மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இ எம் எஸ் நம்பூதிரி பாட்- என்ற கனவு மனிதனும், கடந்த காலமான இடதுசாரிகளும்…

????

தற்கால இந்திய அரசியல் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி என்பது இந்த மண்ணிற்கு நேர்ந்த மாபெரும் அவலம் என்பதை எல்லாம் தாண்டி பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமை, சகோதரத்துவம், அமைப்பின் ஊடாக விவாதங்கள்/ உரையாடல்கள் மூலமாக கட்டி எழுப்பப்படும் ஜனநாயகம், போன்ற பல்வேறு அபூர்வமான அரசியல் கட்டுமானங்களை கொண்ட இடதுசாரி இயக்கங்கள் தனது இறுதிக் காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என உண்மையிலேயே நமக்கெல்லாம் அச்சம் ஏற்படுகிறது.

இந்திய மண்ணுக்குரிய அடிப்படைத் தன்மைகளை இடதுசாரிகள் புரிந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் என்றோ இந்தியாவில் இருக்கின்ற மொழி வழி தேசிய இனங்களின் நலன்களை இடதுசாரிகள் புரிந்து கொள்ளாமல் வர்க்க நலன்களை மட்டும் சார்ந்து அரசியலை அணுகினார்கள் என்றோ அரசியல் சமரசங்கள் மூலமாக தாங்கள் உயிரெனக் கொண்டிருந்த கொள்கைகளை காவு கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றோ எழுகின்ற விமர்சனங்களை வேதனையோடு சமூக அக்கறை உள்ள எவராலும் அப்படியே கடந்து விட முடியாது.

ஏனெனில் இந்த பெரும் நில அரசியலில் இடதுசாரிகள் செலுத்திய தாக்கத்தினை கடந்த கால வரலாறு என்றும் அது ஒரு கனாக்காலம் என்றும் பெருமூச்சோடு சிந்திப்பவர்கள் சிறு எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகிறார்கள் என்பது ஜனநாயக அரசியலில் தற்போது எழுந்திருக்கிற மற்றும் ஒரு ஆபத்து.

2004 பாராளுமன்றத் தேர்தலில் 68 இடங்களை பிடித்த இடதுசாரிகள் அதற்குப் பிறகு அடைந்த பின்னடைவுகள் குறித்த விமர்சனக் கட்டுரை அல்ல இது. உண்மையில் இடதுசாரிகள் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை “அறிவுச்சுதந்திரமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் இளம் வயதில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பான்” என்கின்ற பொது மொழியை நம்புகிறவர்கள் தங்களுக்குள்ளாக சிந்திப்பதற்கான சில கேள்விகளையும் , 75 ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்ட திராவிட அரசியல் தலைவர்கள் இடதுசாரி தலைவர்களுக்கு எவ்வாறு எதிர்ப்புள்ளிகளில் இருக்கிறார்கள் என்கின்ற சிந்தனையையும் எழுப்ப இந்த கட்டுரை முயல்கிறது.

உண்மையில் இடதுசாரித்தனம் என்பது புரட்சிகர மனநலையோடு கூடிய எந்தவித தன்னல நோக்கமும் இல்லாமல், மக்களை நேசிக்கின்ற அபூர்வமான குணத்தாது. குறிப்பாக இடதுசாரிகள் கொண்டிருந்த, இன்னும் சிலரிடம் எஞ்சி இருக்கின்ற எளிமையின் அழகியல்.

சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இறந்த போது எழுதப்பட்ட ஒரு பதிவு ஒன்றினில் உம்மன் சாண்டி தன் வாழ்வில் கொண்டிருந்த எளிமையை காட்டிலும் அதற்கு முன்பாக இருந்த ஏகே ஆண்டனி மற்றும் இ எம் எஸ் நம்பூதிரி பாட் போன்ற கேரள முதல்வர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு எளிமையாக இருந்தார்கள் என்று ஒப்பீடு செய்யப்பட்டு எழுதப்பட்டிருந்ததை வாசித்த போது தமிழர்களாகிய நாம் எவ்வளவு மோசமான ஒரு அரசியல் சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. முதலமைச்சர்கள் பணிபுரிந்த தலைமைச் செயலக பேருந்து நிறுத்தத்தில் அவர்களது மனைவிகள் பேருந்து ஏறிய காட்சியும், ஏ கே ஆண்டனி பதவியேற்ற விழாவிற்கு கூட குடும்பத்தினரை அழைக்காமல் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளுங்கள் என உறுதி காட்டியதும் , முதல்வர்கள் சாதாரண மனிதர்களாக இருசக்கர வாகனங்களில் தலைமைச் செயலகம் வந்ததும் எங்கு சென்றாலும் வரிசையில் நின்றதும் கேரள மண்ணில் இ எம் எஸ் என்கின்ற இடதுசாரி தலைவர் தந்த தாக்கத்தினால் தான்.

மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்த இ எம் எஸ் தனது இளம் வயதில் தனது குடும்ப சொத்துக்கள் மூலம் தனக்கு வர்க்கப் பார்வை வந்துவிடும் என்கிற கொள்கை உறுதியில் சொத்துக்களை விற்று அந்தக் காலத்தில் ஏறக்குறைய 1.80 லட்சம் ரூபாய் தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.

இதுவெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். திமுகவின் தோற்றம், திக பிளவு இரண்டுமே சொத்துப் பிரச்சனை அல்லது அடுத்த ட்ரஸ்டி பிரச்சனை என்கின்ற ஒற்றைக் காரணம் என்பதோடு நம் தமிழக நிலையை எண்ணி நாம் நம்மை எண்ணியே தலையில் அடித்துக் கொண்டு மேலே தொடர்வோம்.

இ எம் எஸ் நம்பூதிரி பாட் காலமானபோது “இ எம் எஸ் இல்லாத கேரளாவை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனி கலங்கியவாறு கூறினார்.

ஏனெனில் தங்கள் வாழ்வின் எளிமை மற்றும் நேர்மைக்கான எல்லா உள்ளொளி தன்மைகளையும் ஏகே ஆண்டனியும் இ கே நாயனாரும் உம்மன்சாண்டியும் இ எம் எஸ் அவர்களிடமிருந்தே பெற்றார்கள்.

ஏன் அது கேரளாவில் மட்டும் சாத்தியப்பட்டது தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்றெல்லாம் உங்கள் மனதிற்குள் எழும் ஆழ்மன கேள்விகளால் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை.

ஒரே ஒரு பதில் தான் அதற்கு.

அந்த மண்ணை தீவிரமாக மக்களை நேசித்த அதி மனிதர்களான இடதுசாரிகள் ஆண்டார்கள்.ஆனால் ஏறக்குறைய 75 ஆண்டுகள் காமராஜருக்கு பிறகு தமிழர் நாட்டை முதலாளித்துவ/பிழைப்பு வாத, ஊழல் மலிந்த திராவிட தலைவர்கள் ஆண்டார்கள்.

எல்லாமும் தலைகீழ் மாற்றமான பிறகு “மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பதுதான் இப்போதைய அரசியல் புது மொழி.அதற்கேற்ப தலைவர்கள் மக்களுக்கான சேவையான அரசியலைப் பிழைப்பாக்கினார்கள். மக்கள் பிரியாணி பொட்டலங்கள் வாங்கிவிட்டு, சாராயம் குடித்துவிட்டு ஓட்டுக்கு காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் தமிழ்நாட்டு ஜனநாயகம்.

குறிப்பாக கேரளாவை ஆட்சி செய்த இந்திய நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் இ எம் எஸ் நம்பூதிரி பாட். 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் அல்லாத முதன்முதல் ஆட்சியை கேரளாவில் கம்யூனிஸ்டுகள் அமைத்தார்கள்.

வி ஆர் கிருஷ்ண ஐயர்,அச்சுத மேனன், பேராசிரியர் ஜோசப் முண்டே சேரி, உள்ளிட்ட மிகச்சிறந்த மேதைகளை அமைச்சர்களாக கொண்ட முதல்வராக பதவியேற்றவுடன் தங்கள் நிலைகளை விளக்கி இ எம் எஸ் இவ்வாறாக உரையாற்றினார்.

“நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள். கடும் பிரச்சனைகள் நிலவும் மாநிலத்தை ஆள முன்வருவது என்பதே கடுமையானது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு குரல்கள் வருகிறது. நால்புறமும் நிற்கும் வரையறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றவேண்டும். கற்பனைக்கு எட்டாத விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சூழல் பழக்கமாகவேண்டும். நாங்கள் தனிப்பட்ட நபர்களாக இவ்வேலையில் நுழையவில்லை. நிறுவன வகைப்பட்ட ஒன்றில் நுழைகிறோம். நாங்கள் கட்சியின் பிரதிநிகள் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுள்ளோம்.

மத்திய காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள் பலவற்றை முன் இருந்த காங்கிரஸ் கேரளா மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டன. அதை நாங்கள் செய்து முடிப்போம். சோசலிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைப்பை கோருகிறோம்.

