான வருமானத்தை பெறுகிறான். அடுத்தது அவன் காணொளிக்கு நம்மையே விளம்பரம் செய்ய வைக்கிறான்.

எனவே இது போன்ற எதிர்மறை பதிவுகள் நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு விதமான மறைமுக அழைப்பு. நாமும் பதில் சொல்கிறோம் என்ற பெயரில் யாருமே கவனிக்காத அந்த பதிவினை எதிர்வினை செய்து எல்லோரும் கவனிக்க வைக்கின்ற பதிவாக மாற்றுகின்ற தவறினையும் இழைக்கின்றோம்.

இங்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இணையதள உறவுகள் எதிர்மறை கருத்துக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சில எண்ணங்களை பகிர்ந்து உள்ளேன். இதைப் படித்துவிட்டு உங்களுக்கும் சில எண்ணங்கள் தோன்றலாம். அதையும் இங்கே பகிரலாம். இது அறிவுரைகளின் தொகுப்பு அல்ல. ஆலோசனைகள் அது சார்ந்த உரையாடல்கள் மட்டுமே.

1. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என துடிக்காதீர்கள். சில அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு நம் மௌனத்தை விட மிகச் சரியான பதில் வேறு எதுவும் இல்லை.

2. எப்போதும் மதிப்பு மிகுந்த சொற்களால் எதிரியை அணுகுங்கள். அவன் கருத்தை மட்டும் எதிர்க்கிற உங்களது மதிப்பு மிகுந்த சொற்கள் அவனை பதட்டப்படுத்தும். பலவீனமடைய செய்யும்.

3. எந்த விளக்கங்கள் கொடுத்தாலும் ஏற்காமல் தொடர்ந்து அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள்.அவர்களை மாற்ற நாம் பிறக்கவில்லை. அவர்கள் மாறவும் போவதில்லை. எனவே கண்டு கொள்ளாமல் கடந்து விடுவது அவரது விமர்சனத்தை மதிப்பற்ற ஒன்றாக மாற்றும்.

4. பதிவுகள் எழுதும் போது தர்க்கங்களாக வகுத்துக் கொண்டு, ஆதாரங்களோடு பதில் அளியுங்கள். கூடுதலாக நம் எதிரிகள் செய்த வரலாற்றுப் பிழைகள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் படித்து ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினாலே போதும். இவர்களின் கதை முடிந்து விடும்.

5. விமர்சனங்களை எழுதும்போது பெரும்பாலும் அதிக எழுத்துப்பிழை, கருத்துப் பிழையில்லாமல் எழுதுங்கள். அண்ணன் சீமான் எங்களைப் போன்றவர்களிடத்தில் அடிக்கடி வலியுறுத்துவது இதுதான். ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருங்கள். பிழைகளை திருத்துங்கள். வாக்கியங்களை செம்மைப்படுத்துங்கள். கூர்ந்த சொற்கள் அனைவராலும் ஈர்க்கப்படும்.

6. இதுதான் மிக மிக முக்கியம். நம் குறித்தான எதிர் கருத்திற்கு பதிலளிக்கும் போது விமர்சனங்களை அப்படியே எடுத்து பகிர்ந்து விட்டு பதில் அளிக்க தேவையில்லை. அது நம் எதிர்க்கருத்திற்கான விளம்பரத்தை பெற்றுத் தரும். கருத்திற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. இன்று கூட ஒன்றை கவனித்தேன். யாருமே கவனிக்காத மதிப்பற்ற மலிவான இழிவான கார்ட்டூன் ஒன்றினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் நமது ஆட்களே பரப்பிக் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதை பொருட்படுத்தாமல் இருந்தாலே போதும். அதுவே இல்லாமல் போய்விடும்.

5. ட்வீட்டர் போன்ற தளங்களில் நமது கட்சியின் நிலைப்பாடுகளை மிகச் சரியாக எழுதுகிற கட்சி உறவுகளின் பதிவுகளை நிறைய பரப்புங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொண்டால் தான் நம் சார்பான கருத்துக்கள் இணையவெளி எங்கும் நிரம்பி இருக்கும்.

6. அண்ணன் சீமான் அவர்கள் பேசிய காணொளியை சிறுசிறு துண்டுகளாக நமது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் உறவுகள் எப்போதும் வடிவமைத்து அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது ,அதை எல்லா இடங்களிலும் பரப்புவது தான். அண்ணன் சீமான் அவர்களது சிறு காணொளித் துண்டுகள் எதிர் கருத்துக் கொண்டவர்களால் கூட விரும்பப்படுகிறவைகளாக உள்ளன.