We are being elected ‘Not as Representative of Party but as Representative of People’”

அதேபோல் முதன் முதலாக 1959 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 ஐ பயன்படுத்தி கலைத்த முதல் ஆட்சியும் இ எம் எஸ் ஆட்சி தான். அதற்கான எந்த காரணத்தையும் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டு 1959 இ எம் எஸ் ஆட்சியை கலைத்த ஜவர்கலால் நேரு அவர்களுக்கு எழுபதாவது பிறந்த நாள் வருகிறது. தனது 50 வது பிறந்த ஆண்டில் இருந்த இ எம் எஸ் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட நேருவிற்கான சிறப்பு பிறந்தநாள் மலரில் நேரு எப்படிப்பட்ட தவிர்க்க முடியாத மனிதன் என்பதற்கான காரணங்களை அடுக்கி ஒரு அட்டகாசமான கட்டுரையை எழுதி வெளியிட்டு இருந்தார்.

மீண்டும் 1969 ஆம் ஆண்டு மீண்டும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்த போது அப்போது கட்சிப் பணிக்கு திரும்பி இருந்த இ எம் எஸ் கடும் முயற்சிகளை செய்து நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து உபரி நிலங்களை பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்து சாதனை படைத்தார்.

தன் வாழ்நாள் முழுக்க எளிய மக்களுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த இ எம் எஸ் மிகச்சிறந்த கட்டுரையாளர். பிரண்ட்லைன் இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் அரசியல் ரீதியிலும் தர்க்க ரீதியிலும் மிக மிக முக்கியமானவை. 70 ஆண்டுகளை தாண்டிய அரசியல் பயணத்தை முடித்து தனது 89 வது வயதில் 1998 மார்ச் 20 அன்று மறைந்த இ எம் எஸ் இறந்தபோது அப்போது கேரள முதலமைச்சர் ஆக இருந்த ஈ கே நாயனார் தனது ஈடு இணையற்ற தோழருக்கு “லால் சலாம் இ எம் எஸ்” என்று தழுதழுத்தவாறு கொள்கை வணக்கம் செலுத்திய செய்தி அப்போது எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது.

மலையாள இலக்கிய உலகில் இலக்கிய விமர்சனம் என்கின்ற புதிய வகைமையை உருவாக்கி மலையாள இலக்கிய உலகின் செழுமையை வடிவமைத்தவர். மாற்றுக் கருத்திற்கு கடுமையாக மதிப்பளிப்பவர். ஒருமுறை அருந்ததிராய் எழுதிய “சின்னஞ்சிறு விஷயங்களின் கடவுள்” (God of Small things -தமிழில் காலச்சுவடு வெளியீடு) என்கின்ற நாவலில் இ எம் எஸ் அவர்களை ஒரு ஹோட்டல் முதலாளி போல உருவகம் செய்ததற்கு கேரளா முழுக்க கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போது எதிர்ப்பினை கடுமையாக கண்டித்து அந்த மாற்றுக் கருத்தினை மதித்து ஏற்றவர். அவர் பிறந்த நம்பூதிரி சமூகத்தில் அணிவிக்கப்பட்ட பூணூலை அறுத்து சமபந்தி உணவு அருந்தி சாதியால் விலக்கம் செய்யப்பட்ட இ எம் எஸ் எதற்காக சொந்த சாதியிலேயே மணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனமும் அதற்கு அவர் அளித்த பதிலும் மிக முக்கியமானவை. நம்பூதிரி சாதியில் மூத்த மகன் மட்டுமே நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். மற்றவர்கள் நாயர் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற நிலையில் தன் சாதிக்கு எதிரான ஒரு கலகத்தை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நான்காவதாக பிறந்த இஎம்எஸ் தன் மனைவியான ஆர்யாவை மணந்தார் என்கிற விளக்கம் ஜெயமோகன் போன்றவர்களால் வைக்கப்பட்டாலும் இ எம் எஸ் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட விதம் அவரை தனித்துவமாக காட்டுகிறது.

தமிழகத்தை பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடந்த 2008 முதல் 2010 வரையிலான காலத்தில் தனது தொப்புள் கொடி உறவுகள் சிங்கள பேரினவாதத்தால் கொலை செய்யப்படும் அவலத்தை தாங்க முடியாமல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மக்களை கூட்டி பேசினார் என்பதற்காக மூன்று முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழாக கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தார். தற்போது நடக்கின்ற “திராவிட மாடல்”(?) ஆட்சியில் கூட

ஆட்சியை விமர்சித்து யூட்யூப் வீடியோ வெளியிட்டார் என்ற காரணத்திற்காக தம்பி சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எதிர்த்து விமர்சனம் செய்கிறார் என்ற காரணத்திற்காக சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

அதேபோல இ எம் எஸ். அவரது “வேதங்களின் நாடு” என்கின்ற நூல் இடதுசாரி ஆதரவாளர்களாலேயே கடுமையாக எதிர்க்கப்பட்ட நூல். அதேபோல “மார்க்ஸ் பார்வையில் இந்தியா” என்கின்ற நூலும். “இந்திய வரலாறு” என்கின்ற நூலும் காந்தி பற்றிய விமர்சன நூலான “மகாத்மாவும் அவரது இசமும்” என்கிற நூலும் மிக மிக முக்கியமானவை. இவை தமிழிலும் கிடைக்கின்றன. தன் இறுதி சடங்கில் கூட அரசு மரியாதையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத இ எம் எஸ் எளிமை தமிழ்நாட்டில் கனவிலும் கூட நினைக்க முடியாது.

ஆனால் இங்கே

எந்த ஆய்வுகளும், அறிவு ரீதியான தர்க்கங்களும் இல்லாத, பெரும்பாலும் பிற நூல்களைத் தழுவி அல்லது உரை எழுதி சாமர்த்தியமான வார்த்தை விளையாட்டுக்கள் நிரம்பி வழியும் படைப்புகளை தந்த கருணாநிதிக்கு பேனாச்சிலை. கடற்கரை சமாதி. நூலகப் பெயர். அதேபோலத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையிலான வகையறாக்கள். இவர்கள் ஆண்ட தமிழ்நாட்டிற்கு அதே பக்கத்து மாநிலத்தில் தான் இ எம் எஸ் போன்ற அதிமனிதனும் ஆண்டு இருக்கிறார் என யோசிக்கும் போது தமிழர்கள் எத்தகைய சாபம் பெற்றார்கள் என்பதை உணர முடிகிறது.

மூத்த இடதுசாரி தலைவரான ஜோதி பாசு இந்திய நாட்டின் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அதற்கான அனுமதி தர மறுத்து விட்டது. தமிழகத்திற்கு மூப்பனாருக்கு கிடைத்த வாய்ப்பை கருணாநிதி தடுத்தது போல. அதை ஒரு வரலாற்றுக் குற்றமாக வரையறுத்த ஜோதிபாசு இந்திய பெரு நிலத்தில் மிக நீண்ட காலம் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்தவர். ஒருவேளை ஜோதிபாசு இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்று இருந்தால் மோடி போன்ற கொடுமைகளை இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அனுபவிக்காமல் கடந்திருப்பார்கள். முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை இ எம் எஸ் எடுத்தது கடுமையான நமது எதிர்ப்பிற்குரியன, தனியே எழுதப்பட வேண்டிய கட்டுரை செய்திகளை கொண்டன என்றாலும் இந்திய அரசியல் வரலாற்றில் இ எம் எஸ் ஒரு சகாப்தம் தான்.

இ எம் எஸ் ஜோதிபாசு போன்ற பெரும் தலைவர்கள் இல்லாத இடதுசாரிகள் ஒரு வலுவற்ற படையாக காட்சியளித்தாலும் இன்னமும் இந்த நாட்டில் தொழிற்சங்கங்கள் ஊடாக எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிற முக்கிய அமைப்புகளாக இருக்கின்றன. ஆனால் ஒரு அரசியல் அமைப்பாக இடதுசாரிகள் தங்களது அரசியல் பிழைகள் காரணமாக வலிமை குறைந்து வருவது முதலாளித்துவத்தை வலதுசாரிகளை வலுப்படுத்துகிற இடதுசாரிகள் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கின்ற குற்றம் என்றே கருதலாம்.

குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை திமுக விடமிருந்து கம்யூனிஸ்டுகள் பெற்றார்கள் என்கிற செய்தியை எந்த கட்சியில் இருந்தாலும் சமூகத்தை நேசிக்கும் எவராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. அது ஒரு கையறு நிலை போல கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது போல உணர்வு.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற இந்த 8 ஆண்டுகளில் இந்திய சூழலும் உலக சூழலும் நிறைய மாறி இருக்கின்றன. கடுமையான தோல்விகளுக்குப் பிறகு இடதுசாரிகள் அது குறித்தான ஆய்வுகளை செய்து மீள் எழும்புதலுக்கான தயாரிப்புகளை செய்கிறார்களா என்று செய்திகள் இல்லாத நிலையில், உலகமயமாக்கல், இந்துத்துவம், நாட்டின் பன்மைத் தன்மைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்து, ஜனநாயக மாண்புகளை அழிக்கும் வேலைகள் என வலதுசாரி அமைப்பான பாஜக தனது நீண்ட கால திட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில் தான் இஎம்எஸ் போன்ற வசீகரமான ஒரு இடதுசாரி தலைவர் நாட்டிற்கு தேவைப்படுகிறார். நம் தமிழகத்திற்கு ஒரே ஒரு நல்ல கண்ணு மட்டும் தான். அவரையும் பாஜக சிபி ராதாகிருஷ்ணனிடம் திமுக தோற்கடித்துவிட்டு, அவருக்கே ஒரு கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக படம் காட்டியதும், அதை வாங்க மறுத்து, அந்தத் தொகையையும் அவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கியதும், நல்லகண்ணு என்கின்ற ஒரு தமிழர் இன்னும் இங்கே இடதுசாரியாக எஞ்சி இருக்கிறார் என்கின்ற ஆறுதலை

இ எம் எஸ் நினைவலைகள் ஊடாக நமக்கு அளிக்கின்றன.

உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

1. அறியப்படாத இஎம்எஸ்.

2. இ எம் எஸ் நம்பூதிரி பாட்-ஆர்.பட்டாபிராமன்

3. இ எம் எஸ்-என் குணசேகரன்.

4. இ எம் எஸ்- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரண்ட் லைன் கட்டுரைகள்.

5. இ எம் எஸ் பற்றிய உரையாடல்கள் ஜெயமோகன்.

All reactions:

33Shankar Chockalingam, தமிழம் செந்தில்நாதன் and 31 others

அரூவ கத்தியோடு அலைபவன்.

உன் நினைவின் துளி
என்னை தீண்டி விடக் கூடாது
என்பதற்காக
யாரும் அறியா இருட்
மனக்குகையில்
மௌனத்தின் விலங்கிட்டு
என்னை நான்
சிறை வைத்திருக்கிறேன்.

❤️

பின்னிரவு ஒன்றில்
காயாத கனவுகளின்
கயிற்றினை
பிடித்துக் கொண்டு
நான் அடைந்திருக்கும்
ஆழ் குகைக்குள் இறங்கி
என்னை நான்
பார்க்கும் போது
இமைகள் உதிர்த்த
விழிகளைக் கொண்டவன்
வெற்றுக் காகிதங்களை
பார்த்துக் கொண்டிருப்பதை
நான் பார்த்தேன்

❤️

எதற்காக
அந்த வெற்றுக் காகிதங்கள்
என நான் கேட்கலாம்
என நினைத்தபோது
இன்னும்
எழுதப்படாத கவிதைகள்
இந்தத் தாளில் தான் உள்ளது
என பதில் வந்தது.

❤️

அனலேறிய
அந்தக் கண்ணில்
இருந்து
சொட்டு விழி நீர்
ததும்பி விழுந்த போது
தாள் எங்கும்
பசுமை ஏறி
உன் நினைவின்
சின்னஞ்சிறு
அல்லி மலர்கள்
பூக்கத் தொடங்கின.

❤️

மறக்க வேண்டியதை
மறக்க…
இருக்க வேண்டும்
என்று நினைத்தேன்.
இல்லை
இறக்க வேண்டும்
என
உணர்ந்த கணத்தில்
இரண்டும் ஒன்றுதான்
என்பது போல
என்
பின்னங்கழுத்தில்
ஆழமாக சொருகப்பட்ட
அரூவ மாயக்கத்தி ஒன்றோடு
நான் அலைந்து கொண்டிருப்பதை தான்
அவரவர் மொழியில்
என் வாழ்க்கை
என அறிந்து வைத்திருக்கிறார்கள்.

❤️

நந்தனின் கேள்வி.

தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்.

ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

எங்கும் அமைதி . எங்கும் அமைதி.

முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான்.

புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி முதல் பாதம் வரைக்கும் உடலில் ஒரு திரவம் போல படர்வதை உணர்ந்த அவன் ஞான உணர்வில் சிலிர்பேறினான்.

“நந்தா” என்று புத்தர் மென்மையாக அழைத்த போது கனிவேறிய அவரது சொல்லால் தனது பெயர் ஒலிக்கப்படுவதை எண்ணி மனம் உருகினான்.

என்ன வேண்டும் என புத்தர் சிரித்துக் கொண்டே கேட்டபோது… நீங்கள்தான், நீங்கள் சுமந்திருக்கும் அமைதி தான்.. என்று அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

உள்ளுக்குள் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு அவன் துடிப்பதை பார்த்த புத்தர்…

“கேட்க வந்ததை கேட்டு விடு . இல்லையேல் கேட்க வந்தது தேங்கி ஒரு நாள் அதில் நீயே முழ்கி விடுவாய்..” என்றார்.

ஐயனே.. எனக்குள் அலைமோதும் எண்ண அலைகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே ஒரு கேள்வியாக தயாரித்து வைத்திருக்கிறேன்.

நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.

உலகத்தின் மகத்தான வலி எது..??

நந்தா கேள்வியை கேட்டுவிட்டு புத்தரின் முகத்தை பார்த்தான்.

புத்தர் மீண்டும் மென்மையாக சிரித்தார். தன் முன்னே குழுமி இருந்த சீடர்களை பார்த்து .. “இதற்கு என்ன பதில் உங்களுக்கெல்லாம் தோன்றுகிறது சொல்லுங்கள்..” என்றார்.

தலைமைச் சீடர்களில் ஒருவரான அசிதர் எழுந்து.. “மரணத்தின் போது ஏற்படுகிற வலி” என்றார்.

இன்னொரு சீடர் எழுந்து “சகிக்க முடியாத தனிமை” என்றார்.

பூரணர் எழுந்து நின்று “பிரிவு” என்றார்.

இப்படி ஆளாளுக்கு மழைத்துளிகள் போல பதில்களால் அங்கே அவரவர் ஆன்ம அறிவினை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு அனைவரும் பதில் அளித்த சூழலில் மீண்டும் மௌனம் அங்கே சூழ்ந்து கொண்டது.

புத்தர் மீண்டும் தியானத்திற்குள் போனார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கண்விழித்தவர் அமைதியாக சொன்னார்.

“மிகவும் நேசித்தவரின் துரோகம்.”

ஆழ்கடலின் அமைதி சீடர்களை சூழ்ந்தது.

????

மாமன்னன்- கட்டமைக்க முயலும் போலி பிம்பங்களும், சில அற்புத தருணங்களும்…

????

என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது.

ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும்.

அதைத்தான் தனது தீவிர திரை மொழி மூலம் மாமன்னன் ஆக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

மிக மிக சாதாரண “மண்”ணாக இருந்தவர் எப்படி மாமன்னனாக மாறினார் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரி சுருக்கம்.

தனது முந்தைய திரைப்படங்களைப் போல சாதியை மறைமுகப் பொருளாக வைத்து உரையாடல்களை நிகழ்த்தாமல் நேரடியாக சாதியின் நுட்பமான உணர்ச்சி படிமங்களை காட்சி மொழியாக்கி இருக்கின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணனில் தனக்கு சாத்தியப்பட்ட தனக்கே உரிய திரை மொழி வசீகரத்தை மாமன்னன் திரைப்படத்தில் இழந்துவிட்டது போல ஒரு உணர்ச்சி.

சாதி முரண்பாடுகளைப் பற்றிய ஒரு உரையாடலை இரண்டு தேனீர் கோப்பைகள் ஊடாக தொடங்குவோம் என்றது பரியேறும் பெருமாள். சாதியை பற்றி மிக நுட்பமாக பேசும் அந்தத் திரைப்படத்தில் அதி உச்ச அழகியல் எது என்றால் சாதி என்ற சொல் அந்த திரைப்படத்தில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது தான்.

கர்ணனும் அப்படித்தான். அடுக்கடுக்கான படிமங்களால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்கள் சிந்திக்க நிறைய ஊடு பொருள்களை புதைத்து வைத்து சாதி உணர்ச்சியின் கோரத்தை ரத்தமும் சதையுமாக நம்மை அனுபவிக்க வைத்திருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதே வித்தை மாமன்னனிலும் சாத்தியமாகி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. அதில் என்ன வருத்தம் என்றால் மாமன்னன் போன்ற சாதி மறுப்பு உளவியலை திரை மொழியாக கொண்ட திரைப்படங்கள் கலை நேர்த்தியில் மிளிர வேண்டும் என்கின்ற விருப்பம் தானே ஒழிய வேறொன்றுமில்லை.

ஆனாலும் வடிவேல் என்கின்ற ஒரு உச்ச கலைஞன் தன் கலை வாழ்வின் சிகரத்தை தொட்டு நம்மை நோக்கி திரும்பிப் பார்த்த அனுபவத்தை மாமன்னன் நமக்கு ஏற்படுத்துகிறான்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இதுதான் கடைசி படம் என்றார்கள். ஆனால் இதுதான் அவருக்கு முதல் படம். உணர்வுகளை முகத்தில் உறைய வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த திரைப்படம் தான் அவருக்கு வழங்கியிருக்கிறது.

படத்தை இந்த இருவருக்கும் இணையாக தாங்குவது பகத் பாசில் என்கின்ற நடிப்பு அரக்கன் தான். மூவரும் இருக்கும் காட்சியில் பகத் பாசில் மிக எளிதாக வடிவேலு மற்றும் உதயநிதியை ஓவர் டேக் செய்து திரையை ஆதிக்கம் செய்வது என்பது அவரது கலை மேதமை.

மற்றபடி இந்தத் திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படங்களில் தென்படாத பிரச்சார நெடி சொல்ல வருகிற மிக முக்கியமான கருத்தினை பலவீனப்படுத்துகிறது.

காட்சி அமைப்புகளில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள திமுக சார்பு நிலை ,புத்தர் சிலைகள் ,அம்பேத்கர் ஓவியம் ,பன்றி குட்டி டாட்டூ இவை எல்லாம் மாமன்னனுக்கு எந்த வலிமையும் சேர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி சற்றே நீண்டு ஏதாவது நடத்தி திரைப்படத்தை முடியுங்கள் என பார்வையாளர்கள் நினைக்கும் அளவிற்கு திரை மொழி சீரமைப்பு இல்லை.