6. ஒரே பதிவில் அடுத்தடுத்து பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சொல்ல வேண்டிய பதிலை வலிமையாக சொல்லிவிட்டு நகர்ந்தாலே போதுமானது. எதிரி வைக்கும் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளித்துக் கொண்டே இருந்தால், நாம் இயங்க நேரம் இருக்காது.

7. அரசியல் சார்ந்து நிறைய புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தினை நமது உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணையதளம் சார்ந்து இயங்குகின்ற உறவுகள் தமக்குள்ளாக ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.நன்கு படிப்பவர்களின் பதிவுகள் தனித்து தெரியும்.

8. காணொளி பதிவுகளாக பதில்களை சொல்ல விரும்பும் உறவுகள் போகிற போக்கில் ஒரு காணொளி போடுவதை தவிர்த்து, ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து தேர்ந்த ஒளியில் நல்ல ஒலித் தரத்தோடு என்ன பேச வேண்டும் என்கின்ற முன் தயாரிப்போடு காணொளியை தயாரிக்க வேண்டும். அதை சீரிய முறையில் எடிட் செய்து சிறந்த முறையில் வெளியிட வேண்டும். தொடர்ந்து வெளியிடுகிறவர்களாக இருந்தால் நீங்களும் ஒரு youtube சேனல் தொடங்கலாம்.

9. நாம் யார் என இந்த உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது என்கின்ற எண்ணம் நமக்கு எப்போதும் வேண்டும். நமது சொற்களால், நமது பதிவுகளால், நம் கட்சியின் மாண்பிற்கு எந்தவித நெருக்கடியும் ஏற்பட்டு விட கூடாது. தவறான ஒரு பதிவு ஏற்படுத்தும் விளைவைக் காட்டிலும் பதிவு எழுதாமல் இருப்பது மிகச் சிறந்தது.

10. அரசியல் சார்ந்த பதிவுகளை எழுதுபவர்கள் குடும்பத்தாரோடு இருக்கின்ற புகைப்படங்களை பெரும்பாலும் பதிவிடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல எதிர் தரப்பினரின் கருத்தை மட்டுமே எதிர்த்து விட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்காமல் தவிர்ப்பது நமக்கான மதிப்பினை உயர்த்தும்.

இறுதியாக ஒன்று.

எதற்கு பதில் அளிக்க வேண்டும், எதற்கு பதில் அளிக்கக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டாலே சமூக வலைதளங்களில் இப்போது இருக்கும் நிலையை காட்டிலும் புலிக்கொடியை இன்னும் உயர பறக்க விடலாம்.

அதற்குத் தேவை..

ஒவ்வொரு பதிவிற்கும் முன்னதாக இது தேவையா, தேவையில்லையா சரியா- தவறா, என்று கட்டாயமாக தோன்ற வேண்டிய ஒரு நிமிடச் சிந்தனை.

சிந்திப்போம்.

பற்ற வைத்த நெருப்பொன்று ..

———————————————————-

வரலாற்றில் சொற்கள் மிகப்பெரிய பங்கினை வகித்திருக்கின்றன. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்று இருந்த சமயத்தில் ஹிட்லர் போன்ற உணர்ச்சிகரமான பேச்சாளர்களின் சொற்களே ஜெர்மனியை மீள் எழும்ப வைத்தன. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தோல்வி முனையில் இருந்த போது அதன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் பேசிய சொற்களே பிரிட்டனை நிமிர வைத்தன. ரஷ்ய புரட்சிக்கு புரட்சியாளர் லெனின் தொழிலாளர்களுக்கு மத்தியில் விதைத்த நம்பிக்கை மிகுந்த சொற்களே காரணம். கியூபா புரட்சிக்கு நீதிமன்றத்தில் நின்று புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ “வரலாறு எம்மை விடுதலை செய்யும்..” என முழங்கிய சொற்களே மூலக் காரணம். இப்படி வலிமை உடைய சொற்களைக் கொண்டவர்கள் கரங்களால் தான் வரலாறு காலங்காலமாய் எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் நாடகங்கள்/ திரைப்படங்கள் மூலமாக திராவிட இயக்கங்கள் எழுச்சி நிலைக்கு வந்த போது அதன் நட்சத்திர பேச்சாளர்கள் தான் ‘அரசியல் அதிகாரம்’ என்கின்ற அடுத்த நிலைக்கு அந்த அமைப்புகளை எடுத்துச் சென்றார்கள். இலக்கிய மேற்கோள்களும், அடுக்கு மொழி வசனங்களும் தான் பாமர மொழி கொண்டிருந்த படிக்காத மேதை காமராஜரை வீழ்த்தி திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.