திமுகவின் கருப்பு சிவப்பு சாயலில் வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட அரசியல் கட்சி கட்சியின் தலைவராக வருகின்ற மலையாள நடிகர் லால் பேசுகிற சமூக நீதி வசனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு பொருந்தாது என்பதுதான் கடந்த கால வரலாறு.

திராவிட இயக்கங்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று வரை ஒரு மாமன்னன் திரைப்படம் எடுப்பதற்கான தேவை இந்த மண்ணில் எழுந்திருக்காது. திராவிட இயக்கங்கள் தனது வரலாற்று வழிப் பாதையில் செய்து கொண்ட அப்பட்டமான சமரசங்கள், பிழைப்புவாதங்கள் போன்றவைகளால் தான் இன்னும் இங்கே சாதிய இருப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டு எழுந்து நிற்கிறது.

எனவே சமூக நீதி அரசியல் என்றால் அது திமுக தான் என மாமன்னன் திரைப்படம் கட்டமைக்கின்ற போலிபிம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதிக்காக மிகச் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்பதை எவ்வித உணர்ச்சியும் கடத்தாத அரசியல் பேசும் காட்சிகள் காட்டி விடுகின்றன.

வேட்பாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் ,ஒன்றியச்செயலாளர்,வட்டச் செயலாளர் வரை சாதி பார்த்து மிகச்சரியாக ஆதிக்க சாதிக்கு பொறுப்பளிக்கின்ற திராவிட இயக்க அரசியல்தான் மாமன்னன் மற்றும் அதிவீரன் போன்றவர்கள் அனுபவிக்கின்ற அத்தனை கொடுமைகளுக்கும் மூல காரணம் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜின் கலை ஆன்மா உணர்ந்திருக்கும் தான். ஆனாலும் அதை அவரால் ‘செஞ்சோற்றுக் கடனுக்காக’ வெளிப்படையாக பேச முடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி மாமன்னனில் சில அற்புத தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த மலைமுகட்டில் வடிவேலு தனது இயலாமையை எண்ணி கைப் பிசைந்து கண்கலங்கி நிற்கின்ற அந்தக் காட்சி இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் அதி உச்சமானது. அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆபத்துகளை உள்ளுணர்வால் உதயநிதி உணர்கிற தருணங்கள். தந்தை மகனுக்கு இடையே இருக்கின்ற நேசமிக்க கணங்கள் போன்ற காட்சிகளில் இயக்குனர் மாரி செல்வராஜின் திறமை பளிச்சிடுகிறது.

சாதியின் நுட்பமான புள்ளிகளை வலிமையாக பேச வந்த திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு அரசியல் அதிகாரப் போட்டி தேர்தல் என்றெல்லாம் திசை மாறி அலைகழிவது இயக்குனர் மாரி செல்வராஜ் கதை அமைப்பில் கொண்டிருந்த தடுமாற்றங்களை அப்பட்டமாக காட்டுகிறது.

மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்த்து செல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு மாமன்னன் ஒரு புதுவிதமான திரைப்பட அனுபவத்தை தரும் தான். ஆனால் ஒரு இயக்குனராக தன் படைப்பாக்க உச்சத்தின் அனுபவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அனுபவித்தாரா என்பது சந்தேகமே.

மாமன்னன் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம்.

????

மே-18.

காலங்கள் கணக்கில்லாமல் கடந்தாலும்,வருடங்கள் வரிசையாக நகர்ந்தாலும் கண் முன்னால் நடந்த நம் இனத்தின் அழிவு,உலராத குருதியாய் உள்ளுக்குள் வடிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடி பாரினை ஆண்ட பைந்தமிழ் இனம்,கேட்பாரும் மீட்பாரும் இல்லாமல்,உலகத்தார் அனைவராலும் கைவிடப்பட்டு அழிந்த கதை உள்ளத்தில் உறைகிறது.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் சொந்த இனம் அழியும்போது,கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத தனம் குற்ற உணர்வாய் இதயத்தில் குமைகிறது.

உடன் பிறந்தவள் உடை விலகினால் கூட மற்றவர் அறியாமல் மறைவாய் சரி செய்த ஒரு இனத்தின் கூட்டம் எதிரி அம்மணமாக்கி சொந்த சகோதரியின் பிறப்புறுப்பை
படம் பிடித்து உலகத்திற்கு ஒளிபரப்பிய கோரம் தாங்காமல் விழிக்குள் சிவப்பை தேக்குகிறது.

நம் உடன் பிறந்த அண்ணன் நம் இனத்தின் மன்னன் பெற்றெடுத்த பாலகன் தன் நெஞ்சில் தோட்டா வாங்கி வீழ்ந்து கிடக்கும் போது இனி இந்த இனம் வாழ்ந்து என்ன பயன் என வினாக்கள் விளைந்து ஆன்மா அழுகிறது.

நம் நாடு என்று நினைத்த இந்திய தேசியம் என் உடன் பிறந்தாரை அழிக்க நின்றதும், இவர்கள்தான் நம்மை காப்பார்கள் என்று நினைத்த திராவிடம் நம் கழுத்தை அறுத்ததும், இப்போது நினைத்தாலும் சினத்தால் சீற்றம் பெருகுகிறது.

நாம் வாழும் காலம் முழுதும் இரவோ பகலோ இந்த வலியோடு தான் வாழ போகிறோம் என்கின்ற நினைவு நித்தம் நெஞ்சுக்குள் சத்தமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

விடுதலைக்காக விண்ணை ஏகிய
மாவீரர்கள் சுவாசித்த மூச்சுக்காற்று
இன்னமும் இந்த உலகில் உலவி
நடந்தவைக்கெல்லாம்
கணக்குத் தீர்க்க
களம் அமைக்க கதைக்கிறது.

தேச கனவிற்காக இன்னுயிரை
ஈந்தவர்களுக்கும்..
இனவாத அழிப்பில் சிக்குண்டு
இன்னுயிரை இழந்தவர்களுக்கும்..
கண்ணீர் வணக்கம்.

⚫️

மணி செந்தில்.
மே 18-2023
தூத்துக்குடி

அவனைப்போல வேறு யாருண்டு…??

????

முதன் முதலாக நாம் தமிழர் கட்சியில் மாணவர் பாசறை உருவாக்கப்பட்டபோது அதன் தொடக்க கூட்டத்தில் தான் அந்த இளைஞனை நான் பார்த்தேன். மிக ஒல்லியான உடல்வாகு. யாரிடமும் முன்வந்து எதையும் கேட்காத கூச்ச உடற் மொழி. அவன் பெயரை அழைத்து மேடையில் ஏற்றிய போது தயங்கியவாறே சென்று பின் வரிசையில் நின்று கொண்ட அந்த நொடியில் என்னை போன்ற பலரது இதயத்தில் முன் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டவன் அவன். தம்பி என்று அழைத்தாலும் மனதால் எங்கள் எல்லோருக்கும் மகனாகிப் போனவன் அவன்.

திருத்துறைப்பூண்டி பகுதி என்கிறார்கள். நம்ம ஊர் பகுதி ஆயிற்றே.. ஆனால் நாம் இந்த தம்பியை எதிலும் பார்த்ததில்லையே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக அண்ணன் சீமானை சந்தித்து தன்னை முழு நேர அரசியலுக்கு ஒப்படைத்து கொண்டுவிட்டவர் என்றார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு அவனை அழைத்து பேசியபோது நெருங்கியே அவன் வரவில்லை.கூச்சமும் தயக்கமும் எதிலும் முன்னிற்காத தன்மை போன்றவை எல்லாம் அரசியல் பாத்திரத்திற்காக அவன் பொருத்திக்கொண்ட ஒப்பனைகள் அல்ல. அவன் இயல்பிலேயே அவ்வாறாகத்தான் இருந்தான். எங்களைப் போன்று சுற்றி இருந்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலே அவன் இயல்பிலேயே கொண்டிருந்த அந்த தயக்கப் பூட்டுகளை எந்த பேரன்பின் சாவி கொண்டு திறப்பது என்பதுதான்..

அண்ணன் சீமான் மூலம் சிறிது சிறிதாக படிக்க கற்றுக் கொண்டவன் மேடையில் ஏறி பேசத் தொடங்கிய பிறகு மேடைகள் தீப்பற்றி எரியத்தொடங்கின. சில மாதங்களுக்கு முன் எங்களுக்கெல்லாம் பின்வரிசை பேச்சாளராக இருந்த அவன் ஒரு சில மாதங்களில் எங்களை எல்லாம் கடந்து முன்னணி பேச்சாளராக நிமிர்ந்து நின்ற போது யாருக்கும் அவனைப் பார்த்து பொறாமையோ போட்டியோ ஏற்படவில்லை. காரணம் அப்பழுக்கற்ற அவனது உழைப்பு. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத நேர்மையான அவனது வாழ்க்கை.

மேடை ஏறி அவன் பேசுகின்ற மொழியில் அதிரடியாய் வந்து விழுகிற நகைச்சுவை தெறிப்புகளில், அனல் பொழியும் ஆக்ரோஷ மொழியில் கூடியிருந்தோர் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் போது அண்ணன் சீமானின் கண்கள் பெருமிதத்தால் மிளிரும். உண்மையில் அண்ணன் சீமான் தயாரித்த இன விடுதலைக்கான கருவி அவன்.

இடும்பாவனம் கார்த்திக்.

காவிரிச்செல்வன் மன்னார்குடி விக்னேஷ் சென்னையில் நடந்த பேரணியில் தீக்குளித்த போது அண்ணன் சீமானுக்கு பிறகு அவன் தேடியது தம்பி கார்த்தியை தான்.
நானும் தம்பி கார்த்தியும் தான் விக்னேஷ் உடலை அடையாளம் காட்ட சென்றவர்கள். அன்று இரவு முழுக்க தனியே உட்கார்ந்து அழுத தீர்த்தவாறே இருந்த அவனது கண்கள் அதன் பிறகு எதற்கும் அப்படி கலங்கியதில்லை.

அண்ணன் சீமான் பார்த்து பார்த்து உருவாக்கிய தம்பிகள் சாட்டை துரைமுருகனும் துருவன் செல்வமணியும் இடும்பாவனம் கார்த்திக்கும் முன்னணி பேச்சாளர்களாக உருவாகி வருவதற்கு அப்போதைய முன் கள பேச்சாளராக திகழ்ந்த புதுக்கோட்டை ஜெயசீலன் போன்றவர்களின் ஊக்கமும் ஒரு மிக முக்கிய காரணம். போட்டியும் பொறாமையும் மிகுந்த இந்த உலகத்தில் தம்பிகள் வளர்வதற்கு உகந்த நேசமிக்க ஆன்மாவை கொண்ட அபூர்வ மனிதர்கள் அவர்கள்.

குறிப்பாக தம்பி கார்த்தி மேடையில் பேசி விட்ட அடுத்த நொடியில் பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டு புதியதோர் தேசம் செய்வோம் இதழை விற்றுக் கொண்டிருப்பான். மாணவர் பாசறை காலத்திலேயே தீ என்ற இதழை வெளியிட்டு அவன் நடத்திக் கொண்டிருந்தான். பெருந்தலைகள் நிரம்பி இருந்த எங்களது இளைஞர் பாசறை சார்பாக ஒரு இதழ் கொண்டு வர வேண்டும் என விரும்பி கடைசி வரை முடியாமல் போனது என்பதெல்லாம் வேறு கதை.

தனிநபராக இருந்து கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவது என்பது மிகச் சாதாரணமான வேலை அல்ல. அவன் நடத்திய தீ இதழாக இருக்கட்டும் இப்போது நடத்திக் கொண்டிருக்கின்ற புதியதோர் தேசம் செய்வோம் என்கின்ற இதழாக இருக்கட்டும் எல்லாமே அவனது தனிமனித உழைப்பு தான். எல்லாம் உழைப்பை சிந்திஒரு செயலை செய்வதற்கு எது மூலக்காரணமாக இருக்க வேண்டுமென கேள்விகள் எழுவது இயல்புதான்.

காரணம் பெரிதாக இல்லை. அது ஒரு மனநிலை. ஊதியம் அங்கீகாரம் மதிப்பு உயர்நிலை என எவ்விதமான கோரிக்கையும் இல்லாத மனநிலை அது. தன்னைத் தானே தன் இனத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களின் தியாகத்தில் இருந்து, முத்துக்குமார் விக்னேஷ் ஆகியோர் தங்களை எரித்துக் கொண்ட தீயின் நாவிலிருந்து எடுத்துக்கொண்ட உச்சபட்ச வெப்ப மனநிலை.கனன்று கொண்டிருக்கும் அந்த நெருப்பில் இருந்து தான் தனக்கான அர்ப்பணிப்பு வாழ்வு ஒன்றை அவன் சமைத்துக் கொண்டிருக்கிறான்.

என் மனம் திறந்து அவனை என்னால் மிக அதிகமாக நேசிக்க மட்டும் அல்ல, என்னை விட பன்மடங்கு அனைத்திலும் உயர்ந்தவன் என வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியும். ஐபிஎல் வழக்கிற்காக அவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டபோது அவனுக்காக யாராவது உறவினர் வந்து வாதாட வேண்டும் என நிலை ஏற்பட்ட போது எனது தங்கை மீரா பாக்கியராசன், எனது அம்மா கலையரசி பலரும் முன் வந்து நாங்கள் எம் பிள்ளைக்காக வாதாடுகிறோம் எனக் கூறியபோது அப்பழுக்கற்ற அந்த எளியவன் நாம் தமிழர் என்கின்ற குடும்பத்தில் அடைந்திருக்கின்ற உயரத்தை யாராலும் வியக்காமல் இருக்க முடியாது.

எத்தனையோ நள்ளிரவுகளில் சுகாதாரம் அற்ற பேருந்து நிலையங்களில் இருக்கும் பெஞ்சுகளில் கொசுக்கடியில் படுத்து கிடந்து இரவு பகலாக அரசு பேருந்துகளில் அலைந்து பேச வரைபடத்தில் இல்லாத கிராமங்களில் கூட சிறு மேடையில் ஏறி பேசி நாம் தமிழர் என்கின்ற விதையை நாடெங்கும் விதைத்து வருகிற அவனைப் போன்றவர்கள் தான் இந்தக் கட்சியின் மூலதனம்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து பேசியதற்காக நேற்றைய தினம் கூட ஒரு வழக்கினை பெற்று அரசியல் சமூக வாழ்வில் தனக்கான பதக்கங்களை அவன் அடைந்து கொண்டே அலைந்து கொண்டிருக்கிறான். இத்தனை அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் தனக்கான எந்த அங்கீகாரத்தையும் தேடாமல், தான்மை என்பதே துளி கூட இல்லாமல் தன் அடையாளத்தை இந்த இனத்தின் மீட்சிக்காக இழக்கத் துணியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் போன்றவர்கள் தான் எம் இனத்தின் பெருமை.

சிறுவயதில் என் மகனிடம் சித்தப்பா கார்த்தி போல அப்பழுக்கு இல்லாத கொண்ட கொள்கைக்கு எதையும் இழக்க துணிந்து நேர்மையாக நீ வாழ வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு.

இன்றும் அதைத்தான் நினைக்கிறேன்.

என்றும் அதைத்தான் நினைப்பேன்.

“விடுதலை”நிகழ்த்தும் அரசியல் உரையாடல்களும் அதன் ஊடாக இருக்கின்ற அரசியலும்..

????

சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் தெளிவாக புரிகிறது.

…..

திரைப்படக்கலை பற்றி அறிந்தோர், பல் மொழி பேசுகிற திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து பார்த்து ரசித்து வருவோர் என பலரும் அறிந்த விஷயம் யாதெனில் ,
திரைப்படங்கள் கற்பனையாக கதை ஒன்றை உருவாக்கி அதை திரை மொழியாக உருவாக்கி திரைப்படமாக மாற்றுவது இது ஒரு வகை. அசலான மனிதர்களைப் பற்றி அப்படியே நகலெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சமும் மாற்றாமல் திரை மொழியாக்கி திரைப்படமாக மாற்றுவது. தான் நாம் ஆவண படங்களாக பார்த்து வருகிறோம் .

இந்த இரண்டு வகைகளையும் தாண்டி மூன்றாவது வகையாக அசலான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தாக்கம் பெற்று அதன் மூலமாக புனைவு வெளி ஒன்றை உருவாக்கி வரலாற்றையும் /கற்பனையும் கலந்த கதைகளை திரை மொழியாக்கி திரைப்படங்களாக மாற்றுவது.

எடுத்துக்காட்டாக கீழ்வெண்மணி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை”. இது அச்சு அசலான ஆவணப்படம்.

இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கம் பெற்று பல திரைப்படங்களின் காட்சிகள் உருவாகி இருக்கின்றன. 90களில் வெளியான சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அரவிந்தன்”திரைப்படம், இதே வெற்றிமாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்”திரைப்படம் போன்றவை கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கத்தினால் உருவான காட்சி அமைப்புகளை கொண்டவை .இது போன்ற பல நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான திரைப்படங்களை படங்களை நாம் உதாரணமாக காட்டிக் கொண்டே போகலாம்.

அதுபோன்ற அசலான வரலாற்று மாந்தர்களையும் கற்பனைக்கே உரிய சுதந்திரத்துடன் தாண்டி மறக்கப்பட்ட புரட்சியாளர்களைப் பற்றி இத்தலைமுறையினர் தேடி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆழமான சமூக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “விடுதலை”.

வரலாற்றில் நடந்த எந்த நிகழ்வின் ஊடாக எவரும் தாக்கம் அடைந்து விடக்கூடாது என சொல்வதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தாக்கம் அடைந்தவர் தனது புனைவு மற்றும் கற்பனை மூலமாக ஒரு திரை மொழி அமைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.

விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இக்கதை மூலம் காலம் /கதை /மாந்தர் அனைத்தும் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட்டு விட்டே மிக கவனத்துடன் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஊடாக வரும் செய்திகளை தனக்கு சார்ந்ததாக காட்டிக் கொள்ளும் எவரும் இந்த அறிவிப்பினை கண்டும் காணாதது போல் நடித்து எந்த நபரும் சுயமாக சிந்திக்கவே கூடாது என மூர்க்கத்துடன் இந்த திரைப்படத்தின் மீதாக எதிர்வினை ஆற்றி வரும் சில உரையாடல்கள் உண்மையிலேயே அலுப்பு ஊட்டுகின்றன.