மக்கள் மொழிகளின் ஊடாகத்தான் தங்களுக்கான தலைவர்களை மக்கள் அடையாளம் காணுகிறார்கள். எளிய மக்களை பொருத்த வரையில் மேடை என்பது கருத்துக்களை கேட்டுவிட்டு கடந்து போகும் இடம் அல்ல. தங்களுக்கான அடுத்த தலைவனை தேர்வு செய்கிற மாபெரும் களம். அந்தத் தலைவன் அந்த மேடையை எப்படி கையாளுகிறான், எது போன்ற மொழியை உதிர்க்கிறான், அவனது கோபம், உணர்ச்சி,அன்பு,கனிவு, ஆற்றல் அனைத்தும் அவனது மொழி மூலம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மக்கள் கவனிக்கிறார்கள்.

கடந்த 2009 ஆண்டு இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு திரைப்படத் துறையினரால் நடத்தப்பட்ட மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்தில் தமிழக அரசியலில் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கான பாய்ச்சல் குரல் ஒன்று ஒலித்தது.

அதுவரை பேச்சுத் தமிழ் என்று கட்டமைத்து வைத்திருந்த அனைத்து இலக்கண விதிகளையும் அடித்து நொறுக்கி பாமர மொழியில், பைந்தமிழ் அழகில் கேட்போர் உணர்ச்சியின் உச்சத்தில் துடிக்க, உக்கிர குரல் ஒன்று துயரத்தின் உன்மத்தத்தில் பிறந்தது. மேடைக்கும்-பார்வையாளனுக்கும் இடையே இருக்கின்ற மகத்தான இடைவெளியை உண்மையின் கனல் சுமக்கும் அந்தக் குரலின் உணர்ச்சி இட்டு நிரப்பியது. திராவிட இயக்கத்தின் ‘அண்ணாவிற்கு’ பிறகு, தமிழ்த் தேசிய தத்துவத்திற்கான “அண்ணன்” பிறந்த வரலாற்றுப் புள்ளி அதுதான்.

“பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது..” என அந்த குரல் கர்ஜித்த போது உண்மையிலேயே தமிழரின் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டிருந்த

இன உணர்வின் சிறுத்தை வெளியே வந்தது. “என்ன வியப்படா.. நாங்கள் தமிழர்கள்.. என்று அந்த குரல் முழங்கிய போது காலங்காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் பெருமித உணர்ச்சியால் தலை நிமிர்ந்தது.

இப்படி தனி மனிதனாய் தமிழக வீதிகள் முழுக்க பேசி பேசி இன அரசியலுக்கான ஒரு இளைஞர் கூட்டத்தை உண்டாக்கி விட முடியும் என நிரூபித்துக் காட்டியதில் அண்ணன் சீமான் ‘தனி ஒருவன்’ தான்.

அவரது சொற்கள் தான் தமிழகத்தின் அரசியல் வீதிகளை தீப்பிடிக்க எப்போதும் வைக்கின்றன. காயம் பட்ட இனத்தின் வலி சுமந்து வரும் அந்த சொற்கள் மேடையின் ஒழுங்கிற்கு ஆட்பட்டதல்ல. பற்றி பரவும் நெருப்புத் துண்டினைப் போல, திசை வெளி அற்ற, அந்த சொற்கள் தமிழக அரசியல் பரப்பில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. ஒரே நேரத்தில் திமுக/ காங்கிரஸ்/பிஜேபி/அதிமுக என எல்லா திசைகளிலும் காற்று போல பரவி, அநீதியின் கழுத்தைப் பிடித்து வினாக்களை தொடுக்கும் அவரது சொற்கள் எதிரிகளை நிம்மதி இழக்கச் செய்கின்றன. “எம் இனத்தை அழித்தது காங்கிரஸ் என்றால், அதற்கு துணை போனது திமுக..” என்று ஒரு பக்கத்தில். “ஜெயலலிதா என்ன ஆங்கான் சுகியா, அன்னை தெரேசா வா..” என மறுபக்கத்தில். “நீ பேனா சிலை கட்டு அதை இடிக்கிறேனா இல்லையா என்று பார்..” என்று இன்னொரு பக்கத்தில். “காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி என்றால்,பாஜக மனித குலத்தின் எதிரி..” என்று எதிர்பக்கத்தில்.

எல்லா திசைகளிலும் அனல் குறையாத வெப்ப வீச்சு மாறாத ஒரே அலை வரிசையில் அனல் மொழிகள்.