குறிப்பாக திராவிடம் சார்ந்து கொந்தளிப்போர் திடீரென இடதுசாரி பக்கம் எகிறி குதித்து அவர்கள் சார்பாக இவர்கள் பேசுவது போல பாவனை செய்து திரைப்படம் தகவல் பிழை/கருத்துப் பிழை கொண்டது என செய்திகள் பரப்பி வருவதை தமிழ்த்தேசியம் சார்ந்து எவ்வித உரையாடலும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதான அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

இதே போல இடதுசாரிகள் பக்கத்தில் இருந்தும் சோளகர் தொட்டி எழுதிய வழக்கறிஞர் பாலமுருகன் தரப்பிலிருந்தும் வருகின்ற விமர்சனப் பார்வைகளை திராவிடத் தரப்பு கூச்சல்கள் போல அணுக கூடாது என்றாலும் படைப்பாளியின் நியாயப் பாடுகளை எடுத்து வைப்பது நமது கடமை.

விடுதலை திரைப்படம் இரண்டு கூர்மையான கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்று காவல்துறை அடக்குமுறைகள் மீதான காத்திரமான காட்சி மொழியாக்கம், மற்றொன்று தமிழ் தேசிய பார்வையுடன் கூடிய மனிதநேய புரட்சியாளர்கள் பற்றிய பிம்ப உருவாக்கம். இந்த இரண்டிலும் விடுதலை திரைப்படம் முழு வெற்றி அடைந்திருக்கிறது.

குறிப்பாக தமிழ் தேசிய புரட்சிக் களத்தில் ஆயுதம் தாங்கி தமிழர் நிலத்தில் தாக்கம் செலுத்திய புரட்சியாளர்களான மாமனிதர் புலவர் கலியபெருமாள் மற்றும் மாபெரும் தமிழ்த் தேசிய புரட்சியாளர் தமிழரசன் ஆகியோர் பற்றிய உரையாடல்களை தமிழ் தேசிய கருத்தாக்கம் கூர்மை அடைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் மீண்டும் இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. எளிய திரைப்பட பார்வையாளன் கூட யார் கலியபெருமாள் , யார் தமிழரசன் என வாசிக்க புத்தகங்கள் தேடுவதும் பார்க்க காணொளிகள் தேடுவதும் இத்திரைப்படத்தின் மூலமாக கைகூடி இருக்கிறது. திரைப்படம் என்கிற வலிமையான சாதனத்தின் வெற்றி அதுதான்.

இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறன் தனது நோக்கமாக கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் முன்வைத்த திரைமொழியே நமக்கு தெரிவிக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர் நடிகர்களை தேர்ந்தெடுத்தது முதல், உரையாடல்களில் காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் குறியீடுகள் மூலமாக இந்த திரைப்படத்தை தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்களை எழுப்புகிற ஒரு கருவியாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார்.
வள்ளலாரை வணங்குகிற கதையின் நாயகன் திரையில் இதுதான் முதன் முதல் என நான் கருதுகிறேன்.

திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகின்ற பெருமாள் வாத்தியார் தனது இரண்டாம் பாகத்தில் மொழிக்கும் மரபிற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவம் சார்ந்த வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் என்பது புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இருவர் திரைப்படத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் ஒருவராக காட்டிய நாசர் கதாபாத்திரம் போல விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள இன்று நமக்கு கையில் இருக்கின்ற ஒரே ஒரு மகத்தான ஆதாரம் அவரது சுய வரலாற்று நூலான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்கின்ற நூல் மட்டுமே. அந்த நூல் பற்றி திராவிட தரப்பிலிருந்து யாருமே எந்தக் கருத்தையும் குறிப்பிடாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நூல் திராவிட ஆட்சியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி ஆட்சிமுறை குறித்தான கடுமையான விமர்சனங்களை, அந்தக்கால திமுக ஆட்சியின் ஒடுக்கு முறைகளை அந்த நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பல பக்கங்களில் அதற்கான செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன அது பற்றி நாம் தனியே ஒரு கட்டுரையில் காண்போம்.

60களின் இறுதியில் எழுந்த வசந்தத்தின் இடி முழக்கம் என வழங்கப்பட்ட நக்சல் பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மஜும்தார் அவர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளை விட்டு புரட்சி செய்ய கிராமங்களை நோக்கி விரைந்த போது தான் கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துடிப்பான கல்லூரி மாணவரான தமிழரசனும் அழித்தொழிப்பு வேலைகளுக்காக கிராமங்களை நோக்கி நகர்கிறார். இவரோடு புலவர் கலியபெருமாள் சேர்ந்தது தமிழ்இன வரலாற்றில் முக்கியமான ஒரு இணைவு ஆகும். மேற்கண்ட இருவரும் மக்கள் யுத்த குழுவோடு முரண்பட்டு தேசிய இன விடுதலை சார்ந்து இயங்கிய போது தான் தமிழ்நாடு விடுதலைப் படை உருவானது.

எனவே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை குறித்தும் சுய நிர்ணய உரிமை குறித்தும் மேடைகளை தாண்டி களத்தில் செயல்பட முனைந்தவர்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றோர். இவர்களை எந்த வகையில் திராவிட ஆட்சியாளர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஒடுக்கினார்கள் என்பது தான் திராவிடத்தரப்பிலிருந்து மறைக்க முயல்கிற வரலாறு.

புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோர் தமிழ் தேசிய உணர்வின் மூலங்கள் என்பதை இத்தனை ஆண்டு காலம் திராவிடத்தரப்பு வரலாற்று திரிபுகளை வைத்துக்கொண்டு மண்மூடி மறைத்து வைத்திருந்ததைத்தான் விடுதலை திரைப்படம் மீண்டும் நினைவூட்டி இளைஞர்களை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் திராவிடத்தரப்பிலிருந்து கடுமையான பதட்டக் கருத்துக்களை விடுதலை திரைப்படம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றொன்று வீரப்பன் தேடுதலின் போது மலைவாழ் ஆதிகுடிகளை காவல்துறை எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதையும் இந்த திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது என பலரும் உரிமை கொண்டாடுவது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. நடந்தவை அனைத்தும் வரலாறாய் உறைந்து கிடக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் உறைந்துப் போன காலத்தின் நெருப்பு பொறியில் இருந்து தனக்கான கங்கை பற்ற வைத்துக் கொண்டு விட்டார். அது அவரது படைப்பாக்க சுதந்திரம்தான். வரலாறும், பதிக்கப்பட வேண்டிய அடக்குமுறைகளும் யாருக்கும் சொந்தமானது இல்லை. இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது என்பது படைப்பாளியின் படைப்பாக்க வரம்பினை நாம் நிர்ணயிக்கிற ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இவையெல்லாம் தாண்டி இந்த விடுதலை திரைப்படம் ஒரு மகத்தான உரையாடல் வெளியை தோற்றுவித்திருக்கிறது
என்பதுதான் நடந்திருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தத் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது வேறு வடிவம் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது சற்று ஏறக்குறைய சில காட்சிகள் மூலமாகவே இந்த படம் பேசுகிற அரசியல் குறித்து யார் யார் பதட்டம் அடைகிறார்கள் என்பதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கவனத்தையும் இந்த படத்தின் திரை மொழி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

இது போன்ற உரையாடல்களை ஏற்படுத்துகிற திரைப்படத்தை படைக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளனின் கடமை. அந்த கடமையை வெற்றிமாறன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்.

“ஒரு படைப்பிற்குப் பிறகு அந்த படைப்பாளன் இறந்து விடுகிறான் ” என்கின்ற புகழ்பெற்ற மேற்கோளுக்கு விடுதலை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. இனி வெளிச்சம் படவேண்டியது வெற்றிமாறன் மீது அல்ல விடுதலை திரைப்படத்தின் மீது

அதன்படி நமக்கு முன்னால் விடுதலை திரைப்படம் இருக்கிறது .

அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

வெற்றிமாறன் மட்டுமல்ல தமிழ் தேசியர்களான நாமும் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் .

அவ்வளவுதான்.

????

எங்களுக்கு இளையராஜா போதும்.

Disclaimer.

முதலில் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.”

இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே.

????

எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம்.

90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில் இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் “ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற
மிக மிக சாதாரண சம்பவங்கள்.

எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம். அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் “அறுவடை நாள் “திரைப்படத்தில் வருகிற “தேவனின் கோவில் மூடிய நேரம் ..”என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை.

இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை.

இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான்.

2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு “காட்டு மல்லி”பூத்திருக்கிறது.

நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் “காட்டுமல்லி ” குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம்.

அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் “உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை …?” என்பது போல அபத்தமாக இருந்தது.

ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய “ஜெய் ஹோ ” பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய “நாட்டுக்குத்து “பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான்.

சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் “அலைகள் ஓய்வதில்லை “படத்தின் “புத்தம் புது ராகம் ..”என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது.

தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது.
என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எங்களுக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்கு எம் வாழ்த்துக்கள்.

❤️

10827- வெறும் வாக்குகள் மட்டுமல்ல இவை.

????

ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகாவோடு நேற்று பேசிய போது “விடுடா தங்கை, இன்னும் கடுமையாக உழைத்து எதிர்காலத்தில் வெல்வோம்..” என்று ஆறுதலாய் சொன்னபோது, அவள் சொன்ன பதில்தான் இது.