யாரிடமும் சமரசம் கோராத, ஒருபோதும் மண்டியிடாத, நியாத்திற்காக சண்டையிடும் அவரது சொற்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஏந்துகின்ற ஆயுதங்களாக மாறி விட்டன.அவரது சொற்கள் எப்போதும் எதிரிகளை பதட்டத்திலும், நடுக்கத்திலும் ஆழ்த்துகின்றன.

நேற்று கூட வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மணிப்பூர் கலவரத்திற்கான போராட்டத்தில் அண்ணன் சீமான் பேசிய சொற்களை அறிவாலய ஒட்டு திண்ணைகள் வெட்டியும், ஒட்டியும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப பரப்பிய போது, அவரது முழுமையான பேச்சை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை வெளியிட்டுள்ளார்கள்.

வேதனையும் ஆற்றாமையும் பொங்கி வழிந்த அவரது பேச்சு ஒரு எளிய மனிதனின் கோபம். 18 சதவீத வாக்குகளை கொண்ட கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் பாஜகவிடமிருந்து திமுக காப்பாற்றும் என நம்பி எப்போதும் இழைக்கின்ற வரலாற்றுப் பிழையினால் நாம் எவ்வளவு இழக்கிறோம் என்பதை அவர் உடைத்து பேசியிருந்தது இதுவரை தமிழக அரசியல் பரப்புகளில் இருந்த சமன்பாடுகளை கலைத்து போட்டு இருக்கிறது. தேவாலயங்களிலும் பள்ளி வாசல்களிலும் பாவங்களுக்குக்காக மன்னிப்பு தேடி ஒன்று கூடுகிற நம்மவர்கள் செய்கிற ஆகப்பெரும் பாவம் பிஜேபி க்கு எதிரி திமுக என நம்பி வாக்களிப்பது. ஏனெனில் முதன் முதலாக பிஜேபியை கைப்பிடித்து தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே திமுக தான். ஆர் எஸ் எஸ் ஒரு சமூக இயக்கம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஏ ரைட் மேன் இன் ராங் பார்ட்டி என வாஜ்பாய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்தது, பிள்ளையார் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது ,சிபி ராதாகிருஷ்ணனை வைத்து நல்லக் கண்ணுவை தோற்கடித்தது என திமுகவின் குற்றப்பட்டியல் மிக நீண்டது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குண்டு பன்னெடுங்காலமாக சிறைக்குள் வாடி வருகிற அப்பாவி இஸ்லாமியர்கள் விடுதலைக்கு திமுக எத்தகைய தடைகளை விதித்து வருகிறது என்பதை அண்ணன் சீமான் தான் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருகிறார்.

ஒருபோதும் திமுக பாஜகவிற்கு எதிரி அல்ல. பாஜக விடம் இருந்து திமுக யாரையும் காப்பாற்றாது. சொல்லப்போனால், தன்னை காப்பாற்றிக் கொள்ள அது யாரையும் பலியிடும் என்பதை தான் அண்ணன் சீமான் தன் சொற்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அநீதிக்கு துணை போவதும் அநீதியே என்று அவர் முழங்கியது

அந்தப் பேச்சை அறிவாலயத்து அறிவாளிகள் அப்படியே கடந்து போய் இருக்கலாம் தான். ஆனால் விதி… அதை வெட்டி ஒட்டி பரப்ப, உண்மையான பேச்சை நாடெங்கிலும் இருக்கின்ற நாம் தமிழர் இளைஞர்கள் பரப்பி வருகிறார்கள். எட்டு திக்கிலும் அண்ணன் சீமானின் மொழி காற்றில் பரவிக் கொண்டே கொள்கை விதைக்கிறது.

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு.

“அவனை எல்லாம் அப்படியே விட்டிடனும்..”

அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

விட்டு இருந்தால், இதுவும் ஒரு பேச்சு என அண்ணன் சீமானின் நேற்றைய ஆர்ப்பாட்டப் பேச்சு அமைதியாய் கடந்திருக்கும். பற்ற வைத்தவர்கள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அது காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது.

மெய்மையின் தீ அது. காலம் முழுக்க அறம் பாடி நடந்த ஒரு இன கூட்டத்தின் அடிநெஞ்ச குமுறல் அது.

அதில் இது தவறு அது தவறு அது பிழை இது சரி என்றெல்லாம் கணக்கு பார்த்தீர்கள் என்றால் , காலம் எழுதும் வரலாற்றுக் கடனில் நீங்கள் கரைந்து போவீர்கள்.

Page 3 of 53

Powered by WordPress & Theme by Anders Norén