“நிகழ்காலத்திலேயே நாம் வென்று விட்டோம் அண்ணா …”

????
உண்மைதான். பல்வேறு அனுபவங்களையும், உண்மையான போராளிகளையும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்காக உழைக்க வந்த உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அண்ணன் சீமான் ஏற்கனவே வெற்றி பெற்றவர் தான்.
…….

இதுவரை நடந்த தேர்தலில் இந்தத் தேர்தல் மிக மிக வித்தியாசப்பட்டது. ஏற்கனவே திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடித்த திராவிட அறிஞர்களால் ‘ஈரோடு ஃபார்முலா’ என்கின்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஈரோடு கிழக்கு மண்ணில் பிறந்தது.

“சனநாயகத்தினை தாண்டிய மக்கள் உரிமை வேறு எதுவும் இல்லை” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால் கடந்த சில நாட்களாக பட்டப் பகலில்,
நள்ளிரவில், சந்து பொந்துகளில், மக்கள் சாரை சாரையாய் அழைத்து வரப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பட்டிகளில்,
மக்களாட்சி என்கின்ற மகத்தான தத்துவம் ரூபாய் தாள்கள் மூலம் செய்யப்பட்ட கூர்மையான வெட்டரிவாளால் படுகொலை செய்யப்பட்டதை ஊடகங்கள்/ தேர்தல் ஆணையம் /காவல்துறை என அனைத்துமே பதறாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல், பதட்டமில்லாத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்ததை
அதே மண்ணில் காசு கொடுக்காமல் வெறும் கொள்கைகளை வைத்து ஓட்டு கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

குற்ற உணர்ச்சி என்கிற அடிப்படை மானுட உணர்ச்சியைக் கொன்று விட்ட பிறகுதான் ஒரு திராவிடக் கட்சிக்காரன் பிறக்கிறான் என்பதை ஈரோடு கிழக்கு மண்ணில் சுற்றிக் கொண்டிருந்த கரைவேட்டிக்காரர்கள் எங்கள் கண்முன்னால் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் நாம் தமிழர் இளைஞர்கள் எதற்கும் சளைக்காமல் கண்கள் முழுக்க கொள்கைக் கனல் ஏறிய சூட்டோடு,ஓங்கி உயர்ந்த முழக்கங்களோடு
சுடும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தார்கள்.

தங்குமிடம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லா விடுதிகளிலும் கரைவேட்டிக்காரர்கள் துண்டு போட்டு இடம் பிடித்திருந்தார்கள். இடம் பிடிக்க, பணம் கொடுக்க, அவர்களுக்கு அதிகாரம் என்கின்ற வெறிபிடித்த ஒற்றை நாய் உலவிக் கொண்டிருந்தது.

சரியான உணவும், தரமான இடமும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு இல்லை தான். ஆனாலும் அவர்கள் ஆன்மாவில் அண்ணன் சீமானின் மொழி நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. அது அவர்களது உறக்கத்தை கொன்று பசியை தொலைத்து விட்டது.

தம்பி இசை மதிவாணன் போன்றோர் அதிகாலையில் தொடங்கி நள்ளிரவு வரை எங்கும் அமராமல் ஓடிக் கொண்டிருந்த காட்சியை காணும் போது “எந்த நம்பிக்கை உங்களை இப்படி ஓட வைக்கிறது..” என்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு முறை தனிப்பட்ட முறையில் அவனிடம் கேட்டும் விட்டேன்.
அவனிடம் அதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் அவன் அணிந்திருந்த உடையில் தேசியத் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார். அதுதான் அதற்கான பதில்.

குமரியில் இருந்து வந்த ஹிம்லர்,சட்டக் கல்லூரி மாணவன் அபூபக்கர், கோவை பேரறிவாளன், அனீஸ் பாத்திமா போன்ற எண்ணற்ற இளம் தளிர்கள் இந்தப் போர்க்களத்தில் சளைக்காமல் சண்டையிட்டார்கள்.

…. எல்லாவற்றையும் தாண்டி அண்ணன் சீமான்.
உழைப்பால் உருவேறிய உன்னதன் அவர்.

தம்பி இசை மதிவாணன் போல, மருமகள் பாத்திமா பர்கானா போல ‌ எண்ணற்ற சீமானின் பிள்ளைகள் வீடு வீடாய் சென்று தங்களுக்கான நீதியை, இத்தனை ஆண்டு கால திராவிட, தேசியக் கட்சிகளின் அநீதியை எடுத்து சொல்லி மிக உருக்கமாக வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் தான், பின்னால் வந்த திராவிடத் திருவாளர்கள் வீடு வீடாய் காசு கொடுத்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு முரண்பட்ட காட்சிதான். ஆனால் ஒரே இடத்தில் ஜனநாயகம் இரு முரண்பட்ட முற்றிலும் வேறுபட்ட காட்சிகளை கொண்ட அபத்த திரைப்படமாய் திராவிடத் திருவாளர்களால் மாற்றப்பட்டுவிட்டது.

பிறகு உண்மையான உழைப்பின், ஜனநாயகத்தின் மதிப்பு தான் என்ன.‌.. என்றெல்லாம் விரக்தியின் வானவில் மனதிற்குள் வளைந்து நெளிந்த போது நம்பிக்கைக்கீற்றாய் பலர் களத்தில் ஒளிவிட்டார்கள்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா அவர்களின் கணவர் தம்பி நவநீதனை பற்றி சொல்ல வேண்டும். வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைக்கின்ற ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியை வேட்பாளராக முன்னிறுத்தி விட்டு, பேரணியின் முன்னும் பின்னும் ஆக ஓடிச்சென்று, ஒழுங்கு செய்து, அனைவரையும் வழிநடத்தி, சக போராளியாக மனைவியை மதித்து, அவன் சாதித்து நின்றது பேரழகு.

மனைவி தாமதமாக வந்தால் “எங்கே சென்று வந்திருக்கிறாய்..?எனக்கான சாப்பாடு எங்கே..? ” என்றெல்லாம் கேட்கின்ற சராசரி ஆண்களுக்கு மத்தியில் அவையத்தில் மனைவியை முன் நிறுத்தி
கணவனுக்கான கடமையை
கண்ணியமாக செய்து கணவன் மனைவிக்காற்றும் உதவி என்பதை புது குறளாக அவன் ஈரோட்டு வீதிகளில் எழுதிக் கொண்டிருந்தான்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா. எல்லா இடத்திலும் தெளிவாக கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி தொகுதிக்கு என்ன செய்யப் போகிறேன் என்ற தீர்வுகளை பற்றி பேசி, அவதூறு பிரச்சாரங்களை போகிற போக்கில் எதிர்கொண்டு, கூட பயணிக்கும் அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்தி, எதிரே நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்களை கூட புன்னகையோடு எதிர்கொண்ட அவளது உறுதி மிக்க மனநிலை, பலரையும் வியக்க வைத்தது.

அற்புதமான பல இளைஞர்களை நாம் தமிழர் கட்சியின் பேரணிகளில் காண முடிந்தது. இரவு தேர்தல் பணிமனைகளில் தூங்கும் போது நடந்து நடந்து வெடிப்பேறிய அவர்களது பாதங்களை பார்க்கும் போது எனக்கு ஏனோ காங்கோ காடுகளில் அலைந்து திரிந்த புரட்சியாளன் சே நினைவுக்கு வந்து போனான்.

உண்மையில் புரட்சிகர மனநிலை என்பது எல்லாவற்றையும் இழக்க துணிவது என்பதைத்தான் சீமானின் தம்பி தங்கைகள் நிரூபித்தார்கள். எதையும் எதிர்பார்க்காமல் அரசியல் மாற்றம் ஒன்றே அனைத்திற்கும் ஆன தீர்வு என்பதை வாக்காளர்களுக்கு உணர வைக்க அவர்கள் உழைத்த உழைப்பு என்பது ஜனநாயகம் என்கிற மானுட சாசனத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான செய்தி.

எத்தனை தூரம் என்றாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் என்றாலும் கவலை இல்லை, முழக்கங்கள் ஒரு நொடியும் குறையாமல் முழங்கித் தீர்த்து, எதிரிகளுக்கு பயத்தையும், ஈரோட்டு மக்களுக்கு வாக்குக்கான பணத்தையும், அதிகப்படுத்தி கொடுத்தார்கள்.

பதிலாக அவர்கள் முதலில் அவதூறை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். அருந்ததியர் மக்களை வந்தேறி என சீமான் பேசி விட்டார் என பொய்யாக பரப்புரை செய்து நாம் தமிழர் பிரச்சாரங்களில் திட்டமிட்டு கலகங்களை ஏற்படுத்தினார்கள். அடுத்தது வன்முறை. அண்ணன் அன்பு தென்னரசன் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான போது கூட முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு காவல் துறையின் கைகள் அதிகாரத்தால் கட்டப்பட்டிருந்தன.

காலை 8 மணிக்கு எல்லாம் மக்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆடு மாடுகளை பட்டி தொட்டிகளில் அடைப்பது போல அடைத்து, பகலெல்லாம் டிவி போட்டுக்காட்டி, ஆண்களுக்கு சாராயம் பிரியாணி கொடுத்து, இரவு 8 மணிக்கு போகும்போது ஒவ்வொருவருக்கும் தலா 2000 பணம் கொடுத்து அனுப்பி கொண்டிருந்தபோது, நாங்கள் எல்லாம் பூட்டிய வீடுகளுக்கு முன்னால் வாக்கு கேட்க முடியாமல் கொளுத்தும் வெயிலில், மங்கிய மாலையில், இரவின் களைப்பில் நம்மை வழி நடத்தும் லட்சிய வெறியோடு நடந்து சென்று கொண்டிருந்தோம்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், 2 ஆவது வாக்குப் பெட்டியில் 22வது வரிசை எண்ணிலிருந்த தங்கை மேனகா அவர்களுக்கு, விவசாயி சின்னத்தைத் தேடித்தேடி வாக்களித்த 10,827 நபர்கள் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தில் வந்தவர்களா, தனித் தாதுக்களா, என்றெல்லாம் இன்று இந்த சமூகக் கட்டமைப்பில் யோசிக்க தோன்றுகிறது.

விவசாயி சின்னத்தில் முகமறியா விரல்கள் தொட்ட நொடி எல்லாம் இன்னும் இந்த மண்ணில் மனித உணர்ச்சி சாகாத , பட்டுப் புடவை ஸ்மார்ட் வாட்ச், அண்டா குண்டா, குக்கர்,காசு, சாராயம், பிரியாணி பொட்டலங்கள் என எதற்கும் விலை போகாத மக்கள் திரள் இம்மண்ணிலும் உண்டு என்று நமக்குள்ளும் உயிர்ப்பூ மலர்ந்த தருணங்கள் அவை.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் தங்களது விரல்களை நம்பிக்கையோடு தொட்டு 10827 ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மாற்று அரசியல் புரட்சியை நிறுவிடப் போராடும் ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்திற்கு உண்மையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சூழ்ந்து விட்ட மிகப்பெரிய இருளுக்கு நடுவில் சிறிது வெளிச்சத்தை அளிக்கிறது.

அந்த வெளிச்சக் கயிறு கொண்டு தான் நாங்கள் வெற்றி என்ற சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கி இருக்கிறோம்.உலகில் ஏற முடியாத சிகரங்கள் என எதுவும் இல்லை.உறுதியாக ஒரு நாள் நாங்கள் சிகரம் தொடுவோம்.

இவ்வளவு உழைத்தும் உங்களை நோக்கி வெற்றி வரவில்லையே என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள்.

இதற்கான பதில் எங்களிடம் இல்லை தான். ஆனால் எங்கள் எதிரிகளிடம் உண்டு.

தேர்தல் முடிந்து ஈவிகேஎஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில் நம்ப முடியாமல், மென்று முழுங்கியவாறே, அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டாரே அந்த பதில் தான்.

அந்த பதில்.. 10827.

எல்லா தடைகளையும் தாண்டி 10,827 வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்பது போகிற போக்கில் கடந்துப் போகக்கூடிய செய்தி அல்ல.

10827- இது சாதாரண எண்ணிக்கை அல்ல. திமுக/ அதிமுக /காங்கிரஸ் /பிஜேபி என்கின்ற திராவிட தேசிய கட்சிகளை, அடிமனதில் ஆழத்திலிருந்து வெறுக்கின்ற வெறுப்புணர்ச்சியின் கூட்டுத்தொகை.

ஒரு நொடியும் இந்த கூட்டுத் தொகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அதிகார ஆட்டத்தால் பண மழையால் இந்த எதிர்ப்புணர்ச்சி சற்றே மட்டுப்படுவது போல தோன்றலாம்.

ஆனால் காலங்காலமாய் ஏமாற்றப்பட்டு வருகின்ற மக்களின் கோபம் வன்மமாய் மாறி அது விரல்களின் மூலம் வினை ஆற்ற தொடங்கி இருக்கிறது என்பதையும், ஓடப்பராய் இருந்த ஏழையப்பர்கள் உதையப்பர்களாக மாறி வருகிறார்கள் என்பதையும் 10827 சொல்லத் தொடங்கி இருக்கிறது.

நாம் தமிழர் காலம் பிறக்கிறது.

????

ஈரோடு கிழக்கில் வென்றார் அண்ணன் சீமான்..

????

ஒரு அசலான போர்க்களத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்கிறது.
ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கின்ற இந்த போரில் அரசியல் மாண்புகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு விட்டன.

ஜனநாயகம் என்ற பச்சைக் குழந்தை துடிக்க துடிக்க ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கழுத்தறுக்கப்பட்டு ஈரோட்டு கிழக்குத் தொகுதியின் வீதிகளில் கொலை செய்யப்பட்டு விட்டது. ஆடு மாடுகளை பட்டித் தொட்டியில் அடைப்பது போல மக்களை லாரிகளில் ஏற்றி வந்து மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற எந்தக் கட்சியும் ஓட்டு கேட்க முடியாத ஜனநாயக படுகொலையை திமுக காங்கிரஸ் கூட்டணி நிகழ்த்தி இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக இதற்குப் போட்டி போட முயன்று அதிகாரம் இல்லாத காரணத்தினால் வாக்கிற்கு பணம் மட்டும் கொடுத்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறது.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது ஆளும் திமுக கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. கொலை வெறி தாக்குதலில் சிக்குண்ட அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்களால் காப்பாற்றப்பட்டு தற்சமயம் மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு இந்த நொடி வரை தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற நிலையிலிருந்து திமுக அரசின் அதிகார ஆதிக்கத்தின் உச்ச கொடூரத்தை புரிந்து கொள்ளலாம். வழக்கறிஞர் என்ற முறைமையில் நான் அனைத்து காவல்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டுக் கூட இன்னும் நீதி கிடைத்த பாடில்லை.

ஆனாலும் சீமானின் தம்பி தங்கைகள் இதற்கெல்லாம் சோர்ந்து போகிறவர்கள் அல்ல. நேற்றைய முன் தினம் எங்கள் அண்ணன் அன்பு தென்னரசன் தாக்கப்பட்டதற்கு
பதிலடியாக பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்ற பிரம்மாண்டமான புலிக்கொடி பேரணியை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று மாலையில் ஏறக்குறைய 5 மணி நேரம் நாம் தமிழர் கட்சி நடத்தியது. ஏறக்குறைய எதிர்க்கட்சியான அண்ணா திமுக போட்டியிலிருந்து விலகி விட்ட இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் களத்தில் திமுகவின் அதிகார பலத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.

நாளைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் பிரச்சாரத்திற்கு வருகின்ற நிலையில், உண்மையான எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது.

எப்பேர்ப்பட்ட மோசமான உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர ஈரோட்டுக் கிழக்கு தொகுதிக்கு வந்து பாருங்கள். அண்ணன் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுங்கட்சியின் பண பலத்தினால் அதிகார ஆட்டத்தினால் நட்ட நடு வீதியில் கொளுத்தப்படுகின்ற காட்சியை நீங்கள் கண்ணால் காணலாம்.

எந்த வீட்டிலும் வாக்காளர்கள் இல்லை. வாக்காளர்களை எல்லாம் கடத்திச் சென்று திமுக காங்கிரஸ் கூட்டணி மண்டபங்களில் அடைத்து வைத்து இருக்கிறது. பிறகு தேர்தல் ஆணையம் என்ற ஒன்று என்ன செய்கிறது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

அது ஆளுங்கட்சிக்கு பக்கபலமான வாத்தியமாக செயல்பட்டுக் கொண்டு அதிகார ஆணவத்தை மீறி ஓட்டு கேட்கின்ற நாம் தமிழர் கட்சியை முடக்குகிற வேலையை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டு எஜமான விசுவாசம் காட்டிக் கொண்டு நிற்கிறது.

இதற்கு நடுவில் எளிய இளைஞர்கள் சீமானின் தம்பி தங்கைகள் தங்குவதற்கு கூட இடமில்லாமல், உணவு கூட சரியாக உண்ணாமல் இலட்சிய வெறி கொண்டு சாலைகளில் அலை அலையாய் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். பணம் அதிகாரம் அரசியல் என முற்றிலுமான சீர்குலைந்து போன உலகில் கொள்கை கூட்டமாய் உலா வருகின்ற சீமானின் தம்பி தங்கைகள் விழிகள் உறங்கா சிவப்பைக் கொண்டு கனலேறி கிடக்கிறது.

சீனப் புரட்சியாளன் மாவோ மக்களை அணி திரட்டி மாபெரும் நடை பயணத்தை நடத்தியது போல இந்த வரலாற்று வீதியில் ஒரு புரட்சிகர படையணியை உருவாக்கி அண்ணன் சீமான் சகல விதமான சர்வாதிகாரத்திற்கும் எதிராக போரிட்டு வருகிறார்.

ஒரு நாளும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பெருகின்ற மக்கள் ஆதரவு ஆளும் திமுக கட்சியை பயத்தில் ஆழ்த்தி இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் இறுதியாக அவதூறு பிரச்சாரத்தை எளிய மக்களை தூண்டிவிட்டு முன்னெடுக்க முயன்று தோற்று இருக்கிறார்கள். பேசாத ஒன்றை பேசியதாக சொல்லி ஆளும் திமுகவினர் நடத்திய நாடகங்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு விட்டன.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்..

ஜனநாயக ரீதியில் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வென்றுவிட்டார்.

இலட்சிய பற்றுறுதி
கொண்ட அவரைப் போன்ற ஒருவரை திமுக தன் வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறது.

????

ஈரோடு கிழக்கு மண்ணில் இருந்து ..

மணி செந்தில்.

Page 4 of 53

Powered by WordPress & Theme by Anders Norén